யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





திருவழிபாடு ஆண்டு - A
2016-11-27

(இன்றைய வாசகங்கள்: இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம். 2:1-5,திருப்பாடல்: 122: 1-2,4-9,திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 13: 11-14,மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 24:37-44)




விழிப்பாயிருங்கள்: ஏனெனில் உங்கள் ஆண்டவர் எந்த நாளில் வருவார் என உங்களுக்குத் தெரியாது விழிப்பாயிருங்கள்: ஏனெனில் உங்கள் ஆண்டவர் எந்த நாளில் வருவார் என உங்களுக்குத் தெரியாது விழிப்பாயிருங்கள்: ஏனெனில் உங்கள் ஆண்டவர் எந்த நாளில் வருவார் என உங்களுக்குத் தெரியாது விழிப்பாயிருங்கள்: ஏனெனில் உங்கள் ஆண்டவர் எந்த நாளில் வருவார் என உங்களுக்குத் தெரியாது விழிப்பாயிருங்கள்: ஏனெனில் உங்கள் ஆண்டவர் எந்த நாளில் வருவார் என உங்களுக்குத் தெரியாது


திருப்பலி முன்னுரை

இறைமக்கள் அனைவருக்கும் அன்பு வணக்கம். இன்று மிகச் சிறப்பான முறையில் உங்கள் அனைவரையும் வாழ்த்துவதில் மகிழ்ச்சி அடைகிறேன். இன்று புதிய வழிபாட்டு ஆண்டைத் துவக்குகிறோம். மூன்றாண்டு சுழற்சியில் நிகழும் திருவருகைக் காலம் முதல் புதிய சுழற்சியில் முதலாம் ஆண்டு இனிவரும் நாட்களில் எடுத்துக்கொள்ளப்படும். நாம் தொடங்கியிருக்கும் இக்காலம் புதிய எண்ணங்களோடும் உந்துதலோடும் நாம் இறைவனுடைய செயல்களில் மிகுந்த ஆர்வமுடன் ஈடுபட்டு நமக்கு இது மீட்பின் காலமாகிடவும் நாம் உலகுக்கு ஒளியேற்றி வாழ வழிவகுப்போம். கிறிஸ்து எனும் மெசியா நம் அருகில் இருக்கிறார். நமக்கு நன்மைகளைச் செய்வதற்காக, தீமைகளை அகற்றுவதற்காக அவர் தனது முடிவில்லாத் திட்டத்திற்குச் செயல்வடிவம் கொடுப்பதற்காக நம்மைத் தேடி வருகிறார்.

இத்தகை மனநிலையால் புதிய தீர்மானங்களுடன் புதுவாழ்வு தொடங்கிட,

1. தூய பவுல் கூறியதுபோல தீயனவற்றைத் தவிர்த்து புதிய சிந்தனையோடு எழுக.

2. இருளின் ஆட்சிக்குரிய தீய நாட்டங்களைக் கை விடுக .

3. இயேசுவை அணிந்தவர்களாய் நன்மையின் செயல்பாடுகளைச் செய்க.

இத்தகை தூய எண்ணங்களை புதிய உணர்வுகளோடு செயல்படுத்த முழு விருப்பம் கொண்டவர்களாய் திருவருகைக் காலத்தைத் தொடங்குவோம். திருப்பலியில் பங்கேற்போம்.



முதல் வாசகம்

சீயோனிலிருந்தே திருச்சட்டம் வெளிவரும்:
இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம். 2:1-5

யூதாவையும் எருசலேமையும் குறித்து ஆமோட்சியின் மகன் எசாயா கண்ட காட்சி: இறுதி நாள்களில் ஆண்டவரின் கோவில் அமைந்துள்ள மலை எல்லா மலைகளுக்குள்ளும் உயர்ந்ததாய் நிலை நிறுத்தப்படும்: எல்லாக் குன்றுகளுக்குள்ளும் மேலாய் உயர்த்தப்படும்: மக்களினங்கள் அதைநோக்கிச் சாரை சாரையாய் வருவார்கள். வேற்றினத்தார் பலர் அங்கு வந்து சேர்ந்து ;புறப்படுங்கள் ஆண்டவரின் மலைக்குச் செல்வோம்: யாக்கோபின் கடவுளின் கோவிலுக்குப் போவோம். அவர் தம் வழிகளை நமக்குக் கற்பிப்பார்: நாமும் அவர் நெறிகளில் நடப்போம் ; என்பார்கள். ஏனெனில், சீயோனிலிருந்தே திருச்சட்டம் வெளிவரும்: எருசலேமிலிருந்தே ஆண்டவரின் திருவாக்கு புறப்படும். அவர் வேற்றினத்தாரிடையே உள்ள வழக்குகளைத் தீர்த்து வைப்பார்: பல இன மக்களுக்கும் தீர்ப்பளிப்பார்: அவர்கள் தங்கள் வாள்களைக் கலப்பைக் கொழுக்களாகவும் தங்கள் ஈட்டிகளைக் கருக்கரிவாள்களாகவும் அடித்துக் கொள்வார்கள், ஓர் இனத்திற்கு எதிராக மற்றோர் இனம் வாள் எடுக்காது: அவர்கள் இனி ஒருபோதும் போர்ப்பயிற்சி பெற மாட்டார்கள். யாக்கோபின் குடும்பத்தாரே, வாருங்கள் நாம் ஆண்டவரின் ஒளியில் நடப்போம்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

அகமகிழ்வோடு ஆண்டவரது இல்லத்திற்குப் போவோம்
திருப்பாடல்: 122: 1-2,4-9

ஆண்டவரது இல்லத்திற்குப் போவோம் என்ற அழைப்பை நான் கேட்டபோது அகமகிழ்ந்தேன். எருசலேமே! இதோ, நாங்கள் அடியெடுத்து வைத்து உன் வாயில்களில் நிற்கின்றோம்.பல்லவி:

ஆண்டவரின் திருக்குலத்தார் அங்கே செல்கின்றனர்: இஸ்ரயேல் மக்களுக்கு இட்ட கட்டளைக்களுக்கிணங்க ஆண்டவரது பெயருக்கு அவர்கள் நன்றி செலுத்தச் செல்வார்கள். அங்கே நீதி வழங்க அரியணைகள் இருக்கின்றன. அவை தாவீது வீட்டாரின் அரியணைகள்.பல்லவி:

எருசலேமில் சமாதானம் நிலைத்திருக்கும்படி வேண்டிக்கொள்ளுங்கள்: உன்னை விரும்புவோர் வளமுடன் வாழ்வார்களாக! உன் கோட்டைகளுக்குள் அமைதி நிலவுவதாக! உம் மாளிகைகளில் நல்வாழ்வு இருப்பதாக! பல்லவி:

உன்னுள் சமாதானம் நிலவுவதாக!; என்று நான் என் சகோதரர் சார்பிலும் என் நண்பர் சார்பிலும் உன்னை வாழ்த்துகின்றேன். நம் கடவுளாகிய ஆண்டவரின் இல்லம் இங்கே இருப்பதால், உன்னில் நலம் பெருகும்படி நான் மன்றாடுவேன். பல்லவி:

இரண்டாம் வாசகம்

உறக்கத்தினின்று விழித்தெழும் நேரம் ஏற்கெனவே வந்துவிட்டது
திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 13: 11-14

சகோதர சகோதரிகளே, இறுதிக்காலம் இதுவே என அறிந்து கொள்ளுங்கள்: உறக்கத்தினின்று விழித்தெழும் நேரம் ஏற்கெனவே வந்துவிட்டது. நாம் கிறிஸ்துவின்மேல் நம்பிக்கை கொண்டபோது இருந்ததை விட மீட்பு இப்பொழுது மிக அண்மையில் உள்ளது. இரவு முடியப்போகிறது: பகல் நெருங்கி உள்ளது. ஆகவே இருளின் ஆட்சிக்குரிய செயல்களைக் களைந்து விட்டு, ஒளியின் ஆட்சிக்குரிய படைக்கலங்களை அணிந்து கொள்வோமாக! பகலில் நடப்பதுபோல மதிப்போடு நடந்து கொள்வோமாக! களியாட்டம், குடிவெறி, கூடா ஒழுக்கம், காமவெறி, சண்டைச்சச்சரவு, ஆகியவற்றைத் தவிர்ப்போமாக! தீய இச்சைகளைத் தூண்டும் ஊனியல்பின் நாட்டங்களுக்கு இடம் கொடுக்க வேண்டாம். இயேசு கிறிஸ்துவை அணிந்து கொள்ளுங்கள்

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

- இறைவா உமக்கு நன்றி




நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவரே, உமது பேரன்பை எங்களுக்குக் காட்டியருளும்: உமது மீட்பையும் எங்களுக்குத் தந்தருளும். அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 24:37-44

அக்காலத்தில், மானிடமகன் வருகையைப் பற்றி இயேசு தம் சீடரை கோக்கிக் கூறியது "நோவாவின் காலத்தில் இருந்தது போலவே மானிட மகன் வருகையின்போதும் இருக்கும். வெள்ளப் பெருக்குக்கு முந்தைய காலத்தில், நோவா பேழைக்குள் சென்ற நாள்வரை எல்லாரும் திருமணம் செய்து கொண்டும் உண்டும் குடித்தும் வந்தார்கள். வெள்ளப்பெருக்கு வந்து அனைவரையும் அடித்துச் செல்லும்வரை அவர்கள் எதையும் அறியாதிருந்தார்கள். அப்படியே மானிடமகன் வருகையின்போதும் இருக்கும். இருவர் வயலில் இருப்பர். ஒருவர் எடுத்துக் கொள்ளப்படுவார்: மற்றவர் விட்டு விடப்படுவார்.இருவர் திரிகையில் மாவரைத்துக்கொண்டிருப்பர். ஒருவர் எடுத்துக் கொள்ளப்படுவார்: மற்றவர் விட்டு விடப்படுவார். விழிப்பாயிருங்கள்: ஏனெனில் உங்கள் ஆண்டவர் எந்த நாளில் வருவார் என உங்களுக்குத் தெரியாது.இரவில் எந்தக் காவல் வேளையில் திருடன் வருவான் என்று வீட்டு உரிமையாளருக்குத் தெரிந்திருந்தால் அவர் விழித்திருந்து தம் வீட்டில் கன்னமிடவிடமாட்டார் என்பதை அறிவீர்கள். எனவே நீங்களும் ஆயத்தமாய் இருங்கள். ஏனெனில் நீங்கள் நினையாத நேரத்தில் மானிட மகன் வருவார்."

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




விசுவாசிகள் மன்றாட்டுகள்:


விண்ணுலகில் வீற்றிருப்பவரே! உம்மை நோக்கியே என் கண்களை உயர்த்தியுள்ளேன்.


பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

1. விழித்திருக்க அழைப்பவரே இறைவா,

உமது திருமகனின் வருகைக்காக இந்த உலகை விழிப்புடன் தயார் செய்யும் வரத்தை, எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவருக்கும் நிறைவாய் அளித் திட வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

2. ஆதரித்துக் காக்கும் இறைவா!

ஆயனில்லா ஆடுகள்போல இன்று தவித்து நிற்கும் மக்களை கருணையுடன் கண்ணோக்கிப் பாரும். அவர்களின் துன்ப துயரங்களைப் போக்கி, அவர்கள் சரியான திசையை நோக்கிப் பயணிக்கவும், என்றும் அமைதியையும், உடல் நலத்தையும், பாதுகாப்பையும் பெற்று வாழவும், உமது அன்பின் சிறகுகளுக்குள் அவர்களை வைத்துக் காத்திடவும் வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. உறவின் ஊற்றே இறைவா!

இன்றைய நாட்களிலே குடும்பத்தின் புனிதத் தன்மைக்கும், உறவுக்கும், ஒற்றுமைக்கும் எதிராக இருக்கும் எல்லாச் சக்திகளையும் முறியடித்து: குடும்பங்களிலே அன்பும், ஒற்றுமையும், தோழமையும், புரிந்துணர்வும் நிலைபெற்று: குடும்பங்கள் திருக்குடும்பத்தின் தன்மைகளைக் கொண்டு வாழ அருளாசீர் அளித்திடவேண்டுமென்றும்: பிரிந்திருக்கும் குடும்பங்களை ஒன்று சேர்த்திடவேண்டுமென்றும் இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. உன்னை விரும்புவோர் வளமுடன் வாழ்வார்களாக! உன் கோட்டைகளுக்குள் அமைதி நிலவுவதாக! உம் மாளிகைகளில் நல்வாழ்வு இருப்பதாக! என்ற உன்னத வாழ்த்தை எமக்களித்த தந்தையே!

நாங்கள் இருளின் ஆட்சிக்குரிய செயல்களைக் களைந்து விட்டு, களியாட்டம், குடிவெறி, கூடா ஒழுக்கம், காமவெறி, சண்டைச்சச்சரவு, ஆகியவற்றைத் தவிர்த்து தீய இச்சைகளைத் தூண்டும் ஊனியல்பின் நாட்டங்களுக்கு இடம் கொடுக்காது என்றும் விழிப்புடனிருந்து செயல்பட எமக்கு அருள்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

5. உன்னைப் படைத்தவரை உன் வாலிப நட்களில் நினை என்று சொன்ன எம் இறைவா!

இளைறோர் தங்கள் வாழ்வில் நல்ல சிந்தனைகளையும், நற்செயல்களிலும், விசுவாச வாழ்வில் நிலைத்து நின்று கிறிஸ்துவின் மதிப்பீடுகளை தங்கள் வாழ்வில் எந்நாளும் சான்றுபகர தேவையான அருளைப் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

6. மகிழ்ச்சியின் மன்னராம் இறைவா,

வரும் கிறிஸ்து பிறப்பு பெருவிழாவின் முன் தயாரிப்புகளை நாங்கள் வெறும், வெற்று வெளி அடையளங்களை மையப்படுத்தி வாழாமல் ஆன்மீக தயாரிப்புகளில் எங்களை புதுப்பித்துக் கொண்டு உம் பிறப்பு ஏழைகளுக்கு நற்செய்தியாக அமைந்தது போல நாங்களும் நற்செய்தியின் தூதுவர்களாக வாழ வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.


இன்றைய சிந்தனை

இறை நம்பிக்கையில் புதுவாழ்வு

இன்று மனிதன் தன்னைப்பற்றிய சிந்தனையிலே மூழ்கி மூச்சற்ற நிலையில் இருக்கிறான். தன்னுடைய சுகம், தன் இன்பம் இவைபற்றியே எண்ணமாக உள்ளான். உண்பதும் உடுப்பதும், குடிப்பதும் கும்மாளமடிப்பதும், பெண்கொள்வதும் கொடுப்பதும் வாழ்க்கை என வாழ்பவன் வெள்ளப்பெருக்குக்கு முந்திய காலத்திய பாவ வாழ்க்கை வாழ்கிறான். அத்தகையோர் வெள்ளப்பெருக்கால் அழிந்தது போல அழிவார்கள். அந்த அழிவின் நாள் யாருக்கும் தெறியாது. பாவ வாழ்க்கை வாழும் மனிதனின் அழிவும் அவனுக்குத் தெரியாது.

வயலில் இருக்கும் இருவரில் ஒருவர் எடுத்துக் கொள்ளப்படுவதும் மற்றவர் விடப்படுவதும் அவர்களுக்கே தெறியாது. திரிகையில் மாவரைத்துக்கொண்டிருக்கும் இருவருள் ஒருவர் எடுத்துக் கொள்ளப்படுவதும் மற்றவர் விட்டுவிடப்படுதும் யாரும் அறியார். பாவிகளின் அழிவு அவர்களை அறியாமல் அவர்களை வந்தடையும்.

சுகபோகம் அனுபவிப்பதே வாழ்க்கை என்று வாழ்ந்தால், மகிமையும் மாட்சியும் நிறைந்த "ஆண்டவரின் நாள்" வேதனையும் விரக்தியும் நிறைந்த தண்டனையின் நாளாகிவிடும். ஆண்டவரின் மாட்சியை மகிமையைக் காணும் ஆசீர் பெற்ற மக்களாக இருக்க நோவா குடும்பம்போல் நம் குடும்பமும் குடும்ப வாழ்வும் இருக்க வேண்டும். ஆண்டவருக்குள் வாழும் குடும்பம் அழிவிலிருந்து பாதுகாக்கப்படும்.

மன்றாட்டு:

இறைவா, நீர் எங்களிடம் ஒப்படைத்த பொறுப்பை நன்றியோடும் கடமையுணர்வோடும் செயல்படுத்த அருள்தாரும்.