யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





முதலாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 10வது வாரம் புதன்கிழமை
2017-06-14




முதல் வாசகம்

தூய ஆவியால் விளைவது வாழ்வு.
2கொரிந்தியர் 3;4-11

4சகோதர சகோதரிகளே கிறிஸ்துவின் வழியாய் நாங்கள் கடவுள்மேல் வைத்துள்ள உறுதியான நம்பிக்கையால்தான் இவ்வாறு சொல்லுகிறோம். 5 நாங்களே செய்ததாக எதன் மேலும் உரிமைபாராட்டிக் கொள்ள எங்களுக்குத் தகுதி இல்லை. எங்கள் தகுதி கடவுளிடமிருந்தே வருகிறது. 6 அவரே புதிய உடன்படிக்கையின் பணியாளராகும் தகுதியை எங்களுக்குத் தந்தார். அவ்வுடன்படிக்கை, எழுதப்பட்ட சட்டத்தைச் சார்ந்ததல்ல; தூய ஆவியையே சார்ந்தது. ஏனெனில் எழுதப்பட்ட சட்டத்தால் விளைவது சாவு; தூய ஆவியால் விளைவது வாழ்வு. 7 கற்களில் பொறிக்கப்பட்ட அச்சட்டம் சார்ந்த திருப்பணி சாவை விளைவிப்பதாயிருந்தும் அது மாட்சியுடன் அருளப்பட்டது. விரைவில் மறையவேண்டியதாயிருந்த அம்மாட்சி மோசேயின் முகத்தில் இஸ்ரயேல் மக்கள் பார்க்க முடியாத அளவுக்கு ஒளிவீசியது. 8 அதுவே அப்படியிருந்தது என்றால் தூய ஆவிசார்ந்த திருப்பணி எத்துணை மாட்சி பொருந்தியதாயிருக்கும்! 9 தண்டனைத் தீர்ப்பு அளிக்கும் திருப்பணியே இத்துணை மாட்சி பொருந்தியதாயிருந்தது என்றால் விடுதலைத் தீர்ப்பு அளிக்கும் திருப்பணி எத்துணை மாட்சி நிறைந்ததாயிருக்கும்! 10 அன்றைய மாட்சியை ஒப்புயர்வற்ற இன்றைய மாட்சியோடு ஒப்பிட்டால் அது மாட்சியே அல்ல. 11 மறையப்போவது மாட்சி உடையதாயிருந்தால் நிலையாக இருப்பது எத்துணை மாட்சி மிகுந்ததாயிருக்கும்!

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

நம் கடவுளாகிய ஆண்டவரைப் பெருமைப்படுத்துங்கள்;
திருப்பாடல்கள் 99;5-9

5 நம் கடவுளாகிய ஆண்டவரைப் பெருமைப்படுத்துங்கள்; அவரது அரியணைமுன் தாள் பணிந்து வணங்குங்கள்; அவரே தூயவர்!பல்லவி

6 மோசேயும் ஆரோனும் அவர்தம் குருக்கள்; அவரது பெயரால் மன்றாடுவோருள் சாமுவேலும் ஒருவர்; அவர்கள் ஆண்டவரை நோக்கி மன்றாடினர்; அவரும் அவர்களுக்குச் செவிசாய்த்தார்.பல்லவி

7 மேகத் தூணிலிருந்து அவர்களோடு பேசினார்; அவர்கள் அவருடைய ஒழுங்கு முறைகளையும் அவர் அவர்களுக்குத் தந்த நியமங்களையும் கடைப்பிடித்தார்கள்பல்லவி.

8 எங்கள் கடவுளாகிய ஆண்டவரே! நீர் அவர்களுக்குச் செவிசாய்த்தீர்; மன்னிக்கும் கடவுளாக உம்மை வெளிப்படுத்தினீர்; ஆயினும், அவர்களுடைய தீச்செயல்களுக்காய் நீர் அவர்களைத் தண்டித்தீர்.பல்லவி

9 நம் கடவுளாகிய ஆண்டவரைப் பெருமைப்படுத்துங்கள்; அவரது திருமலையில் அவரைத் தொழுங்கள். ஏனெனில், நம் கடவுளாகிய ஆண்டவரே தூயவர்.


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! "திருச்சட்டத்தையோ இறைவாக்குகளையோ நான் அழிக்க வந்தேன் என நீங்கள் எண்ண வேண்டாம் அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

மத்தேயு 5;17-19

அக்காலத்தில் யேசு தம் சீடர்களுக்கு கூறியதாவது7 "திருச்சட்டத்தையோ இறைவாக்குகளையோ நான் அழிக்க வந்தேன் என நீங்கள் எண்ண வேண்டாம்; அவற்றை அழிப்பதற்கல்ல, நிறைவேற்றுவதற்கே வந்தேன். 18 "விண்ணும் மண்ணும் ஒழிந்து போகுமுன் திருச்சட்டம் யாவும் நிறைவேறும். அதன் ஒரு சிற்றெழுத்தோ ஒரு புள்ளியோ ஒழியாது என உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன். 19 எனவே, இக்கட்டளைகளில் மிகச் சிறியது ஒன்றையேனும் மீறி அவ்வாறே மக்களுக்கும் கற்பிக்கிறவர் விண்ணரசில் மிகச் சிறியவர் எனக் கருதப்படுவார். இவையனைத்தையும் கடைப்பிடித்துக் கற்பிக்கிறவரோ விண்ணரசில் பெரியவர் எனக் கருதப்படுவார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''இயேசு, 'திருச்சட்டத்தையோ இறைவாக்குகளையோ நான் அழிக்கவந்தேன் என நீங்கள் எண்ண வேண்டாம்' என்றார்'' (மத்தேயு 5:17)

''திருச்சட்டமும் இறைவாக்குகளும்'' என்னும் கூற்று விவிலியத்தைக் குறிப்பதற்குப் பயன்படுத்தப்பட்டது. ''திருச்சட்டம்'' என்பது மோசே வழியாகக் கடவுள் இஸ்ரயேல் மக்களுக்கு வழங்கிய வாழ்க்கை நெறியைக் குறிக்கும். அதை விளக்கியுரைத்தனர் இறைவாக்கினர். எனவே, இயேசு ''பழைய ஏற்பாட்டில் கூறப்பட்டிருப்பவற்றை'' அழிக்கவரவில்லை என மத்தேயு இவண் குறிப்பிடுவதாகக் கொள்ளலாம். என்றாலும், இயேசு பழைய ஏற்பாட்டுப் பழக்கங்கள் பலவற்றை விமர்சித்தார்; அவற்றை ஒதுக்கிவைத்தார். எடுத்துக்காட்டாக, உணவருந்துமுன் கைகழுவுதல், கலன்களைச் சுத்தம் செய்தல் போன்றவை குறித்து இயேசு படிப்பித்ததையும், ஓய்வுநாள் கடைப்பிடிப்பதுபற்றி இயேசு கொணர்ந்த புதிய போதனையையும், பழைய ஏற்பாட்டுச் சட்டங்களை அவர் வித்தியாசமாக விளக்கியுரைத்ததையும் இவண் குறிப்பிடலாம் (காண்க: மத் 15:1-20; மத்23:25; மத் 12:1-8; மத் 5:21-48). எனவே, இயேசு திருச்சட்டத்தையும் இறைவாக்குகளையும் அழிப்பதற்கல்ல, அவற்றை ''நிறைவேற்றவே'' வந்தார் (மத் 5:17) என்பதன் பொருள் என்ன?

இயேசு யூத மரபில் பிறந்து வளர்ந்தவர். எனவே, அவருடைய ஆன்மீகம் யூத முறையில் அமைந்திருந்தது என்பதை நாம் ஐயமற ஏற்கலாம். என்றாலும், இயேசு யூத சமய நெறிகளைச் சீர்திருத்தவதையும் தன் பணியின் குறிக்கோளாகக் கொண்டிருந்தார் என்பதை நற்செய்தி நூல்கள் தெளிவுபடுத்துகின்றன. யூத சமய மரபு சில வேளைகளில் சட்ட நுணுக்கங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துவிட்டு, சட்டத்தின் உண்மைப் பொருளை மறந்துபோனதுண்டு. இதை இயேசு கண்டிக்கிறார். அதுபோலவே, யூத சமய நெறிகளை விளக்கியுரைத்த மறைநூல் அறிஞரும் பரிசேயரும் அவற்றின் ஆழ்ந்த பொருளை மறந்துவிட்டிருந்தனர். எனவே இயேசு தம் சீடரின் நெறி ''மறைநூல் அறிஞர், பரிசேயர் ஆகியோரின் நெறியைவிடச் சிறந்திருக்கவேண்டும்'' எனக் கோரினார் (காண்க: மத் 5:20). இயேசுவின் சீடர்களாக வாழும் நாம் அவருடைய வாழ்வில் துலங்கிய நெறியை நமதாக்கிட வேண்டும்.

மன்றாட்டு:

இறைவா, உம் அன்பில் நாங்கள் எந்நாளும் நிலைத்திருக்க அருள்தாரும்.