யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





முதலாவது திருவழிபாடு ஆண்டு
பாஸ்காகாலம் 3வது வாரம் திங்கட்கிழமை
2017-05-01

புனித கன்னிமரியாளின் கணவர் புனித யோசேப்பு




முதல் வாசகம்

இந்த மனிதன் இத்தூய இடத்தையும் திருச்சட்டத்தையும் எதிர்த்து ஓயாமல் பேசி வருகிறான்
தி;பணி6;8-15

ஸ்தேவான் அருளும் வல்லமையும் நிறைந்தவராய் மக்களிடையே பெரும் அருஞ்செயல்களையும் அரும் அடையாளங்களையும் செய்து வந்தார். 9அப்பொழுது உரிமையடைந்தோர் எனப்படுவோரின் தொழுகைக்கூடத்தைச் சேர்ந்த சிலரும் சிரேன், அலக்சாந்திரியா நகரினரும் சிலிசியா, ஆசியா மாநிலத்தவரும் ஸ்தேவனோடு வாதாடத் தொடங்கினர். 10ஆனால் அவரது ஞானத்தையும் தூய ஆவி வாயிலாக அவர் பேசிய வார்த்தைகளையும் எதிர்த்து நிற்க அவர்களால் இயலவில்லை. 11பின்பு அவர்கள், “இவன் மோசேக்கும் கடவுளுக்கும் எதிராகப் பழிச்சொற்கள் சொன்னதை நாங்கள் கேட்டிருக்கிறோம்” என்று கூறச் சிலரைத் தூண்டிவிட்டனர். 12அவ்வாறே அவர்கள் மக்களையும் மூப்பர்களையும் மறைநூல் அறிஞர்களையும் அவருக்கு எதிராகக் கிளர்ந்தெழச் செய்தார்கள். உடனே அவர்கள் எழுந்து வந்து அவரைப் பிடித்துத் தலைமைச் சங்கத்துக்கு இழுத்துச் சென்றார்கள்; 13மேலும் பொய்ச் சாட்சிகளைக் கொண்டுவந்து நிறுத்தினார்கள். அவர்கள், “இந்த மனிதன் இத்தூய இடத்தையும் திருச்சட்டத்தையும் எதிர்த்து ஓயாமல் பேசி வருகிறான்” என்று கூறினார்கள். 14மேலும் அவர்கள், “நசரேயராகிய இயேசு இந்த இடத்தை அழித்துவிடுவார் என்றும், மோசே நமக்குக் கொடுத்திருக்கிற முறைமைகளை மாற்றிவிடுவார் என்றும் இவன் கூறக் கேட்டோம்” என்றார்கள். 15தலைமைச் சங்கத்தில் அமர்ந்திருந்த அனைவரும் அவரை உற்றுப் பார்த்தபோது அவரது முகம் வானதூதரின் முகம்போல் இருக்கக் கண்டனர்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

என் வழிமுறைகளை உமக்கு எடுத்துச் சொன்னேன்; நீர் என் மன்றாட்டைக் கேட்டருளினீர்
திருப்பாடல் 119;23-30

23தலைவர்கள் ஒன்றுகூடி எனக்கெதிராய்ச் சூழ்ச்சி செய்தாலும், உம் ஊழியன் உம்முடைய விதிமுறைகளைக் குறித்தே சிந்திக்கின்றேன்.பல்லவி

24ஏனெனில், உம் ஒழுங்குமுறைகள் எனக்கு இன்பம் தருகின்றன; அவையே எனக்கு அறிவுரையாளர். 26என் வழிமுறைகளை உமக்கு எடுத்துச் சொன்னேன்; நீர் என் மன்றாட்டைக் கேட்டருளினீர்; உம் விதிமுறைகளை எனக்குக் கற்றுத்தாரும். பல்லவி

27உம் நியமங்கள் காட்டும் வழியை என்றும் உணர்த்தியருளும்; உம் வியத்தகு செயல்கள்பற்றி நான் சிந்தனை செய்வேன் 29பொய் வழியை என்னைவிட்டு விலக்கியருளும்; உமது திருச்சட்டத்தை எனக்குக் கற்றுத்தாரும். பல்லவி

30உண்மையின் பாதையை நான் தேர்ந்துகோண்டேன்; உம் நீதிநெறிகளை என் கண்முன் நிறுத்தியுள்ளேன் பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! “நீங்கள் அரும் அடையாளங்களைக் கண்டதால் அல்ல, மாறாக, அப்பங்களை வயிறார உண்டதால்தான் என்னைத் தேடுகிறீர்கள் அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

புனித யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம்6;22-29

சீடர்கள் புறப்பட்ட கரையிலேயே மறு நாளும் மக்கள் கூட்டமாய் நின்று கொண்டிருந்தார்கள். முந்தின நாள் ஒரு படகைத்தவிர வேறு படகு எதுவும் அங்கு இல்லை என்பதையும் அதில் இயேசுவின் சீடர்கள் மட்டும் போனார்களே அன்றி இயேசு அவர்களோடு அப்படகில் ஏறவில்லை என்பதையும் அவர்கள் கண்கூடாகப் பார்த்திருந்தார்கள். 23அப்போது, ஆண்டவர் கடவுளுக்கு நன்றி செலுத்திக் கொடுத்த உணவை மக்கள் உண்ட இடத்திற்கு அருகில் திபேரியாவிலிருந்து படகுகள் வந்து சேர்ந்தன. 24இயேசுவும் அவருடைய சீடரும் அங்கு இல்லை என்பதைக் கண்ட மக்கள் கூட்டமாய் அப்படகுகளில் ஏறி இயேசுவைத் தேடிக் கப்பர்நாகுமுக்குச் சென்றனர். 25அங்கு கடற்கரையில் அவர்கள் அவரைக் கண்டு, “ரபி, எப்போது இங்கு வந்தீர்?” என்று கேட்டார்கள். 26இயேசு மறுமொழியாக, “நீங்கள் அரும் அடையாளங்களைக் கண்டதால் அல்ல, மாறாக, அப்பங்களை வயிறார உண்டதால்தான் என்னைத் தேடுகிறீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். 27அழிந்துபோகும் உணவுக்காக உழைக்க வேண்டாம். நிலைவாழ்வு தரும் அழியாத உணவுக்காகவே உழையுங்கள். அவ்வுணவை மானிடமகன் உங்களுக்குக் கொடுப்பார். ஏனெனில் தந்தையாகிய கடவுள் அவருக்கே தம் அதிகாரத்தை அளித்துள்ளார்” என்றார். 28அவர்கள் அவரை நோக்கி, “எங்கள் செயல்கள் கடவுளுக்கு ஏற்றவையாக இருப்பதற்கு நாங்கள் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டார்கள். 29இயேசு அவர்களைப் பார்த்து, “கடவுள் அனுப்பியவரை நம்பவதே கடவுளுக்கேற்ற செயல்” என்றார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

"எங்கிருந்து இந்த ஞானம் இவருக்கு வந்தது?" (மத்தேயு 13:54)

அன்றாட வாழ்க்கை நிகழ்வுகளில், சாதாரண நிகழ்ச்சிகளில் கடவுளின் பிரசன்னத்தைக் காண நாம் தவறிவிடுவதுண்டு. இதுதான் இயேசுவின் கால மக்களுக்கும் நடந்தது. இயேசு மக்களுக்கு இறையாட்சி பற்றிய அரிய கருத்துக்களை வெவ்வேறு இடங்களில் போதித்துவிட்டுத் தம் சொந்த ஊராகிய நாசரேத்துக்கு வருகிறார். அங்கே தொழுகைக் கூடத்தில் மக்களுக்குக் கற்பிக்கிறார். அவர்களுக்கு ஒரே வியப்பு! நம் ஊரில் வளர்ந்த இவர் இவ்வளவு ஞானத்தோடு பேசுகிறாரே என்று அவர்கள் ஆச்சரியப்பட்டார்கள். இந்த வியப்பை நாம் இரு கோணங்களிலிருந்து பார்க்கலாம். வியப்பு சில வேளைகளில் ஒரு நிகழ்ச்சியை நாம் ஆழமாகப் புரிந்துகொள்ள முதல் படி ஆகலாம். வேறு தருணங்களில் வியப்பு ஒரு நிகழ்ச்சியின் உண்மைப் பொருளைக் கண்டுகொள்வதிலிருந்து நம்மைத் திசைதிருப்பிவிடலாம். நாசரேத்து ஊர் மக்களைப் பொறுத்தமட்டில் நடந்தது இதுதான். அவர்கள் இயேசுவின் ஞானத்தைக் கண்டு வியந்தபோதிலும் அந்த ஞானம் அவருக்கு எங்கிருந்து வந்தது என்னும் கேள்வியை எழுப்பியபோதிலும், அவர் சாதாரண மனிதர்தானே, நம்மில் ஒருவர்தானே என்ற எண்ணத்தில் உறைந்துபோனார்கள். அந்த மன நிலையிலிருந்து அவர்கள் விடுபடாததால் இயேசுவிடம் ஏதோ ஒரு சிறப்பு அம்சம் உள்ளது என்பதைக் காணத் தவறிவிட்டார்கள். ஒருவிதத்தில் நாசரேத்து மக்கள் இயேசுவை நன்கு தெரிந்திருந்ததால், அல்லது அவரை நன்கு தெரியும் என்று நினைத்துக்கொண்டதால், இறையாட்சி பற்றி அவர் அறிவித்த அரிய போதனையைத் திறந்த மனத்தோடும் நம்பிக்கையோடும் ஏற்க முன்வரவில்லை. எனவே, இயேசு அவர்களிடம், "தம் சொந்த ஊரிலும் வீட்டிலும் தவிர மற்றெங்கும் இறைவாக்கினர் மதிப்புப் பெறுவர்" என்று கூறினார்.

ஒவ்வொரு நாளும் நடக்கின்ற சாதாரண நிகழ்ச்சிகளில் கடவுளின் உடனிருப்பை நாம் எவ்வாறு காண்கிறோம்? நம்மைச் சந்திக்க வருகின்ற கடவுளை நாம் திறந்த மனத்தோடு ஏற்கும்போது நம் அன்றாட அனுபவத்திலும் அவருடைய செயல் துலங்குவதை நாம் காணலாம். நம் அகக் கண்களை மூடிக்கொண்டு, நம் அன்றாட அனுபவங்களை ஆழமாக நாம் நோக்காவிட்டால் கடவுள் ஆங்கிருந்து செயல்படுவதைக் காண நாம் தவறிவிடுவோம். வெளித்தோற்றத்தைக் கொண்டு மட்டும் நாம் தீர்ப்பிடாமல், புறப் பார்வையில் தெரிவதையும் தாண்டிச்சென்று நம் அனுபவத்தின் தொடுவானத்தைக் கருத்தில் கொண்டு சிந்தித்தால் அங்கே நம் அன்றாட வாழ்க்கை நிகழ்ச்சிகளுக்குப் பொருள்தருகின்ற கடவுளின் பிரசன்னம் ஒளிமயமாகத் தோன்றி மிளிர்வதைக் கண்டு உணர்ந்துகொள்வோம். இதுவே கடவுளிடம், இயேசுவிடம் நம்பிக்கை கொள்வதற்கு நாம் எடுத்துவைக்கும் முதல் அடி.

மன்றாட்டு:

இறைவா, உம் உடனிருப்பைக் கண்டுகொள்ள எங்கள் அகக் கண்களைத் திறந்தருளும்.