யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





மூன்றாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 33வது வாரம் வெள்ளிக்கிழமை
2016-11-18

திருத்தூதர்கள் பேதுரு, பவுல் பேராலயங்களின் நேர்ந்த...




முதல் வாசகம்

பல்வேறு மக்களினத்தார், நாட்டினர், மொழியினர், மன்னர் பற்றி நீ மீண்டும் இறைவாக்கு உரைக்க வேண்டும்'
திருத்தூதர் யோவான் எழுதிய திரு வெளிப்பாட்டில் இருந்து வாசகம் 10: 8-11

சகோதரர் சகோதரிகளே, விண்ணகத்திலிருந்து நான் கேட்ட குரல் என்னிடம் மீண்டும் பேசி, ``கடலின்மீதும் நிலத்தின்மீதும் நிற்கின்ற வானதூதரின் கையில் உள்ள பிரிக்கப்பட்ட சுருளேட்டை நீ போய் வாங்கிக்கொள்'' என்றது. நானும் அந்த வானதூதரிடம் சென்று, அந்தச் சிற்றேட்டை என்னிடம் தரும்படி கேட்டேன். அவரோ, ``இதை எடுத்துத் தின்றுவிடு; இது உன் வயிற்றில் கசக்கும், ஆனால் வாயில் தேனைப் போல் இனிக்கும்'' என்று என்னிடம் சொன்னார். உடனே வானதூதரின் கையிலிருந்து அந்தச் சிற்றேட்டை எடுத்துத் தின்றேன். அது என் வாயில் தேனைப் போல் இனித்தது; ஆனால் அதைத் தின்றபொழுது என் வயிற்றில் கசந்தது. ``பல்வேறு மக்களினத்தார், நாட்டினர், மொழியினர், மன்னர் பற்றி நீ மீண்டும் இறைவாக்கு உரைக்க வேண்டும்'' என்று எனக்குச் சொல்லப் பட்டது.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

உம் சொற்கள் என் நாவுக்கு எத்துணை இனிமையானவை!
திருப்பாடல் 119: 14,24. 72,103. 111,131

14 பெருஞ்செல்வத்தில் மகிழ்ச்சி அடைவது போல், நான் உம் ஒழுங்குமுறைகளின்படி நடப்பதில் மகிழ்ச்சியுறுகின்றேன். 24 ஏனெனில், உம் ஒழுங்குமுறைகள் எனக்கு இன்பம் தருகின்றன; அவை எனக்கு அறிவுரை தருகின்றன. -பல்லவி

72 நீர் திருவாய் மலர்ந்த சட்டம், ஆயிரக்கணக்கான பொன், வெள்ளிக் காசுகளை விட எனக்கு மேலானது. 103 உம் சொற்கள் என் நாவுக்கு எத்துணை இனிமையானவை! என் வாய்க்குத் தேனினும் இனிமையானவை. -பல்லவி

111 உம் ஒழுங்குமுறைகளை என்றும் என் உரிமைச் சொத்தாய்க் கொண்டுள்ளேன். ஆகவே, அவை என் இதயத்தை மகிழ்விக்கின்றன. 131 வாயை `ஆ'வெனத் திறக்கின்றேன்; பெருமூச்சு விடுகின்றேன்; ஏனெனில், உம் கட்டளைகளுக்காக ஏங்குகின்றேன். -பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! என் ஆடுகள் எனது குரலுக்குச் செவிசாய்க்கின்றன. எனக்கும் அவற்றைத் தெரியும். அவையும் என்னைப் பின் தொடர்கின்றன, என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 19: 45-48

அக்காலத்தில் இயேசு கோவிலுக்குள் சென்று அங்கு விற்பனை செய்து கொண்டிருந்தோரை வெளியே துரத்தத் தொடங்கினார். அவர்களிடம், `` `என் இல்லம் இறைவேண்டலின் வீடு' என்று மறைநூலில் எழுதியுள்ளதே; ஆனால் நீங்கள் இதைக் கள்வர் குகையாக்கினீர்கள்'' என்று கூறினார். இயேசு ஒவ்வொரு நாளும் கோவிலில் கற்பித்து வந்தார். தலைமைக் குருக்களும் மறைநூல் அறிஞர்களும் மக்களின் தலைவர்களும் அவரை ஒழித்துவிட வழி தேடினார்கள். ஆனால் என்ன செய்வது என்று யாருக்கும் தெரியவில்லை. ஏனென்றால் மக்கள் அனைவரும் அவர் போதனையைக் கேட்டு அவரையே பற்றிக்கொண்டிருந்தனர்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

"'என் இல்லம் இறைவேண்டலின் வீடு' ... ஆனால் நீங்கள் இதைக் கள்வரின் குகையாக்கினீர்கள்'' (லூக்கா 19:46)

இயேசு எருசலேம் கோவிலுக்குச் சென்று அங்கு வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தோரைத் துரத்தியடித்தார் என்னும் செய்தி நான்கு நற்செய்தி நூல்களிலும் உண்டு. இருப்பினும், லூக்கா நற்செய்தியில் இந்நிகழ்ச்சி பற்றி வருகின்ற சில குறிப்புகள் கவனித்தக்கன. இந்நிகழ்ச்சியை லூக்கா மிகச் சுருக்கமாகவே தருகிறார். இயேசு சாட்டை பின்னி வியாபாரிகளை அடித்துத் துரத்தியதாகவோ, நாணயம் மாற்றுவோரின் மேசைகளைக் கவிழ்த்துப்போட்டதாகவோ லூக்கா கூறவில்லை. மாறாக, பண்டைக் கால இறைவாக்கினர்களாகிய எசாயா, எரேமியா என்பவர்கள் ஏற்கெனவே குறிப்பிட்டிருந்த கருத்துக்களை எடுத்துக்காட்டுகிறார் இயேசு. கோவில் என்பது வழிபாட்டு இடம். அது ''இறைவேண்டல் வீடு'', அதாவது கோவிலுக்குச் செல்லும் மக்கள் கடவுளை நோக்கித் தம் மன்றாட்டுகளை எழுப்ப அங்கே செல்கிறார்கள் (காண்க: எசா 56:7). மாறாக, ''கள்வரின் குகை''யில் கொள்ளையடிக்கப்பட்ட பொருள்கள் பகிர்ந்துகொள்ளப்படுகின்ற ''வியாபாரப் போக்கு'' நிலவும் (காண்க: எரே 7:11). கடவுளின் இல்லம் கள்வரின் குகையாக மாற்றப்படலாகாது என்று இயேசு கூறியதன் பொருள் என்ன?

கடவுளின் இல்லம் ஒரு புனிதமான இடம். அங்கே செல்கின்ற மக்கள் கடவுளைச் சந்தித்து இறையனுபவம் பெறும் நோக்கத்தோடுதான் போகிறார்கள். இறையனுபவம் என்பது கோவிலில்தான் கிடைக்கும் என்பது முழு உண்மையல்ல என்றாலும், கடவுளுக்கென்று ஒதுக்கிவைக்கப்பட்ட இடம் தனித்தன்மை வாய்ந்தது என்பதை யாரும் ஏற்றுக்கொள்வர். இடத்தின் புனிதம் அந்த இடத்தில் நாம் சந்திப்பவரின் புனிதத்தில் பங்கேற்கிறது. எனவே, இறைவனுக்கென்று குறிக்கப்பட்ட இடங்களை மரியாதையோடு அணுகுவது என்றுமே இருந்துவந்துள்ளது. கள்வரின் குகை என்றால் அங்கே நடக்கின்ற செயல்கள் முறைகேடானவை என்னும் பொருள் பொதிந்துள்ளது. கள்வர் கொள்ளையடித்த பணத்தையும் பொருளையும் பகிர்ந்துகொள்ளும் இடம் புனித இடத்திற்கு நேர்மாறானது. அக்குகையில் நீதி நேர்மை போற்றப்படும் என நாம் எதிர்பார்க்க முடியாது. எனவே, இயேசு கடவுளின் இல்லத்தைத் தூய்மைப்படுத்தி அதை மீண்டும் கடவுளுக்கு உரிய இடமாக மாற்றுகின்றார். லூக்காவின் பார்வையில், இயேசு கோவிலைத் தூய்மைப்படுத்தி, அதைத் தம் இடம் என உரிமைகொண்டாடுகிறார். ''இயேசு ஒவ்வொரு நாளும் கோவிலில் கற்பித்துவந்தார்'' (லூக்கா 19:47) எனக் கூறும் லூக்கா இயேசு தம் சொந்த இடமாக எருசலேம் கோவிலைக் கருதினார் என்பதைக் கோடிட்டுக்காட்டுகிறார். பகலில் கோவிலில் கற்பித்த இயேசு இரவில் ஒலிவ மலைக்குச் சென்று இறைவேண்டல் செய்வது வழக்கம் (காண்க: லூக் 22:39-42). மக்களுக்குப் பணிபுரிவது கடவுளோடு நாம் கொள்கின்ற ஆழ்ந்த உறவு என்னும் அடிப்படையில் கட்டி எழுப்பப்பட வேண்டும் என்பதை இயேசு நமக்கு உணர்த்துகிறார்.

மன்றாட்டு:

இறைவா, உம்மை நோக்கி எங்கள் இதயங்களை எந்நாளும் எழுப்பிட அருள்தாரும்.