யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





திருவழிபாடு ஆண்டு - C

(இன்றைய வாசகங்கள்: சாலமோன் ஞான நூல 9:13-18, பிலமோன 9-10,12-17, லூக்கா 14:25-33



;என்னிடம் வருபவர் தம் தந்தை, தாய்,மனைவி, பிள்ளைகள், சகோதரர் சகோதரிகள் ஆகியோரையும், 
ஏன், தம் உயிரையுமே என்னைவிட மேலாகக் கருதினால், அவர் என் சீடராயிருக்க முடியாது. 
தம் சிலுவையைச் சுமக்காமல் என் பின் வருபவர் எனக்குச் சீடராய் இருக்கமுடியாது.போதகரே, சொத்தை என்னோடு பங்கிட்டுக்கொள்ளுமாறு என் சகோதரருக்குச் சொல்லும்


திருப்பலி முன்னுரை

பின்தொடர்பவர்களே,

பொதுக்காலத்தின் இருபத்துமூன்றாம் ஞாயிறு திருப்பலியை சிறப்பிக்க உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். கிறிஸ்தவத்தை ஏற்றுக் கொண்டு இயேசுவை பின் தொடரும் நாம், அவருடைய சீடர்களாக மாற இன்றைய திருவழிபாடு நமக்கு அழைப்பு விடுக்கிறது. இயேசுவுக்காக தம் உறவுகளையும், உடைமைகளையும், உயிரையும் இழக் கத் தயாராக இருப்பவரே அவருடைய சீடராக மாற முடியும். தம் சிலுவையைச் சுமக்கா மல் இயேசுவை பின்செல்பவர் எவரும் அவருக்குச் சீடராய் இருக்க முடியாது. பணத்துக் காகவும், புகழுக்காகவும் இயேசுவை பின்தொடர விரும்பும் எவரும் அவரது சீடராக முடி யாது என்பதே நாம் இன்று கற்க வேண்டியப் பாடம். அன்னை மரியாவைப் போன்று கிறிஸ்துவுக்காக அனைத்தையும் இழக்கும் மனநிலை நம்மில் உருவாக வரம் வேண்டி, இத்திருப்பலியில் பங்கேற்போம்.



முதல் வாசகம்

ஆண்டவரின் திருவுளத்தைக் கண்டுபிடிப்பவர் யார்?
சாலமோனின் ஞான நூலிலிருந்து வாசகம் 9: 13-18

``கடவுளின் திட்டத்தை அறிபவர் யார்? ஆண்டவரின் திருவுளத்தைக் கண்டுபிடிப்பவர் யார்? நிலையற்ற மனிதரின் எண்ணங்கள் பயனற்றவை, நம்முடைய திட்டங்கள் தவறக் கூடியவை. அழிவுக்குரிய உடல் ஆன்மாவைக் கீழ்நோக்கி அழுத்துகிறது. இந்த மண்கூடாரம் கவலை தோய்ந்த மனதுக்குச் சுமையாய் அமைகிறது. மண்ணுலகில் உள்ளவற்றையே நாம் உணர்வது அரிது! அருகில் இருப்பவற்றையே கடும் உழைப்பால்தான் கண்டுபிடிக்கிறோம். இவ்வாறிருக்க, விண்ணுலகில் இருப்பவற்றைத் தேடிக் கண்டுபிடிப்பவர் யார்? நீர் ஞானத்தை அருளாமலும், உயர் வானிலிருந்து உம் தூய ஆவியை அனுப்பாமலும் இருந்தால், உம் திட்டத்தை யாரால் அறிந்து கொள்ள இயலும்? இவ்வாறு மண்ணுலகில் வாழ்வோருடைய வழிகள் செம்மைப்படுத்தப்பட்டன. உமக்கு உகந்தவற்றை மனிதர் கற்றுக் கொண்டனர்; ஞானத்தால் மீட்பு அடைந்தனர்.''

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

என் தலைவரே! தலைமுறைதோறும் நீரே எங்கள் புகலிடம்.
திருப்பாடல்90: 3-4. 5-6. 12-13. 14,17

மனிதரைப் புழுதிக்குத் திரும்பிடச் செய்கின்றீர்; `மானிடரே! மீண்டும் புழுதியாகுங்கள்' என்கின்றீர். 4 ஏனெனில், ஆயிரம் ஆண்டுகள், உம் பார்வையில் கடந்துபோன நேற்றைய நாள் போலவும் இரவின் ஒரு சாமம் போலவும் உள்ளன. பல்லவி

5 வெள்ளமென மானிடரை வாரிக்கொண்டு செல்கின்றீர்; அவர்கள் வைகறையில் முளைத்தெழும் புல்லுக்கு ஒப்பாவர்; 6 அது காலையில் தளிர்த்துப் பூத்துக் குலுங்கும்; மாலையில் வாடிக் காய்ந்துபோகும். பல்லவி

12 எங்கள் வாழ்நாள்களைக் கணிக்க எங்களுக்குக் கற்பியும்; அப்பொழுது ஞானமிகு உள்ளத்தைப் பெற்றிடுவோம். 13 ஆண்டவரே, திரும்பி வாரும்; எத்துணைக் காலம் இந்நிலை? உம் ஊழியருக்கு இரக்கம் காட்டும். பல்லவி

14 காலைதோறும் உமது பேரன்பால் எங்களுக்கு நிறைவளியும்; அப்பொழுது வாழ்நாளெல்லாம் நாங்கள் களிகூர்ந்து மகிழ்வோம். 17 எம் கடவுளாம் தலைவரின் இன்னருள் எம்மீது தங்குவதாக! நாங்கள் செய்பவற்றில் எங்களுக்கு வெற்றி தாரும்! ஆம், நாங்கள் செய்பவற்றில் வெற்றி அருளும்! பல்லவி

இரண்டாம் வாசகம்

இனி அவனை நீர் அடிமையாக அல்ல, உம்முடைய அன்பார்ந்த சகோதரனாக ஏற்றுக் கொள்ளும்.
திருத்தூதர் பவுல் பிலமோனுக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 9b-10,12-17

அன்பிற்குரியவரே, கிறிஸ்து இயேசுவின் தூதுவனாக, அவர் பொருட்டுக் கைதியாக இருக்கும் பவுலாகிய எனக்குச் சிறையிலிருந்தபோது பிள்ளையான ஒனேசிமுக்காக உம்மிடம் வேண்டுகிறேன். அவனை உம்மிடம் திரும்ப அனுப்புகிறேன். அவனை அனுப்புவது என் இதயத்தையே அனுப்புவது போலாகும். நற்செய்தியின் பொருட்டுச் சிறையுற்றிருக்கும் எனக்கு, உமது பெயரால் பணியாற்ற, அவனை என்னிடமே நிறுத்திக்கொள்ள விரும்பினேன். ஆனால் நீர் செய்யும் நன்மையைக் கட்டாயத்தினால் செய்யாமல், மனமாரச் செய்ய வேண்டுமென்று நினைத்தே, உம்முடைய உடன்பாடின்றி எதையும் செய்ய நான் விரும்பவில்லை. அவன் என்றும் உம்மோடு இருக்க உம்மை விட்டுச் சிறிது காலம் பிரிந்திருந்தான் போலும்! இனி அவனை நீர் அடிமையாக அல்ல, அடிமையை விட மேலானவனாக, அதாவது உம்முடைய அன்பார்ந்த சகோதரனாக ஏற்றுக்கொள்ளும். அவன் என் தனிப்பட்ட அன்புக்குரியவன். அப்படியானால் மனிதன் என்னும் முறையிலும் ஆண்டவரைச் சார்ந்தவன் என்னும் முறையிலும் அவன் எத்துணை மேலாக உம் அன்புக்குரியவனாகிறான்! எனவே, நமக்குள்ள நட்புறவைக் கருதி, என்னை ஏற்றுக்கொள்வது போல் அவனையும் ஏற்றுக்கொள்ளும்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

- இறைவா உமக்கு நன்றி




நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா ! உம் ஊழியன்மீது உமது முக ஒளி வீசச்செய்யும்! உம் விதிமுறைகளை எனக்குக் கற்பித்தருளும். அல்லேலூயா !

நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 14: 25-33

அக்காலத்தில் பெருந்திரளான மக்கள் இயேசுவோடு சென்று கொண்டிருந்தனர். அவர் திரும்பிப் பார்த்து அவர்களிடம் கூறியது: ``என்னிடம் வருபவர் தம் தந்தை, தாய், மனைவி, பிள்ளைகள், சகோதரர் சகோதரிகள் ஆகியோரையும், ஏன், தம் உயிரையுமே என்னை விட மேலாகக் கருதினால், அவர் என் சீடராயிருக்க முடியாது. தம் சிலுவையைச் சுமக்காமல் என் பின் வருபவர் எனக்குச் சீடராய் இருக்க முடியாது. உங்களுள் யாராவது ஒருவர் கோபுரம் கட்ட விரும்பினால், முதலில் உட்கார்ந்து, அதைக் கட்டிமுடிக்க ஆகும் செலவைக் கணித்து, அதற்கான பொருள் வசதி தம்மிடம் இருக்கிறதா எனப் பார்க்கமாட்டாரா? இல்லாவிட்டால் அதற்கு அடித்தளமிட்ட பிறகு அவர் கட்டி முடிக்க இயலாமல் இருப்பதைப் பார்க்கும் யாவரும் ஏளனமாக, `இம்மனிதன் கட்டத் தொடங்கினான்; ஆனால் முடிக்க இயலவில்லை' என்பார்களே! வேறு ஓர் அரசரோடு போர் தொடுக்கப்போகும் அரசர் ஒருவர், இருபதாயிரம் பேருடன் தமக்கு எதிராக வருபவரைப் பத்தாயிரம் பேரைக் கொண்டு எதிர்க்க முடியுமா என்று முதலில் உட்கார்ந்து சிந்தித்துப் பார்க்க மாட்டாரா? எதிர்க்க முடியாதெனில், அவர் தொலையில் இருக்கும்போதே தூதரை அனுப்பி, அமைதிக்கான வழியைத் தேடமாட்டாரா? அப்படியே, உங்களுள் தம் உடைமையை எல்லாம் விட்டுவிடாத எவரும் என் சீடராய் இருக்க முடியாது.''

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




விசுவாசிகள் மன்றாட்டுகள்:


பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

1. அன்புத் தந்தையே இறைவா!

உம்மால் அருட்பொழிவு செய்யப்பட்ட எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவிகள், அனைவருக்காகவும் மன்றாடுகின்றோம் : தூய ஆவியின் நிறை வல்லமையை அவர்கள் பெற்று: தூய ஆவியின் தூண்டுதலுக்கு ஏற்ப வாழ்ந்து , உலகப் போக்கிலான சிந்தனைகளையும், வாழ்க்கையையும் விட்டொழித்து சாட்சிய வாழ்வ வாழ்வதற்கு வேண்டிய சக்தியையும், ஆற்றலையும் அவர்களுக்கு அளித்துக் காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2. என்றென்றும் மாறாத பேரன்பு உடையவரான தந்தையே!

நாங்கள் ஒவ்வொருவரும் கிறீஸ்துவிடமிருந்து பெற்றுக்கொண்ட அழைத்தலை ஆழமாக உணர்ந்து திருச்சihயின் வளர்ச்சிக்காக உழைக்கவும்: தூய ஆவியின் தூண்டுதலுக்கு ஏற்ப வாழவும், தீமைகளை எம் வாழ்விலிருந்து அகற்றி நாங்கள் பெற்றுக் கொண்ட அழைப்பிற்கேற்ப பரமாணிக்கமாய் வாழ்வதற்கு வேண்டிய அருளை அளித்துக் காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. திக்கற்றவர் கூவியழைக்க, அவர்கள் குரலைக் கேட்கும் தந்தையே!

இன்று அமைதி வாழ்விற்காகத் தவித்துக் கொண்டிருக்கும் அனைத்து மக்களும் நீர் கொடுக்கின்ற ஆறுதலைப் பெற்றுக் கொள்ளவும், எல்லாவித அடக்குமுறைகளிலிருந்த அவர்களைப் பாதுகாத்திடவும் வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. அன்புத் தந்தையே இறைவா!

உலகிலிருந்து தவறுகள் அகலவும், நோய்கள் நீங்கிப் பஞ்சம் ஒழியவும், சிறைப்பட்டோர் விடுதலை பெறவும்,வழிப்போக்கர் பாதுகாப்புப் பெறவும், பயணம் செய்வோர் நலமாக நாடு திரும்பவும், நோயுற்றோர் நலம் பெறவும், இறக்கின்றவர் மீட்பின் நிறைவு பெறவும்;,வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

5. நலந்தரும் ஊற்றாம் இறைவா,

போராலும், வன்முறையாலும் உலகை ஆள நினைப்பவர்கள் மனம் திரும்பவும், உமது அன்பின், அமைதியின், உண்மையின் அரசு உலகெங்கும் நிறுவப்படவும் அருள்புரியுமாறு உம்மை மன்றாடுகிறோம்.


இன்றைய சிந்தனை

''உங்களுள் தம் உடைமையையெல்லாம் விட்டுவிடாத எவரும் என் சீடராய் இருக்க முடியாது'' (லூக்கா 14:33)

இயேசுவைப் பின்செல்ல விரும்புவோர் தம் உடைமைகளை விட்டுவிட வேண்டும் என்பது சிலருக்குக் கடினமான ஒரு போதனையாகத் தோன்றலாம். மனிதருடைய உள்ளத்தில் இடம் பிடித்துக்கொள்கின்ற எதுவும் அவரைத் தமக்கு அடிமையாக்க முயற்சி செய்யக் கூடும். பொருள், உறவு, குடும்பம் போன்ற தளைகள் நம்மை இறுகப் பிணைத்துவிட்டால் கடவுளோடு நமக்குள்ள உறவு முறிவதற்கான ஆபத்து எழக் கூடும். இதையே இயேசு சுட்டிக்காட்டுகிறார். இயேசுவைப் பின்செல்ல வேண்டும் என்றால் நம் உள்ளத்தில் வேறு எந்த பொருளுக்கோ மனித ஆளுக்கோ நாம் முதன்மையிடம் அளித்தலாகாது. இதனால் நம் குடும்பத்தையும் உற்றார் உறவினரையும் நாம் ''வெறுக்கவேண்டும்'' என்று பொருளாகாது. ஆனால், மனித உறவு எதுவும் கடவுளின் உறவுக்கு அடுத்த படியில்தான் அமைய வேண்டுமே ஒழிய அதை முந்திவிடக் கூடாது. இதையே இயேசு போதிக்கிறார்.

நம் உயிர் மட்டில் நமக்குப் பற்று இருப்பதை நாம் எளிதில் உணர்ந்துகொள்ளலாம். நம் உயிருக்கு ஆபத்து ஏற்படுகின்ற வேளையில் ஒன்றில் நாம் அந்த ஆபத்தை எதிர்த்துப் போராடுவோம், அல்லது அந்த ஆபத்திலிருந்து தப்பித்து ஓடிப்போவோம். ஆனால் இயேசு நம் உயிர்மட்டில் நமக்கு இருக்கின்ற பற்றினைவிட அதிகப் பற்றோடு நாம் அவரைப் பற்றிக்கொள்ள வேண்டும் எனக் கேட்கிறார். இதற்கு ஒரு காரணம் நம் உயிரே கடவுளின் கொடை என்பதுதான். கடவுளிடமிருந்தே அனைத்தையும் நாம் கொடையாகப் பெற்றுக்கொள்வதால் கொடையைத் தருகின்ற வள்ளலை நாம் ஏற்கும்போது அவர் தருகின்ற கொடைகளையும் நன்றியோடு ஏற்போம். ஆனால், நாம் பெறுகின்ற கொடையே அக்கொடையை நமக்கு அளித்தவரின் இடத்தைப் பிடித்துக்கொள்ளா விதத்தில் நாம் கவனமாக இருத்தல் வேண்டும். பொருளையும் உறவையும் குடும்பத்தையும் நட்பையும் இயேசுவின் பொருட்டுத் துறந்துவிடுதல் அவ்வளவு எளிதல்ல என்பதை உணர்த்தும் வகையில் இயேசு ''நாம் நம் சிலுவையைச் சுமந்துகொண்டு அவர்பின் செல்ல'' நம்மை அழைக்கிறார் (காண்க: லூக்கா 14:27). இயேசுவின் சிலுவை என்பது இயேசு அனுபவித்த துன்பத்திற்கு அடையாளம்; அதுவே நம் வாழ்வில் நாம் சந்திக்கின்ற துன்பத்திற்கும் அடையாளம். ஆக, இயேசுவின் பின் செல்ல வேண்டும் என்றால் நம் உள்ளத்தில் பற்றற்ற நிலை உருவாக வேண்டும்; அதே நேரத்தில் கடவுளிடத்தில் நம் பற்று வளர வேண்டும்.

மன்றாட்டு:

இறைவா, இயேசுவைப் பின்செல்வதில் நாங்கள் நிலையாய் இருக்க அருள்தாரும்.