யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





திருவழிபாடு ஆண்டு - A
2017-06-25

(இன்றைய வாசகங்கள்: எரேமியா நூலிலிருந்து வாசகம்: 20:10-13,திருப்பாடல்: 69: 7-9, 13, 16, 32-34,திருத்தூதர் பவுல் ரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம்: 5:12-15,மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் : 10: 26-33)




ஆன்மாவையும் உடலையும் நரகத்தில் அழிக்க வல்லவருக்கே அஞ்சுங்கள். ஆன்மாவையும் உடலையும் நரகத்தில் அழிக்க வல்லவருக்கே அஞ்சுங்கள்.


திருப்பலி முன்னுரை

சிட்டுக் குருவிகள் பலவற்றைவிட நீங்கள் மேலானவர்கள்

இறைமக்கள் அனைவருக்கும் என் அன்பு வணக்கம். ஆண்டின் பொதுக்காலம் 12ஆம் வாரத்தில் திருப்பலி வழிபாட்டில் பங்கேற்றுக் கொண்டிருக்கும் இறைமக்கள் அனைவருக்கும் என் அன்பு வாழ்த்தைக் கூறி மகிழ்கிறேன்.

இறைமகன் இயேசு கடவுளின் பராமரிப்பு பற்றி இன்றைய நற்செய்தியில் கூறுகிறார். பறவை இனத்தில் மிகவும் சிறியது சிட்டுக்குருவி. இந்த சிட்டுக்குருவிகள் எப்பொழுதும் உற்சாகத்துடனும் மகிழ்சியுடனுமிருப்பதை காணலாம். அவைகள் எதைப்பற்றியும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. உருவத்தில் மிகச் சிறிய சிட்டுக்குருவிகளையே கடவுள் இவ்வாராக பராமரித்து வருகின்றார். ஆகவே கடவுளின் சாயலகப் படைக்கப்பட்ட நம்மை கடவுள் எவ்வளவாய் பராமரிக்கமாட்டார்? இவ்வுலகில் மாய்ந்து மாய்ந்து பொருள் தேடுவேர் ஏராளம். இவ்வுலக செல்வத்தை சேர்க்க எத்தகைய வழியையும் பின்பற்றி எப்படியும் வாழலாம் என்று மனம் போன போக்கில் முற்படுகின்றனர். இவர்கள் கடவுளின் அன்பையும் பராமரிப்பையும் கண்டுணராதவர்கள். "அஞ்சாதீர்கள்"என்ற அறைகூவல் நமக்கு கடவுளின் பராமரிப்பையும், அன்பையும் உணர்த்துவதோடு மட்டுமல்லாமல் நேரிய வழியில் வாழ உற்சாகத்தைக் கொடுக்கின்றது.

ஆன்மாவையும் உடலையும் நரகத்தில் அழிக்க வல்லவருக்கே அஞ்சுங்கள் என்ற இறைவாக்கிற்கேற்ப எந்த சூழ்நிலையிலும் தீய வழியை நாடாமல் கடவுள் காட்டிய நேரிய வழியிலும், உண்மையின் வழியிலும் வாழவும், நற்செய்திக்கு சான்று பகர்ந்து வாழக்கூடிய வாழ்வையும் ஆண்டவரிடம் கேட்போம். தொடரும் இத்திருப்பலியில் பங்கேற்போம்.



முதல் வாசகம்


எரேமியா நூலிலிருந்து வாசகம்: 20:10-13

எரேமியா கூறியது: `சுற்றிலும் ஒரே திகில்!' என்று பலரும் பேசிக் கொள்கின்றார்கள்; `பழி சுமத்துங்கள்; வாருங்கள், அவன்மேல் பழி சுமத்துவோம்' என்கிறார்கள். என் நண்பர்கள்கூட என் வீழ்ச்சிக்காகக் காத்திருக்கிறார்கள்; `ஒருவேளை அவன் மயங்கிவிடுவான்; நாம் அவன்மேல் வெற்றிகொண்டு அவனைப் பழி தீர்த்துக்கொள்ளலாம்' என்கிறார்கள். ஆனால், ஆண்டவர் வலிமை வாய்ந்த வீரரைப் போல என்னோடு இருக்கின்றார். எனவே என்னைத் துன்புறுத்துவோர் இடறி விழுவர். அவர்கள் வெற்றிகொள்ள மாட்டார்கள். அவர்கள் விவேகத்தோடு செயல்படவில்லை; அவர்களின் அவமானம் என்றும் நிலைத்திருக்கும்; அது மறக்கப்படாது. படைகளின் ஆண்டவரே! நேர்மையாளரைச் சோதித்து அறிபவரும் உள்ளுணர்வுகளையும் இதயச் சிந்தனைகளையும் அறிபவரும் நீரே; நீர் என் எதிரிகளைப் பழி வாங்குவதை நான் காணவேண்டும்; ஏனெனில், என் வழக்கை உம்மிடம் எடுத்துரைத்துள்ளேன். ஆண்டவருக்குப் புகழ் பாடுங்கள்; அவரைப் புகழ்ந்தேத்துங்கள்; ஏனெனில், அவர் வறியோரின் உயிரைத் தீயோரின் பிடியினின்று விடுவித்தார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

பல்லவி: கடவுளே! உமது பேரன்பின் பெருக்கினால் எனக்குப் பதில்மொழி தாரும்.
திருப்பாடல்: 69: 7-9, 13, 16, 32-34

ஏனெனில், உம் பொருட்டே நான் இழிவை ஏற்றேன்; வெட்கக்கேடு என் முகத்தை மூடிவிட்டது. என் சகோதரருக்கு வேற்று மனிதன் ஆனேன்; என் தாயின் பிள்ளைகளுக்கு அயலான் ஆனேன். உமது இல்லத்தின்மீது எனக்குண்டான ஆர்வம் என்னை எரித்துவிட்டது; உம்மைப் பழித்துப் பேசினவர்களின் பழிச்சொற்கள் என்மீது விழுந்தன. -பல்லவி

ஆண்டவரே! நான் தக்க காலத்தில் உம்மை நோக்கி விண்ணப்பம் செய்கின்றேன்; கடவுளே! உமது பேரன்பின் பெருக்கினால் எனக்குப் பதில் மொழி தாரும்; துணை செய்வதில் நீர் மாறாதவர். ஆண்டவரே! எனக்குப் பதில்மொழி தாரும்; உம் பேரன்பு நன்மை மிக்கது; உமது பேரிக்கத்தை முன்னிட்டு என்னை நோக்கித் திரும்பும். பல்லவி

எளியோர் இதைக் கண்டு மகிழ்ச்சி அடைவார்கள்; கடவுளை நாடித் தேடுகிறவர்களே, உங்கள் உள்ளம் ஊக்கமடைவதாக. ஆண்டவர் ஏழைகளின் விண்ணப்பத்திற்குச் செவிசாய்க்கின்றார்; சிறைப்பட்ட தம் மக்களை அவர் புறக்கணிப்பதில்லை. வானமும் வையமும்; கடல்களும் அவற்றில் வாழும் யாவும் அவரைப் புகழட்டும். பல்லவி

இரண்டாம் வாசகம்


திருத்தூதர் பவுல் ரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம்: 5:12-15

ஒரே ஒரு மனிதன் வழியாய்ப் பாவம் இந்த உலகத்தில் நுழைந்தது: அந்தப் பாவத்தின் வழியாய்ச் சாவு வந்தது. அதுபோலவே, எல்லா மனிதரும் பாவம் செய்ததால், எல்லா மனிதரையும் சாவு கவ்விக்கொண்டது. திருச்சட்டம் தரப்படுமுன்பும் உலகில் பாவம் இருந்தது: ஆனால், சட்டம் இல்லாதபோது அது பாவமாகக் கருதப்படவில்லை. ஆயினும் ஆதாம் முதல் மோசே வரையில் இருந்தவர்கள் ஆதாமைப்போல் கடவுளின் கட்டளையை மீறிப் பாவம் செய்யவில்லை எனினும் சாவு அவர்கள்மீதும் ஆட்சி செலுத்திற்று: இந்த ஆதாம் வரவிருந்தவருக்கு முன்னடையாளமாய் இருக்கிறார்.ஆனால், குற்றத்தின் தன்மை வேறு, அருள்கொடையின் தன்மை வேறு. எவ்வாறெனில், ஒருவர் செய்த குற்றத்தால் பவரும் இறந்தனர். ஆனால் கடவுளின் அருளும் இயேசு கிறிஸ்து என்னும் ஒரே மனிதரின் வழியாய் வரும் அருள்கொடையும் பலருக்கும் மிகுதியாய்க் கிடைத்தது.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

- இறைவா உமக்கு நன்றி




நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார் என்னைப் பற்றிச் சான்று பகர்வார். நீங்களும் சான்று பகர்வீர்கள்' என்றார்'' ஆண்டவர் அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் : 10: 26-33

எனவே, அவர்களுக்கு அஞ்ச வேண்டாம். ஏனெனில் வெளிப்படாதவாறு மூடப்பட்டிருப்பது ஒன்றும் இல்லை: அறியமுடியாதவாறு மறைந்திருப்பதும் ஒன்றும் இல்லை. நான் உங்களுக்கு இருளில் சொல்வதை நீங்கள் ஒளியில் கூறுங்கள். காதோடு காதாய்க் கேட்பதை வீட்டின் மேல்தளத்திலிருந்து அறிவியுங்கள். ஆன்மாவைக் கொல்ல இயலாமல். உடலை மட்டும் கொல்பவர்களுக்கு அஞ்சவேண்டாம். ஆன்மாவையும் உடலையும் நரகத்தில் அழிக்க வல்லவருக்கே அஞ்சுங்கள். காசுக்கு இரண்டு சிட்டுக் குரவிகள் விற்பதில்லையா? எனினும் அவற்றுள் ஒன்று கூட உங்கள் தந்தையின் விருப்பமின்றித் தரையில் விழாது. உங்கள் தலைமுடியெல்லாம் எண்ணப்பட்டிருக்கின்றது. சிட்டுக் குரவிகள் பலவற்றைவிட நீங்கள் மேலானவர்கள். எனவே அஞ்சாதிருங்கள். "மக்கள் முன்னிலையில் என்னை ஏற்றுக்கொள்பவரை விண்ணுலகில் இருக்கும் என் தந்தையின் முன்னிலையில் நானும் ஏற்றுக்கொள்வேன். மக்கள் முன்னிலையில் என்னை மறுதலிப்பவர் எவரையும் விண்ணுலகில் இருக்கிற என் தந்தையின் முன்னிலையில் நானும் மறுதலிப்பேன்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




விசுவாசிகள் மன்றாட்டுகள்:


விண்ணுலகில் வீற்றிருப்பவரே! உம்மை நோக்கியே என் கண்களை உயர்த்தியுள்ளேன்.


பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

1.அன்பால் இணைந்திட அழைக்கும் மூவொரு இறைவா!

திருஅவையின் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவரத்தார் மற்றும் பொதுநிலையினர் உமது ஒன்றிப்பிலும், அன்பிலும் உம்மை உய்த்துணர்ந்தவர்களாய் அன்பிலும், ஒற்றுமையிலும் நிறைவாய் வாழ்ந்திட வேண்டிய வரங்களைப் பொழிந்திட வேண்டுமென்று இறைவா! உம்மை மன்றாடுகின்றோம்.

2. உறவுகளின் ஊற்றான இறைவன்!

எங்கள் குடும்பங்களின் உறவுகளிலேயே மிக அதிகமாகப் பழுதடைந்திருப்பது பெற்றோர்மீது, அதுவும், வயதானப் பெற்றோர்மீது நாம் கொண்டுள்ள உறவு. இந்த உறவை மீண்டும் அலசிப் பார்க்க, பழுதடைந்துள்ள அந்த உறவை மீண்டும் சரிசெய்ய, உறவுகளுக்கு முதலிடம் வழங்கும் வழிகளை மூவொரு இறைவன் எமக்குச் சொல்லித் தர வேண்டும்மென்று உம்மை மன்றாடுகின்றோம்.

3. இரக்கத்தின் ஊற்றான இறைவா!

உலகெங்கும் எழுந்துள்ள இயற்கைச் சீற்றங்களால் துயரத்திலுள்ள உம் மக்களைக் கண்நோக்கும். அவர்களின் துயரங்களைத் துடைத்து வெள்ளங்களினாலும், விபத்துக்ளினாலும், சிதைந்துபோன குடும்பங்கள் மீண்டும் தழைத்தோங்கவும், இழப்புகளினால் வாடிவருந்துவோர்கள் அனைத்தையும் மீண்டும் நிறைவாய் பெற்றிட வேண்டிய வரங்களைத் தந்தருளுமாறு இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. அன்பு நிறைந்த எம் இறைவா!

தூய ஆவியின் ஒளியால் எங்கள் பங்கிலுள்ள இளையோரின் இதயங்களுக்கு அறிவூட்டும். அவர்கள் சரியானவற்றை உணரவும், அவர் அளிக்கும் ஆறுதலினால் என்றும் மகிழ்ச்சியாய் இருக்கவும், ஞானக்கதிர்களை அவர்கள் மேல் பொழியுமாறும் இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

5. குழந்தைகள் விண்ணரசின் செல்வங்கள் என்று மொழிந்த எம் இறைவா!

நீர் கொடுத்த செல்வங்களாகிய எங்கள் பிள்ளைகளை நாங்கள் பொறுப்புடன் வளர்க்கவும், அவர்களுக்கு இறை அச்சத்தையும் தூய வாழ்வுக்கான சிந்தனைகளை அறியச் செய்திடவும், தம் கடமைகளை உணர்ந்துத் தூயக் கிறிஸ்துவ வாழ்வு வாழ வரம் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

6. எமக்குப் புதுப்பாதையை அமைத்துத் தரும் என் இறைவா!

புதிய கல்வி ஆண்டில் புதிய கல்விக்காகக் கல்லூரிகளிலும், கல்விக்கூடங்களுக்கும் செல்ல இருக்கும் எம் இளையோர்களைக் கரம்பிடித்து அழைத்துச் சென்று, அவர்கள் சிறந்த கல்வினைப் பெற்றிடவும், நவீன உலகமாயையால் கவனம் சிதறிவிடாமல் ஒழுக்கத்தில் சிறந்து விளங்கிடவும், உமது உன்னதச் சாட்சிகளாய் இவ்வுலகத்தில் வாழ வேண்டிய ஞானத்ததைப் பொழிந்தட இறைவா உம்மை மன்றாடுகிறோம்.


இன்றைய சிந்தனை

அஞ்சவா, வேண்டாமா?

அஞ்சுவது அஞ்சாமை பேதைமை என்றார் திருவள்ளுவர். அஞ்சுவதற்கு அஞ்ச வேண்டாம். அஞ்சத் தேவையற்றவற்றைக் கண்டு துணிவுடன் நிற்க வேண்டும். இது ஒரு அறிவுடைமை. இது ஒரு ஞானம். இந்த ஞானத்தைக் கற்றுத் தருகிறது இன்றைய நற்செய்தி வாசகம். உடலைக் கொல்வோருக்கு அஞ்ச வேண்டாம். பண பலம், படை பலம், ஆள் பலம் கொண்ட மனிதர்களுக்கு அஞ்ச வேண்டாம். மாறாக, இறைவனுக்கு மட்டுமே அஞ்ச வேண்டாம். நமது மனச்சான்றின் குரலுக்கு அஞ்ச வேண்டும். ஏழை, எளியோரின் வயிற்றெரிச்சலுக்கு அஞ்ச வேண்டும். தீமை செய்வதற்கு, அநீதிக்குத் துணை போவதற்க அஞ்ச வேண்டும். திருச்சபையின் வரலாற்றில் இத்தகைய ஞானத்தைக் கொண்டிருந்த புனிதர்கள், மறை சாட்சியர், மாமனிதர்கள் பலரைச் சந்திக்கிறோம். இவர்கள் இறைவனுக்கு மட்டுமே அஞ்சினர். அரசர்களுக்கோ, உலக ஆற்றல்களுக்கோ அஞ்சா நெஞ்சர்களாக இருந்தனர். அத்தகையோருள் ஒருவர் இன்று நாம் நன்றியுடன் நினைவுகூரும் புனித பெனடிக்ட்.

இத்தகைய தெளிவை, ஞானத்தை நாமும் பெற்றுக்கொள்வோமாக. இந்த ஞானத்துக்காக இறைவனிடம் மன்றாடுவோமாக.

மன்றாட்டு:

ஞானத்தின் ஊற்றே இயேசுவே, இறைவனுக்கு மட்டுமே அஞ்சி, பிற அனைத்துக்கும் அஞ்சாமல் வாழ்கிற நெஞ்சத் துணிவை எங்களுக்குத் தந்தருள்வீராக. தீமையின் முன் அஞ்சாத சான்று வாழ்வால் நாங்கள் உம்மை மாட்சிமைப்படுத்துவோமாக. ஆமென்.