யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 6வது வாரம் செவ்வாய்க்கிழமை
2017-02-14




முதல் வாசகம்

நான் படைத்த மனிதரை மண்ணிலிருந்து அழித்தொழிப்பேன்.
தொடக்க நூலிலிருந்து வாசகம் 6: 5-8; 7: 1-5, 10

அந்நாள்களில் மண்ணுலகில் மனிதர் செய்யும் தீமை பெருகுவதையும் அவர்களின் இதயச் சிந்தனைகளெல்லாம் நாள் முழுவதும் தீமையையே உருவாக்குவதையும் ஆண்டவர் கண்டார். மண்ணுலகில் மனிதரை உருவாக்கியதற்காக ஆண்டவர் மனம் வருந்தினார். அவரது உள்ளம் துயரமடைந்தது. அப்பொழுது ஆண்டவர், ``நான் படைத்த மனிதரை மண்ணிலிருந்து அழித்தொழிப்பேன். மனிதர்முதல் கால்நடைகள், ஊர்வன, வானத்துப் பறவைகள்வரை அனைத்தையும் அழிப்பேன். ஏனெனில் இவற்றை உருவாக்கியதற்காக நான் மனம் வருந்துகிறேன்'' என்றார். ஆனால் நோவாவுக்கு ஆண்டவரின் அருள் பார்வை கிடைத்தது. அப்பொழுது ஆண்டவர் நோவாவிற்குக் கூறியது: ``நீ உன் குடும்பத்தார் அனைவரோடும் பேழைக்குள் செல். ஏனெனில், இத்தலைமுறையில் உன்னையே நான் நேர்மையானவனாகக் காண்கிறேன். தக்க விலங்குகள் எல்லாவற்றிலிருந்தும் ஆணும் பெண்ணுமாக ஏழு சோடிகளையும், தகாத விலங்குகளிலிருந்து ஆணும் பெண்ணுமாக ஒரு சோடியையும், வானத்துப் பறவைகளிலிருந்து ஆணும் பெண்ணுமாக ஏழு சோடிகளையும் மண்ணுலகெங்கும் அவற்றின் இனங்கள் உயிர் பிழைத்துக்கொள்வதற்காக உன்னுடன் சேர்த்துக்கொள். ஏனெனில் இன்னும் ஏழு நாள்களில் மண்ணுலகின்மேல் நாற்பது பகலும் நாற்பது இரவும் நான் மழை பெய்விக்கப் போகிறேன். நான் உருவாக்கிய உயிரினங்களை எல்லாம் இந்த நிலத்திலிருந்து அழித்தொழிப்பேன்.'' ஆண்டவர் கட்டளையிட்டபடியே நோவா எல்லாவற்றையும் செய்தார். ஏழு நாள்களுக்குப்பின் மண்ணுலகில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

பல்லவி: ஆண்டவர் தம் மக்களுக்கு சமாதானம் அருள்வாராக!
திருப்பாடல் 29;1,2,3,4 9=10

1 இறைவனின் மைந்தரே! மாட்சியையும் வலிமையையும் ஆண்டவருக்கு உரித்தாக்குங்கள். 2 ஆண்டவரின் பெயருக்கேற்ற மாட்சியை அவருக்கு உரித்தாக்குங்கள்; தூய மாட்சி இலங்கும் ஆண்டவரை வழிபடுங்கள். பல்லவி

3 ஆண்டவரின் குரல் கடல்மேல் ஒலிக்கின்றது; ஆண்டவர் நீர்த்திரள்களின்மேல் வீற்றிருக்கின்றார். 4 ஆண்டவர் குரல் வலிமைமிக்கது; ஆண்டவரின் குரல் மாட்சிமிக்கது. பல்லவி

3b மாட்சிமிகு இறைவன் முழங்குகின்றார்; 9b அவரது கோவிலில் உள்ள அனைவரும் `இறைவனுக்கு மாட்சி' என்று ஆர்ப்பரிக்கின்றனர். 10 ஆண்டவர் வெள்ளப் பெருக்கின்மீது வீற்றிருக்கின்றார்; ஆண்டவர் என்றென்றும் அரசராக வீற்றிருக்கின்றார். பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! பரிசேயர், ஏரோதியர் ஆகியோரது புளிப்பு மாவைக் குறித்து மிகவும் கவனமாயிருங்கள். அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 8: 14-21

அக்காலத்தில் சீடர்கள் தங்களுக்குத் தேவையான அப்பங்களை எடுத்துச்செல்ல மறந்துவிட்டார்கள். படகில் அவர்களிடம் ஓர் அப்பம் மட்டுமே இருந்தது. அப்பொழுது இயேசு, ``பரிசேயர், ஏரோதியர் ஆகியோரது புளிப்பு மாவைக் குறித்து மிகவும் கவனமாயிருங்கள்'' என்று அவர்களுக்குக் கட்டளையிட்டார். அவர்களோ தங்களிடம் அப்பம் இல்லையே என்று ஒருவரோடு ஒருவர் பேசிக்கொண்டிருந்தார்கள். இதை அறிந்த இயேசு அவர்களை நோக்கி, ``நீங்கள் உங்களிடம் அப்பம் இல்லை என ஏன் பேசிக்கொள்கிறீர்கள்? இன்னுமா உணராமலும் புரிந்துகொள்ளாமலும் இருக்கிறீர்கள்? உங்கள் உள்ளம் மழுங்கியா போயிற்று? கண்ணிருந்தும் நீங்கள் காண்பதில்லையா? காதிருந்தும் நீங்கள் கேட்பதில்லையா? ஏன், உங்களுக்கு நினைவில்லையா? ஐந்து அப்பங்களை நான் ஐயாயிரம் பேருக்குப் பிட்டு அளித்தபோது, மீதியான துண்டுகளை எத்தனை கூடைகள் நிறைய எடுத்தீர்கள்?'' என்று அவர் கேட்க, அவர்கள், ``பன்னிரண்டு'' என்றார்கள். ``ஏழு அப்பங்களை நான் நாலாயிரம் பேருக்குப் பிட்டு அளித்தபோது மீதித் துண்டுகளை எத்தனை கூடைகள் நிறைய எடுத்தீர்கள்?'' என்று கேட்க, அவர்கள், ``ஏழு'' என்றார்கள். மேலும் அவர் அவர்களை நோக்கி, ``இன்னும் உங்களுக்குப் புரியவில்லையா?'' என்று கேட்டார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

"இன்னும் உங்களுக்குப் புரியவில்லையா?"

"இன்னும் உங்களுக்குப் புரியவில்லையா?" என்று நம்மைப் பார்த்தும் கேட்கக்கூடிய நிலையில் நாம் இருக்கிறோமா இல்லையா என்பது இங்கே இறைவன் நமக்கு எழுப்புகின்ற கேள்வி. நம்மில் பலருடைய வாழ்வில் எத்தனைமுறை செல்வமும் சீரும் சிறப்பும் பொங்கிப் பெருகினாலும், அதில் அடங்கியிருக்கும் அடையாளத்தை அறிவதில்லை. இன்னும் சிலர், காய்ந்து வரண்டாலும் அங்கும் மறைந்திருக்கும் அடையாளத்தைக் கண்டுகொள்வதில்லை. என்ன நடந்தாலும் வயிறு நிறைந்தால் போதும், தங்கள் கூடை நிரம்பினால் போதும்,என்று தங்கள் ஆதாயத்திலேயே கண்ணும் கருத்துமாய் இருப்பர். இப்படிப்பட்டவர்களுக்கு இயேசு கூறுகிறார், "இன்னும் உங்களுக்குப் புரியவில்லையா?" என்று. ஐந்து அப்பம் பலுகினபோது 12 கூடை நிறைய நிரப்பினர். ஏழு அப்பம் பலுகினபோது ஏழு கூடை நிறைய நிரப்பியுள்ளனர். இவ்வளவு அதிசயமானவற்றைக் கண்டபோதும் அதில் அடங்கியிருக்கும் அடையாளத்தை அவர்களால் காணமுடியவில்லை. மாறாக அடுத்தமுறை எப்போது அப்பம் பெருகச் செய்வார் என்பதிலே குறியாக இருந்தனர். இவரை அரசராக்கினால் வேலை செய்யாமல் வயிறு நிரப்பலாம் என்பதில் கவனமாக இருந்தனர். எனவே இயேசு அவர்களைப் பார்த்து "இன்னும் உங்களுக்குப் புரியவில்லையா? என்றுச் சொன்னார். உங்கள் வாழ்வில் இயேசு அப்பம் பலுக வைத்த நிகழ்ச்சி ஏதேனும் உண்டா என்று சிந்தித்துப் பாருங்கள். நிறையவே இருக்கும். அதிசயமான விதத்தில் இயேசு உங்களை அல்லது உங்கள் குடும்பத்தில் ஒருவரை அல்லது உங்கள் நண்பரைக் காப்பாற்றியதை நினைத்துப் பாருங்கள். உங்களுக்குப் புரியும். இயேசுவை அறிய வருவோம். அது ஆசீர்வாதமாக இருக்கும். இனிது வாழ்வோம்.

மன்றாட்டு:

இறைவா, எங்கள் உள்ளத்தில் பேசுகின்ற உம் குரலை அடையாளம் கண்டுகொள்ள எங்களுக்கு அருள்தாரும்.