யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





திருவழிபாடு ஆண்டு - A
2017-02-26

(இன்றைய வாசகங்கள்: இறைவாக்கினர் எசாயா நூலிருந்து வாசகம்.49:14-15,பல்லவி: என் நெஞ்சே கடவுளுக்காக மௌனமாய்க் காத்திரு.,திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம். 4:1-5,மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம். 6:24-34)




எவரும் இரு தலைவர்களுக்குப் பணிவிடை செய்ய முடியாது. ஏனெனில், ஒருவரை வெறுத்து மற்றவரிடம் அவர் அன்பு கொள்வார்; 
அல்லது ஒருவரைச் சார்ந்து கொண்டு மற்றவரைப் புறக்கணிப்பார். எவரும் இரு தலைவர்களுக்குப் பணிவிடை செய்ய முடியாது. ஏனெனில், ஒருவரை வெறுத்து மற்றவரிடம் அவர் அன்பு கொள்வார்; 
அல்லது ஒருவரைச் சார்ந்து கொண்டு மற்றவரைப் புறக்கணிப்பார்.


திருப்பலி முன்னுரை

நெஞ்சே கடவுளுக்காக மௌனமாய்க் காத்திரு. ஏனெனில், நான் எதிர்பார்க்கும் நலன் வருவது அவரிடமிருந்தே. உண்மையாகவே, என் கற்பாறையும் மீட்பும் அவரே. எனவே, நான் சிறிதும் அசைவுறேன்!

திருமகன் இயேசுவின் அன்பு மக்களனைவருக்கும் என் பணிவான வணக்கங்களும், வாழ்த்தும் உரியனவாகுக. ஆண்டின் பொதுக்கால எட்டாம் வார திருப்பலி. இந்த ஆண்டு தவக்காலத்திற்கு முந்திய வாரமாக அமைகிறது. ஆண்டவராகிய கடவுள் நம்முடன் தன் வாழ்வைப் பகிர்ந்து கொண்டதோடல்லாமல் நமக்குத் தேவையானதெல்லாம் தொடர்ந்து வழங்கிக்கொண்டிருக்கிறார் என்ற செய்தி மிக முகாமையானது. கடவுள் தன் மக்கள் மீது கொண்டுள்ள அன்பு அருள் நலம் வழங்கும்பணியாக, நீட்சி கொண்டு விளங்குவதையும் இந்த வார இறைமொழிகள் வழி திரு அவை நமக்கு உணர்த்த விழைகிறது.

நமக்கு மீட்பு கிடைப்பது அவரிடமிருந்தே, நம் கற்பாறையும், மீட்பும்,கோட்டையும் அவரே, தேவையற்ற கவலைகள் துன்பத்தையே தரும். இறை விசுவாசம் நிறைவைத் தரும் என்பவையே இன்று நமக்கு வழங்கப்படும் நல்ல செய்திகளாக இருக்கின்றன. எனவே நாம்: பால்குடிக்கும் தன் மகவைத் தாய் மறந்திடினும், நான் உன்னை மறக்கவே மாட்டேன் என்னும் இறைவனின் வாக்குறுதியில் நம்பிக்கை கொண்டவர்களாக, என் நெஞ்சே கடவுளுக்காக மௌனமாய்க் காத்திரு என்னும் அசையாத உறுதியோடு வாழ இத் திருப்பலியில் வல்லமை கேட்டுச் செபிப்போம்.



முதல் வாசகம்

நான் உன்னை மறக்கவே மாட்டேன்.
இறைவாக்கினர் எசாயா நூலிருந்து வாசகம்.49:14-15

அந்நாட்களில் சீயோனோ, "ஆண்டவர் என்னைக் கைநெகிழ்ந்துவிட்டார்; என் தலைவர் என்னை மறந்து விட்டார்" என்கிறாள். பால்குடிக்கும் என் மகவைத் தாய் மறப்பாளோ? கருத்தாங்கினவள் தன் பிள்ளை மீது இரக்கம் காட்டாதிருப்பாளோ? இவர்கள் மறந்திடினும், நான் உன்னை மறக்கவே மாட்டேன் என்கிறார் ஆண்டவர்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

திருப்பாடல்: 62: 1-2. 5-8
பல்லவி: என் நெஞ்சே கடவுளுக்காக மௌனமாய்க் காத்திரு.

கடவுளின் செயலுக்காக நான் மௌனமாய்க் காத்திருக்கின்றேன். எனக்கு மீட்பு கிடை ப்பது அவரிடமிருந்தே. உண்மையாகவே என் கற்பாறையும் மீட்பும் அவரே. என் கோட்டையும் அவரே. எனவே நான் சிறிதும் அசைவுறேன்.பல்லவி

நெஞ்சே கடவுளுக்காக மௌனமாய்க் காத்திரு. ஏனெனில், நான் எதிர்பார்க்கும் நலன் வருவது அவரிடமிருந்தே.உண்மையாகவே, என் கற்பாறையும் மீட்பும் அவரே. எனவே, நான் சிறிதும் அசைவுறேன். பல்லவி

என் மீட்பும் மேன்மையும் கடவுளிடமே இருக்கின்றன. என் வலிமைமிகு கற்பாறை யும் புகலிடமும் கடவுளே. மக்களே! எக்காலத்திலும் அவரையே நம்புங்கள். அவர் முன்னிலையில் உங்கள் உள்ளத்தில் உள்ளதைத் திறந்து கொட்டுங்கள். பல்லவி

இரண்டாம் வாசகம்

ஆண்டவர் உள்ளத்தின் நோக்கங்களை வெளிப்படுத்துவார்.
திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம். 4:1-5

சகோதர சகோதரிகளே! நீங்கள் எங்களைக் கிறிஸ்துவின் ஊழியர்கள், கடவுளின் மறை உண்மைகளை அறிவிக்கும் பொறுப்புடையவர்கள் எனக் கருத வேண்டும். பொறுப்பாளர்கள் நம்பிக்கைக்குரியவர்களாய்க் காணப்பட வேண்டும் என எதிர்பார்க்கலாம் அன்றோ! என்னைப் பொறுத்த மட்டில் எனக்கு எதிராக நீங்களோ மக்களின் நீதிமன்றமோ தீர்ப்பளித்தால் அதைப்பற்றிச் சிறிதும் கவலைப்படமாட்டேன். எனக்கு நானே தீர்ப்பளித்துக் கொள்ளவும் மாட்டேன். எனக்கு எதிராகக் குற்றம் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. ஆயினும் நான் குற்றமற்றவனாகி விட மாட்டேன். எனக்குத் தீர்ப்பு வழங்குபவர் ஆண்டவர் ஒருவரே. எனவே, குறித்த காலம் வருமுன், அதாவது ஆண்டவரின் வருகைக்குமுன் யாருக்கும் தீர்ப்பளிக்க வேண்டாம். அவரே இருளில் மறைந்திருப்பவற்றை வெட்ட வெளிச்சமாக்குவார்; உள்ளங்களின் நோக்கங்களையும் வெளிப்படுத்துவார். அப்பொழுது ஒவ்வொருவரும் கடவுளிடமிருந்து பாராட்டுப் பெறுவர்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

- இறைவா உமக்கு நன்றி




நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! கடவுளுடைய வார்த்தை உயிருள்ளது,ஆற்றல் வாய்ந்தது. உள்ளத்தின் சிந்தனைகளையும், நோக்கங்களையும் சீர்தூக்கிப் பார்க்கிறது. அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம். 6:24-34

அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: "எவரும் இரு தலைவர்களுக்குப் பணிவிடை செய்ய முடியாது. ஏனெனில், ஒருவரை வெறுத்து மற்றவரிடம் அவர் அன்பு கொள்வார்; அல்லது ஒருவரைச் சார்ந்து கொண்டு மற்றவரைப் புறக்கணிப்பார். நீங்கள் கடவுளுக்கும் செல்வத்துக்கும் பணிவிடை செய்ய முடியாது. ஆகவே நான் உங்களுக்குச் சொல்கிறேன்; உயிர் வாழ எதை உண்பது, எதைக் குடிப்பது என்றோ, உடலுக்கு எதை உடுத்துவது என்றோ நீங்கள் கவலை கொள்ளாதீர்கள். உணவை விட உயிரும் உடையைவிட உடலும் உயர்ந்தவை அல்லவா? வானத்துப் பறவைகளை நோக்குங்கள்; அவை விதைப்பதுமில்லை; அறுப்பதுமில்லை; களஞ்சியத்தில் சேர்த்து வைப்பதுமில்லை. உங்கள் விண்ணகத் தந்தை அவற்றுக்கும் உணவு அளிக்கிறார். அவற்றைவிட நீங்கள் மேலானவர்கள் அல்லவா! கவலைப் படுவதால் உங்களில் எவர் தமது உயரத்தோடு ஒரு முழம் கூட்ட முடியும்? உடைக்காக நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள்? காட்டுமலர்ச் செடிகள் எப்படி வளருகின்றன எனக் கவனியுங்கள்; அவை உழைப்பதுமில்லை, நூற்பதுமில்லை. ஆனால் சாலமோன் கூடத் தம் மேன்மையில் எல்லாம் அவற்றில் ஒன்றைப் போலவும் அணிந்திருந்ததில்லை என நான் உங்களுக்குச் சொல்கிறேன். நம்பிக்கை குன்றியவர்களே, இன்றைக்கு இருந்து நாளைக்கு அடுப்பில் எறியப்படும் காட்டுப்புல்லுக்குக் கடவுள் இவ்வாறு அணிசெய்கிறார் என்றால் உங்களுக்கு இன்னும் அதிகமாகச் செய்ய மாட்டாரா? ஆகவே, எதை உண்போம்? எதைக் குடிப்போம்? எதை அணிவோம்? எனக் கவலை கொள்ளாதீர்கள். ஏனெனில் பிற இனத்தவரே இவற்றையெல்லாம் நாடுவர்; உங்களுக்கு இவை யாவும் தேவை என உங்கள் விண்ணகத் தந்தைக்குத் தெரியும். ஆகவே அனைத்திற்கும் மேலாக அவரது ஆட்சியையும் அவருக்கு ஏற்புடையவற்றையும் நாடுங்கள். அப்போது இவையனைத்தும் உங்களுக்குச் சேர்த்துக் கொடுக்கப்படும். ஆகையால் நாளைக்காகக் கவலைப்படாதீர்கள். ஏனெனில் நாளையக் கவலையைப் போக்க நாளை வழி பிறக்கும். அந்தந்த நாளுக்கு அன்றன்றுள்ள தொல்லையே போதும்."

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




விசுவாசிகள் மன்றாட்டுகள்:


விண்ணுலகில் வீற்றிருப்பவரே! உம்மை நோக்கியே என் கண்களை உயர்த்தியுள்ளேன்.


பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

1. ஞானத்தின் ஊற்றே இறைவா,

வேற்றிடங்களில் வாழும் ஆயிரம் நாள்களிலும் உம் கோவில் முற்றங்களில் தங்கும் ஒரு நாளே மேலானது என்ற இறைவாக்குக்கு இணங்க செயல்படும் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவியர்கள் மற்றும் துறவறத்தார் அனைவரையும் தீயசக்திகளிடமிருந்து பாதுகாத்து நல்ல உடல் சுகத்தையும் ஆன்மீகப் பலத்தையும் பாதுகாப்பையும் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. அனைவருக்கும் இன்முகம் காட்டும் தந்தையே இறைவா!

கிறிஸ்துவின் சீடர்களாகிய நாங்கள் எமக்கு மீட்பு கிடைப்பது உம்மிடமிருந்தே, எம் கற்பாறையும், மீட்பும், கோட்டையும் நீரே என்னும் உண்மையையும், தேவையற்ற கவலைகள் துன்பத்தையே தரும் என்பதையும் உணர்ந்து உறுதியான விசுவாத்தோடு வாழும் வரத்தினை அளித்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. அனைவரின் தேவைகளையும் அறிந்துள்ள தந்தையே இறைவா!

எமது குடும்பங்களில் உள்ள அனைத்துக் கவலைகளையும், தேவைகளையும், குறைபாடுகளையும் நீரே அறிந்திருக்கின்றீர். ஆண்டவரே! அவற்றையெல்லாம் நீரே தீர்த்து குடும்பங்களில் அமைதியும், நல்லுறவும் நிலைபெறச் செய்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. என்றும் மாறாப் பேரன்பு கொண்ட எம் இறைவா!

எங்கள் குடும்பங்களில் சகோதர பிணைப்பின் முக்கியத்துவத்தை உணர்ந்திடவும், உறவுகள் மேன்படவும், தூய ஆவியின் கொடைகள் எம் இல்லங்களில் தங்கி எம் இல்லத்திலுள்ள அனைவரையும் வழி நடத்திடவும், வேற்றுமைகள் ஒழிந்து, மன்னிப்பே மாண்பு என்பதை உணர்ந்து வாழ்ந்திட அருள்மாரிப் பொழியவேண்டுமென்று இறைவா உம்மை இறைஞ்சுகின்றோம்.

5. கருணைக் கடலாகிய எம் இறைவா!

புதிய வாழ்வை எதிர்நோக்கியிருக்கும் எம் இளையோர்களை உம்மிடம் ஒப்படைக்கின்றோம். அவர்கள் எதிர்பார்த்திருக்கும் வளமான வாழ்வு, சிறந்த வேலைவாய்ப்பு, உயர்கல்விக்கான தேவையான தரமான கல்விகூடங்களில் அனுமதி, பொருளாதார உதவிகள் மற்றும் உள்ள உடல் உறுதியை வழங்கிடத் வேண்டுமென்று இறைவா உம்மை வேண்டுகிறோம்.

6. நோய் நொடிகள் அனைத்தையும் குணமாக்கும் தந்தையே இறைவா!

பல்வேறு விதமான நோய்களால் பாதிக்கப்பட்டு வேதனையோடும், கவலையோடும் வாழ்ந்து கொண்டிருக்கும் அனைவரையும் ஆசீர்வதித்து அவர்களைக் குணப்படுத்தியருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

7. வளங்களின் நிறைவே எம் இறைவா!

எம் பங்கைச் சார்ந்த அனைத்து மக்களையும் ஆண்டுப் பராமரித்து, நற்சுகமும், வளமும் பொழிந்து அனைவரின் குடும்பங்களும் உமது பேரன்பை நிறைவாய் பெற்று உம் அன்னையைப் போல உம் சீடர்களாய் வாழ்ந்திடவும், திருமுழுக்கின்போது நாங்கள் பெற்றுக் கொண்ட உப்பையும் ஒளியையும் நாங்கள் வாழும் இடங்களில் மற்றவர்களுக்கு வழங்கிடத் தேவையாக வரங்களைத் தர வேண்டுமென்று இறைவா உம்மை வேண்டுகிறோம்.


இன்றைய சிந்தனை

நாளைக்காகக் கவலைப்படாதீர்கள் !

இன்றைய நற்செய்தி வாசகம் ஏராளமான வாழ்வியல் கருத்துகளை உள்ளடக்கியுள்ளது. அவற்றில் #8220;நாளைக்காகக் கவலைப்படாதீர்கள். ஏனெனில் நாளைய கவலையைப் போக்க நாளை வழிபிறக்கும்” என்னும் வரிகளை மட்டும் இன்று நம் மனதில் ஏற்றுவோம். இறைவன் நமது வானகத் தந்தை. எனவே, நமது தேவைகள் அனைத்தையும் அவர் அறிவார், அவற்றை அவரது திருவுளத்திற்கேற்ப நிறைவேற்றித் தருவார். எனவே, பறவைகளைப் போல, மலர்களைப் போல கவலைப்படாமல் வாழ்வோம். பறவைகளை உண்பிக்கும் இறைவன், மலர்களை அழகுபடுத்தும் தந்தை நம்மையும் பராமரிப்பார். எனவே, நாளைய தினத்தைப் பற்றிக் கவலை வேண்டாம். இன்றைய நாளை இனிய நாளாகக் கொண்டாடுவோம். மகிழ்ச்சி அடைவோம். நம்மில் பலர் நாளைய தினத்தைப் பற்றிய கவலையில், இன்றைய நாளை அனுபவிக்கத் தவறி விடுகிறோம். இதோ, இந்த நாள், இந்த நேரம் இறைவனின் இனிமையான பராமரிப்பை உணர்வோம். நன்றி கூறுவோம். நாளைய கவலைகளைப் போக்குகின்ற வழியை இறைவனே நமக்குத் தருவார், இன்றல்ல: நாளை. எனவே, இந்த நேரத்தை மனநிறைவுடன் கழிப்போம்.

மன்றாட்டு:

காலத்தை வென்ற காவிய நாயகனே இயேசுவே, உம்மைப் போற்றுகிறோம். இந்த நாளுக்காக, இந்த நேரத்துக்காக நன்றி. இன்றைய நாளில் நீர் எனக்குச் செய்துள்ள அனைத்து நன்மைகளுக்காகவும் நன்றி கூறுகிறேன். நாளைய தேவைகளையும், கவலைகளையும் நீரே பொறுப்பேற்றுக்கொள்வீர் என்ற நம்பிக்கையில் இறைவா ஆமென்.