திருவழிபாடு ஆண்டு - C
(இன்றைய வாசகங்கள்:
எரேமியா 38: 4-6,8-10,
எபிரேயர் 12:1-4,
லூக்கா 12 :49-53
திருப்பலி முன்னுரை பிரிக்கப்பட்டவர்களே,
பொதுக்காலத்தின் இருபதாம் ஞாயிறு திருப்பலியை சிறப்பிக்க உங்களை அன்போடு வரவேற்கிறோம். நம் ஆண்டவருக்கு உரியவர்களாக தனித்துவத்துடன் வாழ இன்றைய திருவழிபாடு நமக்கு அழைப்பு விடுக்கிறது. நாம் இந்த உலகிற்கு உரியவற்றில் இருந்து பிரிக்கப்பட்டு, விண்ணக வாழ்வுக்காக தேர்வு செய்யப்பட்டிருக்கிறோம் என்பதை முழுமையாக உணர அழைக்கப்படுகிறோம். கடவுளின் விருப்பப்படி, இவ்வுலகின் தீமைகளில் இருந்து விலகி வாழ இயேசு நமக்கு அழைப்பு விடுக்கிறார். அனைத்தையும் விட்டுவிட்டு ஆண்டவரைப் பின்தொடரவே நாம் கிறிஸ்தவ வாழ்வுக்கு அழைக்கப்பட்டிருக்கிறோம். நம் தலைவராகிய இயேசு இவ்வுலகில் மூட்ட வந்த தீயைப் பற்றியெரியச் செய்பவர்களாய் வாழும் வரம் வேண்டி, இத்திருப்பலியில் பங்கேற்போம்.
முதல் வாசகம்
நாடெங்கும் வழக்குக் காரணமாய் இருக்கும்படி என்னைப் பெற்றாயே!
இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து வாசகம் 38: 4-6, 8-10
அந்நாள்களில் தலைவர்கள் அரசனைப் பார்த்து, ``இம்மனிதன் கண்டிப்பாய்ச் சாக வேண்டும்; ஏனெனில் இவன் இவ்வாறு பேசி இந்நகரில் எஞ்சியுள்ள போர் வீரர்களையும் மக்கள் அனைவரையும் மனம் தளரச்செய்து வருகிறான். இந்த ஆள் இம்மக்களின் அழிவைத் தேடுகிறானே அன்றி, நலனைத் தேடுவதில்லை'' என்றார்கள். அதற்கு அரசன் செதேக்கியா, ``நன்று. அவனை உங்களிடமே கையளிக்கிறேன். ஏனெனில் உங்களைப் பகைத்துக்கொண்டு அரசனால் எதுவும் செய்ய இயலாதே'' என்றான். எனவே அவர்கள் எரேமியாவைப் பிடித்து, காவல் கூடத்தில் அரச மகன் மல்கியாவுக்குச் சொந்தமான பாழ்ங்கிணற்றுக்குள் கயிற்றில் கட்டி அவரைக் கீழே இறக்கிவிட்டார்கள். அக்கிணற்றில் தண்ணீர் இல்லை; சேறு மட்டுமே இருந்தது. எனவே எரேமியா சேற்றுக்குள் புதையத் தொடங்கினார்.
எபேது மெலேக்கு அரண்மனையினின்று வெளியே சென்று அரசனை நோக்கி, ``என் தலைவரே! என் அரசரே! இறைவாக்கினர் எரேமியாவைப் பாழ்ங்கிணற்றில் தள்ளியதால் இம்மனிதர்கள் பாவம் செய்தார்கள். அவர் அங்குப் பட்டினியால் மடிந்துபோவார்; ஏனெனில் நகரில் அப்பம் ஏதும் கிடையாது'' என்று கூறினார். அதைக் கேட்ட அரசன் எத்தியோப்பியரான எபேது மெலேக்கை நோக்கி, ``உன்னோடு மூன்று பேரை இங்கிருந்து கூட்டிச்செல். இறைவாக்கினர் எரேமியா சாவதற்கு முன்பே கிணற்றினின்று அவரைத் தூக்கிவிடு'' என்று கட்டளையிட்டான்.
- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
- இறைவா உமக்கு நன்றி
பதிலுரைப் பாடல்
ஆண்டவரே, எனக்கு உதவி செய்ய விரைந்து வாரும்.
திருப்பாடல்40: 1. 2. 3. 17
நான் ஆண்டவருக்காகப் பொறுமையுடன் காத்திருந்தேன்; அவரும் என் பக்கம் சாய்ந்து எனது மன்றாட்டைக் கேட்டருளினார். பல்லவி
2 அழிவின் குழியிலிருந்து என்னை அவர் வெளிக்கொணர்ந்தார்; சேறு நிறைந்த பள்ளத்தினின்று தூக்கியெடுத்தார்; கற்பாறையின்மேல் நான் காலூன்றி நிற்கச் செய்தார்; என் காலடிகளை உறுதிப்படுத்தினார். பல்லவி
3 புதியதொரு பாடலை, நம் கடவுளைப் புகழும் பாடலை என் நாவினின்று எழச் செய்தார்; பலரும் இதைப் பார்த்து அச்சங்கொண்டு ஆண்டவர் மீது நம்பிக்கை கொள்வர். பல்லவி
17 நானோ ஏழை; எளியவன்; என் தலைவர் என்மீது அக்கறை கொண்டுள்ளார்; நீரே என் துணைவர், என் மீட்பர்! என் கடவுளே, எனக்குத் துணை செய்ய விரைந்து வாரும். பல்லவி
இரண்டாம் வாசகம்
நமக்குக் குறிப்பிட்டுள்ள பந்தயத்தில் மன உறுதியோடு ஓடுவோமாக. எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 12: 1-4சகோதரர் சகோதரிகளே, திரண்டு வரும் மேகம் போல் இத்தனை சாட்சிகள் நம்மைச் சூழ்ந்து நிற்க எந்தச் சுமையையும், நம்மைப் பற்றிக்கொண்டிருக்கும் எந்தப் பாவத்தையும் உதறித் தள்ளிவிட்டு, நமக்குக் குறிப்பிட்டுள்ள பந்தயத்தில் மன உறுதியோடு ஓடுவோமாக. நம்பிக்கையைத் தொடங்கி வழிநடத்துபவரும் அதை நிறைவு செய்பவருமான இயேசுவின்மீது கண்களைப் பதிய வைப்போம். அவர் தாம் அடைய இருந்த மகிழ்ச்சியின் பொருட்டு, இழிவையும் பொருட்படுத்தாமல் சிலுவையை ஏற்றுக்கொண்டார்.
இப்போது, கடவுளது அரியணையின் வலப் பக்கத்தில் வீற்றிருக்கிறார். பாவிகளால் தமக்கு உண்டான எந்த எதிர்ப்பையும் மன உறுதியோடு தாங்கிக்கொண்ட அவரை எண்ணிப்பாருங்கள். அப்போது நீங்கள் மனம் சோர்ந்து தளர்ந்து போக மாட்டீர்கள். பாவத்திற்கு எதிரான போராட்டத்தில், இரத்தம் சிந்தும் அளவுக்கு நீங்கள் இன்னும் எதிர்த்து நிற்கவில்லை.
- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு- இறைவா உமக்கு நன்றி
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
அல்லேலூயா, அல்லேலூயா ! என் ஆடுகள் எனது குரலுக்குச் செவிசாய்க்கின்றன. எனக்கும் அவற்றைத் தெரியும். அவையும் என்னைப் பின்தொடர்கின்றன. அல்லேலூயா !
நற்செய்தி வாசகம்
லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 49-53
அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: ``மண்ணுலகில் தீ மூட்ட வந்தேன். அது இப்பொழுதே பற்றி எரிந்துகொண்டிருக்க வேண்டும் என்பதே என் விருப்பம். ஆயினும் நான் பெற வேண்டிய ஒரு திருமுழுக்கு உண்டு. அது நிறைவேறுமளவும் நான் மிகவும் மன நெருக்கடிக்குள்ளாகி இருக்கிறேன்.
மண்ணுலகில் அமைதியை ஏற்படுத்த வந்தேன் என்றா நினைக்கிறீர்கள்? இல்லை, பிளவு உண்டாக்கவே வந்தேன் என உங்களுக்குச் சொல்கிறேன். இதுமுதல் ஒரு வீட்டிலுள்ள ஐவருள் இருவருக்கு எதிராக மூவரும் மூவருக்கு எதிராக இருவரும் பிரிந்திருப்பர். தந்தை மகனுக்கும், மகன் தந்தைக்கும், தாய் மகளுக்கும், மகள் தாய்க்கும், மாமியார் தன் மருமகளுக்கும், மருமகள் மாமியாருக்கும் எதிராகப் பிரிந்திருப்பர்.''
- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
விசுவாசிகள் மன்றாட்டுகள்:
பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
1. நிறைவு அளிப்பவரே இறைவா, உமது பணிக்காக நீர் தேர்ந்தெடுத்துள்ள எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவ றத்தார் அனைவரும், நிறைவாழ்வை நோக்கிய பயணத்தில் உம் மக்களை மன உறுதி யுடன் வழிநடத்த தேவையான அருளைப் பொழியுமாறு உம்மை மன்றாடுகிறோம்.
2. நம்பிக்கை தருபவரே இறைவா, உலகில் போர் பதற்றம், வன்முறை, வேலையின்மை போன்ற பல்வேறு பிரச்சனை களால் நம்பிக்கை இழந்து தவிக்கும் இளையோர், உம் திருமகன் இயேசு வழியாக நம் பிக்கை நிறைந்த எதிர்காலத்தைக் காண உதவுமாறு உம்மை மன்றாடுகிறோம்.
3. அருள்மழை பொழிபவரே இறைவா, இரண்டாயிரம் ஆண்டு காலமாக உமது மீட்பின் மறைபொருளை அறியாமலும், ஏற்றுக் கொள்ளாலும் வாழும் எம் நாட்டு மக்கள் உம்மை அறிந்து, ஏற்றுகொள்ளவும் உமது மீட்பைக் கண்டடையவும் துணைபுரியுமாறு உம்மை மன்றாடுகிறோம்.
4. வாழ்வை வழங்குபவரே இறைவா, உலகெங்கும் உமது நற்செய்தியைப் புறக்கணிப்பவர்களால், கிறிஸ்தவ மக்களும் மறை போதகர்களும் அனுபவிக்கும் துன்பங்கள் நீங்கிட, மீட்பின் மறைபொருளை உலகோர் அனைவரும் புரிந்துகொள்ளச் செய்யுமாறு உம்மை மன்றாடுகிறோம்.
5. மண்ணுலகில் அன்பு என்னும் தீயை மூட்டுகின்ற தந்தையே இறைவா! உலக நாடுகள் முழுவதிலும் பிளவுகளையும், பிரிவனைகளையும் ஏற்படுத்தி மக்களை அச்சுறுத்தும் எல்லாத் தீய சக்திகளையும் முறியடித்து அமைதியையும், நிறைவான சுதந்திர வாழ்வையும் அனைவருக்கும்; பெற்றுக் கொடுத்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
|