யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





மூன்றாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 25வது வாரம் சனிக்கிழமை
2016-09-24




முதல் வாசகம்

கடவுள் தந்த உயிர் அவரிடமே திரும்பு முன் உன்னைப் படைத்தவரை உள்ளத்தில் நினை.
சபை உரையாளர் நூலிலிருந்து வாசகம் 11: 9 -12: 8

இளையோரே! இளமைப் பருவம் மகிழ்ச்சியோடு இருப்பதற்கே. இளமையின் நாள்களில் உள்ளக் களிப்புடன் இருங்கள். மனம் விரும்புவதைச் செய்யுங்கள்; கண்களின் நாட்டத்தை நிறைவேற்றுங்கள். ஆனால், நீங்கள் செய்கிற ஒவ்வொரு செயலுக்கும் உரிய தீர்ப்பைக் கடவுள் வழங்குவார் என்பதை மறவாதீர்கள். மனக் கவலையை ஒழியுங்கள். உடலுக்கு ஊறு வராதபடி காத்துக் கொள்ளுங்கள்; குழந்தைப் பருவமும் இளமையும் மறையக் கூடியவையே. ஆகையால், உன்னைப் படைத்தவரை உன் இளமைப் பருவத்தில் மறவாதே. ``வாழ்க்கை எனக்கு இன்பம் தரவில்லையே'' என்று நீ சொல்லக் கூடிய துயர நாள்களும் ஆண்டுகளும் வருமுன் அவரை உள்ளத்திலே நினை. அதாவது, கதிரவன், பகலொளி, நிலா, விண்மீன்கள் ஆகியவை உனக்கு மங்கலாய்த் தெரியுமுன்னும், மழைக்குப்பின் மேகங்கள் இருண்டு வருவதுபோலத் தோன்றுமுன்னும், வீட்டுக் காவலர் நடுக்கங்கொள்ள, வலியோர் தளர்வுறுமுன்னும், அரைப்போர் மிகச் சிலராகித் தம் வேலையை நிறுத்திக்கொள்ள, பலகணி வழியாகப் பார்ப்போர் ஒளி இழந்து போகுமுன்னும், தெருச் சந்தடி கேளாவண்ணம் கதவுகள் அடைத்துக் கொள்ள, சிட்டுக்குருவியின் கீச்சொலியும் உறக்கத்தைக் கலைக்க, இன்னிசைக் கருவி இசைக்கும் மகளிர் அனைவரும் ஓய்ந்து போகுமுன்னும், உன்னைப் படைத்தவரை உள்ளத்தில் நினை. மேட்டைக் கண்டு அச்சங்கொண்டு தெருவில் நடப்பதை நினைத்துத் திகில் கொள்ளுமுன்னும், வாதுமை மரம் பூப்பூக்குமுன்னும், வெட்டுக்கிளியைப் போல நடை தட்டுத்தடுமாற, ஆசையெல்லாம் அற்றுப்போகுமுன்னும், உற்றார் வீதியில் அழுது புலம்ப நீ முடிவற்ற ஓய்வுக்குச் செல்லுமுன்னும், உன்னைப் படைத்தவரை உள்ளத்தில் நினை; வெள்ளிக் கயிறு அறுந்து, பொன் விளக்கு கீழே விழுந்து உடைவதற்கு முன்னும், குளத்தருகில் குடம் உடைந்து நொறுங்க, கிணற்றருகில் உருளை உடைந்து விழுமுன்னும், மண்ணினின்று வந்த உடல் மண்ணுக்கே திரும்பு முன்னும், கடவுள் தந்த உயிர் அவரிடமே திரும்புமுன்னும் உன்னைப் படைத்தவரை உள்ளத்தில் நினை. வீண், முற்றிலும் வீண் என்கிறார் சபைஉரையாளர்; எல்லாமே வீண்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

என் தலைவரே! தலைமுறைதோறும் நீரே எங்கள் புகலிடம்.
திருப்பாடல் 90: 3-4. 5-6. 12-13. 14,17

3 மனிதரைப் புழுதிக்குத் திரும்பிடச் செய்கின்றீர்; `மானிடரே! மீண்டும் புழுதியாகுங்கள்' என்கின்றீர். 4 ஏனெனில், ஆயிரம் ஆண்டுகள், உம் பார்வையில் கடந்துபோன நேற்றைய நாள் போலவும் இரவின் ஒரு சாமம் போலவும் உள்ளன. பல்லவி

5 வெள்ளமென மானிடரை வாரிக்கொண்டு செல்கின்றீர்; அவர்கள் வைகறையில் முளைத்தெழும் புல்லுக்கு ஒப்பாவர்; 6 அது காலையில் தளிர்த்துப் பூத்துக் குலுங்கும்; மாலையில் வாடிக் காய்ந்துபோகும். பல்லவி

12 எங்கள் வாழ்நாள்களைக் கணிக்க எங்களுக்குக் கற்பியும்; அப்பொழுது ஞானமிகு உள்ளத்தைப் பெற்றிடுவோம். 13 ஆண்டவரே, திரும்பி வாரும்; எத்துணைக் காலம் இந்நிலை? உம் ஊழியருக்கு இரக்கம் காட்டும். பல்லவி

14 காலைதோறும் உமது பேரன்பால் எங்களுக்கு நிறைவளியும்; அப்பொழுது வாழ்நாளெல்லாம் நாங்கள் களிகூர்ந்து மகிழ்வோம். 17 எம் கடவுளாம் தலைவரின் இன்னருள் எம்மீது தங்குவதாக! நாங்கள் செய்பவற்றில் எங்களுக்கு வெற்றி தாரும்! ஆம், நாங்கள் செய்பவற்றில் வெற்றியருளும்! பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! நம் மீட்பராகிய கிறிஸ்து இயேசு சாவை அழித்து, அழியா வாழ்வை நற்செய்தியின் வழியாக ஒளிரச் செய்தார். அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 43-45

அக்காலத்தில் இயேசு செய்த யாவற்றையும் பார்த்து அனைவரும் வியப்படைந்தனர். அவர் தம் சீடர்களிடம், ``நான் சொல்வதைக் கேட்டு மனத்தில் வைத்துக் கொள்ளுங்கள். மானிட மகன் மக்களின் கையில் ஒப்புவிக்கப்பட இருக்கிறார்'' என்றார். அவர்கள் அவர் சொன்னதைப் புரிந்துகொள்ளவில்லை. அவர்கள் அதை உணர்ந்துகொள்ளாதவாறு அது அவர்களுக்கு மறைவாயிருந்தது. ஆயினும் அவர் சொன்னதுபற்றி அவரிடம் விளக்கம் கேட்க அஞ்சினார்கள்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''சீடர்கள் இயேசு சொன்னதைப் புரிந்துகொள்ளவில்லை'' (லூக்கா 9:43)

இயேசு நாம் வாழ்கின்ற இருபத்தோராம் நூற்றாண்டில் நம் நடுவே வந்து கடவுளாட்சி பற்றி அறிவிக்கிறார் என வைத்துக்கொள்வோம். அவரை நாம் நம்புவோமா அல்லது அவரைச் சந்தேகக் கண்களோடு பார்ப்போமா? அவர் நமக்கு அறிவிப்பதை நாம் உடனடியாகப் புரிந்துகொள்வோமா? ஒருவேளை நம்மில் சிலர் அவரை முகமலர்ந்து வரவேற்கக் கூடும். வேறு சிலர் அவர் கூறுவது ஏற்கத் தகாதது என ஒதுக்கக் கூடும். இன்னும் சிலர் அவர் கூறுவதைப் புரிந்துகொள்ள முயன்றாலும் அவர் வழங்கும் செய்தி தங்கள் அறிவுக்கு அப்பாற்பட்டதாக உள்ளது என நினைக்கக் கூடும். இயேசுவைப் பின்சென்ற சீடர்களுக்கு ஏற்பட்டதும் இத்தகைய அனுபவமே. அவர்களுடைய எதிர்பார்ப்புகளுக்கு ஏற்றதாக இயேசு செயல்படாத நேரங்கள் இருந்தன. அப்போது சீடர்கள் இயேசு கூறியதைப் புரிந்துகொள்ளாமல் திணறினார்கள்.

இயேசு கடவுளின் பெயரால் வந்திருக்கிறார் என்பதைச் சீடர் ஏற்றுக்கொண்டாலும் அவர் வெற்றிவாகை சூடுகின்ற ஒரு மெசியாவாக இல்லாமல் துன்பங்கள் அனுபவித்து, ஒரு குற்றவாளிபோலக் கொலைத் தண்டனைக்கு ஆளாகப் போகிறார் என்பதைக் கனவிலும் எண்ணிப்பார்க்கவில்லை. எனவே, இயேசு தாம் அனுபவிக்கப் போகிற துன்பங்கள், சாவு பற்றிப் பேசிய போதெல்லாம் சீடர்களின் அறிவுக்கு அது எட்டவில்லை. சிலுவையில் அறையப்பட்டு அவமானச் சாவை இயேசு ஏன் ஏற்றார் என்பது இன்றைக்கும் புரிந்துகொள்ள இயலாப் புதிராகவே உள்ளது. இங்கேதான் கடவுளின் வல்லமை தீமையின் அடக்குமுறைக்குமுன் மண்டியிடுவதுபோல நமக்குத் தோற்றமளிக்கிறது. மனித மதிப்பீடுகளின்படி பார்த்தால் இயேசுவின் சாவு ஒரு பெரும் தோல்வியில்தான் முடிந்தது. ஆனால் கடவுளின் பார்வையில் சிலுவை ஒரு வெற்றியின் சின்னம். கடவுளின் அன்பு மனித அறிவின் எல்லைகளுக்கு அப்பாற்பட்டது என்பதை இயேசுவின் சிலுவைச் சாவு சுட்டிக் காட்டுகிறது. சிலுவையில் தொங்கி இறந்த இயேசு சாவின்மீது வெற்றிகொண்டு உயிர்பெற்றெழுந்தார் என்பதை அனுபவ முறையில் சீடர் எப்போது உணர்ந்தார்களே அப்போதுதான் அவர்கள் சிலுவையின் பொருளை ஓரளவாவது புரிந்துகொள்ளத் தொடங்கினார்கள். இன்று வாழ்கின்ற நமக்கும் சிலுவை பற்றிய அறிவு ஆழப்பட வேண்டும். கடவுளின் அன்பு நம்மை வழிநடத்துகிறது என நாம் அனுபவத்தில் உணர்ந்தால் சிலுவையின் பொருளை நாம் ஓரளவாவது புரிந்துகொள்வோம்.

மன்றாட்டு:

இறைவா, சிலுவைச் சாவின் வழியாக இயேசு எங்களுக்குக் கற்பித்த பாடத்தை நாங்கள் ஒவ்வொரு நாளும் கற்று அறிந்திட எங்களுக்கு அருள்தாரும்.