யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





மூன்றாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 28வது வாரம் வியாழக்கிழமை
2016-10-13




முதல் வாசகம்

உலகம் தோன்றுவதற்கு முன்பே கடவுள் நம்மைக் கிறிஸ்து வழியாகத் தேர்ந்தெடுத்தார்.
திருத்தூதர் பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 1: 1-10

இயேசு கிறிஸ்துவோடு இணைந்து நம்பிக்கை கொண்டு வாழும் எபேசு நகர இறைமக்களுக்கு, கடவுளின் திருவுளத்தால் திருத்தூதனாயிருக்கும் பவுல் எழுதுவது: நம் தந்தையாம் கடவுளிடமிருந்தும் ஆண்டவராம் இயேசு கிறிஸ்துவிடமிருந்தும் உங்களுக்கு அருளும் அமைதியும் உரித்தாகுக! நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் தந்தையும் கடவுளுமானவர் போற்றி! அவர் விண்ணகம் சார்ந்த, ஆவிக்குரிய ஆசி அனைத்தையும் கிறிஸ்து வழியாக நம்மீது பொழிந்துள்ளார். நாம் தூயோராகவும், மாசற்றோராகவும் தம் திருமுன் விளங்கும்படி, உலகம் தோன்றுவதற்கு முன்பே கடவுள் நம்மைக் கிறிஸ்து வழியாகத் தேர்ந்தெடுத்தார். அவர் நம்மை இயேசு கிறிஸ்துவின் மூலம் தமக்குச் சொந்தமான பிள்ளைகளாக்கிக் கொள்ள அன்பினால் முன்குறித்து வைத்தார். இதுவே அவரது விருப்பம்; இதுவே அவரது திருவுளம். இவ்வாறு தம் அன்பார்ந்த மகன் வழியாக நம்மீது ஒப்புயர்வற்ற அருளைப் பொழிந்தருளியதால் அவரது புகழைப் பாடுகிறோம். கிறிஸ்து இரத்தம் சிந்தி தம் அருள்வளத்திற்கு ஏற்ப நமக்கு மீட்பு அளித்துள்ளார்; இம்மீட்பால் குற்றங்களிலிருந்து நாம் மன்னிப்புப் பெறுகிறோம். அந்த அருளை அவர் நம்மில் பெருகச் செய்து, அனைத்து ஞானத்தையும் அறிவுத் திறனையும் தந்துள்ளார். அவர் தமது திருவுளத்தின் மறைபொருளை நமக்குத் தெரியப்படுத்தியுள்ளார். இது கிறிஸ்து வழியாகக் கடவுள் விரும்பிச் செய்த தீர்மானம். கால நிறைவில் விண்ணிலுள்ளவை, மண்ணிலுள்ளவை அனைத்தையுமே கிறிஸ்துவின் தலைமையில் ஒன்று சேர்க்கவேண்டும் என்ற திட்டமே அம்மறைபொருள்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

ஆண்டவர் தம் மீட்பை அறிவித்தார்.
திருப்பாடல் 98: 1. 2-3-4 5-6

ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்; ஏனெனில், அவர் வியத்தகு செயல்கள் புரிந்துள்ளார். அவருடைய வலக்கரமும் புனிதமிகு புயமும் அவருக்கு வெற்றியை அளித்துள்ளன. பல்லவி

2 ஆண்டவர் தம் மீட்பை அறிவித்தார்; பிற இனத்தார் கண்முன்னே தம் நீதியை வெளிப்படுத்தினார். 3ய இஸ்ரயேல் வீட்டாருக்கு வாக்களிக்கப்பட்ட தமது பேரன்பையும் உறுதிமொழியையும் அவர் நினைவுகூர்ந்தார். பல்லவி

3b உலகெங்குமுள அனைவரும் நம் கடவுள் அருளிய விடுதலையைக் கண்டனர். 4 உலகெங்கும் வாழ்வோரே! அனைவரும் ஆண்டவரை ஆர்ப்பரித்துப் பாடுங்கள்! மகிழ்ச்சியுடன் ஆர்ப்பரித்துப் புகழ்ந்தேத்துங்கள். பல்லவி

5 யாழினை மீட்டி ஆண்டவரைப் புகழ்ந்தேத்துங்கள்; யாழினை மீட்டி இனிய குரலில் அவரை வாழ்த்திப் பாடுங்கள். 6 ஆண்டவராகிய அரசரின் முன்னே எக்காளம் முழங்கி கொம்பினை ஊதி ஆர்ப்பரித்துப் பாடுங்கள். பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவர் கூறுகிறார்: வழியும் உண்மையும் வாழ்வும் நானே. என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 47-54

அக்காலத்தில் இயேசு கூறியது: ``ஐயோ! உங்களுக்குக் கேடு! ஏனெனில் நீங்கள் இறைவாக்கினருக்கு நினைவுச் சின்னங்கள் எழுப்புகிறீர்கள். ஆனால் அவர்களைக் கொலை செய்தவர்கள் உங்கள் மூதாதையர்களே. உங்கள் மூதாதையரின் செயல்களுக்கு நீங்கள் சாட்சிகளாய் இருக்கிறீர்கள்; அவற்றுக்கு உடன்பட்டும் இருக்கிறீர்கள். அவர்கள் கொலை செய்தார்கள்; நீங்கள் நினைவுச் சின்னம் எழுப்புகிறீர்கள். இதை முன்னிட்டே கடவுளின் ஞானம் இவ்வாறு கூறுகிறது: நான் அவர்களிடம் இறைவாக்கினரையும் திருத்தூதரையும் அனுப்புவேன். அவர்களுள் சிலரைக் கொலை செய்வார்கள்; சிலரைத் துன்புறுத்துவார்கள். ஆபேலின் இரத்தம் முதல், பலிபீடத்திற்கும் தூயகத்திற்கும் நடுவே சிந்தப்பட்ட சக்கரியாவின் இரத்தம் வரை, உலகம் தோன்றியதிலிருந்து சிந்தப்பட்ட இறைவாக்கினர் அனைவரின் இரத்தத்திற்காக இந்தத் தலைமுறையினரிடம் கணக்குக் கேட்கப்படும். ஆம், நான் உங்களுக்குச் சொல்கிறேன், இந்தத் தலைமுறையினரிடம் கணக்குக் கேட்கப்படும். ஐயோ! திருச்சட்ட அறிஞரே, உங்களுக்குக் கேடு! ஏனெனில் அறிவுக் களஞ்சியத்தின் திறவுகோலை நீங்கள் எடுத்துக்கொண்டீர்கள். நீங்களும் நுழைவதில்லை; நுழைவோரையும் தடுக்கிறீர்கள்.'' இயேசு அங்கிருந்து புறப்பட்டபோது மறைநூல் அறிஞரும் பரிசேயரும் பகைமை உணர்வு மிகுந்தவராய் அவரது பேச்சில் அவரைச் சிக்கவைக்குமாறு பல கேள்விகளைக் கேட்டனர்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''இயேசு, 'ஐயோ! உங்களுக்குக் கேடு! ஏனெனில் நீங்கள் இறைவாக்கினருக்கு நினைவுச் சின்னங்கள் எழுப்புகிறீர்கள். ஆனால் அவர்களைக் கொலைசெய்தவர்கள் உங்கள் மூதாதையர்களே' என்றார்'' (லூக்கா 11:57)

தனி மனிதரும் சமூகங்களும் எத்தகைய வாழ்க்கை நெறியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதை அவர்களுக்குக் கடவுளின் பெயரால் உணர்த்தியவர்கள் இறைவாக்கினர்கள். அவர்கள் ஒருவிதத்தில் மனித குலத்தின் ''மனச் சான்றாக'' விளங்குபவர்கள். இஸ்ரயேல் மக்களின் வரலாற்றில் இறைவாக்கினர் வழியாகக் கடவுள் பேசினார். அதுபோலவே இன்றைய உலகிலும் மனிதரின் மனச்சான்றைத் தொட்டுப் பேசிய மகான்கள் வாழ்ந்துள்ளார்கள். தீண்டாமை ஒழிய வேண்டும் என்று பாடுபட்ட காந்தியடிகள், கருப்பரானாலும் வெள்ளையரானாலும் எல்லாருமே மனிதர் என்னும் முறையில் சம உரிமை கொண்டவர்களே என காந்தி வழியில் நின்று போராடிய மார்ட்டின் லூத்தர் கிங், ஏழையரின் முகத்தில் இயேசுவைக் கண்ட அன்னை தெரேசா போன்றோர் இக்கால இறைவாக்கினர்கள். சாவுக்குப் பிறகும் அவர்கள் நம்மிடையே வாழ்ந்துவருகிறார்கள் எனலாம். ஆனால் கடந்த கால இறைவாக்கினரைப் போற்றிவிட்டு, அவர்கள் கற்பித்ததைக் காற்றில் விட்டுவிட்டால் நமக்கு என்ன பயன்?

இந்த உண்மையைத்தான் இயேசு உணர்த்தினார். இறைவாக்கினர் உயிர் வாழ்ந்த போது அவர்களுடைய போதனையை ஏற்காமல் அவர்களைத் துன்புறுத்திக் கொன்றுபோட்டார்கள்; அத்தகைய கொடிய செயலைப் புரிந்தவர்களின் வாரிசுகளாக வந்தவர்களோ முற்காலத்தில் இகழப்பட்ட இறைவாக்கினர்களுக்கு நினைவுச் சின்னங்கள் எழுப்புகிறார்கள். இந்த முரண்பாட்டை இயேசு சுட்டிக்காட்டுகிறார். இன்றும்கூட, காந்தியடிகளின் சிலைகளுக்குத் தவறாமல் மாலை அணிவிக்கிறவர்கள் காந்தி வழங்கிய போதனையைக் காற்றில் பறக்க விடுவதை நாம் காணவில்லையா? சடங்குமுறைக்காகத் தலைவர்களுக்கு மரியாதை செலுத்துபவர்கள் அத்தலைவர்கள் காட்டிய நல்வழியை விட்டு விலகிச் செல்வதில்லையா? இந்த முரண்பாடு நம்மோடு இருப்பதை நாம் கருத வேண்டும். இயேசு காட்டிய வழியில் நடப்பதற்கு மாறாக, அவரைப் பெயரளவில் போற்றி, வாயாரப் புகழ்ந்து பாடுவதோடு நின்றுவிடாமல் இறைவார்த்தையைச் செயல்படுத்துவோராக நாம் வாழ்ந்திட வேண்டும்.

மன்றாட்டு:

இறைவா, உம் சொற்படி நாங்கள் வாழ்ந்திட அருள்தாரும்.