யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





முதலாவது திருவழிபாடு ஆண்டு
பாஸ்கா காலம் 7வது வாரம் வியாழக்கிழமை
2017-06-01




முதல் வாசகம்

ஆண்டவர் அவரருகில் நின்று, "துணிவோடிரும்; எருசலேமில் என்னைப்பற்றி சான்று பகர்ந்தது போல உரோமையிலும் நீர் சான்றுபகர வேண்டும்.
திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 22;30,23;6-11

30 யூதர்கள் பவுல்மீது என்ன குற்றம் சுமத்துகிறார்கள் என்பதை உறுதியாக அறிய ஆயிரத்தவர் தலைவர் விரும்பினார். எனவே, மறுநாள் தலைமைக் குருக்களும், தலைமைச் சங்கத்தினர் அனைவரும் கூடிவருமாறு அவர் ஆணை பிறப்பித்துப் பவுலை சிறையிலிருந்து கொண்டு வந்து அவர்கள் முன் நிறுத்தினார். 6 அவர்களுள் ஒரு பகுதியினர் சதுசேயர் என்றும், மறுபகுதியினர் பரிசேயர் என்றும் பவுல் அறிந்து, "சகோதரரே! நான் ஒரு பரிசேயன். பரிசேய மரபில் பிறந்தவன்; இறந்தோர் உயிர்த்தெழுவர் என்னும் எதிர்நோக்கின் பொருட்டு விசாரிக்கப்படுகிறேன்" என்று தலைமைச் சங்கத்தின் முன் உரத்த குரலில் கூறினார். 7 அவர் இப்படிச் சொன்னபோது பரிசேயருக்கும் சதுசேயருக்குமிடையே வாக்குவாதம் எழுந்தது. எனவே அங்குத் திரண்டிருந்தோர் இரண்டாகப் பிரிந்தனர். 8 சதுசேயப் பிரிவினர் வானதூதரும் உயிர்த்தெழுதல், ஆவிகள் ஆகியனவும் இல்லை என்று கூறி வந்தனர்; பரிசேயர் இவையனைத்தும் உண்டென ஏற்றுக் கொண்டனர். 9 அங்குப் பெருங்கூச்சல் எழுந்தது. பரிசேயப் பிரிவினைச்சேர்ந்த மறைநூல் அறிஞருள் சிலர் எழுந்து, "இவரிடம் தவறொன்றையும் காணோமே! வானதூதர் ஒருவரோ, ஓர் ஆவியோ இவரோடு பேசியிருக்கலாம் அல்லவா!" என வாதாடினர். 10 வாக்குவாதம் முற்றவே அவர்கள் பவுலைப் பிய்த்தெறிந்து விடுவர் என ஆயிரத்தவர் தலைவர் அஞ்சி படைவீரரை வரச்சொல்லி அவரை அவர்கள் நடுவிலிருந்து பிடித்துக் கோட்டைக்குள் கூட்டிக்கொண்டு செல்லுமாறு ஆணை பிறப்பித்தார். 11 மறுநாள் இரவு" என்றார் ஆண்டவர் அவரருகில் நின்று, "துணிவோடிரும்; எருசலேமில் என்னைப்பற்றி சான்று பகர்ந்தது போல உரோமையிலும் நீர் சான்றுபகர வேண்டும்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

ஆண்டவரை எப்போதும் என் கண்முன் வைத்துள்ளேன்; அவர் என் வலப்பக்கம் உள்ளார்
திருப்பாடல்கள் 16;1-2 ,5-11

1 இறைவா, என்னைக் காத்தருளும்; உம்மிடம் நான் அடைக்கலம் புகுந்துள்ளேன்.2 நான் ஆண்டவரிடம் 'நீரே என் தலைவர்; உம்மையன்றி வேறு செல்வம் எனக்கு இல்லை' என்று சொன்னேன்.பல்லவி

5 ஆண்டவர்தாமே என் உரிமைச் சொத்து; அவரே என் கிண்ணம்; எனக்குரிய பங்கைக் காப்பவரும் அவரே;6 இனிமையான நிலங்கள் எனக்குப் பாகமாகக் கிடைத்தன; உண்மையாகவே என் உரிமைச் சொத்து வளமானதே.பல்லவி

7 எனக்கு அறிவுரை வழங்கும் ஆண்டவரைப் போற்றுகின்றேன்; இரவில்கூட என் மனச்சான்று என்னை எச்சரிக்கின்றது. 8 ஆண்டவரை எப்போதும் என் கண்முன் வைத்துள்ளேன்; அவர் என் வலப்பக்கம் உள்ளார்; எனவே, நான் அசைவுறேன்.பல்லவி

9 என் இதயம் அக்களிக்கின்றது; என் உள்ளம் மகிழ்ந்து துள்ளுகின்றது; என் உடலும் பாதுகாப்பில் நிலைத்திருக்கும். 10 ஏனெனில், என்னைப் பாதாளத்திடம் ஒப்பவிக்கமாட்டீர்; உம் அன்பனைப் படுகுழியைக் காண விடமாட்டீர்.பல்லவி

11 வாழ்வின் வழியை நான் அறியச் செய்வீர்; உமது முன்னிலையில் எனக்கு நிறைவான மகிழ்ச்சி உண்டு; உமது வலப்பக்கத்தில் எப்போதும் பேரின்பம் உண்டு.


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! "தந்தையே, உலகம் தோன்றுமுன்னே நீர் என்மீது அன்புகொண்டு எனக்கு மாட்சி அளித்தீர் அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 17;20-26

20 "அவர்களுக்காக மட்டும் நான் வேண்டவில்லை; அவர்களுடைய வார்த்தையின் வழியாக என்னிடம் நம்பிக்கை கொள்வோருக்காகவும் வேண்டுகிறேன். 21 எல்லாரும் ஒன்றாய் இருப்பார்களாக! தந்தையே, நீர் என்னுள்ளும் நான் உம்முள்ளும் இருப்பதுபோல் அவர்களும் ஒன்றாய் இருப்பார்களாக! இதனால் நீரே என்னை அனுப்பினீர் என்று உலகம் நம்பும். 22 நாம் ஒன்றாய் இருப்பதுபோல் அவர்களும் ஒன்றாய் இருக்குமாறு நீர் எனக்கு அருளிய மாட்சியை நான் அவர்களுக்கு அளித்தேன். 23 இவ்வாறு, நான் அவர்களுள்ளும் நீர் என்னுள்ளும் இருப்பதால் அவர்களும் முழுமையாய் ஒன்றித்திருப்பார்களாக. இதனால் நீரே என்னை அனுப்பினீர் எனவும் நீர் என்மீது அன்பு கொண்டுள்ளதுபோல் அவர்கள்மீதும் அன்பு கொண்டுள்ளீர் எனவும் உலகு அறிந்து கொள்ளும். 24 "தந்தையே, உலகம் தோன்றுமுன்னே நீர் என்மீது அன்புகொண்டு எனக்கு மாட்சி அளித்தீர். நீர் என்னிடம் ஒப்படைத்தவர்கள் என் மாட்சியைக் காணுமாறு அவர்களும் நான் இருக்கும் இடத்திலேயே என்னோடு இருக்க வேண்டும் என விரும்புகிறேன். 25 நீதியுள்ள தந்தையே, உலகு உம்மை அறியவில்லை; ஆனால் நான் உம்மை அறிந்துள்ளேன். நீரே என்னை அனுப்பினீர் என அவர்களும் அறிந்து கொண்டார்கள். 26 நான் அவர்களோடு இணைந்திருக்கவும் நீர் என்மீது கொண்டிருந்த அன்பு அவர்கள்மீது இருக்கவும் உம்மைப்பற்றி அவர்களுக்கு அறிவித்;தேன்; இன்னும் அறிவிப்பேன்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''இயேசு, 'தந்தையே, இனி நான் உலகில் இருக்கப்போவதில்லை. அவர்கள் உலகில் இருப்பார்கள். நான் உம்மிடம் வருகிறேன்' என்றார்'' (யோவான் 17:11)

தந்தையிடம் திரும்பிச் செல்கின்ற இயேசு தாம் ''உலகில் இருக்கப்போவதில்லை'' என்கிறார். அதாவது, தம் சீடர்களோடு நடமாடிப் பழகி, அவர்களுக்குக் கடவுளின் ஆட்சி பற்றி அறிவித்த நாள்கள் முடிவுக்கு வந்துவிட்டன என இயேசு அறிவிக்கிறார். தாம் துன்பங்கள் அனுபவித்து, இறக்கப் போவதையும் அவர் சீடர்களுக்குத் தெரிவிக்கிறார். அதே நேரத்தில் இயேசு உலகை விட்டு மறைந்துபோகவில்லை. ஏனென்றால் அவர் சாவை வென்று, உயிர்பெற்றெழுந்தார். புதியதொரு முறையில் அவர் இந்த உலகில் நம்மோடு இருந்துவருகிறார். எனவே, தந்தையிடம் இயேசு சென்றார் என்றதும் அவர் நம்மை மறந்துவிட்டதாகவோ நம்மிடமிருந்து மறைந்துவிட்டதாகவோ நாம் எண்ணலாகாது. மாறாக, தந்தையிடம் சென்ற இயேசு தம் சீடர்களின் வாழ்வில் இன்னும் சிறப்பான விதத்தில் பங்கேற்கிறார்.

தந்தைக்கும் இயேசுவுக்கும் இடையே நிலவுகின்ற உறவு தனித்தன்மை வாய்ந்தது. தந்தை தம் மகனாகிய இயேசுவை மகிமைப்படுத்தினார். அந்த மகிமையில் நமக்கும் பங்கு வழங்கப்படுகிறது. இயேசு நம்மோடு உயிர்பெற்றெழுந்த ஆண்டவராக இருந்து நம்மை வழிநடத்துகிறார். எனவே நாம் தந்தையோடு உறவாட இயலுகிறது. தந்தையை நமக்கு இயேசு வெளிப்படுத்துகிறார். எனவே நாம் கடவுளின் உடனிருப்பை நம் வாழ்வில் உணர முடிகிறது. இது நமக்கு வழங்கப்படுகின்ற தூய ஆவியின் சக்தியால் நிகழ்கிறது. கடவுளிடம் சென்ற இயேசு நமக்காகப் பரிந்துபேசுகிறார் என்பது இன்னொரு ஆழமான உண்மை. நாம் கடவுளை அணுகிச் சென்று நம் தேவைகளை அவரிடம் எடுத்துரைக்கும்போது நமக்காகத் தந்தையிடம் மன்றாட இயேசு இருக்கின்றார். ஏனென்றால் இயேசு நம்மைப் போல மனிதராக வாழ்ந்ததால் மனித நிலை அவருக்கு அன்னியம் அல்ல. நம் தேவைகளை அவர் அறிவார். நமக்குக் கடவுளின்; அன்பையும் அருளையும் பெற்றுத் தருவார். ஆக, உலகில் இருக்கப்போவதில்லை எனக் கூறுகின்ற இயேசு புதிய முறையில் நம்மோடு இருக்கிறார் என்பதும் நம்மைத் தந்தையிடம் இட்டுச் செல்கிறார் என்பதும் நம் நம்பிக்கை.

மன்றாட்டு:

இறைவா, உம் திருமகன் காட்டுகின்ற வழியில் நாங்கள் நடந்து சென்று உம்மைக் கண்டடைய அருள்தாரும்.