யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





முதலாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 11வது வாரம் வியாழக்கிழமை
2017-06-22




முதல் வாசகம்

ஊதியம் எதிர்பார்க்காமல் நான் உங்களுக்கு நற்செய்தி அறிவித்தேன்
திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 11: 1-11

சகோதரர் சகோதரிகளே, என் அறிவீனத்தை நீங்கள் சற்றுப் பொறுத்துக்கொள்ள வேண்டும்; ஆம் சற்றே பொறுத்துக் கொள்ளுங்கள். உங்கள்மீது கடவுள் கொண்டுள்ள அதே அன்பார்வத்தை நானும் கொண்டுள்ளேன். கிறிஸ்து என்னும் ஒரே மணமகனுக்கும் உங்களுக்கும் இடையே மண ஒப்பந்தம் செய்துள்ளேன். அவர்முன் உங்களைக் கற்புள்ள கன்னியாக நிறுத்த வேண்டும் என்பதே என் விருப்பம். ஆனால் ஏவா பாம்பின் சூழ்ச்சியினால் ஏமாற்றப்பட்டதைப் போல நீங்களும் உங்கள் எண்ணங்களைச் சீரழியவிட்டுக் கிறிஸ்துவிடம் விளங்கிய நேர்மையையும் தூய்மையையும் இழந்து விடுவீர்களோ என அஞ்சுகிறேன். உங்களிடம் யாராவது வந்து, நாங்கள் அறிவித்த இயேசுவைத் தவிர வேறு ஓர் இயேசுவைப்பற்றி அறிவித்தால், அல்லது நீங்கள் பெற்ற தூய ஆவியைத் தவிர வேறு ஓர் ஆவியைப் பற்றிப் பேசினால், அல்லது நீங்கள் ஏற்ற நற்செய்தியைத் தவிர வேறு ஒரு நற்செய்தியைக் கொண்டுவந்தால் நீங்கள் அவர்களை எளிதாக ஏற்றுக்கொள்கிறீர்கள். இப்படிப்பட்ட `மாபெரும்' திருத்தூதரை விட நான் எதிலும் குறைந்தவன் அல்லேன் என்றே கருதுகிறேன். நான் நாவன்மையற்று இருக்கலாம்; ஆனால் அறிவு அற்றவன் அல்ல; இதை எப்போதும் எல்லா வகையிலும் உங்களுக்குத் தெளிவு படுத்தியே இருக்கிறோம். ஊதியம் எதுவும் எதிர்பார்க்காமல் நான் உங்களுக்கு நற்செய்தி அறிவித்தேன். நீங்கள் உயர்வு பெற நான் தாழ்வுற்றேன். இதுதான் நான் செய்த பாவமா? நான் உங்களிடையே பணிபுரிந்தபோது என் செலவுக்கு வேண்டியதை மற்றத் திருச்சபைகளிடமிருந்து பெற்றுக் கொண்டேன். உங்களுக்காக அவர்களைக் கொள்ளையிட்டேன் என்றே சொல்லலாம். நான் உங்களோடு இருந்த போது எனக்குப் பற்றாக்குறை இல்லாமல் இல்லை. எனினும் நான் உங்களில் எவருக்கும் சுமையாய் இருந்ததில்லை. மாசிதோனியாவிலிருந்து வந்த அன்பர்கள் என் பற்றாக்குறையைப் போக்கினார்கள். நான் எதிலும் உங்களுக்குச் சுமையாய் இருந்ததில்லை; இனி இருக்கவும் மாட்டேன். கிறிஸ்துவின் உண்மையே என்னுள்ளும் இருப்பதால் நான் பெருமைப் படுவதை அக்காயா பகுதியிலுள்ள யாரும் தடுக்க முடியாது. ஏன் இப்படிச் சொல்கிறேன்? உங்களிடம் எனக்கு அன்பே இல்லை என்பதாலா? நான் உங்கள்மீது அன்பு கொண்டவன் என்பது கடவுளுக்குத் தெரியும்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

ஆண்டவரின் செயல்கள் நம்பிக்கைக்குரியவை; நீதியானவை.
திருப்பாடல்கள் 111;1-4,7-8

1 நெஞ்சார ஆண்டவருக்கு நன்றி செலுத்துவேன்; நீதிமான்களின் மன்றத்திலும் சபையிலும் அவருக்கு நன்றி செலுத்துவேன். 2 ஆண்டவரின் செயல்கள் உயர்ந்தவை; அவற்றில் இன்பம் காண்போர் அனைவரும் அவற்றை ஆய்ந்துணர்வர். பல்லவி

3 அவரது செயல் மேன்மையும் மாண்பும் மிக்கது; அவரது நீதி என்றென்றும் நிலைத்துள்ளது. 4 அவர் தம் வியத்தகு செயல்களை என்றும் நினைவில் நிலைக்கச் செய்துள்ளார்; அருளும் இரக்கமும் உடையவர் ஆண்டவர். பல்லவி

7 அவர்தம் ஆற்றல்மிகு செயல்கள் நம்பிக்கைக்குரியவை; நீதியானவை; அவர்தம் கட்டளைகள் அனைத்தும் நிலையானவை. 8 என்றென்றும் எக்காலமும் அவை நிலை மாறாதவை; உண்மையாலும் நீதியாலும் அவை உருவானவை. பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! நீங்கள் இவ்வாறு இறைவனிடம் வேண்டுங்கள். அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 7-15

அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: நீங்கள் இறைவனிடம் வேண்டும்பொழுது பிற இனத்தவரைப்போலப் பிதற்ற வேண்டாம்; மிகுதியான சொற்களை அடுக்கிக் கொண்டே போவதால் தங்கள் வேண்டுதல் கேட்கப்படும் என அவர்கள் நினைக்கிறார்கள். நீங்கள் அவர்களைப் போல் இருக்க வேண்டாம். ஏனெனில் நீங்கள் கேட்கும் முன்னரே உங்கள் தேவையை உங்கள் தந்தை அறிந்திருக்கிறார். ஆகவே, நீங்கள் இவ்வாறு இறைவனிடம் வேண்டுங்கள். ``விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே, உமது பெயர் தூயதெனப் போற்றப்பெறுக! உமது ஆட்சி வருக! உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவது போல மண்ணுலகிலும் நிறைவேறுக! இன்று தேவையான உணவை எங்களுக்குத் தாரும். எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்தோரை நாங்கள் மன்னித்துள்ளது போல எங்கள் குற்றங்களை மன்னியும். எங்களைச் சோதனைக்கு உட்படுத்தாதேயும், தீயோனிடமிருந்து எங்களை விடுவியும். மற்ற மனிதர் செய்யும் குற்றங்களை நீங்கள் மன்னிப்பீர்களானால் உங்கள் விண்ணகத் தந்தையும் உங்களை மன்னிப்பார். மற்ற மனிதரை நீங்கள் மன்னிக்காவிடில் உங்கள் தந்தையும் உங்கள் குற்றங்களை மன்னிக்க மாட்டார்.''

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

வேண்டுதலும், சொற்களும் !

“நீங்கள் இறைவனிடம் வேண்டும்பொழுது பிற இனத்தவரைப் போலப் பிதற்றவேண்டாம். மிகுதியான சொற்களை அடுக்கிக்கொண்டே போவதால் தங்கள் வேண்டுதல் கேட்கப்படும் என அவர்கள் நினைக்கிறார்கள். நீங்கள் அவர்களைப் போல் இருக்கவேண்டாம்” என்னும் ஆண்டவரின் அருள்மொழிகளை இன்று சிந்திப்போம். செபம் என்றதும் சொற்களைத்தான் நாம் நினைக்கிறோம். ‘எனக்குச் செபிக்கத் தெரியாது’ என்று சொல்பவர்கள், சொற்களை மனதில் வைத்துத்தான் அப்படிச் சொல்கிறார்கள். ஆனால், உண்மையில் சொற்களற்ற செபமும் இருக்கிறது. செபம் என்பது முதன்முதலில் ஒரு மனநிலை என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. இறைவனைப் பற்றிய, நம்மைப் பற்றிய, பிறரைப் பற்றிய நமது பார்வை, நமது மனநிலையே ஒரு செபம்தான். மனநிலையை சொற்களின் வழியாக வெளிப்படுத்தும்போது, அதற்கு ஒரு வடிவம் கிடைக்கிறது. அவ்வளவுதான். நல்ல மனநிலை இல்லாத சொற்கள் செபமே அல்ல. லூக் 18ல் இயேசு கூறிய பரிசேயர், வரிதண்டுவோர் இருவரின் செபம் பற்றிய உவமை இதை நன்கு விளக்குகிறது. எனவே, சொற்களைப் பற்றி நாம் அதிகம் கவலைப்படத் தேவையில்லை. மிகவும் அவசியமானது நல்ல மனநிலை, நல்ல கண்ணோட்டம். அந்த மனநிலையை ஆண்டவர் இயேசு கற்றுத்தந்த “பரலோகத்தில்” என்னும் செபத்தில் கற்றுக்கொள்ளலாம். இறைவன் நமது தந்தை, அவருக்கே நாம் முதலிடம் கொடுக்க வேண்டும், பிறரை மன்னித்து ஏற்றுக்கொள்ள வேண்டும், நமது தேவைகளில் இறைவனைச் சார்ந்து வாழவேண்டும் என்பவைதாம் அந்த மனநிலைகள்.

மன்றாட்டு:

எப்படி செபிக்க வேண்டும் என்று கற்றுத்தந்த இயேசுவே, உம்மைப் போற்றுகிறோம். உமது மாதிரியை நாங்களும் பின்பற்றி, அதிக சொற்களை அடுக்காமல், நல்ல மனநிலையை எங்களில் உருவாக்கி, அதனையே செபமாக மாற்ற அருள்தாரும். ஆமென்.