யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





மூன்றாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 32வது வாரம் வியாழக்கிழமை
2016-11-10




முதல் வாசகம்

ஒனேசிமுவை அன்புமிக்க சகோதரனாக ஏற்றுக்கொள்ளும்.
திருத்தூதர் பவுல் பிலமோனுக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 7-20

அன்பிற்குரியவரே, உம் அன்பைக் குறித்து நான் பெருமகிழ்வும் ஆறுதலும் கொள்கிறேன். ஆம், சகோதரரே, உம்மால் இறைமக்களின் உள்ளம் புத்துயிர் பெற்றுள்ளது. எனவே, நீர் செய்ய வேண்டியதை உமக்குக் கட்டளையிட, கிறிஸ்தவ உறவில், எனக்கு முழு உரிமை உண்டு என்றாலும், அன்பின் பெயரால் வேண்டுகோள் விடுக்கவே விரும்புகிறேன். கிறிஸ்து இயேசுவின் தூதுவனாக, அவர் பொருட்டுக் கைதியாக இருக்கும் பவுலாகிய எனக்குச் சிறையிலிருந்தபோது பிள்ளையான ஒனேசிமுக்காக உம்மிடம் வேண்டுகிறேன். முன்பு உமக்குப் பயனற்றவனாக இருந்த அவன், இப்பொழுது எனக்கும் உமக்கும் பயனுள்ளவன். அவனை உம்மிடம் திரும்ப அனுப்புகிறேன். அவனை அனுப்புவது என் இதயத்தையே அனுப்புவது போலாகும். நற்செய்தியின் பொருட்டுச் சிறையுற்றிருக்கும் எனக்கு, உமது பெயரால் பணியாற்ற, அவனை என்னிடமே நிறுத்திக்கொள்ள விரும்பினேன். ஆனால் நீர் செய்யும் நன்மையைக் கட்டாயத்தினால் செய்யாமல், மனமாரச் செய்யவேண்டும் என்று நினைத்தே, உம்முடைய உடன்பாடின்றி எதையும் செய்ய நான் விரும்பவில்லை. அவன் என்றும் உம்மோடு இருக்க உம்மை விட்டுச் சிறிது காலம் பிரிந்திருந்தான் போலும்! இனி அவனை நீர் அடிமையாக அல்ல, அடிமையை விட மேலானவனாக, அதாவது உம்முடைய அன்பார்ந்த சகோதரனாக ஏற்றுக்கொள்ளும். அவன் என் தனிப்பட்ட அன்புக்கு உரியவன். அப்படியானால் மனிதன் என்னும் முறையிலும் ஆண்டவரைச் சார்ந்தவன் என்னும் முறையிலும் அவன் எத்துணை மேலாக உம் அன்புக்கு உரியவனாகிறான்! எனவே, நமக்குள்ள நட்புறவைக் கருதி, என்னை ஏற்றுக்கொள்வது போல் அவனையும் ஏற்றுக்கொள்ளும். அவன் உமக்கு ஏதாவது தீங்கு இழைத்திருந்தால் அல்லது கடன்பட்டிருந்தால் அது என் கணக்கில் இருக்கட்டும். `நானே அதற்கு ஈடு செய்வேன்' எனப் பவுலாகிய நான் என் கைப்பட எழுதுகிறேன். நீர் உம்மையே எனக்குக் கடனாகச் செலுத்தவேண்டும் என நான் உமக்குச் சொல்ல வேண்டியதில்லை. ஆம் சகோதரரே, ஆண்டவர் பொருட்டு எனக்கு இந்த உதவியைச் செய்யும். கிறிஸ்துவின் பெயரால் என் உள்ளம் புத்துயிர் பெறச் செய்யும்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

யாக்கோபின் இறைவனைத் தம் துணையாகக் கொண்டோர் பேறுபெற்றோர்
திருப்பாடல் 146: 7. 8-9-10

ஆண்டவர் ஒடுக்கப்பட்டோர்க்கான நீதியை நிலைநாட்டுகின்றார்; பசித்திருப்போர்க்கு உணவளிக்கின்றார்; சிறைப்பட்டோர்க்கு விடுதலை அளிக்கின்றார். பல்லவி

8 ஆண்டவர் பார்வையற்றோரின் கண்களைத் திறக்கின்றார்; தாழ்த்தப்பட்டோரை உயர்த்துகின்றார்; நீதிமான்களிடம் அன்பு கொண்டுள்ளார். 9ய ஆண்டவர் அயல் நாட்டினரைப் பாதுகாக்கின்றார். பல்லவி

9 அனாதைப் பிள்ளைகளையும் கைம்பெண்களையும் ஆதரிக்கின்றார்; ஆனால், பொல்லாரின் வழிமுறைகளைக் கவிழ்த்து விடுகின்றார். 10 சீயோனே! உன் கடவுள், என்றென்றும், எல்லாத் தலைமுறைகளுக்கும் ஆட்சி செய்வார். பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! நானே திராட்சைக் கொடி; நீங்கள் அதன் கிளைகள். ஒருவர் என்னுடனும் நான் அவருடனும் இணைந்திருந்தால் அவர் மிகுந்த கனி தருவார், என்கிறார் ஆண்டவர் அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 17: 20-25

அக்காலத்தில் இறையாட்சி எப்போது வரும் என்று பரிசேயர் இயேசுவிடம் கேட்டனர். அவர் மறுமொழியாக, ``இறையாட்சி கண்களுக்குப் புலப்படும் முறையில் வராது. இதோ, இங்கே! அல்லது அதோ, அங்கே! எனச் சொல்ல முடியாது. ஏனெனில், இறையாட்சி உங்கள் நடுவேயே செயல்படுகிறது'' என்றார். பின்பு அவர் சீடர்களை நோக்கிக் கூறியது: ``ஒரு காலம் வரும்; அப்போது மானிட மகனுடைய நாள்களில் ஒன்றையாவது காண நீங்கள் ஆவலாய் இருப்பீர்கள். ஆனால் நீங்கள் காணமாட்டீர்கள். அவர்கள் உங்களிடம், `இதோ, இங்கே! அல்லது அதோ, அங்கே!' என்பார்கள். ஆனால் நீங்கள் போக வேண்டாம்; அவர்களைப் பின்தொடரவும் வேண்டாம். வானத்தில் மின்னல் ஒரு பக்கத்திலிருந்து மறு பக்கம் வரைக்கும் பளீரென மின்னி ஒளிர்வது போல மானிட மகனும் தாம் வரும் நாளில் தோன்றுவார். ஆனால் முதலில் அவர் பல துன்பங்கள் பட்டு இந்தத் தலைமுறையினரால் உதறித் தள்ளப்பட வேண்டும்.''

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''''இயேசு, 'வானத்தில் மின்னல் ஒரு பக்கத்திலிருந்து மறு பக்கம் வரைக்கும் பளீரென மின்னி ஒளிர்வதுபோல மானிட மகனும் தாம் வரும் நாளில் தோன்றுவார்' என்றார்'' (லூக்கா 17:24)

உலகில் வாழ்கின்ற எந்த மனிதரும் தம் வாழ்வு இந்த நாளில் இந்த மணி நேரத்தில் முடிவுக்கு வரும் என்று கூற இயலாது. நம் வாழ்வின் தொடக்கமும் முடிவும் நம் கைகளில் இல்லை. ஆனால் தொடங்கிய வாழ்வை எவ்வழியில் முன்னெடுத்துச் செல்வது என்பதைப் பொறுத்த மட்டில் நாம் பொறுப்போடு செயல்பட இயலும். இயேசு கடவுளாட்சியின் வருகை பற்றியும் இவ்வுலக முடிவு பற்றியும் எருசலேமின் அழிவு பற்றியும் கூறிய செய்திகள் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்திருக்கின்றன (காண்க: லூக் 17:20-37). ஒன்றை மட்டும் நாம் உறுதியாகக் கொள்ளலாம். அதாவது, எதிர்காலம் பற்றி நமக்குத் தெரியாது; கடந்த கால நினைவு நம்மோடு உள்ளது. ஆனால் நிகழ்காலம் எவ்வாறு அமைய வேண்டும் எனத் தீர்மானிப்பது நம் கைகளில் உள்ளது. நாம் கடவுளைச் சார்ந்து வாழப்போகிறோமா, கடவுளின் வழியிலிருந்து விலகி நடக்கப் போகிறோமா என முடிவுசெய்ய அழைக்கப்படுகிறோம். இந்த முடிவை வேறு யாரும் நமக்கென்று தீர்மானிக்க முடியாது. நாமே நம் வாழ்வு பற்றி முடிவெடுக்க வேண்டும். இச்சுதந்திரத்தைக் கடவுள் நமக்குத் தந்துள்ளார். ஆனால் கடவுளின் நீதியை நம்மிடையே நிலைநாட்ட வருகின்ற மனுமகன் எப்போது மீண்டும் தோன்றுவார் என்பதை நாமறியோம். இதுவே இயேசுவின் ''இரண்டாம் வருகை'' என அழைக்கப்படுகின்ற ''நிறைவுக் காலம்''. அக்காலம் பற்றிய விவரங்கள் நமக்குத் தெரியாது. ஆனால் அக்காலத்தில் நாம் கடவுளுக்கு உகந்தவர்களாக இருப்போமா இல்லையா என்பதை நாம் இன்று, இங்கே தீர்மானிக்க வேண்டும்.

எதிர்பாராத நேரத்தில் முடிவு வரும் என்பதை நாம் இரு பொருள்களில் புரிந்துகொள்ளலாம். தனி மனிதர்களாகிய நமக்கு வருகின்ற முடிவு நம் சாவு எனலாம். அதை நாமே முன்கூட்டி நிர்ணயிக்க முடியாது. மற்றொரு பொருள் இந்த உலகம் நிறைவு பெறுகின்ற நேரம். இதுவும் வந்தே தீரும் என இயேசு கற்பிக்கிறார். ஆனால் எப்போது இந்த நேரம் வரும் என்பது பற்றி அவர் பதில் தர மறுத்துவிட்டார். கிறிஸ்துவில் நம்பிக்கை கொள்வோர் தங்கள் நம்பிக்கையில் தளராமல் நிலைத்து நிற்க அழைக்கப்படுகிறார்கள். அப்போது மானிட மகனின் வருகை பற்றி அவர்கள் அஞ்சி நடுங்க மாட்டார்கள். ஏனென்றால் நீதி மிகுந்த கடவுள் இரக்கம் நிறைந்தவர் கூட. அவருடைய நீதியே இரக்கத்தின் வெளிப்பாடுதான். கடவுளின் இரக்கத்தையும் அன்பையும் பரிவையும் நாம் வாழ்வில் உணர்ந்து அனுபவிக்க வேண்டும். அப்போது எதிர்காலம் நம்மை அச்சுறுத்துகின்ற ஒன்றாக இல்லாமல் நம்மை ஊக்கப்படுத்துகின்ற சக்தியாக மாறும்.

மன்றாட்டு:

இறைவா, உம் வருகையை எதிர்நோக்கி என்றும் காத்திருக்க அருள்தாரும்.