யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





முதலாவது திருவழிபாடு ஆண்டு
கிறீஸ்துபிறப்புக்காலம்
2017-01-07




முதல் வாசகம்

நாம் எதைக் கேட்டாலும் கடவுள் நமக்குச் செவிசாய்க்கிறார்.
திருத்தூதர் யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 5: 14-21

அன்பார்ந்தவர்களே, நாம் கேட்பது கடவுளுடைய திருவுளத்திற்கு ஏற்ப அமைந்திருப்பின், அவர் நமக்குச் செவிசாய்க்கிறார்; இதுவே நாம் அவர்மீது கொண்டுள்ள உறுதியான நம்பிக்கை. நாம் எதைக் கேட்டாலும் அவர் நமக்குச் செவிசாய்க்கிறார் என்று நமக்குத் தெரியும். எனவே, நாம் அவரிடம் கேட்டவற்றைப் பெறுவோம் என்னும் உறுதி நமக்கு உண்டு. பாவம் செய்வோர் சாவுக்குரிய பாவம் செய்யவில்லை என்று கண்டால், அவர்களுக்காகக் கடவுளிடம் வேண்டுதல் செய்யவேண்டும். கடவுளும் அவர்களுக்கு வாழ்வு அருள்வார். சாவுக்குரிய பாவமும் உண்டு. அப்பாவத்தைச் செய்வோருக்காக வேண்டுதல் செய்யவேண்டும் என நான் சொல்லவில்லை. தீச்செயல் அனைத்துமே பாவம்; ஆனால் எல்லாப் பாவமுமே சாவுக்குரியவை அல்ல. கடவுளிடமிருந்து பிறந்தோர் பாவம் செய்வதில்லை என்பது நமக்குத் தெரியும். ஏனெனில் கடவுளிடமிருந்து பிறந்தவர்களை அவர் பாதுகாக்கிறார். தீயோன் அவர்களைத் தீண்டுவதில்லை. நாம் கடவுளைச் சார்ந்தவர்கள்; ஆனால், உலகனைத்தும் தீயோனின் பிடியில் இருக்கிறது. இது நமக்குத் தெரியும். இறைமகன் வந்து உண்மையான இறைவனை அறிந்துகொள்ளும் ஆற்றலை நமக்குத் தந்துள்ளார். இது நமக்குத் தெரியும். நாம் உண்மையான இறைவனோடும் அவர் மகன் இயேசு கிறிஸ்துவோடும் இணைந்து வாழ்கிறோம். இவரே உண்மைக் கடவுள். இவரே நிலைவாழ்வு. பிள்ளைகளே, சிலைவழிபாட்டைக் குறித்து எச்சரிக்கையாயிருங்கள்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

ஆண்டவர் தம் மக்கள்மீது விருப்பம் கொள்கின்றார்
திருப்பாடல்149: 1-2. 3-4. 5-6ய,9

அல்லேலூயா, ஆண்டவருக்குப் புதியதொரு பாடலைப் பாடுங்கள். அவருடைய அன்பர் சபையில் அவரது புகழைப் பாடுங்கள். 2 இஸ்ரயேல் தன்னை உண்டாக்கினவரைக் குறித்து மகிழ்ச்சி கொள்வதாக! சீயோனின் மக்கள் தம் அரசரை முன்னிட்டுக் களிகூர்வார்களாக. பல்லவி

3 நடனம் செய்து அவரது பெயரைப் போற்றுவார்களாக; மத்தளம் கொட்டி, யாழிசைத்து அவரைப் புகழ்ந்து பாடுவார்களாக. 4 ஆண்டவர் தம் மக்கள்மீது விருப்பம் கொள்கின்றார்; தாழ்நிலையிலுள்ள அவர்களுக்கு வெற்றி அளித்து மேன்மைப் படுத்துவார். பல்லவி

5 அவருடைய அன்பர் மேன்மை அடைந்து களிகூர்வராக! மெத்தைகளில் சாய்ந்து மகிழ்ந்து கொண்டாடுவராக. 6ய அவர்களின் வாய் இறைவனை ஏத்திப் புகழட்டும். 9b இத்தகைய மேன்மை ஆண்டவர்தம் அன்பர் அனைவருக்கும் உரித்தானது. அல்லேலூயா. பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! நம்மிடையே பெரிய இறைவாக்கினர் ஒருவர் தோன்றியிருக்கிறார். கடவுள் தம் மக்களைத் தேடி வந்திருக்கிறார். அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

+ யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 2: 1-12

அக்காலத்தில் கலிலேயாவில் உள்ள கானாவில் திருமணம் ஒன்று நடைபெற்றது. இயேசுவின் தாயும் அங்கு இருந்தார். இயேசுவும் அவருடைய சீடரும் அத்திருமணத்திற்கு அழைப்புப் பெற்றிருந்தனர். திருமண விழாவில் திராட்சை இரசம் தீர்ந்துபோகவே இயேசுவின் தாய் அவரை நோக்கி, “திராட்சை இரசம் தீர்ந்துவிட்டது'' என்றார். இயேசு அவரிடம், “அம்மா, அதைப்பற்றி நாம் என்ன செய்ய முடியும்? எனது நேரம் இன்னும் வரவில்லையே'' என்றார். இயேசுவின் தாய் பணியாளரிடம், “அவர் உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள்'' என்றார். யூதரின் தூய்மைச் சடங்குகளுக்குத் தேவையான ஆறு கல்தொட்டிகள் அங்கே இருந்தன. அவை ஒவ்வொன்றும் இரண்டு மூன்று குடம் தண்ணீர் கொள்ளும். இயேசு அவர்களிடம், “இத்தொட்டிகளில் தண்ணீர் நிரப்புங்கள்'' என்று கூறினார். அவர்கள் அவற்றை விளிம்பு வரை நிரப்பினார்கள். பின்பு அவர், “இப்போது மொண்டு பந்தி மேற்பார்வை யாளரிடம் கொண்டுபோங்கள்'' என்று அவர்களிடம் கூறினார். அவர்களும் அவ்வாறே செய்தார்கள். பந்தி மேற்பார்வையாளர் திராட்சை இரசமாய் மாறியிருந்த தண்ணீரைச் சுவைத்தார். அந்த இரசம் எங்கிருந்து வந்தது என்று அவருக்குத் தெரியவில்லை; தண்ணீர் மொண்டு வந்த பணியாளருக்கே தெரிந்திருந்தது. ஆகையால் பந்தி மேற்பார்வையாளர் மணமகனைக் கூப்பிட்டு, “எல்லாரும் நல்ல திராட்சை இரசத்தை முதலில் பரிமாறுவர்; யாவரும் விருப்பம் போலக் குடித்த பின்தான் தரம் குறைந்த இரசத்தைப் பரிமாறுவர். நீர் நல்ல இரசத்தை இதுவரை பரிமாறாமல் ஏன் வைத்திருந்தீர்?'' என்று கேட்டார். இதுவே இயேசு செய்த முதல் அரும் அடையாளம். இது கலிலேயாவில் உள்ள கானாவில் நிகழ்ந்தது. இதன் வழியாக அவர் தம் மாட்சியை வெளிப்படுத்தினார். அவருடைய சீடரும் அவரிடம் நம்பிக்கை கொண்டனர். இதன் பிறகு அவரும் அவர் தாயும் சகோதரர்களும் அவருடைய சீடரும் கப்பர்நாகும் சென்று அங்குச் சில நாள்கள் தங்கியிருந்தனர்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

அன்னை மரியாவின் இட ஒதுக்கீடு !

அன்னை மரியாவை இட ஒதுக்கீட்டுக் கொள்கையின் தாரகை என்று வர்ணித்தால் அது மிகையல்ல. ஒடுக்கப்பட்டோருக்கும், ஓரங்கட்டப்பட்டோருக்கும் சார்பாக வாதிட்டதோடு நின்றுவிடாமல், அவர்களுக்கு உயரிய பங்கைப் பெற்றுத் தந்தார் அன்னை மரியா. திருமண வீடுகளில் முதற் பந்திகளில் பணக்காரர்களும், செல்வாக்கு நிறைந்தவர்களும்தான் அமர்வர். அவர்களுக்கெல்லாம் திராட்சை ரசம் குறைபடாமல் கிடைத்து விட்டது. ஆனால், கடைசிப் பந்தியில் அமர்ந்த ஏழை, எளியவர்கள், ஒதுக்கப்பட்டவர்கள், திருமண வீட்டாரால் அதிக முக்கியத்துவம் வாய்ந்தவர்கள் என்று கருதப்படாதோர் முதலியோரே அமர்ந்திருப்பர். இவர்களுக்குத்தான் இரசம் குறைபட்டுவிட்டது. மற்றவர்கள் அதைப் பற்றி அதிகம் அக்கறைப்பட்டுக்கொள்ளாத சூழலில்தான் அன்னை மரியா துணிந்து, நீதியுணர்வுடனும், நம்பிக்கையுடனும் இறைமகன் இயேசுவை அணுகுகிறார். தனது நேரம் வரவில்லை என்று இயேசு மறுப்பு தெரிவித்தபிறகும்கூட அவரை வலியுறுத்தி தண்ணீரைத் திராட்சை இரசமாய் மாற்றும் அருஞ்செயலை, தன் முதல் அற்புதச் செயலை இயேசு நிறைவேற்றக் காரணமானார். எனவே, ஒதுக்கப்பட்ட கடைசிப் பந்தில் அமர்ந்திருந்தவர்கள் முதல் பந்திகளில் அமர்ந்து இரசம் குடித்த செல்வாக்கு மிக்கோரைவிட அதிக சுவை நிறைந்த, நல்ல இரசத்தை அவர்கள் மனம் நிரம்பும்வரை அனுபவிக்க முடிந்தது. இவ்வாறு, ஒதுக்கப்பட்டோருக்கு அதிக தரமும், அளவும் மிக்க திராட்சை இரசம் கிடைத்தது. எனவே, அன்னை மரியாவை இட ஒதுக்கீட்டின் தாய் என்று பெருமையுடன் அழைக்கலாம்.

மன்றாட்டு:

வானகத் தந்தையே இறைவா, உம்மை வாழ்த்திப் போற்றுகிறோம். அன்னை மரியாவை எங்கள் அனைவருக்கும் தாயாகத் தந்ததற்காக நன்றி கூறுகிறோம். அந்த அன்னையைப் பின் பற்றி நாங்களும் ஏழை, எளியோர், ஓரங்கட்டப்பட்டோர்மீது சிறப்புக் கவனம் செலுத்தி, அவர்களுக்கு உரிய தரமும், அளவும் மிக்க ஒதுக்கீட்டைப் பெற உழைப்போமாக! ஆமென்.