யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





மூன்றாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 25வது வாரம் வியாழக்கிழமை
2016-09-22




முதல் வாசகம்

வீண், முற்றிலும் வீண், என்கிறார்
சபை உரையாளர் நூலிலிருந்து வாசகம் 1: 2-11

வீண், முற்றிலும் வீண், என்கிறார் சபையுரையாளர்; வீண், முற்றிலும் வீண், எல்லாமே வீண். மனிதர் தம் வாழ்நாள் முழுவதும் பாடுபட்டு உழைக்கின்றனர்; ஆனால், அவர்கள் உழைப்பினால் பெறும் பயன் என்ன? ஒரு தலைமுறை மறைகின்றது; மறு தலைமுறை தோன்றுகின்றது; உலகமோ மாறாது என்றும் நிலைத்திருக்கின்றது. ஞாயிறு தோன்றுகின்றது; ஞாயிறும் மறைகின்றது. பிறகு தன் இடத்திற்கு விரைந்து சென்று மீண்டும் தோன்றுகின்றது. தெற்கு நோக்கிக் காற்று வீசுகின்றது; பிறகு வடக்கு நோக்கித் திரும்புகின்றது. இப்படிச் சுழன்று சுழன்று வீசித் தன் இடத்திற்குத் திரும்புகின்றது. எல்லா ஆறுகளும் ஓடிக் கடலோடு கலக்கின்றன; எனினும், அவை ஒருபோதும் கடலை நிரப்புவதில்லை; மீண்டும் ஓடுவதற்காக உற்பத்தியான இடத்திற்கே திரும்புகின்றன. அனைத்தும் சலிப்பையே தருகின்றன; அதைச் சொற்களால் எடுத்துரைக்க இயலாது. எவ்வளவு பார்த்தாலும் கண்ணின் ஆவல் தீர்வதில்லை; எவ்வளவு கேட்டாலும் காதின் வேட்கை தணிவதில்லை. முன்பு இருந்ததே பின்பும் இருக்கும்; முன்பு நிகழ்ந்ததே பிறகும் நிகழும். புதியது என்று உலகில் எதுவுமே இல்லை. ஏதேனும் ஒன்றைப் பற்றி, `இதோ, இது புதியது' என்று சொல்லக் கூடுமா? இல்லை. அது ஏற்கெனவே, நமது காலத்திற்கு முன்பே, பல்லாயிரம் ஆண்டுகளாக இருப்பதாயிற்றே! முற்காலத்தவரைப் பற்றிய நினைவு இப்போது யாருக்கும் இல்லை; அவ்வாறே, வரும் காலத்தவருக்கும் தமக்கு முந்திய காலத்தவரைப் பற்றிய நினைவு இருக்கப் போவதில்லை

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

என் தலைவரே! தலைமுறைதோறும் நீரே எங்கள் புகலிடம்.
திருப்பாடல் 90: 3-4. 5-6. 12-13. 14, 17

மனிதரைப் புழுதிக்குத் திரும்பிடச் செய்கின்றீர்; `மானிடரே! மீண்டும் புழுதியாகுங்கள்' என்கின்றீர். 4 ஏனெனில், ஆயிரம் ஆண்டுகள், உம் பார்வையில் கடந்து போன நேற்றைய நாள் போலவும் இரவின் ஒரு சாமம் போலவும் உள்ளன. -பல்லவி

5 வெள்ளமென மானிடரை வாரிக்கொண்டு செல்கின்றீர்; அவர்கள் வைகறையில் முளைத்தெழும் புல்லுக்கு ஒப்பாவர்; 6 அது காலையில் தளிர்த்துப் பூத்துக் குலுங்கும்; மாலையில் வாடிக் காய்ந்துபோகும். -பல்லவி

12 எங்கள் வாழ்நாள்களைக் கணிக்க எங்களுக்குக் கற்பியும்; அப்பொழுது ஞானமிகு உள்ளத்தைப் பெற்றிடுவோம். 13 ஆண்டவரே, திரும்பி வாரும்; எத்துணைக் காலம் இந்நிலை? உம் ஊழியருக்கு இரக்கம் காட்டும். -பல்லவி

14 காலைதோறும் உமது பேரன்பால் எங்களுக்கு நிறைவளியும்; அப்பொழுது வாழ்நாளெல்லாம் நாங்கள் களிகூர்ந்து மகிழ்வோம். 17 எம் கடவுளாம் தலைவரின் இன்னருள் எம்மீது தங்குவதாக! நாங்கள் செய்பவற்றில் எங்களுக்கு வெற்றி தாரும்! ஆம், நாங்கள் செய்பவற்றில் வெற்றியருளும்! -பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! வழியும் உண்மையும் வாழ்வும் நானே. என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை. அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 7-9

அக்காலத்தில் நிகழ்ந்தவற்றை எல்லாம் குறுநில மன்னன் ஏரோது கேள்வியுற்று மனம் குழம்பினான். ஏனெனில் சிலர், ``இறந்த யோவான் உயிருடன் எழுப்பப்பட்டார்'' என்றனர். வேறு சிலர், ``எலியா தோன்றியிருக்கிறார்'' என்றனர். மற்றும் சிலர், ``முற்காலத்து இறைவாக்கினருள் ஒருவர் உயிர்த்தெழுந்துள்ளார்'' என்றனர். ஏரோது, ``யோவானின் தலையை நான் வெட்டச் செய்தேனே! இவர் யாரோ? இவரைப் பற்றி இவ்வாறெல்லாம் கேள்விப்படுகிறேனே!'' என்று சொல்லி இயேசுவைக் காண வாய்ப்புத் தேடிக்கொண்டிருந்தான்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''ஏரோது இயேசுவைக் காண வாய்ப்புத் தேடிக் கொண்டிருந்தான்'' (லூக்கா 9:9)

இங்கே வருகின்ற ஏரோது வரலாற்றில் ''பெரிய ஏரோது'' என அழைக்கப்படுகின்ற மன்னன் அல்ல. மாறாக, அந்த மன்னனின் ஒரு மகனாகிய ''அந்திப்பா'' என்பவன். இவன் ஒரு ''குறுநில மன்னன்'' என லூக்கா குறிப்பிடுகிறார். பெரிய ஏரோதின் சாவுக்குப் பின் அவனுடைய அரசு பிளவுண்டது. அதில் கலிலேயா மற்றும் பெரேயா அடங்கிய பகுதி அந்திப்பாவுக்கு அளிக்கப்பட்டது. கலிலேயாவில்தான் இயேசுவின் பணி பெரும்பாலும் நிகழ்ந்தது. அந்திப்பா தன் ஒன்றுவிட்ட சகோதரனான பிலிப்புவின் மனைவியைத் தன் மனைவியாக்கிக் கொண்டதைத் திருமுழுக்கு யோவான் கண்டித்தார். எனவே, அவன் அவரைக் கொன்றுபோட்டான். இயேசு மக்களுக்குக் கடவுளின் பெயரால் போதிக்கிறார் எனவும் புதுமைகள் பல நிகழ்த்துகிறார் எனவும் கேள்விப்பட்ட அந்திப்பா ஏரோது ''இயேசுவைக் காண வாய்ப்புத் தேடிக் கொண்டிருந்தான்'' (லூக் 9:9).

இயேசுவைப் பற்றிக் கேள்விப்பட்ட பல மக்கள் அவரைக் ''காண'' விரும்பினார்கள். ஏரோதுவும் அவரைக் ''காண'' விரும்பினான். ஆனால் ஏரோது நேர்மையான உள்ளத்தோடு இயேசுவைக் காண விரும்பவில்லை. ஏற்கெனவே திருமுழுக்கு யோவானைக் கொன்றுபோட்ட ஏரோது இப்போது இயேசுவையும் ''காண'' விரும்பினான் என்றால் அது நல்ல எண்ணத்தோடு நிகழ்ந்ததல்ல என நாம் அறிந்துகொள்ளலாம். இயேசுவும் திருமுழுக்கு யோவானைப் போல ''கடவுளின் ஆட்சி'' பற்றிப் பேசினார். மக்கள் பலர் அவரை நாடிச் சென்றனர். ஆக, இயேசுவும் தனக்கு ஓர் எதிரியாக மாறிவிடுவாரோ என ஏரோது ஐயமுற்றதற்கு ஆதாரம் இருந்தது. எனவே, ஏரோது இயேசுவையும் ஒழித்துக் கட்டலாமா என சிந்தித்திருக்க வேண்டும். இன்று வாழ்கின்ற நாம் இயேசுவைத் தேடுகின்றோமா? அவரைக் காண விரும்புகின்றோமா? எதற்காக அவரைக் காண விரும்புகிறோம்? ஏற்கெனவே இயேசுவிடம் நம்பிக்கை கொண்டுள்ள மக்கள் இயேசுவைக் ''காண'' விரும்புவதும் அவரைத் ''தேடுவதும்'' ஒரே ஒரு நோக்கத்திற்காகவே இருக்கும். அதாவது அவர்கள் இயேசுவைப் பற்றி இன்னும் அதிகமாக அறிந்து, அவரை இன்னும் அதிக ஆர்வத்தோடு பின்செல்ல விரும்புகிறார்கள். ஆனால் நேர்மையற்ற உள்ளத்தோடும் குறைகாண்கின்ற மன நிலையோடும் இயேசுவைத் ''தேடிய'' ஏரோதுவின் மன நிலை இன்றைய உலகில் நிலவத்தான் செய்கிறது. இயேசுவின் போதனைக்கு ஏற்ப வாழ்கின்ற மக்கள் பலர் உலகின்; பல பகுதிகளில் துன்பங்களுக்கு ஆளாக்கப்படுகிறார்கள். அரசியல் ஆதாயம் தேடுகின்ற சில சந்தர்ப்ப வாதிகள் இந்திய நாட்டில் கிறிஸ்தவ நம்பிக்கை வளர்வதைக் கண்டு காழ்ப்புணர்ச்சி கொண்டு, வன்முறைச் செயல்களில் ஈடுபட்டதை நாமறிவோம். இயேசுவின் போதனையை நாம் மன உறுதியோடு கடைப்பிடித்து வாழ்வதே இந்த எதிர்ப்புகளுக்கு நாம் அளிக்கும் பதிலாக அமையும்.

மன்றாட்டு:

இறைவா, எங்களை அன்பு செய்கின்ற உம்மையும் உம் திருமகனையும் தேடுவதில் நாங்கள் ஒருநாளும் ஓய்ந்துவிடாதிருக்க அருள்தாரும்.