யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
புனிதவாரம்
2017-04-11




முதல் வாசகம்

உலகம் முழுவதும் என் மீட்பை அடைவதற்கு நான் உன்னைப் பிற இனத்தாருக்கு ஒளியாக ஏற்படுத்துவேன்.
இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 49: 1-6

தீவு நாட்டினரே, எனக்குச் செவிகொடுங்கள்; தொலைவாழ் மக்களினங்களே, கவனியுங்கள்; கருப்பையில் இருக்கும்போதே ஆண்டவர் என்னை அழைத்தார்; என் தாய் வயிற்றில் உருவாகும்போதே என் பெயர் சொல்லிக் கூப்பிட்டார். என் வாயைக் கூரான வாள்போன்று ஆக்கினார்; தம் கையின் நிழலால் என்னைப் பாதுகாத்தார்; என்னைப் பளபளக்கும் அம்பு ஆக்கினார்; தம் அம்பறாத் தூணியில் என்னை மறைத்துக்கொண்டார். அவர் என்னிடம், `நீயே என் ஊழியன், இஸ்ரயேலே! உன் வழியாய் நான் மாட்சியுறுவேன்' என்றார். நானோ, `வீணாக நான் உழைத்தேன்; வெறுமையாகவும் பயனின்றியும் என் ஆற்றலைச் செலவழித்தேன்; ஆயினும் எனக்குரிய நீதி ஆண்டவரிடம் உள்ளது; என் பணிக்கான பரிசு என் கடவுளிடம் இருக்கின்றது' என்றேன். யாக்கோபைத் தம்மிடம் கொண்டுவரவும், சிதறுண்ட இஸ்ரயேலை ஒன்றுதிரட்டவும் கருப்பையிலிருந்தே ஆண்டவர் என்னைத் தம் ஊழியனாக உருவாக்கினார்; ஆண்டவர் பார்வையில் நான் மதிப்புப் பெற்றவன்; என் கடவுளே என் ஆற்றல் ; அவர் இப்பொழுது உரைக்கிறார்: அவர் கூறுவது: யாக்கோபின் குலங்களை நிலைநிறுத்துவதற்கும் இஸ்ரயேலில் காக்கப்பட்டோரைத் திருப்பிக் கொணர்வதற்கும் நீ என் ஊழியனாக இருப்பது எளிதன்றோ? உலகம் முழுவதும் என் மீட்பை அடைவதற்கு நான் உன்னைப் பிற இனத்தாருக்கு ஒளியாகவும் ஏற்படுத்துவேன்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

பல்லவி: என் வாய் நாள்தோறும் உமது மீட்பை எடுத்துரைக்கும்.
திருப்பாடல்71;1-6 7 8 15 17

1 ஆண்டவரே! உம்மிடம் நான் அடைக்கலம் புகுந்துள்ளேன்; ஒருபோதும் நான் வெட்கமுற விடாதேயும். 2 உமது நீதிக்கேற்ப என்னை விடுவித்தருளும்; எனக்கு நீர் செவிசாய்த்து என்னை மீட்டுக்கொள்ளும். பல்லவி

3 என் அடைக்கலப் பாறையாக நீர் இருந்தருளும்; கோட்டை அரணாயிருந்து என்னை மீட்டருளும்; ஏனெனில், நீர் எனக்குக் கற்பாறையாகவும் அரணாகவும் இருக்கின்றீர். 4 என் கடவுளே, பொல்லார் கையினின்று என்னைக் காத்தருளும்; நெறிகேடும் கொடுமையும் நிறைந்தோர் பிடியினின்று என்னைக் காத்தருளும். பல்லவி

5 என் தலைவரே, நீரே என் நம்பிக்கை; ஆண்டவரே, இளமை முதல் நீரே என் நம்பிக்கை. 6 பிறப்பிலிருந்து நான் உம்மைச் சார்ந்துள்ளேன்; தாய் வயிற்றிலிருந்து நீர் என்னைப் பிரித்தெடுத்தீர்; உம்மையே நான் எப்போதும் புகழ்ந்து போற்றுவேன். பல்லவி

15 என் வாய் நாள்தோறும் உமது நீதியையும் நீர் அருளும் மீட்பையும் எடுத்துரைக்கும்; உம் அருட்செயல்களை என்னால் கணிக்க இயலாது. 17 கடவுளே, என் இளமைமுதல் எனக்குக் கற்பித்து வந்தீர்; இனிவரும் நாள்களிலும் உம் வியத்தகு செயல்களை அறிவிப்பேன். பல்லவி


நற்செய்திக்கு முன் வசனம்

பரம தந்தைக்குக் கீழ்ப்படிகின்ற எங்கள் அரசரே, போற்றப் பெறுக; அடிக்கக் கொண்டுபோகப்படும் சாந்தமான செம்மறிபோல நீர் சிலுவையில் அறையப்படக் கொண்டு செல்லப்படுகிறீர்.

நற்செய்தி வாசகம்

+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 21-33, 36-38

அக்காலத்தில் தம் சீடர்களுடன் பந்தியமர்ந்த இயேசு உள்ளம் கலங்கியவராய், ``உங்களுள் ஒருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்'' என்று திட்டவட்டமாகக் கூறினார். யாரைப்பற்றி அவர் இப்படிக் கூறினார் என்று தெரியாமல் சீடர்கள் குழப்பமுற்று ஒருவரை ஒருவர் நோக்கினார்கள். இயேசுவின் சீடருள் ஒருவர் அவர் அருகில் அவர் மார்புப் பக்கமாய்ச் சாய்ந்திருந்தார். அவர்மேல் இயேசு அன்புகொண்டிருந்தார். சீமோன் பேதுரு அவருக்குச் சைகை காட்டி, ``யாரைப்பற்றிக் கூறுகிறார் எனக் கேள்'' என்றார். இயேசுவின் அருகில் அவர் மார்புப் பக்கமாய்ச் சாய்ந்திருந்த அவர், ``ஆண்டவரே அவன் யார்?'' என்று கேட்டார். இயேசு மறுமொழியாக, ``நான் யாருக்கு அப்பத் துண்டைத் தோய்த்துக் கொடுக்கிறேனோ அவன்தான்'' எனச் சொல்லி, அப்பத் துண்டைத் தோய்த்துச் சீமோன் இஸ்காரியோத்தின் மகனாகிய யூதாசுக்குக் கொடுத்தார். அவன் அப்பத் துண்டைப் பெற்றதும் சாத்தான் அவனுக்குள் நுழைந்தான். இயேசு அவனிடம், ``நீ செய்ய இருப்பதை விரைவில் செய்'' என்றார். இயேசு ஏன் அவனிடம் இப்படிக் கூறினார் என்பதைப் பந்தியில் அமர்ந்திருந்தோர் யாரும் புரிந்துகொள்ளவில்லை. பணப்பை யூதாசிடம் இருந்ததால், திருவிழாவுக்குத் தேவையானதை வாங்கவோ ஏழைகளுக்கு ஏதாவது கொடுக்கவோ இயேசு அவனிடம் கூறியிருக்கலாம் என்று சிலர் நினைத்துக்கொண்டனர். யூதாசு அப்பத் துண்டைப் பெற்றுக் கொண்டவுடன் வெளியே போனான். அது இரவு நேரம். அவன் வெளியே போனபின் இயேசு, ``இப்போது மானிடமகன் மாட்சி பெற்றுள்ளார். அவர் வழியாகக் கடவுளும் மாட்சி பெற்றுள்ளார். கடவுள் அவர் வழியாக மாட்சி பெற்றாரானால் கடவுளும் தம் வழியாய் அவரை மாட்சிப்படுத்துவார்; அதையும் உடனே செய்வார். பிள்ளைகளே, இன்னும் சிறிது காலமே உங்களோடு இருப்பேன். நீங்கள் என்னைத் தேடுவீர்கள். ஆனால் நான் போகும் இடத்திற்கு உங்களால் வர இயலாது. இதையே யூதர்களுக்குச் சொன்னேன்; இப்போது உங்களுக்கும் சொல்கிறேன்'' என்றார். சீமோன் பேதுரு இயேசுவிடம், ``ஆண்டவரே, நீர் எங்கே போகிறீர்?'' என்று கேட்டார். இயேசு மறுமொழியாக, ``நான் போகுமிடத்திற்கு என்னைப் பின்தொடர்ந்து வர இப்போது உன்னால் இயலாது; பின்னரே என்னைப் பின்தொடர்வாய்'' என்றார். பேதுரு அவரிடம், ``ஆண்டவரே ஏன் இப்போது நான் உம்மைப் பின்தொடர இயலாது? உமக்காக என் உயிரையும் கொடுப்பேன்'' என்றார். இயேசு அவரைப் பார்த்து, ``எனக்காக உயிரையும் கொடுப்பாயோ? நீ மும்முறை என்னை மறுதலிக்குமுன் சேவல் கூவாது என உறுதியாக உனக்குச் சொல்கிறேன்'' என்றார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

உள்ளம் கலங்கிய இயேசு !

புனித வாரத்தின் செவ்வாய் ஆகிய இன்றும் நாம் இயேசுவின் பாடுகள்-இறப்பு பற்றிச் சிந்திக்க இருக்கிறோம். தமக்கு இறப்பு எந்த வேளையிலும் நேரிடலாம் என்ற எதிர்நோக்குடன் இருந்த இயேசு, தம் சீடர்களுடன் பந்தியமர்ந்தபோது "உள்ளம் கலங்கியவராய், "உங்களுள் ஒருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்" என்று திட்டவட்டமாகக் கூறினார்" என இன்றைய நற்செய்தி வாசகத்தில் காண்கிறோம். மனிதர் என்ற வகையில் இயேசு இறப்பை வரவேற்கவில்லை, இறக்கவேண்டும் என்னும் எண்ணம் நிச்சயமாக அவருக்கு மனக் கலக்கத்தைத் தந்திருக்க வேண்டும். ஆனால், அதைவிட மேலாகத் தம்மோடு மூன்று ஆண்டுகள் வாழ்ந்து, தமது போதனைகளைக் கேட்கும் வாய்ப்பைப் பெற்று, நற்செய்திப் பணிக்குரிய அதிகாரத்தையும் பெற்றுக்கொண்ட ஒரு சீடனே தம்மைக் காட்டிக்கொடுக்க இருக்கிறான் என்னும் எண்ணம் இயேசுவுக்குக் கூடுதல் உள்ளக் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும். எனவேதான், தமது வேதனையை வெளிப்படையாகவே அவர்களுடன் பகிர்ந்துகொள்கிறார்.

தாம் அன்பு செய்பவரே தமக்கு நம்பிக்கைத் துரோகம் செய்வதை அனுபவிக்கும் அனைவருக்கும் மன உளைச்சலும், ஆறாத உள்ளக் கலக்கமும் ஏற்படுவது இயல்பே. இது இயேசுவின் சாவின் வேதனையை அதிகரித்தது எனலாம்..

நாம் இதனை இரண்டு கோணங்களில் பார்க்கலாம்:.

1. என் வாழ்விலும், பணிகளிலும் நான் இயேசுவுக்கு நம்பிக்கைத் துரோகம் செய்வதுபோல, அவரைக் காட்டிக்கொடுப்பதுபோல நடந்திருக்கிறேனா? ஆம், என்றால் மனம் கசிந்து மன்னிப்புக் கேட்போம்..

2. நமது குடும்ப வாழ்வில் கணவன்-மனைவி, பெற்றோர்-பிள்ளைகள், நண்பர்-நண்பர், ஆசிரியர்-மாணவர்... உறவுகளில் நம்பிக்கைத் துரோகம் இழைத்திருக்கிறேனா? என்மீது நம்பிக்கையும், அன்பும் கொண்டிருப்போரை நான் தன்னலத்தோடு காட்டிக்கொடுத்திருக்கிறேனா? இனிமேலாவது, உறவுகளை மேம்படுத்திக்கொள்வோம்.

மன்றாட்டு:

எங்களுக்காகச் சிலுவைச் சாவை ஏற்ற நாயகனே இறைவா, உம்மைப் போற்றுகிறோம். உமது அன்புக்குப் பிரமாணிக்கமாயிருக்கவும், எங்களை அன்பு செய்வோருக்கு நம்பிக்கைக்குரியவராய் வாழவும்; அருள்தாரும். ஆமென்.