யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





மூன்றாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 20வது வாரம் புதன்கிழமை
2016-08-17




முதல் வாசகம்

அவர்கள் வாயினின்று என் மந்தையை மீட்பேன். அவை இனி அவர்களுக்கு உணவாகா.
இறைவாக்கினர் எசேக்கியேல் நூலிலிருந்து வாசகம் 34: 1-11

அந்நாள்களில் ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது. மானிடா! இஸ்ரயேலின் ஆயர்களுக்கு எதிராக இறைவாக்கு உரை. அவர்களுக்கு இறைவாக்கு உரைத்துச் சொல். தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே: தாங்களே மேய்ந்துகொள்ளும் இஸ்ரயேலின் ஆயர்களுக்கு ஐயோ கேடு! ஆயர்கள் மந்தையையன்றோ மேய்க்க வேண்டும்! நீங்கள் கொழுப்பானதை உண்டு, ஆட்டு மயிராடையை உடுத்தி, மந்தையில் சிறந்ததை அடிக்கிறீர்கள். மந்தையையோ மேய்ப்பதில்லை. நீங்கள் நலிந்தவற்றைத் திடப்படுத்தவில்லை; பிணியுற்றவற்றிற்குக் குணமளிக்கவில்லை. காயமுற்றவற்றிற்குக் கட்டுப்போடவில்லை; வழி தப்பியவற்றைத் திரும்பக் கூட்டி வரவில்லை. காணாமல் போனவற்றைத் தேடவில்லை. ஆனால், அவற்றைக் கொடுமையுடனும் வன்முறையுடனும் நடத்தினீர்கள். ஆயன் இல்லாமையால் அவை அலைந்து திரிந்தன. அப்போது எல்லாக் காட்டு விலங்குகளுக்கும் அவை இரையாயின. என் ஆடுகள் எல்லா மலைகளிலும் உயர்ந்த குன்றுகளிலும் அலைந்து திரிந்தன. பூவுலகில் எவ்விடத்திலும் என் மந்தை சிதறுண்டு போனது; அதைத் தேடவோ கூட்டிச் சேர்க்கவோ எவரும் இலர். எனவே ஆயர்களே, ஆண்டவரின் வாக்கைக் கேளுங்கள்: தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே: என் மேல் ஆணை! என் மந்தை கொள்ளையிடப்பட்டது; எல்லாக் காட்டு விலங்குகளுக்கும் இரையானது. ஏனெனில் அதற்கு ஆயன் இல்லை. என் ஆயர்கள் என் மந்தையைத் தேடவில்லை. என் மந்தையை அவர்கள் மேய்க்காமல் தாங்களே மேய்ந்துகொள்கிறார்கள். எனவே, ஆயர்களே! ஆண்டவரின் வாக்கைக் கேளுங்கள்: தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: நான் ஆயர்களுக்கு எதிராக இருக்கிறேன். என் மந்தையை அவர்களிடமிருந்து திரும்பப் பெற்றுக்கொள்வேன். மந்தை மேய்ப்பினின்று அவர்களை நீக்கி விடுவேன். எனவே தாங்களே மேய்ந்துகொள்ளும் அவர்கள் இனி என் மந்தையை மேய்க்க மாட்டார்கள். அவர்கள் வாயினின்று என் மந்தையை மீட்பேன். அவை இனி அவர்களுக்கு உணவாகா. எனவே, தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: நானே என் மந்தையைத் தேடிச்சென்று பேணிக் காப்பேன்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

ஆண்டவரே என் ஆயர்; எனக்கேதும் குறையில்லை.
திருப்பாடல் 23: 1-3. 3-4. 5. 6

1 ஆண்டவரே என் ஆயர்; எனக்கேதும் குறையில்லை. 2 பசும் புல்வெளிமீது எனை அவர் இளைப்பாறச் செய்வார்; அமைதியான நீர்நிலைகளுக்கு எனை அழைத்துச் செல்வார். 3 அவர் எனக்குப் புத்துயிர் அளிப்பார். பல்லவி

3b தம் பெயர்க்கேற்ப எனை நீதிவழி நடத்திடுவார்; 4 மேலும், சாவின் இருள்சூழ் பள்ளத்தாக்கில் நான் நடக்க நேர்ந்தாலும், நீர் என்னோடு இருப்பதால் எத்தீங்கிற்கும் அஞ்சிடேன்; உம் கோலும் நெடுங்கழியும் என்னைத் தேற்றும். பல்லவி

5 என்னுடைய எதிரிகளின் கண்முன்னே எனக்கொரு விருந்தினை ஏற்பாடு செய்கின்றீர்; என் தலையில் நறுமணத் தைலம் பூசுகின்றீர்; எனது பாத்திரம் நிரம்பி வழிகின்றது. பல்லவி

6 உண்மையாகவே, என் வாழ்நாள் எல்லாம் உம் அருள் நலமும் பேரன்பும் என்னைப் புடைசூழ்ந்து வரும்; நானும் ஆண்டவரின் இல்லத்தில் நெடுநாள் வாழ்ந்திருப்பேன். பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! கடவுளுடைய வார்த்தை உயிருள்ளது, ஆற்றல் வாய்ந்தது; உள்ளத்தின் சிந்தனைகளையும் நோக்கங்களையும் சீர்தூக்கிப் பார்க்கிறது அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 20: 1-16

அக்காலத்தில் இயேசு கூறியது: ``விண்ணரசைப் பின்வரும் நிகழ்ச்சிக்கு ஒப்பிடலாம்: நிலக்கிழார் ஒருவர் தம் வேலையாள்களை வேலைக்கு அமர்த்த விடியற்காலையில் வெளியே சென்றார். அவர் நாளொன்றுக்கு ஒரு தெனாரியம் கூலி என வேலையாள்களுடன் ஒத்துக்கொண்டு அவர்களைத் தம் திராட்சைத் தோட்டத்துக்கு அனுப்பினார். ஏறக்குறைய காலை ஒன்பது மணிக்கு அவர் வெளியே சென்றபொழுது சந்தை வெளியில் வேறு சிலர் வேலையின்றி நிற்பதைக் கண்டார். அவர்களிடம், `நீங்களும் என் திராட்சைத் தோட்டத்துக்குப் போங்கள்; நேர்மையான கூலியை உங்களுக்குக் கொடுப்பேன்' என்றார். அவர்களும் சென்றார்கள். மீண்டும் ஏறக்குறைய பன்னிரண்டு மணிக்கும் பிற்பகல் மூன்று மணிக்கும் வெளியே சென்று அப்படியே செய்தார். ஏறக்குறைய ஐந்து மணிக்கும் வெளியே சென்று வேறு சிலர் நிற்பதைக் கண்டார். அவர்களிடம், `நாள் முழுவதும் வேலை செய்யாமல் ஏன் இங்கே நின்றுகொண்டிருக்கிறீர்கள்?' என்று கேட்டார். அவர்கள் அவரைப் பார்த்து, `எங்களை எவரும் வேலைக்கு அமர்த்தவில்லை' என்றார்கள். அவர் அவர்களிடம், `நீங்களும் என் திராட்சைத் தோட்டத்துக்குப் போங்கள்' என்றார். மாலையானதும் திராட்சைத் தோட்ட உரிமையாளர் தம் மேற்பார்வை யாளரிடம், `வேலையாள்களை அழைத்துக் கடைசியில் வந்தவர் தொடங்கி முதலில் வந்தவர்வரை அவர்களுக்குரிய கூலி கொடும்' என்றார். எனவே ஐந்து மணியளவில் வந்தவர்கள் ஒரு தெனாரியம் வீதம் பெற்றுக் கொண்டனர். அப்போது முதலில் வந்தவர்கள் தங்களுக்கு மிகுதியாகக் கிடைக்கும் என்று எண்ணினார்கள். ஆனால் அவர்களும் ஒரு தெனாரியம் வீதம்தான் பெற்றார்கள். அவர்கள் அதைப் பெற்றுக்கொண்டபோது அந்நிலக்கிழாருக்கு எதிராக முணுமுணுத்து, `கடைசியில் வந்த இவர்கள் ஒரு மணி நேரமே வேலை செய்தார்கள். பகல் முழுவதும் வேலைப் பளுவையும் கடும் வெயிலையும் தாங்கிய எங்களோடு இவர்களையும் இணையாக்கிவிட்டீரே' என்றார்கள். அவரோ அவர்களுள் ஒருவரைப் பார்த்து, `தோழரே, நான் உமக்கு அநியாயம் செய்யவில்லை. நீர் என்னிடம் ஒரு தெனாரியம் கூலிக்கு ஒத்துக்கொள்ளவில்லையா? உமக்குரியதைப் பெற்றுக்கொண்டு போய்விடும். உமக்குக் கொடுத்தபடியே கடைசியில் வந்த இவருக்கும் கொடுப்பது என் விருப்பம். எனக்குரியதை நான் என் விருப்பப்படி கொடுக்கக் கூடாதா? அல்லது நான் நல்லவனாய் இருப்பதால் உமக்குப் பொறாமையா?' என்றார். இவ்வாறு கடைசியானோர் முதன்மையாவர். முதன்மையானோர் கடைசியாவர்.''

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''திராட்சைத் தோட்ட உரிமையாளர் வேலையாள்களுள் ஒருவரைப் பார்த்து, 'தோழரே, நான் உமக்கு அநியாயம் செய்யவில்லை. நீர் என்னிடம் ஒரு தெனாரியம் கூலிக்கு ஒத்துக்கொள்ளவில்லையா? உமக்குரியதைப் பெற்றுக்கொண்டு போய்விடும். உமகுக்குக் கொடுத்தபடியே கடைசியில் வந்த இவருக்கும் கொடுப்பது என் விருப்பம்' என்றார்'' (மத்தேயு 20:13-14)

மாதச் சம்பளம் வாங்குவோருக்கும் அன்றாடம் செய்கின்ற வேலைக்குக் கூலி வாங்கிப் பிழைப்பு நடத்துவோருக்கும் இடையே பெரும் வேறுபாடு உள்ளதை நாம் அறிவோம். இயேசு வாழ்ந்த காலத்தில் பாலஸ்தீனப் பகுதிகளில் கூலி வேலை முறை வழக்கத்தில் இருந்தது. கூலி வேலை செய்தவர்களின் நிலை அடிமைகளின் நிலையை விட மோசமாக இருந்தது. அடிமைகளாவது ஒரு எசமானருக்கு ''உடைமை'' எனக் கருதப்பட்டனர். அன்றாடம் வேலை செய்து பிழைத்தவர்கள் சந்தை வெளியில் அதிகாலையிலேயே வந்து கூடுவர். அவர்களை வேலைக்கு அமர்த்த விரும்புவோர் அங்கே வந்து தமக்குத் தேவையான கூலியாள்களைக் கூட்டிச் சென்று வேலை செய்ய விடுவர். நம் நாட்டில் இன்றும்கூட இப்பழக்கம் பரவலாக உள்ளதை நாமறிவோம். அன்றுபோல இன்றும் கூலி வேலை செய்தவர்களுக்கு ஒரு நாள் வேலை கிடைக்காமல் போனால் பட்டினிதான். வேலையில்லை என்பதற்காக அவர்களுக்கு நிவாரண உதவி அளிக்க யாரும் அக்காலத்தில் இருக்கவில்லை. அவர்களுக்கு அரசு உதவ வேண்டும் என வாதாட தொழிலாளர் சங்கங்களும் கிடையாது. கூலி வேலைக்கு ஆள்களை அமர்த்தியவர்கள் தாங்கள் விரும்பியபடி செய்யலாம் (காண்க: மத் 20:15). எனவே, கூலியாள்களைப் பொறுத்தமட்டில் ஒரு நாள் வேலை கிடைக்காவிட்டால் அன்று அவரும் அவருடைய குடும்பமும் பட்டினி கிடக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர். இயேசு கூறிய ''திராட்சைத் தோட்ட உரிமையாளர் உவமை''யில் (காண்க: மத் 20:1-16) வருகின்ற நிலக்கிழார் (தோட்ட உரிமையாளர்) தமக்குத் தேவையான வேலையாள்களை விடியற்காலையிலேயே தேர்ந்துகொண்டார். ஆனால், அவர் மீண்டும் மூன்று முறை (காலை ஒன்பது மணி, நண்பகல், மாலை ஐந்து மணி) சந்தை வெளிக்குச் சென்று வேலை வாய்ப்பு இல்லாமல் நின்றிருந்தவர்களுக்கு வேலை கொடுக்கிறார். வேலை செய்து கூலி பெற்றால்தான் அன்றைய பிழைப்பு நடக்கும் என்னும் நிலையிலிருந்த அந்த கூலியாள்கள்மீது இரக்கம் கொண்டு தோட்ட உரிமையாளர் அவர்களுக்கு வேலை கொடுக்கின்றார்.

நாள் முழுதும் வேலைசெய்தவர்களுக்கும் ஒரு மணி மட்டுமே வேலை செய்தவர்களுக்கும் ஒரே சமமான கூலி கொடுக்கப்பட்டால் அது அநீதி என்றுதான் நாம் எண்ணுவோம். ஆனால் இயேசு வெறும் உலகப் பார்வையில் செய்யப்படுகின்ற மதிப்பீடுகள்படி கடவுள் செயல்படுவதில்லை என இந்த உவமை வழி நமக்கு உணர்த்துகிறார். உவமையில் வருகின்ற நிலக்கிழார் (தோட்ட உரிமையாளர்) கடவுளுக்கு உருவகம். அவர் தம் மக்களின் தேவைகளை உணர்ந்தவர். அவர்களை அவர் வேறுபடுத்திப் பிரித்துப் பார்த்து, ஒருவரை உயர்த்தவோ மற்றவரைத் தாழ்த்தவோ செய்வதில்லை. எல்லா மனிதரும் கடவுளுக்கு முன் சமமானவர்களே. விடியற்காலையிலேயே வந்து தோட்ட வேலை செய்தவர்கள், ''கடைசியில் வந்த இவர்களையும் நாள் முழுதும் வேலை செய்த எங்களையும் இணையாக்கிவிட்டீரே'' (மத் 20:12) என்று கேட்டது உலகப் பார்வைப் படி நியாயமான கேள்விதான். ஆனால் கடவுளின் நீதி இரக்கமும் பரிவும் தோய்ந்த அன்பு இதயத்திலிருந்து பிறக்கும் ஒன்று. கடவுளின் இரக்கத்திற்கு எல்லை கிடையாது. கடவுளின் இரக்கத்திற்கு நாம் மனித கணிப்புப்படி வேலி கட்ட முடியாது. முதலில் வந்தவர்களுக்கு முன்னுரிமை என்னும் தத்துவம் கடவுளைப் பொறுத்தமட்டில் உண்மை ஆகாது. முதலில் வந்தாலும் சரி, கடைசியில் வந்தாலும் சரி எல்லாருக்கும் சம உரிமையே என்பதே கடவுளின் நீதி. கடவுள் நம்மை எவ்வாறு நடத்த வேண்டும் என நாம் அவருக்கு ஆலோசனை கூற நமக்கு உரிமையில்லை. அவர் ''தாராள உள்ளத்தோடு பிறருக்கு நன்மை செய்கிறாரே என நினைத்து நாம் பொறாமைப்படுவதும் முறையாகாது'' (காண்க: மத் 20:15). மாறாக, எல்லா மக்களையும் சமமாக நடத்துகின்ற ''நம் விண்ணகத் தந்தை நிறைவுள்ளவராய் இருப்பதுபோல நாமும் நிறைவுள்ளவர்களாய் இருக்க வேண்டும்'' (காண்க: மத் 5:48).

மன்றாட்டு:

இறைவா, உம் அன்பின் பெருக்கை வியந்து உம்மைப் புகழ எங்களுக்கு அருள்தாரும்.