யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





முதலாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 2வது வாரம் திங்கட்கிழமை
2017-01-16




முதல் வாசகம்

அவர் நிறைவுள்ளவராகி, தமக்குத் கீழ்ப்படிவோர் அனைவரும் என்றென்றும் மீட்படையக் காரணமானார்.
எபிரேயருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 5:1-10

1 தலைமைக் குரு ஒவ்வொருவரும் மனிதரிடமிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு, பாவங்களுக்குக் கழுவாயாகக் காணிக்கைகளையும் பலிகளையும் செலுத்துவதற்காக மக்கள் சார்பாகக் கடவுள் முன் பணிபுரிய ஏற்படுத்தப்படுகிறார்.2 அவர் தாமே வலுவின்மைக்கு ஆளாயிருப்பதால், அறியாமையில் இருப்போருக்கும் நெறி தவறி நடப்போருக்கும் பரிவு காட்டக் கூடியவராயிருக்கிறார்.3 அவர் மக்களுடைய பாவத்திற்குக் கழுவாயாகப் பலி செலுத்துவது போல, தம் வலுவின்மையின் பொருட்டுத் தமக்காகவும் பலி செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறார்.4 மேலும், யாரும் இம்மதிப்புக்குரிய பணியைத் தாமே தேர்ந்துகொள்வதில்லை. ஆரோனுக்கு வந்தது போன்று கடவுளிடமிருந்தே அழைப்பு வர வேண்டும்.5 அவ்வாறே கிறிஸ்துவும் தலைமைக் குருவாகத் தம்மையே உயர்த்திக் கொள்ளவில்லை. நீர் என் மைந்தர்: இன்று நான் உம்மைப் பெற்றெடுத்தேன் என்று அவரிடம் கூறியவரே அந்த மேன்மையை அவருக்கு அளித்தார்.6 இவ்வாறே மற்றோரிடத்தில், மெல்கிசதேக்கின் முறைப்படி நீர் என்றென்றும் குருவே என்றும் கூறப்பட்டுள்ளது.7 அவர் இவ்வுலகில் வாழ்ந்த காலத்தில், தம்மைச் சாவிலிருந்து காப்பாற்ற வல்லவரை நோக்கி உரத்த குரல் எழுப்பி, கண்ணீர் சிந்தி, மன்றாடி வேண்டினார். அவர் கொண்டிருந்த இறைப்பற்று கலந்த அச்சத்தை முன்னிட்டு, கடவுள் அவருக்குச் செவி சாய்த்தார்.8 அவர் இறைமகனாயிருந்தும், துன்பங்கள் வழியே கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டார்.9 அவர் நிறைவுள்ளவராகி, தமக்குத் கீழ்ப்படிவோர் அனைவரும் என்றென்றும் மீட்படையக் காரணமானார்.10 மெல்கிசதேக்கின் முறைப்படி வந்த தலைமைக் குரு என்று கடவுள் அவருக்குப் பெயர் சூட்டினார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

'மெல்கிசெதேக்கின் முறைப்படி நீர் என்றென்றும் குருவே'
திருப்பாடல்கள் 110:1-4

1 ஆண்டவர் என் தலைவரிடம் 'நான் உம் பகைவரை உமக்குப் கால்மணையாக்கும்வரை நீர் என் வலப்பக்கம் வீற்றிரும்' என்று உரைத்தார்.

2 வலிமைமிகு உமது செங்கோலை ஆண்டவர் சீயோனிலிருந்து ஒங்கச்செய்வார்; உம் எதிரிகளிடையே ஆட்சி செலுத்தும்!

3 நீர் உமது படைக்குத் தலைமை தாங்கும் நாளில் தூய கோலத்துடன் உம் மக்கள் தம்மை உவந்தளிப்பர்; வைகறை கருவுயிர்த்த பனியைப்போல உம் இளம் வீரர் உம்மை வந்தடைவர்.

4 'மெல்கிசெதேக்கின் முறைப்படி நீர் என்றென்றும் குருவே' என்று ஆண்டவர் ஆணையிட்டுச் சொன்னார் அவர் தம் மனத்தை மாற்றிக் கொள்ளார்.


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! எவரும் பழைய ஆடையில் புதிய துணியை ஒட்டுப்போடுவதில்லை அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 2:18-22

18 யோவானுடைய சீடரும் பரிசேயரும் நோன்பு இருந்துவந்தனர். சிலர் இயேசுவிடம், ' யோவானுடைய சீடர்களும் பரிசேயருடைய சீடர்களும் நோன்பிருக்க, உம்முடைய சீடர்கள் ஏன் நோன்பிருப்பதில்லை? ' என்று கேட்டனர்.19 அதற்கு இயேசு அவர்களை நோக்கி, ' மணமகன் தங்களோடு இருக்கும்வரை மணவிருந்தினர்கள் நோன்பு இருக்கமுடியுமா? மணமகன் அவர்களோடு இருக்கும் காலமெல்லாம் அவர்கள் நோன்பிருக்க முடியாது.20 ஆனால் மணமகன் அவர்களைவிட்டுப் பிரியவேண்டிய காலம் வரும். அப்போது அவர்களும் நோன்பு இருப்பார்கள்.21 எவரும் பழைய ஆடையில் புதிய துணியை ஒட்டுப்போடுவதில்லை. அவ்வாறு ஒட்டுப்போட்டால், அந்த புதிய துணி பழையதிலிருந்து கிழியும்; கிழிசலும் பெரிதாகும்.22 அதுபோலப் பழைய தோற்பைகளில், எவரும் புதிய திராட்சை மதுவை ஊற்றி வைப்பதில்லை. ஊற்றிவைத்தால் மது தோற்பைகளை வெடிக்கச் செய்யும்; மதுவும் தோற்பைகளும் பாழாகும். புதிய மது புதுத் தோற்பைகளுக்கே ஏற்றது ' என்றார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

பழைய ஆடையில் புதிய துணியை ஒட்டுப்போடுவதில்லை-

எப்பொழுது நாம் பழையதையும் புதியதையும் கலக்கிறோமோ அப்பொழுது அங்கெல்லாம் குழப்பமும் இழப்பும் எற்படுவதை அறிவோம். ஏனென்றால் இரண்டும் இணைந்து செல்வது கடினம்.கிறிஸ்தவர்கள் நாம் 'புது நெறி'யைச்(தி.தூ 9 :2) சார்ந்தவர்கள். புதிய படைப்பு (1 கொரி 11 :25). புதிய மனித இனம்( எபே 2 :15). புதிய மனிதன் (எபே 4 :24). புதிய மனித இயல்பு (கொலோ 3 :10). புதிய வழி(எபி 10 :20) புதிய கட்டளை (யோவா 13 :34). புதிய உடன்படிக்கை ( கொரி; 11 :25). தூய ஆவி அருளும் புதிய நெறியில்"(உரோமை7'6) இத்தனை புதியவைகளை உள்ளடக்கிய நாம், சட்டங்களுக்குள்ளும் சம்பிரதாயங்களுக்குள்ளும் அடைக்க முற்பட்டால், சட்டங்களும் சம்பிரதாயங்களும் சிதைந்தழியும்.கிறிஸ்தவம் என்றும் புதியது. அதற்கு முதுமை பழமை என்பது இல்லை. காலத்தின் சுழற்சிக்கு எற்ப என்றும் தன்னை புதுப்பித்துக்கொண்டு மக்களை புதிய வானகம், புதிய வையகம், புதிய எருசலேம் நோக்கி அழைத்துச் செல்வது கிறிஸ்தவம்.

ஆகவே தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டு, அவரால் வழி நடத்தப்படுவதற்குப் பதிலாக, 'அவர் நோன்பிருந்தார், அந்த காலத்தில் அப்படி இருந்தோம்,அந்த வழிபாட்டு முறைதான் வேண்டும் என்பதெல்லாம் பழைய பாத்திரத்தில் புதிய இரசத்தை அடைக்கும் முயற்சி. அது பாத்திரத்தை உடைக்கும் முயற்சி. இரசத்தை வீணாக்கும் செயல். புதிய மது புதுத் தோற்பைகளுக்கே ஏற்றது இதைச் செய்வோம். இனிது வாழ்வோம்.

மன்றாட்டு:

இறைவா, வீண் பெருமைக்கு இடம் கொடாமல் வாழ்ந்திட எங்களுக்கு அருள்தாரும்.