யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





மூன்றாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 23வது வாரம் சனிக்கிழமை
2016-09-10




முதல் வாசகம்

நாம் பலராயினும் ஒரே உடலாய் இருக்கிறோம். ஏனெனில் நாம் அனைவரும் ஒரே அப்பத்தில்தான் பங்கு கொள்கிறோம்.
திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 10: 14-22

என் அன்பிற்குரியவர்களே, சிலைவழிபாட்டைவிட்டு விலகுங்கள். உங்களை அறிவாளிகள் என மதித்துப் பேசுகிறேன். நான் சொல்வதைக் குறித்து நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள். கடவுளைப் போற்றித் திருவிருந்துக் கிண்ணத்திலிருந்து பருகுகிறோமே, அது கிறிஸ்துவின் இரத்தத்தில் பங்கு கொள்ளுதல் அல்லவா! அப்பத்தைப் பிட்டு உண்ணுகிறோமே, அது கிறிஸ்துவின் உடலில் பங்குகொள்ளுதல் அல்லவா! அப்பம் ஒன்றே. ஆதலால் நாம் பலராயினும் ஒரே உடலாய் இருக்கிறோம். ஏனெனில் நாம் அனைவரும் அந்த ஒரே அப்பத்தில்தான் பங்கு கொள்கிறோம். இஸ்ரயேல் மக்களின் சடங்கு முறைகளைப் பாருங்கள். பலிப் பொருள்களை உண்கிறவர்கள் பலிக்குப் படைக்கப்பட்ட பலிபீடம் குறிக்கும் கடவுளோடு உறவு கொள்ளவில்லையா? எனவே சிலைகளுக்குப் படைக்கப்பட்டவற்றை அல்லது சிலைகளைப் பொருட்படுத்த வேண்டும் என்றா சொல்லுகிறேன்? மாறாக, சிலைகளுக்குப் பலியிடப்பட்டவை கடவுளுக்கு அல்ல, பேய்களுக்கே பலியிடப்பட்டவையாகும். நீங்கள் பேய்களோடு உறவு கொள்வதை நான் விரும்பவில்லை. நீங்கள் ஆண்டவரு டைய கிண்ணத்திலும் பேய்களுடைய கிண்ணத்திலும் பருக முடியாது. நீங்கள் ஆண்டவரின் பந்தியிலும் பேய்களின் பந்தியிலும் பங்குகொள்ள முடியாது. நாம் ஆண்டவருக்கு எரிச்சல் ஊட்டலாமா? நாம் அவரைவிட வலிமைமிக்கவர்களா?

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

நான் உமக்கு நன்றிப் பலி செலுத்துவேன்.
திருப்பாடல் 116: 12-13. 17-18

2 ஆண்டவர் எனக்குச் செய்த எல்லா நன்மைகளுக்காகவும் நான் அவருக்கு என்ன கைம்மாறு செய்வேன்? 13 மீட்பின் கிண்ணத்தைக் கையில் எடுத்து, ஆண்டவரது பெயரைத் தொழுவேன். பல்லவி

17 நான் உமக்கு நன்றிப் பலி செலுத்துவேன்; ஆண்டவராகிய உம் பெயரைத் தொழுவேன்; 18 இப்பொழுதே உம் மக்கள் அனைவரின் முன்னிலையில் ஆண்டவரே! உமக்கு என் பொருத்தனைகளை நிறைவேற்றுவேன். பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! என்மீது அன்பு கொண்டுள்ளவர் நான் சொல்வதைக் கடைப்பிடிப்பார். என் தந்தையும் அவர்மீது அன்பு கொள்வார். நாங்கள் அவரிடம் வந்து அவருடன் குடிகொள்வோம், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 43-49

அக்காலத்தில் இயேசு தம் சீடர்களை நோக்கிக் கூறியது: ``கெட்ட கனி தரும் நல்ல மரமுமில்லை; நல்ல கனி தரும் கெட்ட மரமுமில்லை. ஒவ்வொரு மரமும் அதனதன் கனியாலே அறியப்படும். ஏனென்றால் முட்செடிகளில் அத்திப் பழங்களைப் பறிப்பாருமில்லை; முட்புதர்களில் திராட்சைக் குலைகளை அறுத்துச் சேர்ப்பாருமில்லை. நல்லவர் தம் உள்ளமாகிய நல்ல கருவூலத்திலிருந்து நல்லவற்றை எடுத்துக் கொடுப்பர். தீயவரோ தீயதினின்று தீயவற்றை எடுத்துக் கொடுப்பர். உள்ளத்தின் நிறைவையே வாய் பேசும். நான் சொல்பவற்றைச் செய்யாது என்னை, `ஆண்டவரே, ஆண்டவரே' என ஏன் கூப்பிடுகிறீர்கள்? என்னிடம் வந்து, என் வார்த்தைகளைக் கேட்டு, அவற்றின்படி செயல்படும் எவரும் யாருக்கு ஒப்பாவார் என உங்களுக்கு எடுத்துக்காட்டுகிறேன். அவர் ஆழமாய்த் தோண்டி, பாறையின்மீது அடித்தளம் அமைத்து, வீடு கட்டிய ஒருவருக்கு ஒப்பாவார். வெள்ளம் ஆறாகப் பெருக்கெடுத்து அந்த வீட்டின்மேல் மோதியும் அதை அசைக்க முடியவில்லை; ஏனென்றால் அது நன்றாகக் கட்டப்பட்டிருந்தது. நான் சொல்வதைக் கேட்டும் அதன்படி செயல்படாதவரோ, அடித்தளம் இல்லாமல் மண்மீது வீடு கட்டியவருக்கு ஒப்பாவார். ஆறு பெருக்கெடுத்து அதன்மேல் மோதிய உடனே அது விழுந்தது; அவ்வீட்டுக்குப் பேரழிவு ஏற்பட்டது.''

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''கெட்ட கனி தரும் நல்ல மரமுமில்லை; நல்ல கனி தரும் கெட்ட மரமுமில்லை. ஒவ்வொரு மரமும் அதனதன் கனியாலே அறியப்படும்'' (லூக்கா 6:43)

இயேசு வாழ்ந்த பாலஸ்தீன நாட்டில் வேளாண் தொழில் பரவலாக இருந்தது. வயல்கள், தோட்டங்கள், பயிர், மரம், செடி, கொடி பற்றிய பல உவமைகள் வழியாக இயேசு மக்களுக்குப் போதித்தார். வேளாண் தொழிலை நன்கு அறிந்திருந்த அந்நாட்டு மக்களுக்கு இயேசு எடுத்துக் கூறிய வேளாண் உவமைகள் எளிதில் புரிந்திருக்க வேண்டும். தமிழ்ப் பண்பாட்டிலும் வெவ்வேறு நிலங்கள், அவற்றில் நிகழும் தொழில்கள் பற்றிய செய்திகள் பண்டைக் காலத்திலிருந்தே தெரியவந்துள்ளன. சங்ககால மற்றும் பிற்காலத் தமிழ் இலக்கியங்களே இதற்குச் சான்று. நல்ல மரம் நல்ல கனி தரும், நச்சு மரம் கெட்ட கனியே தரும் என்பதை வள்ளுவரும் கூறுவார்: ''பயன்மரம் உள்"ர்ப் பழுத்தற்றால்...'' எனத் தொடங்கும் குறளும் (216), ''நச்சு மரம் பழுத்தற்று...'' என முடியும் குறளும் (1008) நல்ல மரம் (''பயனுள்ள கனிகளைத் தருகின்ற மரம்'' - ''பயன்மரம்'') கெட்ட மரம் (''உண்ணத் தகாத நச்சுக் கனிகளைத் தருகின்ற மரம்'' - ''நச்சு மரம்'') என்னும் வேறுபாட்டை உறுதிப்படுத்துகின்றன. கனியிலிருந்து மரத்தை அறியலாம் என்பது உண்மை என்றால், மனிதர் வாயிலிருந்து பிறக்கின்ற சொற்கள், அவர்கள் புரிகின்ற செயல்கள் ஆகியவற்றிலிருந்து அம்மனிதர் எப்பண்புடையவர் என்பதை அறியலாம் என இயேசு உணர்த்துகிறார்: ''உள்ளத்தின் நிறைவையே வாய் பேசும்'' (லூக்கா 6:45).

இயேசுவின் சீடர் நற்பண்பு மிக்க மனிதராக இருக்க வேண்டும் என்பது இயேசுவின் போதனை. நற்பண்புடையோர் உயர்வான எண்ணங்களையே எண்ணுவர்; பிறருக்கு நலமானவற்றையே பேசுவர்; பிறரின் நன்மையைக் கருத்தில் கொண்டே செயல்படுவர். எனவே, அவர்களின் எண்ணம், சொல், செயல் அனைத்தும் அவர்கள் உண்மையிலேயே எத்தன்மையவர் என்பதை எடுத்துக்காட்டும். மக்களுக்குக் கடவுளாட்சி பற்றி அறிவித்த இயேசு, அவர்கள் தம் சீடராக மாற விரும்பினால் இத்தகைய நற்பண்புடையவர்களாக மாற வேண்டும் எனக் கோரினார். நற்பண்புடைய மனிதர் உண்மையிலேயே சான்றோராக இருப்பார். அவர் இயேசுவிடம் சென்று, அவருடைய வார்த்தைகளைக் கேட்டு, அவற்றின்படி செயல்படுவார் (காண்க: லூக்கா 6:47). இவ்வாறு இயேசுவை அணுகிச் சென்று, அவருடைய சொற்களுக்குச் செவிமடுத்து, அவற்றிற்கேற்ப நம் வாழ்க்கை முறையை அமைத்துக் கொள்ள நாமும் அழைக்கப்படுகிறோம். அப்போது ''உள்"ர்ப் பழுத்த பயன்மரம்'' போல நம் வாழ்வு அனைவருக்கும் நலன் கொணரும்.

மன்றாட்டு:

இறைவா, உலக மக்கள் வாழ்வுபெற எங்களையே அர்ப்பணிக்க அருள்தாரும்.