யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)






திருவருகைக்காலம் 2வது வாரம் வெள்ளிக்கிழமை
2016-12-09




முதல் வாசகம்

என் கட்டளைகளுக்குச் செவிசாய்த்திரு.
இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 48: 17-19

இஸ்ரயேலின் தூயவரும் உன் மீட்பருமான ஆண்டவர் கூறுவது இதுவே: உன் கடவுளாகிய ஆண்டவர் நானே! பயனுள்ளவற்றை உனக்குக் கற்பிப்பவரும் செல்லவேண்டிய வழியில் உன்னை நடத்துபவரும் நானே! என் கட்டளைக்குச் செவிசாய்த்திருப்பாயானால், உன் நிறைவாழ்வு ஆற்றைப்போலும், உன் வெற்றி கடல் அலை போலும் பாய்ந்து வந்திருக்கும். உன் வழிமரபினர் மணல் அளவாயும், உன் வழித் தோன்றல்கள் கதிர்மணிகள் போன்றும் இருந்திருப்பர்; அவர்கள் வெட்டி வீழ்த்தப்பட்டிரார்; அவர்கள் பெயர் என் திருமுன்னின்று அழிக்கப் பட்டிராது.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

ஆண்டவரே, உம்மைப் பின்தொடர்பவர் வாழ்வின் ஒளியைக் கொண்டிருப்பார்.
திருப்பாடல் 1: 1-2. 3. 4,6

நற்பேறு பெற்றவர் யார்? - அவர் பொல்லாரின் சொல்லின்படி நடவாதவர்; பாவிகளின் தீயவழி நில்லாதவர்; இகழ்வாரின் குழுவினில் அமராதவர்; 2 ஆனால், அவர் ஆண்டவரின் திருச்சட்டத்தில் மகிழ்ச்சியுறுபவர்; அவரது சட்டத்தைப்பற்றி இரவும் பகலும் சிந்திப்பவர். பல்லவி

3 அவர் நீரோடை ஓரம் நடப்பட்ட மரம் போல் இருப்பார்; பருவகாலத்தில் கனிதந்து, என்றும் பசுமையாய் இருக்கும் அம்மரத்திற்கு ஒப்பாவார்; தாம் செய்வதனைத்திலும் வெற்றி பெறுவார். பல்லவி

4 பொல்லார் அப்படி இல்லை; அவர்கள் காற்று அடித்துச் செல்லும் பதரைப்போல் ஆவர். 6 நேர்மையாளரின் நெறியை ஆண்டவர் கருத்தில் கொள்வார்; பொல்லாரின் வழியோ அழிவைத் தரும். பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவர் வரவிருக்கிறார். அவரை எதிர்கொள்ளுங்கள்; ஏனெனில், அமைதியின் அரசர் அவரே அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 16-19

அக்காலத்தில் இயேசு மக்கள் கூட்டத்துக்குக் கூறியது: �இத்தலைமுறையினரை யாருக்கு ஒப்பிடுவேன்? இவர்கள் சந்தை வெளியில் உட்கார்ந்து மறு அணியினரைக் கூப்பிட்டு, `நாங்கள் குழல் ஊதினோம்; நீங்கள் கூத்தாடவில்லை. நாங்கள் ஒப்பாரி வைத்தோம்; நீங்கள் மாரடித்துப் புலம்பவில்லை' என்று கூறி விளையாடும் சிறுபிள்ளைகளுக்கு ஒப்பானவர்கள். எப்படியெனில், யோவான் வந்தபோது அவர் உண்ணவுமில்லை, குடிக்கவுமில்லை. இவர்களோ `அவன் பேய் பிடித்தவன்' என்கிறார்கள். மானிடமகன் வந்துள்ளார்; அவர் உண்கிறார்; குடிக்கிறார். இவர்களோ, `இம்மனிதன் பெருந்தீனிக்காரன், குடிகாரன், வரிதண்டுபவர்களுக்கும் பாவிகளுக்கும் நண்பன்' என்கிறார்கள். எனினும் ஞானம் மெய்யானது என்பதற்கு அதை ஏற்றுக்கொண்டோரின் செயல்களே சான்று.''

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''நாங்கள் ஒப்பாரி வைத்தோம்; நீங்கள் அழவில்லை'' (லூக்கா 7:32)

இயேசுவின் போதனைகளில் சிறிதும் பெரிதுமாகப் பல கதைகள் உண்டு. அவை பெரும்பாலும் ''உவமை'' என்னும் வகையைச் சார்ந்தவை. அன்றாட வாழ்க்கை நிகழ்ச்சிகளிலிருந்து மக்களுக்கு அரிய பாடங்களைப் புகட்டியவர் இயேசு. ஒரு நாள் இயேசு சந்தை வெளியில் சிறுவர்கள் விளையாடுவதைப் பார்க்கிறார். அவரும் சிறு வயதில் அவ்வாறு விளையாடியது அவருடைய நினைவுக்கு வருகிறது. சிறுவர்கள் இரு பிரிவினராக அமர்ந்து விளையாட்டைத் தொடங்குகிறார்கள். முதல் பிரிவினர் என்ன செய்கிறார்களோ அதற்குப் பதில் தருவதுபோல இரண்டாம் பிரிவினர் செயல்பட வேண்டும். முதல் பிரிவினர் குழல் ஊதி இசை எழுப்பினால் இரண்டாம் பிரிவினர் அந்த இசைக்கு ஏற்ப நடனமான வேண்டும். முதல் பிரிவினர் ஒப்பாரி வைத்தால் இரண்டாம் பிரிவினர் அவர்களோடு சேர்ந்துகொண்டு அழ வேண்டும். இவ்வாறு மாறி மாறி செய்யும்போது விளையாட்டில் எல்லாரும் கலந்துகொண்டு மகிழ முடியும். ஒப்பாரி வைத்தவர்கள் எதிர்பார்த்தது என்ன? பிறர் தங்களுடைய எண்ணத்தை அறிந்து அதற்கு ஏற்பச் செயல்பட்டு, அழ வேண்டும் என்பதே அவர்களுடைய எதிர்பார்ப்பு. ஆனால் அவர்கள் எதிர்பார்த்தது போல இரண்டாம் பிரிவினர் அழவில்லை. இதனால் விளையாட்டு திடீரென முடிவுக்கு வருகிறது.

இக்கதை வழியாக இயேசு புகட்டும் பாடம் என்ன? பிறர் என்னென்ன விதத்தில் நடந்துகொள்ள வேண்டும் என நாம் முன்கூட்டியே தீர்மானித்து அவர்களிடமிருந்து நாம் விரும்புகின்ற நடத்தையை எதிர்பார்க்கிறோம். நாம் எதிர்பார்ப்பது போல நடக்காவிட்டால் ஏமாற்றம் அடைகிறோம். கடவுள் என்றால் இப்படி இப்படி இருக்க வேண்டும்; எனக்கு இதையும் அதையும் செய்ய வேண்டும்; நான் கேட்கும் இந்த இந்த வேண்டுதல்களுக்குச் செவிமடுக்க வேண்டும் என்றெல்லாம் நாம் கடவுளுக்கு அறிவுரை கூற முற்பட்டுவிடுகிறோம். ஆனால் கடவுள் என்ன விரும்புகிறார், கடவுள் நம்மிடம் எதை எதிர்பார்க்கிறார் என்று கேட்கத் தவறிவிடுகிறோம். நமது கற்பனையில் தோன்றுவதெல்லாம் நிகழ வேண்டும் என எதிர்பார்ப்பது ''ஞானம்'' அல்ல; மாறாக உண்மையான ''ஞானம்'' எங்குள்ளதோ அங்கே நாம் அதைத் தேட வேண்டும். நமக்கு ஞானத்தைக் கற்பிப்பவர் இயேசு தானே!

மன்றாட்டு:

இறைவா, எங்கள் தனிப்பட்ட விருப்பத்தைப் பிறர் மேல் திணிக்காமல் உமது விருப்பத்தை அறிந்து அதன்படி நடக்க எங்களுக்கு அருள்தாரும்.