யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





முதலாவது திருவழிபாடு ஆண்டு
கிறீஸ்துபிறப்புக்காலம்
2017-01-06




முதல் வாசகம்

இயேசு இறைமகன் என்று தூய ஆவியும் நீரும் இரத்தமும் சான்று பகர்கின்றன.
திருத்தூதர் யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 5: 5-6, 8-13

அன்பார்ந்தவர்களே, இயேசு இறைமகன் என்று நம்புவோரைத் தவிர உலகை வெல்வோர் யார்? நீராலும் இரத்தத்தாலும் வந்தவர் இயேசு கிறிஸ்து. அவர் நீரால் மட்டும் அல்ல. நீராலும் இரத்தத்தாலும் வந்தவர் என தூய ஆவியார் சான்று பகர்கிறார். தூய ஆவியாரே உண்மை. எனவே சான்று அளிப்பவை மூன்று இருக்கின்றன. தூய ஆவியும் நீரும் இரத்தமுமே அவை. இம்மூன்றும் ஒரே நோக்கம் கொண்டவை. மனிதர் தரும் சான்றை நாம் ஏற்றுக்கொள்கிறோமே! கடவுள் தரும் சான்று அதைவிட மேலானது அன்றோ! கடவுள் தம் மகனுக்குச் சான்று பகர்ந்துள்ளார். இறைமகன்மீது நம்பிக்கை கொண்டுள்ளோர் இச்சான்றைத் தம்முள் கொண்டிருக்கின்றனர். ஆனால், கடவுள்மீது நம்பிக்கை கொள்ளாதோர் அவரைப் பொய்யராக்குகின்றனர். ஏனெனில் தம் மகனைக் குறித்து அவர் அளித்த சான்றை அவர்கள் நம்பவில்லை. கடவுள் நமக்கு நிலைவாழ்வை அளித்துள்ளார். இந்த வாழ்வு அவர் மகனிடம் இருக்கிறது. இதுவே அச்சான்று. இறைமகனைக் கொண்டிருப்போர் வாழ்வைக் கொண்டுள்ளனர்; அவரைக் கொண்டிராதோர் வாழ்வைக் கொண்டிரார். இறைமகனிடம் நம்பிக்கை கொண்டுள்ளோருக்கு நிலைவாழ்வு உண்டு என நீங்கள் அறிந்துகொள்ளுமாறு உங்களுக்கு இவற்றை எழுதுகிறேன்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

எருசலேமே! ஆண்டவரைப் போற்றுவாயாக!
திருப்பாடல் 147: 12-13. 14-15. 19-20

எருசலேமே! ஆண்டவரைப் போற்றுவாயாக! சீயோனே! உன் கடவுளைப் புகழ்வாயாக! 13 அவர் உன் வாயில்களின் தாழ்களை வலுப்படுத்துகின்றார்; உன்னிடமுள்ள உன் பிள்ளைக்கு ஆசி வழங்குகின்றார். பல்லவி

14 அவர் உன் எல்லைப் புறங்களில் அமைதி நிலவச் செய்கின்றார்; உயர்தரக் கோதுமை வழங்கி உன்னை நிறைவடையச் செய்கின்றார். 15 அவர் தமது கட்டளையை உலகினுள் அனுப்புகின்றார்; அவரது வாக்கு மிகவும் விரைவாய்ச் செல்கின்றது. பல்லவி

19 யாக்கோபுக்குத் தமது வாக்கையும் இஸ்ரயேலுக்குத் தம் நியமங்களையும் நீதிநெறிகளையும் அறிவிக்கின்றார். 20 அவர் வேறெந்த இனத்துக்கும் இப்படிச் செய்யவில்லை; அவருடைய நீதிநெறிகள் அவர்களுக்குத் தெரியாது. பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! வானம் திறந்தது, தந்தையின் குரலொலி கேட்டது: “என் அன்பார்ந்த மைந்தர் இவரே; இவருக்குச் செவிசாயுங்கள்.'' அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 7-11

அக்காலத்தில் யோவான், “என்னைவிட வலிமை மிக்க ஒருவர் எனக்குப்பின் வருகிறார். குனிந்து அவருடைய மிதியடி வாரை அவிழ்க்கக்கூட எனக்குத் தகுதியில்லை. நான் உங்களுக்குத் தண்ணீரால் திருமுழுக்குக் கொடுத்தேன்: அவரோ உங்களுக்குத் தூய ஆவியால் திருமுழுக்குக் கொடுப்பார்'' எனப் பறை சாற்றினார். அக்காலத்தில் இயேசு கலிலேயாவிலுள்ள நாசரேத்திலிருந்து வந்து யோர்தான் ஆற்றில் யோவானிடம் திருமுழுக்குப் பெற்றார். அவர் ஆற்றிலிருந்து கரையேறிய உடனே வானம் பிளவுபடுவதையும் தூய ஆவி புறாவைப் போல் தம்மீது இறங்கி வருவதையும் கண்டார். அப்பொழுது, “என் அன்பார்ந்த மகன் நீயே, உன் பொருட்டு நான் பூரிப்படைகின்றேன்'' என்று வானத்திலிருந்து ஒரு குரல் ஒலித்தது.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''என் அன்பார்ந்த மகன் நீயே, உன் பொருட்டு நான் பூரிப்படைகிறேன்''

இயேசு ஏன் திருமுழுக்குப் பெற்றார் என்னும் கேள்வி மக்களின் மனத்தில் குழப்பத்தை உருவாக்கக் கூடும். தொடக்க காலத் திருச்சபையிலும் இக்கேள்வி எழுந்ததுண்டு. நற்செய்தி நூல்கள் நான்கும் இயேசு திருமுழுக்குப் பெற்றதைக் குறிப்பிடுகின்றன (காண்க: மத் 3:13-17; மாற் 1:9-11; யோவா 1:32-34). என்றாலும், பாவ மன்னிப்புப் பெறுவதற்காக வழங்கப்பட்ட திருமுழுக்கை இயேசுவும் பெற்றுக்கொண்டதால் அவரிடத்தில் பாவம் குடிகொண்டிருந்ததா, அவர் கடவுளின் மகனாக நம்மிடையே வந்ததால் அவரிடம் பாவம் உண்டு என நாம் கருதுவது சரியல்லவே என்றெல்லாம் ஐயப்பாடு அந்நாளில் எழுந்ததுண்டு. இயேசு கடவுளோடு ஒன்றித்திருந்தார் என்பதால் அவரிடத்தில் பாவம் குடிகொண்டிருக்கவில்லை. கடவுளின் அன்பிலிருந்து அவர் ஒருநாளும் பிரிந்ததில்லை. என்றாலும், இயேசு நம்மைப் போல மனிதராகப் பிறந்தவர்; நம்மோடு தம்மை முழுமையாக ஒன்றித்துக்கொண்டவர். எனவே, பாவம் தவிர அனைத்திலும் அவர் நமக்குச் சமமானார். ஆக, அவர் திருமுழுக்குப் பெற்றது கடவுளின் திருவுளத்திற்கு ஏற்ப நடந்த ஒரு நிகழ்ச்சி என்பதை நற்செய்தி நூல்கள் தெளிவுபடுத்துகின்றன.

இயேசு திருமுழுக்குப் பெற்றபோது வானிலிருந்து வந்த குரல் ஒரு பேருண்மையை வெளிப்படுத்தியது. ''இயேசு கடவுளின் அன்புமிக்க மகன்; கடவுள் அவரைக் குறித்து மகிழ்ச்சியடைகிறார்'' (காண்க: மத் 3:17; மாற் 1:11; லூக் 3:22; யோவா 1:33-34). நாம் பெறுகின்ற திருமுழுக்கு நம்மைக் கடவுளின் பிள்ளைகளாக மாற்றுகிறது. இதனால், நீரினால் முறையாகத் திருமுழுக்குப் பெறாத ஆயிரக்கணக்கான மக்கள் கடவுளின் பிள்ளைகள் அல்ல என்று பொருளாகாது. மாறாக, திருமுழுக்கின் வழியாக நாம் கடவுளின் பிள்ளைகள் என்னும் உண்மை வெளிப்படையாக அறிக்கையிடப்படுகிறது; நாம் கிறிஸ்துவின் சீடர் என்னும் தகுதி வழங்கப்பட்டு, பறைசாற்றப்படுகிறது. அதன் அடிப்படையில் நாம் புதிய மனிதர்களாக, புதுப்பிறப்பு அடைந்தவர்களாக வாழ்ந்திட அழைக்கப்படுகிறோம். கிறிஸ்தவ வாழ்வு என்பது திருமுழுக்கின் நீட்சி என நாம் கூறலாம்.

மன்றாட்டு:

இறைவா, நீரினாலும் ஆவியினாலும் புதுப்பிறப்புகளாக மாறிய நாங்கள் இயேசுவைப் புத்துணர்வோடு பின்செல்ல அருள்தாரும்.