யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





மூன்றாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 25வது வாரம் செவ்வாய்க்கிழமை
2016-09-20




முதல் வாசகம்

பலி செலுத்துவதை விட நேர்மையாகவும் நியாயமாகவும் நடப்பதே ஆண்டவருக்கு உவப்பளிக்கும்.
நீதிமொழிகள் நூலிலிருந்து வாசகம் 21: 1-6,10-13

மன்னவன் மனம் ஆண்டவரின் கைக்குள் அடங்கியிருக்கிறது; வாய்க்கால் நீரைப் போல அவர் அதைத் தம் விருப்பப்படி திருப்பி விடுகிறார். மனிதருடைய நடத்தையெல்லாம் அவர் பார்வையில் குற்றமற்றதாய்த் தோன்றலாம். ஆனால் ஆண்டவர் அவர் உள்ளெண்ணத்தைச் சீர்தூக்கிப் பார்க்கிறார். பலி செலுத்துவதை விட நேர்மையாகவும் நியாயமாகவும் நடப்பதே ஆண்டவருக்கு உவப்பளிக்கும். மேட்டிமையான பார்வை, இறுமாப்புக் கொண்ட உள்ளம் - இவை பொல்லாரிடம் பளிச்சென்று காணப்படும் பாவங்கள். திட்டமிட்டு ஊக்கத்துடன் உழைப்பவரிடம் செல்வம் சேரும் என்பது திண்ணம்; பதற்றத்துடன் வேலை செய்பவர் பற்றாக்குறையில் இருப்பார். ஒருவர் பொய் பேசிச் சேர்க்கும் பொருள், காற்றாய்ப் பறந்து விடும்; அவரது உயிரையும் அது வாங்கி விடும். பொல்லார் மனம் தீமை செய்வதில் நாட்டங்கொள்ளும்; தமக்கு அடுத்திருப்பாரை அவர்கள் கனிவுடன் பார்ப்பதும் இல்லை. ஏளனம் செய்வோரை அடிக்கும்போது அதைக் காணும் பேதையராவது படிப்பினை பெறுவர்; உணர்வுள்ளவருக்கு அறிவு புகட்டும்போது அவர் மேலும் அறிவுடையவராவார். நீதிமிகு இறைவன் பொல்லாருடைய வீட்டைக் கவனித்துக் கொண்டிருக்கிறார். அவர்களைத் தீச்செயல் காரணமாகத் தூக்கி எறிந்து அழித்து விடுகிறார். ஏழை கூக்குரலிடும்போது எவன் காதைப் பொத்திக் கொள்கிறானோ, அவன் தானே உதவிக்காக மன்றாடும்போது எவரும் அவனுக்குச் செவிகொடுக்க மாட்டார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

ஆண்டவரே, உம் கட்டளைகள் காட்டும் நெறியில் என்னை நடத்தும்.
திருப்பாடல் 119: 1,27. 30,34. 35,44

1 மாசற்ற வழியில் நடப்போர் பேறுபெற்றோர்; ஆண்டவர் திருச்சட்டப்படி நடப்போர் பேறுபெற்றோர். 27 உம் நியமங்கள் காட்டும் வழியை என்றும் உணர்த்தியருளும்; உம் வியத்தகு செயல்கள்பற்றி நான் சிந்தனை செய்வேன். பல்லவி

30 உண்மையின் பாதையை நான் தேர்ந்துகொண்டேன்; உம் நீதிநெறிகளை என் கண்முன் நிறுத்தியுள்ளேன். 34 உம் திருச்சட்டத்தின்படி நடக்க எனக்கு மெய்யுணர்வு தாரும். அதை நான் முழு உள்ளத்தோடு கடைப்பிடிப்பேன். பல்லவி

35 உம் கட்டளைகள் காட்டும் நெறியில் என்னை நடத்தும்; ஏனெனில், அதில் நான் மகிழ்ச்சி அடைகின்றேன். 44 உமது திருச்சட்டத்தை நான் எப்போதும் கடைப்பிடிப்பேன்; என்றென்றும் எக்காலமும் அதைப் பின்பற்றுவேன். பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! இறைவார்த்தையைக் கேட்டு அதைக் கடைப்பிடிப்போர் இன்னும் அதிகம் பேறுபெற்றோர் அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 8: 19-21

அக்காலத்தில் இயேசுவின் தாயும் சகோதரர்களும் இயேசுவிடம் வந்தார்கள். ஆனால் மக்கள் திரளாக இருந்த காரணத்தால் அவரை அணுக முடியவில்லை. ``உம் தாயும் சகோதரர்களும் உம்மைப் பார்க்க விரும்பி வெளியே நின்று கொண்டிருக்கிறார்கள்'' என்று அவருக்கு அறிவித்தார்கள். அவர் அவர்களைப் பார்த்து, ``இறைவார்த்தையைக் கேட்டு அதன்படி செயல்படுகிறவர்களே என் தாயும் என் சகோதரர்களும் ஆவார்கள்'' என்றார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''இயேசுவின் தாயும் சகோதரர்களும் அவரிடம் வந்தார்கள். ஆனால் மக்கள் திரளாக இருந்த காரணத்தால் அவரை அணுக முடியவில்லை'' (லூக்கா 8:19)

நற்செய்தி நூல்களில் இயேசுவின் ''சகோதரர்கள்'' பற்றிய குறிப்பு வருகிறது. இவர்கள் உண்மையிலேயே மரியாவுக்கும் யோசேப்புக்கும் பிறந்த பிள்ளைகளா அல்லது மரியா, யோசேப்பு ஆகியோரின் உடன்பிறந்தோருக்குப் பிறந்த பிள்ளைகளா, அல்லது உருவக முறையில் மட்டுமே இயேசுவுக்கு ''சகோதரர்களா''? இக்கேள்விக்கு விவிலிய ஆதார அடிப்படையில் என்ன பதில் அளிப்பது? நம்மில் பலரும் நினைப்பது கத்தோலிக்கத் திருச்சபையின் போதனைப்படி மரியா இயேசுவின் பிறப்புக்கு முன்னும் பின்னும் கன்னியாக இருந்தார்; புராட்டஸ்டாண்டு சபையினர் மரியாவின் கன்னிமையை ஏற்காமல் மரியாவுக்கும் யோசேப்புக்கும் பிறந்த பிள்ளைகளே இங்கு ''இயேசுவின் சகோதரர்கள்'' எனக் குறிக்கப்படுவதாகக் கூறுகிறார்கள். இவ்வாறு நாம் நினைத்தால் அது சரியல்ல. ஏனென்றால் கத்தோலிக்கத் திருச்சபையில் வேறு விளக்கங்கள் தரப்பட்டதும் உண்டு; புராட்டஸ்டாண்டு சபையிலும் வேறு விளக்கங்கள் உண்டு. எடுத்துக்காட்டாக, புராட்டஸ்டாண்டு சீர்திருத்தத்தைத் தொடங்கிய மார்ட்டின் லூத்தர் (1483-1546), ஜான் கால்வின் (1509-1564) ஆகியோர் மரியா எப்போதும் கன்னியாக இருந்தார் என்னும் உண்மையை மறுக்கவில்லை. அதற்குப் பிற்பட்ட காலத்தில்தான் பல புராட்டஸ்டாண்டு சபைகளில் மரியாவுக்கும் யோசேப்புக்கும் வேறு குழந்தைகள் இருந்தனர் என்னும் கருத்து எழலாயிற்று. இருப்பினும் இன்றுகூட ஆங்கிலிக்கன் சபையினரில் ''உயர் பிரிவினர்'' மரியாவின் கன்னிமையை ஏற்பர்.

கத்தோலிக்க சபையில் நிலவுகின்ற முக்கிய விளக்கங்கள் இரண்டு. எப்பிபானியுஸ் (320-403) என்னும் பண்டைய அறிஞர் கருத்துப்படி, இயேசுவின் ''சகோதரர்கள்'' எனக் குறிக்கப்படுவோர் உண்மையில் இயேசுவின் ''ஒன்றுவிட்ட சகோதரர்கள்'' ஆவர். அதாவது, யோசேப்பு மரியாவை மணப்பதற்கு முன் வேறொரு திருமணம் செய்திருந்தார் எனவும், அந்த முதல் மனைவியின் இறப்புக்குமுன் அவர்கள் திருமணத்தின் வழி பிறந்த பிள்ளைகளே இயேசுவின் ''சகோதரர்கள்'' என நற்செய்தி நூல்களில் குறிக்கப்படுகிறார்கள் எனவும் எப்பிபானியுஸ் கருத்துத் தெரிவித்தார். இக்கருத்து கத்தோலிக்க சபையின் கீழைப் பகுதிகளில் பரவலாயிற்று. இக்கருத்து தவிர, தூய எரோணிமுசு என்னும் திருச்சபைத் தந்தை (347-420) இயேசுவின் ''சகோதரர்கள்'' உண்மையிலேயே அவருடைய உடன்பிறப்புகள் அல்ல எனவும், மரியா, யோசேப்பு ஆகியோரின் சகோதர சகோதரிகளின் பிள்ளைகளே ''இயேசுவின் சகோதரர்கள்'' என நற்செய்தி நூல்களில் குறிக்கப்படுகிறார்கள் எனவும் கருத்து வெளியிட்டார். இக்கருத்தையே உரோமன் கத்தோலிக்கத் திருச்சபை கற்பித்துவந்துள்ளது. ஆக, மரியா இறைவனின் அருளால் கன்னிமை குன்றாமல் காக்கப்பட்டார் என்னும் உண்மைக்கு அடித்தளம் விவிலியத்தில் உள்ளது எனலாம். ஆனால் அதை ஒரு போதனையாக விளக்கி மக்களுக்குப் போதிப்பது திருச்சபை ஆகும். தூய ஆவியின் வல்லமையால் வழிநடத்தப்படுகின்ற திருச்சபை கடவுளின் வார்த்தையை நமக்கு விளக்கி உரைப்பதில் தவறிப் போவதில்லை. இயேசுவைப் பின்செல்லும் மக்கள் ஒரு புதிய ''குடும்ப உறவில்'' பங்கேற்கின்றனர். அங்கே இரத்த உறவு முக்கியமல்ல. எனவேதான் இயேசு, ''இறைவார்த்தையைக் கேட்டு அதன்படி செயல்படுகிறவர்களே என் தாயும் என் சகோதரர்களும் ஆவார்கள்'' என்றார் (லூக் 8:21). இந்த இறைக் குடும்பத்தில் நாம் உறுப்பினராகச் சேர்க்கப்பட்டுள்ளதால் நாம் பேறுபெற்றவர்களே.

மன்றாட்டு:

இறைவா, உம் குடும்பத்தில் எங்களை உறுப்பினராக்கியுள்ளீர் என்பதை உணர்ந்து வாழ்ந்திட எங்களுக்கு அருள்தாரும்.