யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





மூன்றாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 30வது வாரம் சனிக்கிழமை
2016-10-29




முதல் வாசகம்

நான் வாழ்ந்தால் அது கிறிஸ்துவுக்காகவே; நான் இறந்தால் அது எனக்கு ஆதாயமே.
திருத்தூதர் பவுல் பிலிப்பியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 1: 18-26

சகோதரர் சகோதரிகளே, எப்படியும் கிறிஸ்து அறிவிக்கப்படுகிறார். இதனால் நான் மகிழ்ச்சியடைகிறேன். ஆம், இனியும் மகிழ்ச்சியடைவேன். இவ்வாறு உங்கள் மன்றாட்டும் இயேசு கிறிஸ்துவினுடைய ஆவியின் துணையும் என் விடுதலைக்கு வழி வகுக்கும் என நான் அறிவேன். என்ன நேர்ந்தாலும் வெட்கமுற மாட்டேன். இன்றும் என்றும், வாழ்விலும் சாவிலும் முழுத் துணிவுடன் கிறிஸ்துவை என் உடலால் பெருமைப்படுத்துவேன். இதுவே என் பேராவல், இதுவே என் எதிர்நோக்கு. ஏனெனில் நான் வாழ்ந்தால் அது கிறிஸ்துவுக்காகவே; நான் இறந்தால் அது எனக்கு ஆதாயமே. எனினும் நான் தொடர்ந்து வாழ்ந்தால் பயனுள்ள பணி செய்ய முடியும். எனவே நான் எதைத் தேர்ந்துகொள்வதென எனக்குத் தெரியவில்லை. இந்த இரண்டுக்கும் இடையே ஓர் இழுபறி நிலையில் உள்ளேன். உயிர் நீத்துக் கிறிஸ்துவோடு இருக்க வேண்டும் என்னும் ஆவல் ஒரு புறம்: இதுவே மிகச் சிறந்தது: ஆனால், இன்னும் வாழவேண்டும் என்பது மற்றொரு புறம்: இது உங்கள் பொருட்டு மிகத் தேவையாய் இருக்கின்றது. நான் உங்களோடு இருப்பதால் நீங்கள் நம்பிக்கையில் வளர்ச்சி பெற்று மகிழ்ச்சியடைவீர்கள். எனவே உங்கள் அனைவரோடும் தொடர்ந்து தங்கியிருப்பேன் என உறுதியாக நம்புகிறேன். ஆகவே, நான் உங்களிடம் மீண்டும் வருவதால், கிறிஸ்து இயேசுவின் உறவில் வாழும் நீங்கள் என் பொருட்டு இன்னும் மிகுதியாகப் பெருமிதம் கொள்வீர்கள்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

: உயிருள்ள இறைவன்மீது என் நெஞ்சம் தாகம் கொண்டுள்ளது.
திருப்பாடல் 42: 1. 2. 4

கலைமான் நீரேடைகளுக்காக ஏங்கித் தவிப்பது போல் கடவுளே! என் நெஞ்சம் உமக்காக ஏங்கித் தவிக்கின்றது. பல்லவி

2 என் நெஞ்சம் கடவுள்மீது, உயிருள்ள இறைவன்மீது தாகம் கொண்டுள்ளது; எப்பொழுது நான் கடவுள் முன்னிலையில் வந்து நிற்கப் போகின்றேன்? பல்லவி

4மக்கள் கூட்டத்தோடு சேர்ந்து பவனியாகக் கடவுளின் இல்லத்திற்குச் சென்றேனே! ஆர்ப்பரிப்பும் நன்றிப் பாடல்களும் முழங்க விழாக் கூட்டத்தில் நடந்தேனே. பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! நான் கனிவும் மனத்தாழ்மையும் உடையவன். ஆகவே என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு என்னிடம் கற்றுக்கொள்ளுங்கள், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 14: 1,7-11

அக்காலத்தில் ஓய்வு நாள் ஒன்றில் இயேசு பரிசேயர் தலைவர் ஒருவருடைய வீட்டிற்கு உணவருந்தச் சென்றிருந்தார். அங்கிருந்தோர் அவரைக் கூர்ந்து கவனித்தனர். விருந்தினர்கள் பந்தியில் முதன்மையான இடங்களைத் தேர்ந்துகொண்டதை நோக்கிய இயேசு அவர்களுக்குக் கூறிய அறிவுரை: ``ஒருவர் உங்களைத் திருமண விருந்துக்கு அழைத்திருந்தால், பந்தியில் முதன்மையான இடத்தில் அமராதீர்கள். ஒருவேளை உங்களை விட மதிப்பிற்குரிய ஒருவரையும் அவர் அழைத்திருக்கலாம். உங்களையும் அவரையும் அழைத்தவர் வந்து உங்களிடத்தில், `இவருக்கு இடத்தை விட்டுக்கொடுங்கள்' என்பார். அப்பொழுது நீங்கள் வெட்கத்தோடு கடைசி இடத்திற்குப் போக வேண்டியிருக்கும். நீங்கள் அழைக்கப்பட்டிருக்கும்போது, போய்க் கடைசி இடத்தில் அமருங்கள். அப்பொழுது உங்களை அழைத்தவர் வந்து உங்களிடம், `நண்பரே, முதல் இடத்திற்கு வாரும்' எனச் சொல்லும் பொழுது உங்களுடன் பந்தியில் அமர்ந்திருப்பவர்கள் யாவருக்கும் முன்பாக நீங்கள் பெருமை அடைவீர்கள். தம்மைத் தாமே உயர்த்துவோர் யாவரும் தாழ்த்தப்பெறுவர்; தம்மைத் தாமே தாழ்த்துவோர் உயர்த்தப்பெறுவர்.''

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''இயேசு...'ஓய்வுநாளில் குணப்படுத்துவது முறையா, இல்லையா?' என்று கேட்டார்'' (லூக்கா 14:3)

ஓய்வு நாளில் இயேசு மக்களுக்கு குணமளித்தார் என்னும் செய்தி நற்செய்தி நூல்களில் பல இடங்களில் உள்ளது (காண்க: யோவான் 5:1-18; மாற்கு 1:21-28; மாற்கு 1:29-31; மாற்கு 3:1-6; யோவான் 9:1-16; லூக்கா 13:10-17; லூக்கா 14:1-6 போன்றவை). ஓய்வு நாளில் என்னென்ன வேலைகள் செய்யலாகாது என்பது பற்றி விரிவான சட்டங்கள் இருந்தன. அவற்றை இயேசு கடைப்பிடிக்கிறாரா இல்லையா என்று அவருடைய எதிரிகள் கூர்ந்து கவனித்துவந்தனர் (காண்க: லூக் 14:1). மக்களுக்கு குணமளிப்பது ஓய்வுநாளை மீறியதாகாது என்பது இயேசுவின் கொள்கை. ஓய்வுநாள் மனிதருக்கேயன்றி மனிதர் ஓய்வுநாளுக்கல்ல என்பது அவருடைய போதனை.

சில சமயங்களில் சட்டங்கள் எதற்காக எழுந்தன என்பதை மனிதர் மறந்துவிடுகின்றனர். சட்டங்கள் வகுக்கப்படும்போது அவை மனிதருக்கு நலம் பயக்கும் என்னும் எதிர்பார்ப்போடுதான் உருவாக்கப்படுகின்றன. கால இட சூழ்நிலைகள் மாறும்போது சட்டங்கள் தங்கள் பொருளை இழந்துவிடுவதுண்டு; அல்லது சட்டத்தின் உட்பொருளை மக்கள் மறந்துபோய்விடுகின்ற ஆபத்து உண்டு. இதை இயேசு நமக்குச் சுட்டிக்காட்டுகிறார். இயேசுவின் செயல்பாடு சட்டத்தை அறவே எதிர்ப்பதாக அமைந்தது என்று சிலர் கூறுவர். இது முற்றிலும் உண்மை என்று கூற முடியாது. இயேசு யூத சமயத்தில் காணப்பட்ட பல சட்டங்களை ஏற்றுக்கொண்டார். எடுத்துக்காட்டாக, திருச்சட்டத்தில் முதன்மையான கட்டளை எது என்று அவரிடம் கேள்வி கேட்கப்பட்டபோது இயேசு இணைச்சட்ட நூலையும் லேவியர் நூலையும் மேற்கோள் காட்டி, ''கடவுளை அன்புசெய்வதும் அடுத்திருப்போரை அன்புசெய்வதும்'' முதன்மையாக கட்டளை என்றுரைத்தார் (காண்க: மத்தேயு 22:34-40). எனவே, இயேசு சட்டத்தில் பல வகைகளும் படிகளும் நிலைகளும் இருப்பதைக் காட்டுகிறார். எச்சட்டம் முதன்மையானது என நிர்ணயிப்பதில் வேறுபாடு எழக்கூடும். ஆனால் சட்டத்தின் உட்பொருளை மறந்துவிட்டால் சட்டமே ஒரு சர்வாதிகாரியாக மாறி மக்களைக் கொடுமைப்படுத்த ஆரம்பித்துவிடும். இத்தகைய கொடுங்கோல் ஆட்சியிலிருந்து நம்மை விடுவிக்க வந்தார் இயேசு.

மன்றாட்டு:

இறைவா, மனிதருக்கு நலம் புரிவதையே நோக்கமாகக் கொண்டு வாழ எங்களுக்கு அருள்தாரும்.