யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





திருவழிபாடு ஆண்டு - C
2016-10-23

(இன்றைய வாசகங்கள்: சீராக்கின் ஞான நூலிலிருந்து வாசகம் 35: 12-14, 16-18 , திருப்பாடல் 34: 1-2. 16-17. 18,22,திருத்தூதர் பவுல் திமொத்தேயுவுக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 4: 6-8, 16-18 ,லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 18: 9-1)




கடவுள் கிறிஸ்துவின் வாயிலாக உலகினரைத் தம்மோடு ஒப்புரவாக்கினார். 
அந்த ஒப்புரவுச் செய்தியை அவரே எங்களிடம் ஒப்படைத்தார். கடவுள் கிறிஸ்துவின் வாயிலாக உலகினரைத் தம்மோடு ஒப்புரவாக்கினார். 
அந்த ஒப்புரவுச் செய்தியை அவரே எங்களிடம் ஒப்படைத்தார். கடவுள் கிறிஸ்துவின் வாயிலாக உலகினரைத் தம்மோடு ஒப்புரவாக்கினார். 
அந்த ஒப்புரவுச் செய்தியை அவரே எங்களிடம் ஒப்படைத்தார்.


திருப்பலி முன்னுரை

செபிப்பவர்களே,

பொதுக்காலத்தின் முப்பதாம் ஞாயிறு திருப்பலியை சிறப்பிக்க உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். ஆண்டவரிடம் வேண்டுதல்களை சமர்ப்பிக்கும்போது நம்மைத் தாழ்த்திக்கொள்ள வேண்டுமென்று இன்றைய திருவழிபாடு நமக்கு கற்பிக்கிறது. நம் பெருமையை நாடாமல், இறைவனின் திருவுளத்தை நிறைவேற்றுவதிலேயே நாம் மகிழ்ந்திருக்க வேண்டும். ஆண்டவர் முன்னிலையில் வரும்போது அவரைப் போற்றவும், அவரது இரக்கத்தை மன்றாடவும் இயேசு நம்மை அழைக்கிறார். கடவுளிடம் பிறரைப் பற்றி குறை கூறுவதையும் அவர் கண்டிக்கிறார். ஆண்டவர் முன்பு நம் தாழ்நிலையை உணர்ந்தவர்களாய், அவரது இரக்கத்தை அனுபவிக்க வரம் வேண்டி இத்திருப்பலியில் பக்தியோடு பங்கேற்போம்.



முதல் வாசகம்

தங்களைத் தாழ்த்துவோரின் வேண்டுதல் முகில்களை ஊடுருவிச் செல்லும்.
சீராக்கின் ஞான நூலிலிருந்து வாசகம் 35: 12-14, 16-18

ஆண்டவர் நடுவராய் இருக்கிறார்; அவரிடம் ஒருதலைச் சார்பு என்பதே கிடையாது. அவர் ஏழைகளுக்கு எதிராய் எவரையும் ஒருதலைச் சார்பாய் ஏற்கமாட்டார்; தீங்கிழைக்கப்பட்டோரின் மன்றாட்டைக் கேட்பார். கைவிடப்பட்டோரின் வேண்டுதலைப் புறக்கணியார். தம்மிடம் முறையிடும் கைம்பெண்களைக் கைவிடார். ஆண்டவரின் விருப்பத்திற்கு ஏற்றவாறு பணிசெய்வோர் ஏற்றுக் கொள்ளப்படுவர். அவர்களுடைய மன்றாட்டு முகில்களை எட்டும். தங்களைத் தாழ்த்துவோரின் வேண்டுதல் முகில்களை ஊடுருவிச் செல்லும்; அது ஆண்டவரை அடையும்வரை அவர்கள் ஆறுதல் அடைவதில்லை. உன்னத இறைவன் சந்திக்க வரும்வரை அவர்கள் நற்பயிற்சியில் தளர்ச்சியடைவதில்லை; அவர் நீதிமான்களுக்குத் தீர்ப்பு வழங்குகிறார்; தம் தீர்ப்பைச் செயல்படுத்துகிறார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

இந்த ஏழை கூவியழைத்தான்; ஆண்டவர் அவனுக்குச் செவிசாய்த்தார்.
திருப்பாடல் 34: 1-2. 16-17. 18,22

ஆண்டவரை நான் எக்காலமும் போற்றுவேன்; அவரது புகழ் எப்பொழுதும் என் நாவில் ஒலிக்கும். 2 நான் ஆண்டவரைப் பற்றிப் பெருமையாகப் பேசுவேன்; எளியோர் இதைக் கேட்டு அக்களிப்பர். பல்லவி

16 ஆண்டவரின் முகமோ தீமை செய்வோர்க்கு எதிராக இருக்கின்றது; அவர், அவர்களின் நினைவே உலகில் அற்றுப்போகச் செய்வார். 17 நீதிமான்கள் மன்றாடும்போது, ஆண்டவர் செவிசாய்க்கின்றார்; அவர்களை அனைத்து இடுக்கண்ணினின்றும் விடுவிக்கின்றார். பல்லவி

18 உடைந்த உள்ளத்தார்க்கு அருகில் ஆண்டவர் இருக்கின்றார்; நைந்த நெஞ்சத்தாரை அவர் காப்பாற்றுகின்றார். 22 ஆண்டவர் தம் ஊழியரின் உயிரை மீட்கின்றார்; அவரிடம் அடைக்கலம் புகும் எவரும் தண்டனை அடையார். பல்லவி

இரண்டாம் வாசகம்

எனக்கென வைக்கப்பட்டிருப்பது நேரிய வாழ்வுக்கான வெற்றி வாகையே.
திருத்தூதர் பவுல் திமொத்தேயுவுக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 4: 6-8, 16-18

அன்பிற்குரியவரே, நான் இப்போதே என்னைப் பலியாகப் படைக்கிறேன். நான் பிரிந்து செல்லவேண்டிய நேரம் வந்துவிட்டது. நான் நல்லதொரு போராட்டத்தில் ஈடுபட்டேன். என் ஓட்டத்தை முடித்துவிட்டேன். விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன். இனி எனக்கென வைக்கப்பட்டிருப்பது நேரிய வாழ்வுக்கான வெற்றி வாகையே. அதை இறுதி நாளில் ஆண்டவர் எனக்குத் தருவார்; நீதியான அந்த நடுவர் எனக்கு மட்டுமல்ல, அவர் தோன்றுவார் என விரும்பிக் காத்திருக்கும் அனைவருக்குமே தருவார். நான் முதன்முறை வழக்காடியபோது எவரும் என் பக்கம் இருக்கவில்லை; எல்லாரும் என்னை விட்டு அகன்றனர். அக்குற்றம் அவர்களைச் சாராதிருப்பதாக. நான் அறிவித்த செய்தி நிறைவுற்று, அனைத்து நாட்டவரும் அதனைக் கேட்க வேண்டுமென்று ஆண்டவர் என் பக்கம் நின்று எனக்கு வலுவூட்டினார்; சிங்கத்தின் வாயிலிருந்தும் என்னை விடுவித்தார். தீங்கு அனைத்திலிருந்தும் அவர் என்னை விடுவித்துத் தம் விண்ணரசில் சேர்த்து எனக்கு மீட்பளிப்பார். அவருக்கே என்றென்றும் மாட்சி உரித்தாகுக! ஆமென்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

- இறைவா உமக்கு நன்றி




நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! கடவுள் கிறிஸ்துவின் வாயிலாக உலகினரைத் தம்மோடு ஒப்புரவாக்கினார். அந்த ஒப்புரவுச் செய்தியை அவரே எங்களிடம் ஒப்படைத்தார் அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 18: 9-1

அக்காலத்தில் தாங்கள் நேர்மையானவர் என்று நம்பி மற்றவர்களை இகழ்ந்து ஒதுக்கும் சிலரைப் பார்த்து இயேசு இந்த உவமையைச் சொன்னார்: ``இருவர் இறைவனிடம் வேண்டக் கோவிலுக்குச் சென்றனர். ஒருவர் பரிசேயர், மற்றவர் வரிதண்டுபவர். பரிசேயர் நின்றுகொண்டு, இவ்வாறு இறைவனிடம் வேண்டினார்: `கடவுளே, நான் கொள்ளையர், நேர்மையற்றோர், விபசாரர் போன்ற மற்ற மக்களைப் போலவோ இந்த வரிதண்டுபவரைப் போலவோ இல்லாதது பற்றி உமக்கு நன்றி செலுத்துகிறேன்; வாரத்தில் இரு முறை நோன்பு இருக் கிறேன்; என் வருவாயில் எல்லாம் பத்திலொரு பங்கைக் கொடுக்கிறேன்.' ஆனால் வரிதண்டுபவர் தொலையில் நின்றுகொண்டு, வானத்தை அண்ணாந்து பார்க்கக்கூடத் துணியாமல் தம் மார்பில் அடித்துக் கொண்டு, `கடவுளே, பாவியாகிய என்மீது இரங்கியருளும்' என்றார். '' இயேசு, ``பரிசேயர் அல்ல, வரிதண்டுபவரே கடவுளுக்கு ஏற்புடையவராகி வீடு திரும்பினார். ஏனெனில் தம்மைத் தாமே உயர்த்துவோர் தாழ்த்தப் பெறுவர்; தம்மைத் தாமே தாழ்த்துவோர் உயர்த்தப் பெறுவர் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்'' என்றார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




விசுவாசிகள் மன்றாட்டுகள்:


விண்ணுலகில் வீற்றிருப்பவரே! உம்மை நோக்கியே என் கண்களை உயர்த்தியுள்ளேன்.


பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

1. அருள் பொழிபவரே இறைவா,

இறைமக்களின் அருள் வாழ்வைப் புதுப்பித்து, திருச்சபையை சீரமைக்கும் அருளை திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவர் மீதும் பொழிந்து வழிநடத்த வேண்டுமென உம்மை மன்றாடுகிறோம்.

2. நீதி வழங்குபவரே இறைவா,

உலக நாடுகளின் தலைவர்கள் அனைவரும் உண்மையிலும் நேர்மையிலும் நிலைத்திருந்து, அனைத்து தரப்பு மக்களுக்கும் சீரிய முறையில் நீதி வழங்க உதவ வேண்டுமென உம்மை மன்றாடுகிறோம்.

3. அன்புத் தந்தையே இறைவா!

உம்முடைய மக்களாகிய நாம் ஏம்முடைய செபவாழ்வையும், பணியையும் உமது விருப்பத்திற்கு ஏற்றதாக அமைத்துக்கொள்ளவும், நாம் தாழ்ச்சியுடையோராய் இருக்கவும்; ஆண்டவரை நான் எக்காலமும் போற்றுவேன் அவரது புகழ் எப்பொழுதும் என் நாவில் ஒலிக்கும். நான் ஆண்டவரைப்பற்றிப் பெருமையாகப் பேசுவேன் என்னும் வார்த்தையை வாழ்வாக்கவும் வேண்டிய மனப்பக்குவத்தை எமக்குத் தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. உதவி செய்பவரே இறைவா,

ஏழைகள், கைம்பெண்கள், தீங்கிழைக்கப்பட்டோர், கைவிடப்பட்டோர், வீடிழந்து நிற்போர், கடும் நோயால் தவிப்போர் அனைவருக்கும் உதவி வழங்க வேண்டுமென உம்மை மன்றாடுகிறோம்.

5. அன்புத் தந்தையே இறைவா!

எம் இளைஞர்களுக்காக உம்மை மன்றாடுகின்றோம். இவர்கள் கடவுளின் பிள்ளைகளாய் நற்செயல் அனைத்தையும் செய்யத் தகுதிபெறவும்,ஞானத்தோடு அனைத்தையும் செய்து முடிக்கவும், தீமைகளிலிருந்து விலகி உம்முடைய சாட்சிகளாய் அவர்கள் வாழ அவாகளை ஆசீர்வதித்து வழிப்படுத்தியருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.


இன்றைய சிந்தனை

''இயேசு, 'இருவர் இறைவனிடம் வேண்டக் கோவிலுக்குச் சென்றனர். ஒருவர் பரிசேயர், மற்றவர் வரிதண்டுபவர்...பரிசேயரல்ல, வரிதண்டுபவரே கடவுளுக்கு ஏற்புடையவராகி வீடு திரும்பினார்' என்றார்'' (லூக்கா 18:10,14)

''பரிசேயரும் வரிதண்டுபவரும் பற்றிய உவமை'' லூக்கா நற்செய்தியில் மட்டுமே உள்ளது. கடவுளை நாம் எவ்வித மனநிலையோடு அணுக வேண்டும் என்பதற்கு இயேசு இக்கதை வழி பதில் தருகின்றார். அடிப்படையில் இருவித அணுகுமுறைகளை மனிதர் கடைப்பிடிக்கின்றனர். சிலர் தாங்கள் சாதித்த காரியங்களைப் பெரிதுபடுத்தி, தங்களையே உயர்ந்தவர்களாக, சிறந்தவர்களாக அனைவர் முன்னிலையிலும் காட்டிக்கொண்டுத் திரிவார்கள். மற்றவர்களோ இவ்வாறு தம்பட்டம் அடிக்காமல் தங்கள் வாழ்வில் குறை உண்டு என்பதை ஏற்றுக்கொள்வார்கள். இந்த இரு அணுகுமுறைகளில் முந்தியது பரிசேயரிடம் காணப்பட்டது; பிந்தியது வரிதண்டுவோரிடம் விளங்கியது. கடவுளை நாடிச் சென்று வேண்டுதல் செய்யும்போது நம்மில் தோன்றுகின்ற மன நிலை பரிசேயரிடம் துலங்கியதை ஒத்திருக்கிறதா அல்லது வரிதண்டுபவரிடம் காணப்பட்டதை ஒத்திருக்கிறதா?

இக்கேள்விக்குப் பதிலளிப்பது அவ்வளவு எளிதல்ல. ஏனென்றால் நம்மிடம் சில வேளைகளில் ஒரு மன நிலையும் வேறு நேரங்களில் மறு மன நிலையும் தெரிவதுண்டு. நான் இதைச் செய்தேன், அதைச் செய்தேன் என்று கடவுளிடம் எடுத்துக் கூறி நாம் பெருமைகொண்டாடுவதில்லையா? அப்போது நம்மிடையே துலங்குவது பரிசேயரிடம் தெரிந்த மன நிலை தானே! இந்த மன நிலை கொண்டோர் கடவுளிடமிருந்து மன்னிப்பை எதிர்பார்க்கவில்லை, கடவுளிடமிருந்து உதவி கோருவதுமில்லை. தங்கள் சொந்த சக்தியால் எதையும் சாதித்துவிடலாம் என்கிற இறுமாப்புத் தான் அங்கே தெரிகிறது. இது சரியான மன நிலையல்ல என இயேசு தெளிவுபடுத்துகிறார். இதற்கு நேர் மாறானது வரிதண்டுபவரின் மன நிலை. அவருடைய தொழில் மக்களால் இகழப்பட்ட ஒன்று. ஏன், பல மக்கள் வரிதண்டுவோரை மனதார வெறுத்தனர். ஆனால் இந்த மனிதர் கடவுளிடம் சென்று தாம் குற்றம் செய்ததை ஏற்கிறார். பிறரை வஞ்சித்ததை ஒத்துக்கொள்கிறார். அதுமட்டுமல்ல. பிறரிடமிருந்து திருடிய பணத்தைத் திருப்பிக் கொடுப்பதாக வாக்களிக்கிறார். அவருடைய வாழ்க்கையில் ஒரு ஆழ்ந்த மாற்றம் ஏற்படுகிறது. கடவுளிடமிருந்து அவர் மன்னிப்புக் கோருகிறார். கடவுளும் அவருடைய மன்றாட்டை ஏற்றுக்கொண்டு அவரைத் தமக்கு ஏற்புடையவராக்குகிறார். நம்மிடம் இந்த மன நிலை துலங்குகிறதா?

மன்றாட்டு:

இறைவா, தாழ்ச்சி நிறைந்த உள்ளத்தை எங்களில் உருவாக்கியருளும்.