யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





மூன்றாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 31வது வாரம் சனிக்கிழமை
2016-11-05




முதல் வாசகம்

எனக்கு வலுவூட்டுகிறவரின் துணைகொண்டு எதையும் செய்ய எனக்கு ஆற்றல் உண்டு.
திருத்தூதர் பவுல் பிலிப்பியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 4: 10-19

சகோதரர் சகோதரிகளே, என்னைப் பற்றிய அக்கறை இப்பொழுதாவது மீண்டும் உங்களிடையே எழுந்தது கண்டு ஆண்டவர் அருளால் நான் பெரிதும் மகிழ்கிறேன். நீங்கள் என்னைப் பற்றி அக்கறை கொண்டிருந்தீர்கள் என்பது உண்மைதான். ஆனால் அதைக் காட்டிக்கொள்ளும் வாய்ப்பு உங்களுக்குக் கிடைக்கவில்லை. எனக்கு ஏதோ குறைவாய் இருப்பதால் இவ்வாறு சொல்கிறேன் என நினைக்க வேண்டாம். ஏனெனில் எந்நிலையிலும் மனநிறைவோடு இருக்கக் கற்றுக்கொண்டுள்ளேன். எனக்கு வறுமையிலும் வாழத் தெரியும்; வளமையிலும் வாழத் தெரியும். வயிறார உண்ணவோ, பட்டினி கிடக்கவோ, நிறைவோ குறைவோ எதிலும் எந்தச் சூழலிலும் வாழப் பயிற்சி பெற்றிருக்கிறேன். எனக்கு வலுவூட்டுகிறவரின் துணை கொண்டு எதையும் செய்ய எனக்கு ஆற்றல் உண்டு. ஆயினும் நான் பட்ட துன்பத்தில் நீங்கள் பங்கு கொண்டது உங்கள் நன்மனத்தைக் காட்டுகிறது. பிலிப்பியர்களே, நான் நற்செய்தியை அறிவிக்கத் தொடங்கின காலத்தில், மாசிதோனியாவை விட்டுச் சென்றபிறகு, உங்களைத் தவிர வேறெந்தத் திருச்சபையும் என் வரவு செலவில் பங்கேற்கவில்லை. இதை நீங்களும் அறிவீர்கள். ஏனெனில் நான் தெசலோனிக்காவில் இருந்தபோது கூட என் தேவையை நிறைவு செய்ய ஒரு முறை மட்டுமல்ல, இரு முறை உதவி அனுப்பினீர்கள். நான் உங்கள் நன்கொடைகளை நாடவில்லை; மாறாக, உங்கள் கணக்கில் நற்பயன்கள் பெருகவேண்டும் என்றே விரும்புகிறேன். நீங்கள் அனுப்பியதெல்லாம் பெற்றுக்கொண்டேன். இப்பொழுது என்னிடம் நிறையவே இருக்கிறது. நீங்கள் அனுப்பியவற்றை எப்பப்பிராதித்துவிடமிருந்து பெற்றுக்கொண்டு நிறைவுற்றிருக்கிறேன். அவை நறுமணம் வீசும் காணிக்கையும் கடவுளுக்கு ஏற்புடைய, உகந்த பலியும் ஆகும். என் கடவுள், கிறிஸ்து இயேசுவின் வழியாய்த் தம் ஒப்பற்ற செல்வத்தைக் கொண்டு, உங்கள் தேவைகள் அனைத்தையும் நிறைவு செய்வார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

ஆண்டவருக்கு அஞ்சி நடப்போர் பேறுபெற்றோர்.
திருப்பாடல் 112: 1-2. 5-6

1 ஆண்டவருக்கு அஞ்சி நடப்போர் பேறுபெற்றோர்; அவர்தம் கட்டளைகளில் அவர்கள் பெருமகிழ்வு அடைவர். 2 அவர்களது வழிமரபு பூவுலகில் வலிமைமிக்கதாய் இருக்கும்; நேர்மையுள்ளோரின் தலைமுறை ஆசிபெறும். பல்லவி

5 மனமிரங்கிக் கடன் கொடுக்கும் மனிதர் நன்மை அடைவர்; அவர்கள் தம் அலுவல்களில் நீதியுடன் செயல்படுவர். 6 எந்நாளும் அவர்கள் அசைவுறார்; நேர்மையுள்ளோர் மக்கள் மனத்தில் என்றும் வாழ்வர். பல்லவி

8யb அவர்கள் நெஞ்சம் நிலையாய் இருக்கும்; அவர்களை அச்சம் மேற்கொள்ளாது. 9 அவர்கள் வாரி வழங்கினர்; ஏழைகளுக்கு ஈந்தனர்; அவர்களது நீதி என்றென்றும் நிலைத்திருக்கும்; அவர்களது வலிமை மாட்சியுடன் மேலோங்கும். பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து செல்வராயிருந்தும் அவருடைய ஏழ்மையினால் நீங்கள் செல்வராகுமாறு உங்களுக்காக ஏழையானார் அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 16: 9-15

அக்காலத்தில் இயேசு தம் சீடர்களுக்குக் கூறியது: ``நான் உங்களுக்குச் சொல்கிறேன்: நேர்மையற்ற செல்வத்தைக் கொண்டு உங்களுக்கு நண்பர்களைத் தேடிக்கொள்ளுங்கள். அது தீரும்பொழுது அவர்கள் உங்களை நிலையான உறைவிடங்களில் ஏற்றுக்கொள்வார்கள். மிகச் சிறியவற்றில் நம்பத் தகுந்தவர் பெரியவற்றிலும் நம்பத் தகுந்தவராய் இருப்பார். மிகச் சிறியவற்றில் நேர்மையற்றவர் பெரியவற்றிலும் நேர்மையற்றவராய் இருப்பார். நேர்மையற்ற செல்வத்தைக் கையாளுவதில் நீங்கள் நம்பத்தகாதவராய் இருந்தால் யார் உங்களை நம்பி உண்மைச் செல்வத்தை ஒப்படைப்பார்? பிறருக்கு உரியவற்றைக் கையாளுவதில் நீங்கள் நம்பத்தகாதவர்களாய்ப் போனால் உங்களுக்கு உரியவற்றை உங்களுக்குக் கொடுப்பவர் யார்? எந்த வீட்டு வேலையாளும் இரு தலைவர்களுக்குப் பணிவிடை செய்ய முடியாது; ஏனெனில், ஒருவரை வெறுத்து மற்றவரிடம் அவர் அன்பு கொள்வார்; அல்லது ஒருவரைச் சார்ந்துகொண்டு மற்றவரைப் புறக்கணிப்பார். நீங்கள் கடவுளுக்கும் செல்வத்துக்கும் பணிவிடை செய்ய முடியாது.'' பண ஆசைமிக்க பரிசேயர் இவற்றையெல்லாம் கேட்டு இயேசுவை ஏளனம் செய்தனர். அவர் அவர்களிடம் கூறியது: ``நீங்கள் உங்களை மக்கள்முன் நேர்மையாளராகக் காட்டிக்கொள்கிறீர்கள். கடவுள் உங்கள் உள்ளங்களை அறிவார். நீங்கள் உங்களை மக்கள்முன் உயர்ந்தவர்களாகக் காட்டிக்கொள்வது கடவுள் பார்வையில் அருவருப்பாகும்.''

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''இயேசு, 'நேர்மையற்ற செல்வத்தைக் கொண்டு உங்களுக்கு நண்பர்களைத் தேடிக் கொள்ளுங்கள். அது தீரும்பொழுது அவர்கள் உங்களை நிலையான உறைவிடங்களில் ஏற்றுக்கொள்வார்கள்' என்றார்'' (லூக்கா 16:9

செல்வம் நிலையானதல்ல என்னும் உண்மையை இயேசு பல இடங்களில் எடுத்துக் கூறுகிறார் (காண்க: மத் 6:19-21; லூக் 12:15). எனவே ''நேர்மையற்ற செல்வம்'' என இயேசு கூறுவதை நாம் இரு பொருள்களில் புரிந்துகொள்ளலாம். இவ்வுலகு சார்ந்த செல்வம் பெரும்பாலும் நேர்மையற்ற வழிகளைப் பயன்படுத்தி சம்பாதிக்கப்படுவது என்பது ஒரு பொருள். இவ்வுலகச் செல்வத்தை மனிதர் நேர்மையற்ற நோக்கத்தோடும் செலவிடுகிறார்கள் என்பது மறுபொருள். எவ்வாறாயினும், இவ்வுலகு சார்ந்த செல்வத்தை மனிதர் பலகாறும் தீய முறைகளில் செலவழித்து வீணடிப்பது நாம் அனுபவத்திலிருந்து அறிகின்ற உண்மை. இதனால் செல்வம் என்பது தன்னிலேயே தீமையானது என இயேசு கூறுவதாக நாம் பொருள் கொள்ளலாகாது. ஏனென்றால் மனிதர் மனித மாண்போடு வாழ்வதற்கு அடிப்படைத் தேவைகள் நிறைவுசெய்யப்பட வேண்டும் என்பது எல்லாரும் ஏற்கின்ற உண்மை. உண்ண உணவும், உடுக்க உடையும் இருக்க இருப்பிடமும் இல்லாத நிலையில் மனித மாண்பு சீரழியவே செய்யும். இந்நிலையிலிருந்து மனிதரை விடுவிக்க வேண்டும் என்பதும் அதற்கு இவ்வுலக செல்வம் துணையாகும் என்பதும் இயேசுவின் போதனையே. ஆக, செல்வம் என்றால் தன்னிலேயே தீமையானது என நாம் கருதாமல், செல்வம் எவ்வாறு ஈட்டப்பட வேண்டும் எனவும், எவ்வாறு பயன்படுத்தப்பட வேண்டும் எனவும் கருதுவது பொருந்தும். இவ்வுலக செல்வங்களைக் கொண்டு ''நண்பர்களைத் தேடிக்கொள்ளுங்கள்'' (லூக் 16:9) என இயேசு கூறுகிறார். நேர்மையற்ற விதத்தில் நடந்த வீட்டுப் பொறுப்பாளர் ''முன்மதியோடு'' செயல்பட்டார் என்றால் (காண்க: லூக் 16:8), இவ்வுலக செல்வங்களைப் பயன்படுத்தும் நாமும் முன்மதியோடு செயல்பட வேண்டும் என இயேசு கற்பிக்கிறார். செல்வத்தைக் கொண்டு நாம் ''நண்பர்களைத் தேடிக் கொள்ள வேண்டும்''. -- நாம் தேட வேண்டிய ''நண்பர்கள்'' யார்? மனித மாண்புக்கு ஏற்ற விதத்தில் வாழ இயலாமல் வறுமையில் வாடுகின்ற மக்களுக்கு நாம் இவ்வுலக செல்வத்தைக் கொண்டு உதவும்போது ''நண்பர்களைத் தேடிக் கொள்கின்றோம்''. இவ்வாறு நாம் செய்கின்ற உதவி நம்மை நிலைவாழ்வுக்கு இட்டுச் செல்லும். இதையே இயேசு ''நிலையான உறைவிடம்'' என்கிறார் (லூக் 16:9). இவ்வுலக செல்வம் நிலையற்றது; ஆனால் நிலையான செல்வம் ஒன்றுளது. அதுவே கடவுளோடு நாம் நிறைவாழ்வில் பங்கேற்கின்ற பேறு. அத்தகைய பேற்றினை நாம் அடைந்திட வேண்டும் என்றால் இவ்வுலக செல்வத்தை ''முன்மதியோடு'' ஈட்டவும் பயன்படுத்தவும் நாம் கற்றுக்கொள்ள வேண்டும். நேர்மையான உழைப்பின் வழி ஈட்டப்படுகின்ற செல்வத்தைக் கொண்டு பிறரன்புச் செயல் புரிகின்றவர்கள் ''நிலையான உறைவிடங்களில் ஏற்றுக்கொள்ளப்படுவார்கள்'' (லூக் 16:9). அதாவது, ''கடவுள் முன்னிலையில் செல்வம் சேர்க்கும்'' மனிதர்கள் இவர்களே (லூக் 12:21). இத்தகையோர் உண்மையிலேயே பேறுபெற்றோர்.

மன்றாட்டு:

இறைவா, நேர்மையான வழியில் நடந்து உண்மையான செல்வத்தை அடைந்திட எங்களுக்கு அருள்தாரும்.