யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





முதலாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம்
2017-07-07




முதல் வாசகம்

ஈசாக்கு ரெபேக்கா மீது அன்பு வைத்திருந்தார்.
தொடக்க நூலிலிருந்து வாசகம் 23: 1-4, 19; 24: 1-8,62-67

அந்நாள்களில் சாரா நூற்றிருபத்தேழு ஆண்டுகள் வாழ்ந்தார். சாராவின் வயது இதுவே. கானான் நாட்டிலுள்ள எபிரோன் என்ற கிரியத்து அர்பா நகரில் சாரா இறந்தார். அவருக்காகப் புலம்பி அழுவதற்காக ஆபிரகாம் சென்றார். பிறகு சடலம் இருந்த இடத்தைவிட்டு அவர் எழுந்து இத்தியரிடம் சென்று சொன்னது: ``நான் உங்களிடையே அன்னியனும் அகதியுமாய் இருக்கிறேன். என் வீட்டில் இறந்தாரை நான் அடக்கம் செய்வதற்கான கல்லறை நிலத்தை உங்களுக்குரிய சொத்திலிருந்து எனக்கு விற்றுவிடுங்கள்'' என்று கேட்டார். இவ்வாறு மம்ரே அருகில் மக்பேலா நிலத்தின் கல்லறையில் ஆபிரகாம் தம் மனைவி சாராவை அடக்கம் செய்தார். இதுவே கானான் நாட்டில் இருக்கும் எபிரோன். ஆபிரகாம் வயது மிகுந்தவராய் முதுமை அடைந்தார். ஆண்டவர் அவருக்கு அனைத்திலும் ஆசி வழங்கியிருந்தார். ஒரு நாள் அவர் தம் வீட்டின் வேலைக்காரர்களில் மூத்தவரும், தமக்குரிய அனைத்திற்கும் அதிகாரியுமானவரை நோக்கி, ``உன் கையை என் தொடையின் கீழ் வைத்து, விண்ணுலகிற்கும் மண்ணுலகிற்கும் கடவுளாகிய ஆண்டவர் மேல் ஆணையிட்டுச் சொல்: நான் வாழ்ந்துவரும் இக்கானான் நாட்டுப் பெண்களிடையே என் மகனுக்குப் பெண் கொள்ளமாட்டாய் என்றும் என் சொந்த நாட்டிற்குப் போய், என் உறவினரிடம் என் மகன் ஈசாக்கிற்குப் பெண் கொள்வாய் என்றும் சொல்'' என்றார். அதற்கு அவர், ``ஒருவேளை பெண் என்னோடு இந்நாட்டிற்கு வர மறுத்துவிட்டால் தாங்கள் விட்டுவந்த அந்நாட்டிற்குத் தங்கள் மகனைக் கூட்டிக் கொண்டு போகலாமா?'' என்று கேட்டார். அதற்கு ஆபிரகாம், ``அங்கே என் மகனை ஒருக்காலும் கூட்டிக்கொண்டு போகாதே. கவனமாயிரு. என் தந்தை வீட்டினின்றும் நான் பிறந்த நாட்டினின்றும் என்னை அழைத்து வந்து, என்னோடு பேசி, `இந்த நாட்டை உன் வழிமரபினருக்குத் தருவேன்' என்றுஆணையிட்டுக் கூறிய அந்த விண்ணுலகின் கடவுளாகிய ஆண்டவரே உனக்கு முன் தம் தூதரை அனுப்பி வைப்பார். நீ போய், அங்கே என் மகனுக்குப் பெண்கொள். உன்னோடு வர அப்பெண் விரும்பாவிடில் எனக்கு நீ அளித்த வாக்குறுதியினின்று விடுதலை பெறுவாய். என் மகனை மட்டும் அங்கே கூட்டிக்கொண்டு போகாதே'' என்றார். இதற்கிடையில், பெயேர்லகாய்ரோயி என்ற இடத்திலிருந்து ஈசாக்கு புறப்பட்டு நெகேபு பகுதியில் வாழ்ந்து வந்தார். மாலையில் வெளியே வயல்புறம் சென்றபோது, அவர் கண்களை உயர்த்திப் பார்த்தபோது, ஒட்டகங்கள் வருவதைக் கண்டார். ரெபேக்காவும் கண்களை உயர்த்தி ஈசாக்கைப் பார்த்தார். உடனே அவர் ஒட்டகத்தை விட்டு இறங்கினார். அவர் அந்த வேலைக்காரரிடம், ``வயலில் நம்மைச் சந்திக்க வந்து கொண்டிருக்கும் அவர் யார்?'' என்று கேட்டார். அவ்வேலைக்காரரும், ``அவர்தாம் என் தலைவர்'' என்றார். உடனே ரெபேக்கா தம் முக்காட்டை எடுத்து தம்மை மூடிக்கொண்டார். அப்பொழுது அவ்வேலைக்காரர் ஈசாக்கிடம் தாம் செய்தது அனைத்தையும் பற்றிக் கூறினார். ஈசாக்கு தம் தாயார் சாராவின் கூடாரத்துக்குள் ரெபேக்காவை அழைத்துச் சென்று மணந்து கொண்டார். அவரும் ஈசாக்குக்கு மனைவியானார். அவர் ரெபேக்கா மீது அன்பு வைத்திருந்தார். இவ்வாறு தம் தாயின் மறைவுக்குப் பிறகு ஈசாக்கு ஆறுதல் அடைந்தார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்; ஏனெனில் அவர் நல்லவர்!
திபா 106: 1-2. 3-4-5

ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்; ஏனெனில் அவர் நல்லவர்! என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு! 2 ஆண்டவரின் வலிமைமிகு செயல்களை யாரால் இயம்ப இயலும்? அவர்தம் புகழை யாரால் விளம்பக் கூடும்? பல்லவி

3 நீதிநெறி காப்போர் பேறுபெற்றோர்! எப்போதும் நேரியதே செய்வோர் பேறுபெற்றோர்! 4ய ஆண்டவரே! நீர் உம் மக்கள்மீது இரக்கம் காட்டும்போது என்னை நினைவுகூரும்! பல்லவி

4b அவர்களை நீர் விடுவிக்கும்போது எனக்கும் துணை செய்யும்! 5 நீர் தேர்ந்தெடுத்த மக்களின் நல்வாழ்வை நான் காணும்படி செய்யும்; உம்முடைய மக்களின் மகிழ்ச்சியில் நானும் பங்கு கொள்ளும்படிச் செய்யும்! அப்போது, உமது உரிமைச் சொத்தான மக்களோடு உம்மைப் போற்றிட இயலும். பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! பெருஞ்சுமை சுமந்து சோர்ந்து இருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள். நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 9-13

அக்காலத்தில் மத்தேயு என்பவர் சுங்கச் சாவடியில் அமர்ந்திருந்ததை இயேசு கண்டார்; அவரிடம், ``என்னைப் பின்பற்றி வா'' என்றார். அவரும் எழுந்து இயேசுவைப் பின்பற்றிச் சென்றார். பின்பு அவருடைய வீட்டில் பந்தியில் அமர்ந்திருந்தபோது வரி தண்டுபவர்கள், பாவிகள் ஆகிய பலர் வந்து இயேசுவோடும் அவருடைய சீடரோடும் விருந்துண்டனர். இதைக் கண்ட பரிசேயர் அவருடைய சீடரிடம், ``உங்கள் போதகர் வரிதண்டுபவர்களோடும் பாவிகளோடும் சேர்ந்து உண்பது ஏன்?'' என்று கேட்டனர். இயேசு இதைக் கேட்டவுடன், ``நோயற்றவர்க்கு அல்ல, நோயுற்றவர்க்கே மருத்துவர் தேவை. `பலியை அல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன்' என்பதன் கருத்தை நீங்கள் போய்க் கற்றுக்கொள்ளுங்கள்; ஏனெனில் நேர்மையாளரை அல்ல, பாவிகளையே அழைக்க வந்தேன்'' என்றார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

உரிமையாளரின் கருத்தை மதிப்போம்

உங்கள் வாழ்வு வசந்தமாகும் கருத்து வேறுபாடுகள் களையப்பட்டால்;. ஒரே நிகழ்வை காணும் இருவர் இரு வேறு கருத்துக்கள் கொண்டால் பல்வேறு சிக்கல்கள் குடும்பத்திலும் சமுதாயத்திலும் பெருகுவது தவிர்க்க முடியாததாகிவிடுகிறது. அது குடும்பங்களின் மகிழ்ச்சியையும் தனி நபரின் நிம்மதியையும் கெடுத்துவிடுகிறது. மத்தேயுவின் வீட்டில் இயேசுவும் அவரது சீடர்களும் விருந்து உண்கிறார்கள். பணத்திற்காக, பதவிக்காக எதையும் செய்யத் துணிந்த இக் கும்பலை யூதச் சமூகம் வெறுத்தது இயல்பு. அநியாயமாக, விதிகளுக்கு அப்பார்ப்பட்டு அதிக தொகையை பயமுறுத்தி, வன்முறையில் பிடுங்கிக்கொண்டார்கள். கூட இருந்தே குழி பறிக்கும் எட்டப்பனாக யூதரிடம் வரி வாங்கி உரோமையருக்குச் செலுத்தினர்.

இயேசு அவர்கள் செய்ததை நியாப்படுத்தவில்லை. தவறு என்றே சொல்லுகிறார். அவர்கள் நோயாளிகள்(மத் 9:12), பாவிகள்(மத் 9:13) என்று உறுதியாகச் சொல்லுகிறார். ஆயினும் மத்தேயு வீட்டில் விருந்துண்டதன் மூலமும் அவரைத் தன் பணிக்கென அழைத்ததன்மூலமும் தன் வேறுபட்ட தெய்வீக அணுகுமுறையையும் வித்தியாசமான இறை நோக்கத்தையும் முன்வைக்கிறார். "நோயுற்றவர்க்கே மருத்துவர் தேவை" மத்9:13. "இரக்கத்தையே விரும்புகிறேன்"மத் 9:13 என்னும் வரிகள் இயேசுவின் நோக்கத்தைத் தெளிவுபடுத்துகின்றன. பரிசேயர்களோ, செயலின் உரிமையாளரின் நோக்கத்தை மதிக்காது, தங்கள் கருத்தை வலியுறுத்தியதால், மத்தேயுவின் வீட்டில் விருந்துண்ட செயல் பெரிய கண்டனத்துக்கு உள்ளாகிவிட்டது. இருவரிடையே உள்ள பகை வளர்வதற்கு வாய்ப்பாகிவிட்டது. உரிமையாளரின் எண்ணங்களை மதிப்போம். கருத்தொருமித்து வாழ்வோம். வாழ்வு வசந்தமாகும்.

மன்றாட்டு:

இறைவா, உம் அன்பினால் முழுநலம் பெற்ற நாங்கள் நன்றியுடைய மக்களாக வாழ்ந்திட அருள்தாரும்.