யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





மூன்றாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 29வது வாரம் வெள்ளிக்கிழமை
2016-10-21




முதல் வாசகம்

உடலும் ஒன்றே; தூய ஆவியும் ஒன்றே. அவ்வாறே ஆண்டவரும் ஒருவரே; திருமுழுக்கும் ஒன்றே.
திருத்தூதர் பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 4: 1-6

சகோதரர் சகோதரிகளே, ஆண்டவர் பொருட்டுக் கைதியாக இருக்கும் நான் உங்களைக் கெஞ்சிக் கேட்கிறேன்; நீங்கள் பெற்றுக்கொண்ட அழைப்புக்கு ஏற்ப வாழுங்கள். முழுமனத் தாழ்மையோடும் கனிவோடும் பொறுமையோடும் ஒருவரையொருவர் அன்புடன் தாங்கி, அமைதியுடன் இணைந்து வாழ்ந்து, தூய ஆவி அருளும் ஒருமைப்பாட்டைக் காத்துக்கொள்ள முழு முயற்சி செய்யுங்கள். நீங்கள் ஒரே எதிர்நோக்குக் கொண்டு வாழ அழைக்கப்பட்டிருக்கிறீர்கள். ஒரே எதிர்நோக்கு இருப்பது போல, உடலும் ஒன்றே; தூய ஆவியும் ஒன்றே. அவ்வாறே ஆண்டவர் ஒருவரே; நாம் கொண்டுள்ள நம்பிக்கை ஒன்றே; திருமுழுக்கு ஒன்றே. எல்லாருக்கும் கடவுளும் தந்தையுமானவர் ஒருவரே; அவர் எல்லாருக்கும் மேலானவர்; எல்லார் மூலமாகவும் செயலாற்றுபவர்; எல்லாருக்குள்ளும் இருப்பவர்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

கடவுள் முகத்தைத் தேடுவோரின் தலைமுறையினர் இவர்களே.
திருப்பாடல் 24: 1-2. 3-4 5-6

மண்ணுலகும் அதில் நிறைந்துள்ள அனைத்தும் ஆண்டவருடையவை; நிலவுலகும் அதில் வாழ்வனவும் அவருக்கே சொந்தம். 2 ஏனெனில், அவரே கடல்கள் மீது அதற்கு அடித்தளமிட்டார்; ஆறுகள்மீது அதை நிலைநாட்டினவரும் அவரே. பல்லவி

3 ஆண்டவரது மலையில் ஏறத் தகுதியுள்ளவர் யார்? அவரது திருத்தலத்தில் நிற்கக்கூடியவர் யார்? 4யb கறைபடாத கைகளும் மாசற்ற மனமும் உடையவர்; பொய்த் தெய்வங்களை நோக்கித் தம் உள்ளத்தை உயர்த்தாதவர். பல்லவி

5 இவரே ஆண்டவரிடம் ஆசி பெறுவார்; தம் மீட்பராம் கடவுளிடமிருந்து நேர்மையாளர் எனத் தீர்ப்புப் பெறுவார். 6 அவரை நாடுவோரின் தலைமுறையினர் இவர்களே: யாக்கோபின் கடவுளது முகத்தைத் தேடுவோர் இவர்களே. பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் விண்ணரசின் மறைபொருளைக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர். அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 54-59

அக்காலத்தில் இயேசு மக்கள் கூட்டத்தை நோக்கிக் கூறியது: ``மேற்கிலிருந்து மேகம் எழும்புவதை நீங்கள் பார்த்ததும் மழை வரும் என்கிறீர்கள்; அது அப்படியே நடக்கிறது. தெற்கிலிருந்து காற்று அடிக்கும்பொழுது மிகுந்த வெப்பம் உண்டாகும் என்கிறீர்கள்; அதுவும் நடக்கிறது. வெளிவேடக்காரரே, நிலத்தின் தோற்றத்தையும் வானின் தோற்றத்தையும் ஆய்ந்து பார்க்க அறிந்திருக்கும்போது, இக்காலத்தை நீங்கள் ஆய்ந்து பாராமல் இருப்பது எப்படி? நேர்மையானது எதுவென நீங்கள் தீர்மானிக்காமல் இருப்பதேன்? நீங்கள் உங்கள் எதிரியோடு ஆட்சியாளரிடம் போகும்போது, வழியிலேயே உங்கள் வழக்கைத் தீர்த்துக்கொள்ள முயற்சி செய்யுங்கள். இல்லையேல் அவர் உங்களை நடுவரிடம் இழுத்துக்கொண்டு போக, நடுவர் உங்களை நீதிமன்ற அலுவலரிடம் ஒப்புவிப்பார்; நீதிமன்ற அலுவலர் உங்களைச் சிறையிலடைப்பார். கடைசிக் காசு வரை நீங்கள் திருப்பிச் செலுத்தாமல் அங்கிருந்து வெளியேற மாட்டீர்கள் என உங்களுக்குச் சொல்கிறேன்.''

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''வெளிவேடக்காரரே,... இக்காலத்தை நீங்கள் ஆய்ந்து பாராமல் இருப்பது எப்படி?'' (லூக்கா 12:56)

இயேசு இறையாட்சி பற்றிப் போதித்த வேளையில் அவர் வழியாகக் கடவுள் பேசுகின்றார் என்ற உண்மையைச் சிலர் ஏற்றனர், வேறு சிலர் ஏற்கவில்லை. இயற்கையில் தோன்றுகின்ற அடையாளங்கள் வழியாகப் பல உண்மைகளை அறியக் கற்றுக்கொண்ட மனிதர் கடவுளிடமிருந்து வருகின்ற அடையாளங்களை ஏன் புரிந்துகொள்ளவில்லை என்று இயேசு கேட்டார். வானம் சிவந்தால் கால நிலை நன்றாக உள்ளது எனவும், காற்று மந்தாரமாக இருந்தால் இன்று காற்றுடன் கூடிய மழை இருக்கும் எனவும் (காண்க: மத்தேயு 16:2-3) அறிந்துகொள்ள மனிதருக்கு இயலும் என்றால் கடவுளாட்சி பற்றிய அடையாளங்களின் பொருளை அவர்கள் அறியத் தவறியது ஏன்? தம்மை மனிதருக்கு வெளிப்படுத்துகின்ற கடவுள் பல அடையாளங்கள் வழியாகத் தம் உடனிருப்பையும் வல்லமையையும் நமக்கு அறிவிக்கின்றார். கடவுளின் வெளிப்பாடு இன்றைய உலகிலும் தொடர்கிறது. இந்த உண்மையை 2ஆம் வத்திக்கான் சங்கம் எடுத்துரைக்கிறது. இயேசுவின் நற்செய்தியை ஒவ்வொரு தலைமுறையினரும் நன்முறையில் புரிந்து செயல்பட வேண்டும் என்றால் ''காலத்தின் குறிகளை'' நாம் கண்டுகொண்டு அவற்றின் வழியாக நம்மோடு பேசுகின்ற கடவுளின் குரலுக்குச் செவிமடுக்க வேண்டும். ''காலத்தின் குறிகளைத் துளாவி அறிந்து, நற்செய்தியின் ஒளியில் அவற்றின் பொருளை எல்லாக் காலக் கட்டங்களிலும் விளக்கி உரைப்பது திருச்சபையின் கடமையாகும்'' (2ஆம் வத்திக்கான் சங்கம், ''இன்றைய உலகில் திருச்சபை'', எண் 4).

நாம் வாழ்கின்ற காலத்தின் அறிகுறிகள் பல உள்ளன: விரைவாக நிகழ்கின்ற மாற்றங்கள், மனிதர் அனைவரும் சமமே என்னும் உண்மையை ஏற்றாலும் இன்றைய உலகில் நிலவுகின்ற ஏற்றத்தாழ்வுகள், அறிவியல் முன்னேற்றம் ஏற்பட்டாலும் அறநெறியில் மனிதர் பின்தங்கியிருத்தல் போன்றவற்றை நாம் இன்று காண்கின்றோம். இந்த அறிகுறிகள் நமக்கு உணர்த்துவது என்ன? கடவுளின் ஆட்சி இவ்வுலகில் வரவேண்டும் என்றால் இங்கு ஏற்றத்தாழ்வுகள் மறைய வேண்டும்; அறிவில் வளர்கின்ற மனித குலம் அறநெறி உணர்வோடு செயல்பட வேண்டும். இயேசு நம்மிடம் கேட்கின்ற கேள்வி இது: ''இக்காலத்தை நீங்கள் ஆய்ந்து பாராமல் இருப்பது எப்படி?''

மன்றாட்டு:

இறைவா, எங்களோடு தொடர்ந்து உறவாடுகின்ற உம்மை எங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்விலும் கண்டுகொள்ள அருள்தாரும்.