யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





முதலாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 5வது வாரம் புதன்கிழமை
2017-02-08




முதல் வாசகம்

ஆண்டவராகிய கடவுள் ஏதேன் தோட்டத்தில் தாம் உருவாக்கிய மனிதனை வைத்தார்.
தொடக்க நூலிலிருந்து வாசகம் 2: 4-9,15-17

அந்நாள்களில் ஆண்டவராகிய கடவுள் மண்ணுலகையும், விண்ணுலகையும் உருவாக்கியபொழுது, மண்ணுலகில் நிலவெளியின் எவ்விதப் புதரும் தோன்றியிருக்கவில்லை; வயல்வெளியின் எவ்விதச் செடியும் முளைத்திருக்கவில்லை; ஏனெனில் ஆண்டவராகிய கடவுள் மண்ணுலகின் மேல் இன்னும் மழை பெய்விக்கவில்லை; மண்ணைப் பண்படுத்த மானிடர் எவரும் இருக்கவில்லை. ஆனால் நிலத்திலிருந்து மூடுபனி எழும்பி நிலம் முழுவதையும் நனைத்தது. அப்பொழுது ஆண்டவராகிய கடவுள் நிலத்தின் மண்ணால் மனிதனை உருவாக்கி, அவன் நாசிகளில் உயிர் மூச்சை ஊத, மனிதன் உயிர் உள்ளவன் ஆனான். ஆண்டவராகிய கடவுள் கிழக்கே இருந்த ஏதேனில் ஒரு தோட்டம் அமைத்துத் தாம் உருவாக்கிய மனிதனை அங்கே வைத்தார். ஆண்டவராகிய கடவுள் கண்ணுக்கு அழகானதும் உண்பதற்குச் சுவையானதுமான எல்லா வகை மரங்களையும், தோட்டத்தின் நடுவில் வாழ்வின் மரத்தையும் நன்மை தீமை அறிவதற்கு ஏதுவான மரத்தையும் மண்ணிலிருந்து வளரச் செய்தார். ஏதேன் தோட்டத்தைப் பண்படுத்தவும் பாதுகாக்கவும் ஆண்டவராகிய கடவுள் மனிதனை அங்கு கொண்டுவந்து குடியிருக்கச் செய்தார். ஆண்டவராகிய கடவுள் மனிதனிடம், ``தோட்டத்தில் இருக்கும் எந்த மரத்திலிருந்தும் உன் விருப்பம் போல் நீ உண்ணலாம். ஆனால் நன்மை தீமை அறிவதற்கு ஏதுவான மரத்திலிருந்து மட்டும் உண்ணாதே; ஏனெனில் அதிலிருந்து நீ உண்ணும் நாளில் சாகவே சாவாய்'' என்று கட்டளையிட்டுச் சொன்னார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு!
திருப்பாடல் 104: 1-2. 27-28. 29-30

என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! என் கடவுளாகிய ஆண்டவரே! நீர் எத்துணை மேன்மைமிக்கவர்! நீர் மாண்பையும் மாட்சியையும் அணிந்துள்ளவர். 2ய பேரொளியை ஆடையென அணிந்துள்ளவர். பல்லவி

27 தக்க காலத்தில் நீர் உணவளிப்பீர் என்று இவையெல்லாம் உம்மையே நம்பியிருக்கின்றன. 28 நீர் கொடுக்க, அவை சேகரித்துக் கொள்கின்றன; நீர் உமது கையைத் திறக்க, அவை நலன்களால் நிறைவுறுகின்றன. பல்லவி

29 நீர் அவற்றின் மூச்சை நிறுத்திவிட்டால், அவை மாண்டு மறுபடியும் புழுதிக்கே திரும்பும். 30 உமது ஆவியை நீர் அனுப்ப, அவை படைக்கப்பெறுகின்றன; மண்ணகத்தின் முகத்தைப் புதுப்பிக்கின்றீர். பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவரே, உண்மையினால் அவர்களை உமக்கு அர்ப்பணமாக்கியருளும். உமது வார்த்தையே உண்மை. அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 7: 14-23

அக்காலத்தில் இயேசு மக்கள் கூட்டத்தை மீண்டும் தம்மிடம் வரவழைத்து, அவர்களை நோக்கி, ``நான் சொல்வதை அனைவரும் கேட்டுப் புரிந்துகொள்ளுங்கள். வெளியேயிருந்து மனிதருக்குள்ளே சென்று அவர்களைத் தீட்டுப்படுத்தக் கூடியது ஒன்றுமில்லை. மனிதருக்கு உள்ளேயிருந்து வெளியே வருபவையே அவர்களைத் தீட்டுப்படுத்தும். கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும்'' என்று கூறினார். அவர் மக்கள் கூட்டத்தை விட்டு வீட்டிற்குள் வந்தபோது அவருடைய சீடர் அவரிடம் இந்த உவமையைப் பற்றிக் கேட்க, அவர் அவர்களிடம், ``நீங்களுமா இந்த அளவுக்குப் புரிந்துகொள்ளாமல் இருக்கிறீர்கள்? வெளியேயிருந்து மனிதருக்குள்ளே செல்லும் எதுவும் அவர்களைத் தீட்டுப்படுத்த முடியாது என உங்களுக்குத் தெரியாதா? ஏனென்றால், அது அவர்களுடைய உள்ளத்தில் நுழையாமல் வயிற்றுக்குச் சென்று கழிப்பிடத்திற்குப் போய்விடுகிறது'' என்றார். இவ்வாறு அவர் எல்லா உணவுப் பொருள்களும் தூயன என்று குறிப்பிட்டார். மேலும், ``மனிதருக்கு உள்ளேயிருந்து வருவதே அவர்களைத் தீட்டுப்படுத்தும். ஏனெனில் மனித உள்ளத்திலிருந்தே பரத்தைமை, களவு, கொலை, விபசாரம், பேராசை, தீச்செயல், வஞ்சகம், காமவெறி, பொறாமை, பழிப்புரை, செருக்கு, மதிகேடு ஆகியவற்றைச் செய்யத் தூண்டும் தீய எண்ணங்கள் வெளிவருகின்றன. தீயனவாகிய இவை அனைத்தும் உள்ளத்திலிருந்து வந்து மனிதரைத் தீட்டுப்படுத்துகின்றன'' என்றார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''இயேசு 'வெளியேயிருந்து மனிதருக்குள்ளே சென்று அவர்களைத் தீட்டுப்படுத்தக் கூடியது ஒன்றுமில்லை, மனிதருக்கு உள்ளேயிருந்து வெளியே வருபவையே அவர்களைத் தீட்டுப்படுத்தும்ஷ என்றார்'' (மாற்கு 7:15)

இயேசுவின் இப்போதனை உண்மையிலேயே புரட்சிகரமானது. அக்கால யூத முறைப்படி சில உணவுகள் தீட்டுப்பட்டவை என்றும் வேறு உணவுகள் அனுமதிக்கப்பட்டவை என்றும் கருதப்பட்டதால் தீட்டான உணவை உண்பது சட்டத்தை மீறுவதாகக்க கருதப்பட்டது (காண்க: லேவி 17-26). இது யூதர்களால் (குறிப்பாக பரியேர்களால்) துல்லியமாகக் கடைப்பிடிக்கப்பட்ட சட்டம். இயேசு இச்சட்டத்தைப் புரட்டிப்போடுகிறார். இயேசு கூறியதைக் கேட்ட பரிசேயரும் பிறரும் உண்மையிலேயே பெரும் அதிர்ச்சியடைந்திருப்பார்கள். அவர்களுடைய பார்வையில் இயேசு ஒரு புரட்சியாளராகவே தென்பட்டிருப்பார். மனிதரை மாசுபடுத்துவது மனிதருக்குப் புறம்பேயிருந்தோ வெளியேயிருந்தோ வருவதல்ல, மாறாக, மனித உள்ளத்திலிருந்து பிறப்பதே.

மனித உள்ளத்திலிருந்து வெளிப்படுகின்ற தீமைகளை வரிசைப்படுத்தும்போது பிற மனிதருக்கு எதிராக நிகழ்கின்ற எல்லா தீமைகளுக்கும் ஊற்று மனிதருக்கு உள்ளேயே இருக்கிறது என இயேசுவின் போதனை வழங்கப்பட்டதாக நற்செய்தியாளர் குறிப்பிடுகிறார் (காண்க: மாற் 7:21-22). தீய எண்ணம் நம் உள்ளத்தில் உருவாகும்போது அது படிப்படியாகச் செயலாக வெளிப்பட்டுவிடும். சட்டம் என்பது மனிதரின் உள்ளத்தில் மாற்றம் கொணர்வதாக இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் அச்சட்டம் பயனற்றுப் போகும். அதுபோலவே மனிதர் செய்கின்ற செயல்கள் எல்லாம் அவர்ளுடைய உள்ளத்திலிருந்தே புறப்படுகின்றன. எனவே நல்ல செயல்களை மனிதர் புரிய வேண்டும் என்றால் அவர்களுடைய சிந்தனை நல்ல சிந்தனையாக மாற வேண்டும். அவர்களுடைய எண்ணங்கள் நல்ல எண்ணங்களாக உருப்பெற வேண்டும்.

மன்றாட்டு:

இறைவா, எங்கள் உள்ளத்தைப் புதுப்பித்தருளும்.