யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





முதலாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 18வது வாரம் வெள்ளிக்கிழமை
2017-08-11




முதல் வாசகம்

நெருப்பின் நடுவிலிருந்து பேசிய கடவுளின் குரலொலியைக் கேட்டும், நீங்கள் உயிர்வாழ்ந்தது போல் வேறு எந்த மக்களினமாவது வாழ்ந்ததுண்டா?
இணைச்சட்ட நூலிலிருந்து வாசகம். 4;32-40

மோசே மக்களை நோக்கிக் கூறியது: உங்களுக்கு முற்பட்ட பண்டைக் காலத்தைப் பற்றிக் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். கடவுள், உலகில் மனிதனைப் படைத்த நாள் முதல், வானத்தின் ஒருமுனை முதல் மறுமுனை வரைக்கும் எங்காவது இத்தகைய மாபெரும் செயல் நடந்ததுண்டோ? அல்லது இதுபோல் கேள்விப் பட்டதுண்டா? நெருப்பின் நடுவிலிருந்து பேசிய கடவுளின் குரலொலியைக் கேட்டும், நீங்கள் உயிர்வாழ்ந்தது போல் வேறு எந்த மக்களினமாவது வாழ்ந்ததுண்டா? அல்லது, உங்கள் கடவுளாகிய ஆண்டவர் எகிப்தில் உங்கள் கண்முன்னே உங்களுக்குச் செய்த அனைத்தையும் போல சோதனைகள், அடையாளங்கள், அருஞ்செயல்கள், போர், வலிய கரம், ஓங்கிய புயம் மற்றும் அச்சுறுத்தும் நிகழ்ச்சிகள் மூலம் ஓர் இனத்தை வேறொரு நாட்டினின்று தமக்கென உரிமையாக்கிக் கொள்ள முன்வரும் கடவுள் உண்டா? `ஆண்டவரே கடவுள், அவரைத் தவிர வேறு எவரும் இலர்' என நீங்கள் அறிந்துகொள்ளும்படியாக இவை உங்கள் கண்முன் நிறைவேற்றப் பட்டன. நீங்கள் கற்றுக்கொள்ளும்படி வானினின்று வந்த அவர்தம் குரலை நீங்கள் கேட்குமாறு செய்தார். தமது பெரும் நெருப்பை மண்ணுலகில் நீங்கள் காணச் செய்தார். அந்நெருப்பினின்று வந்த அவரது வாக்கை நீங்கள் கேட்டீர்கள். உங்கள் மூதாதையர்க்கு அவர் அன்பு காட்டியதால், அவர்களுக்குப் பின், அவர்களுடைய வழிமரபினரைத் தேர்ந்துகொண்டார். எனவே அவரே முன்நின்று தமது பேராற்றலுடன் உங்களை எகிப்திலிருந்து கூட்டி வந்தார். உங்களை விட ஆற்றலும் வலிமையும் மிகுந்த வேற்றினத்தாரை உங்கள் முன்னின்று துரத்தவும், உங்களை அவர்களது நாட்டிற்குள் இட்டுச்சென்று இன்றும் உள்ளது போல், அதை உங்களது உரிமைச் சொத்தாகத் தரவுமே கூட்டி வந்தார். `மேலே விண்ணிலும் கீழே மண்ணிலும் ஆண்டவரே கடவுள், அவரைத் தவிர வேறு எவரும் இலர்' என இன்று அறிந்து, உங்கள் உள்ளத்தில் இருத்துங்கள். நான் இன்று உங்களுக்குக் கட்டளையிடும் அவரது நியமங்களையும் கட்டளைகளையும் பின்பற்றுங்கள். அப்பொழுது உங்களுக்கும், உங்களுக்குப் பின்வரும் உங்கள் பிள்ளைகளுக்கும் எல்லாம் நலமாகும். மேலும் உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்களுக்கு எக்காலத்திற்கும் கொடுக்கும் மண்ணில் நீங்கள் நெடுநாள் வாழ்வீர்கள்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

ஆண்டவரே, உம் செயல்களை என் நினைவுக்குக் கொண்டு வருவேன்;
திருப்பாடல்கள் 77;12-16 21

11 ஆண்டவரே, உம் செயல்களை என் நினைவுக்குக் கொண்டு வருவேன்; முற்காலத்தில் நீர் செய்த வியத்தகு செயல்களை நினைத்துப் பார்ப்பேன். 12 உம் செயல்கள் அனைத்தையும் பற்றித் தியானிப்பேன்! உம் வலிமைமிகு செயல்களைப் பற்றிச் சிந்திப்பேன். -பல்லவி

13 கடவுளே, உமது வழி தூய்மையானது! மாபெரும் நம் கடவுளுக்கு நிகரான இறைவன் யார்! 14 அரியன செய்யும் இறைவன் நீர் ஒருவரே! மக்களினங்களிடையே உமது ஆற்றலை விளங்கச் செய்தவரும் நீரே. -பல்லவி

15 யாக்கோபு, யோசேப்பு என்போரின் புதல்வரான உம் மக்களை நீர் உமது புயத்தால் மீட்டுக்கொண்டீர். 20 மோசே, ஆரோன் ஆகியோரைக் கொண்டு உம் மக்களை மந்தையென அழைத்துச் சென்றீர். -பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! மனிதர் உலகம் முழுவதையும் ஆதாயமாக்கிக் கொண்டாலும் தம் வாழ்வையே இழப்பாரெனில் அவருக்குக் கிடைக்கும் பயன் என்ன? அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 16;24-28

அக்காலத்தில் இயேசு தம் சீடரைப் பார்த்து, ``என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து, தம் சிலுவையைத் தூக்கிக்கொண்டு என்னைப் பின்பற்றட்டும். ஏனெனில் தம் உயிரைக் காத்துக்கொள்ள விரும்பும் எவரும் அதை இழந்துவிடுவர். மாறாக, என் பொருட்டுத் தம்மையே அழித்துக் கொள்கிற எவரும் வாழ்வடைவர். மனிதர் உலகம் முழுவதையும் ஆதாயமாக்கிக் கொண்டாலும் தம் வாழ்வையே இழப்பாரெனில் அவருக்குக் கிடைக்கும் பயன் என்ன? அவர் தம் வாழ்வுக்கு ஈடாக எதைக் கொடுப்பார்? மானிட மகன் தம் தந்தையின் மாட்சியோடு தம் வானதூதர்களுடன் வரப்போகிறார்; அப்பொழுது ஒவ்வொருவருக்கும் அவரவர் செயலுக்கு ஏற்பக் கைம்மாறு அளிப்பார். நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்: இங்கே இருப்பவருள் சிலர் மானிட மகனது ஆட்சி வருவதைக் காண்பதற்கு முன் சாகமாட்டார்'' என்றார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''இயேசு, 'என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து தம் சிலுவையை நாள்தோறும் தூக்கிக்கொண்டு என்னைப் பின்பற்றட்டும்' என்றார்'' (லூக்கா 9:23)

இயேசுவை சிலுவையிலிருந்து நாம் பிரித்துப் பார்க்க இயலாது. சிலுவையில் தொங்குகின்ற இயேசு நம் உள்ளத்தில் பல உணர்வுகளை எழுப்பக்கூடும். சிலருக்கு இயேசுவின் சிலுவைச் சாவு கொடூரமான தண்டனையாகப் படலாம். வேறு சிலருக்கு அதே சிலுவைச் சாவு கடவுளின் அன்புக்கு அடையாளமாகத் தெரியலாம். இன்னும் சிலருக்குச் சிலுவையில் தொங்கும் இயேசு இன்றைய உலகில் ஒவ்வொரு நாளும் அணு அணுவாகச் சிதைக்கப்பட்டு, நொறுக்கப்படுகின்ற பல்லாயிரக் கணக்கான மக்களின் அடையாளமாகத் தென்படலாம். இந்த எல்லாப் பொருள்களுமே சிலுவையில் அடங்கியுள்ளன எனலாம். இயேசுவின் சிலுவை அவருடைய வாழ்வையும் சாவையும் நிர்ணயிக்கின்ற அடையாளம். அதுபோலவே, இயேசுவைப் பின்செல்லும் மனிதரும் சிலுவையைத் தம் வாழ்விலிருந்தும் சாவிலிருந்தும் பிரித்தல் இயலாது. இந்த உண்மையை இயேசு நமக்கு உணர்த்துகிறார். -- ''சிலுவையைச் சுமத்தல்'' என்பது இயேசுவைப் பின்செல்ல வேண்டிய முறையைக் காட்டுகிறது. இயேசுவின் துன்பங்களோடு நம் துன்பங்களையும் இணைத்து, அவரோடு நம் வாழ்வையும் சாவையும் பிணைத்து நாம் செயல்பட அழைக்கப்படுகிறோம். நம் சிலுவையை ''நாள்தோறும்'' தூக்கிக் கொண்டு இயேசுவைப் பின்பற்ற வேண்டும் என்பதில் ஆழ்ந்த பொருள் உள்ளது. அதாவது, ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு தருணமும் நம்மைக் கடவுளோடு இணைக்கின்ற காலம் என்பதை நாம் ஏற்றால் சிலுவைக்கு அங்கே இடம் உண்டு. மனித உள்ளத்தில் எழுகின்ற சிந்தனைகள், மனித செயல்கள் யாவுமே நிறைவை மட்டுமே கொண்டிருப்பதில்லை. அவற்றில் சிலுவையின் நிழல் எப்போதும் உண்டு. மகிழ்ச்சி நிறைந்து வழிகின்ற பொழுது அங்கே அம்மகிழ்ச்சி மறைந்துவிடுமே என்னும் சிறிய கவலைத் திரை தோன்றுவதுண்டு. ஆக, சிலுவை நம்மோடு என்றும் உள்ளது என்பதைக் காண நம் அகக் கண்கள் திறக்க வேண்டும். கடவுளிடம் நம்பிக்கை கொண்டு வாழ்வோருக்குச் சிலுவை ஒரு தடையாக இராது; மாறாக, இறை அனுபவம் பெற்றிட அது ஒரு வழியாக அமையும்.

மன்றாட்டு:

இறைவா, சிலுவையை மகிழ்வோடு ஏற்றிட அருள்தாரும்.