யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





மூன்றாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 16வது வாரம் வெள்ளிக்கிழமை
2016-07-22

புனித மகதலா மரியா




முதல் வாசகம்

மனித முறைப்படி இப்போது கிறிஸ்துவை மதிப்பிடுவதில்லை.
திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 5: 14-17

சகோதரர் சகோதரிகளே, கிறிஸ்துவின் பேரன்பே எங்களை ஆட்கொள்கிறது. ஏனெனில் ஒருவர் அனைவருக்காகவும் இறந்தார். அனைவரும் அவரோடு இறந்தனர். இது நமக்குத் தெரியும். வாழ்வோர் இனித் தங்களுக்கென வாழாமல் தங்களுக்காக இறந்து உயிர்பெற்றெழுந்தவருக்காக வாழவேண்டும் என்பதற்காகவே அவர் அனைவருக்காகவும் இறந்தார். ஆகவே இனிமேல் நாங்கள் எவரையும் மனித முறைப்படி மதிப்பிடுவது இல்லை; முன்பு நாங்கள் கிறிஸ்துவையும் மனித முறைப்படிதான் மதிப்பிட்டோம். ஆனால் இப்போது அவ்வாறு செய்வதில்லை. எனவே ஒருவர் கிறிஸ்துவோடு இணைந்திருக்கும்போது அவர் புதிதாகப் படைக்கப்பட்டவராய் இருக்கிறார். பழையன கழிந்து புதியன புகுந்தன அன்றோ!

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

ஆண்டவரே, என் உயிர் உம்மீது தாகம் கொண்டுள்ளது. 1 கடவுளே! நீரே என் இறைவன்! உம்மையே நான் நாடுகின்றேன்; என் உயிர் உம்மீது தாகம் கொண்டுள்ளது; நீரின்றி வறண்ட தரிசு நிலம் போல என் உடல் உமக்காக ஏங்குகின்றது.
திபா 63: 1. 2-3. 4-5. 7-8 (பல்லவி: 1b)

2 உம் ஆற்றலையும் மாட்சியையும் காண விழைந்து உம் தூயகம் வந்து உம்மை நோக்குகின்றேன். 3 ஏனெனில், உமது பேரன்பு உயிரினும் மேலானது; என் இதழ்கள் உம்மைப் புகழ்கின்றன. பல்லவி

4 என் வாழ்க்கை முழுவதும் இவ்வண்ணமே உம்மைப் போற்றுவேன்; கைகூப்பி உமது பெயரை ஏத்துவேன். 5 அறுசுவை விருந்தில் நிறைவடைவது போல என் உயிர் நிறைவடையும்; என் வாய் மகிழ்ச்சிமிகு இதழ்களால் உம்மைப் போற்றும். பல்லவி

7 ஏனெனில், நீர் எனக்குத் துணையாய் இருந்தீர்; உம் இறக்கைகளின் நிழலில் மகிழ்ந்து பாடுகின்றேன். 8 நான் உம்மை உறுதியாகப் பற்றிக்கொண்டேன்; உமது வலக்கை என்னை இறுகப் பிடித்துள்ளது. பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! வழியில் என்ன கண்டாய் நீ, மரியே, எமக்கு உரைப்பாயே. உயிரோடுள்ள கிறிஸ்துவின் கல்லறை தன்னைக் கண்டேனே; உயிர்த்த ஆண்டவரின் ஒப்பற்ற மாட்சியும் கண்டேனே. அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 20: 1, 11-18

வாரத்தின் முதல் நாளன்று விடியற் காலையில் இருள் நீங்கும் முன்பே மகதலா மரியா கல்லறைக்குச் சென்றார்; கல்லறை வாயிலில் இருந்த கல் அகற்றப்பட்டிருப்பதைக் கண்டார். மரியா கல்லறைக்கு வெளியே நின்று அழுதுகொண்டிருந்தார்; அழுதுகொண்டே கல்லறைக்குள் குனிந்து பார்த்தார். அங்கே வெண்ணாடை அணிந்த இரு வானதூதரை அவர் கண்டார். இயேசுவின் உடலை வைத்திருந்த இடத்தில் ஒருவர் தலைமாட்டிலும் மற்றவர் கால்மாட்டிலுமாக அவர்கள் அமர்ந்திருந்தார்கள். அவர்கள் மரியாவிடம், ``அம்மா, ஏன் அழுகிறீர்?'' என்று கேட்டார்கள். அவர் அவர்களிடம், ``என் ஆண்டவரை எடுத்துக்கொண்டு போய் விட்டனர்; அவரை எங்கே வைத்தனரோ எனக்குத் தெரியவில்லை'' என்றார். இப்படிச் சொல்லிவிட்டு அவர் திரும்பிப் பார்த்தபோது இயேசு நிற்பதைக் கண்டார். ஆனால் அங்கு நிற்பவர் இயேசு என்று அவர் அறிந்துகொள்ளவில்லை. இயேசு அவரிடம், ``ஏனம்மா அழுகிறாய்? யாரைத் தேடுகிறாய்?'' என்று கேட்டார். மரியா அவரைத் தோட்டக்காரர் என்று நினைத்து அவரிடம், ``ஐயா, நீர் அவரைத் தூக்கிக்கொண்டு போயிருந்தால் எங்கே வைத்தீர் எனச் சொல்லும். நான் அவரை எடுத்துச் செல்வேன்'' என்றார். இயேசு அவரிடம், ``மரியா'' என்றார். மரியா திரும்பிப் பார்த்து, ``ரபூனி'' என்றார். இந்த எபிரேயச் சொல்லுக்கு `போதகரே' என்பது பொருள். இயேசு அவரிடம், ``என்னை இப்படிப் பற்றிக்கொள்ளாதே. நான் என் தந்தையிடம் இன்னும் செல்லவில்லை. நீ என் சகோதரர்களிடம் சென்று அவர்களிடம், `என் தந்தையும் உங்கள் தந்தையும் என் கடவுளும் உங்கள் கடவுளுமானவரிடம் செல்ல இருக்கிறேன்' எனச் சொல்'' என்றார். மகதலா மரியா சீடரிடம் சென்று, ``நான் ஆண்டவரைக் கண்டேன்'' என்றார்; தம்மிடம் இயேசு கூறியவற்றையும் அவர்களிடம் சொன்னார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''இயேசு மகதலா மரியாவிடம், 'ஏனம்மா அழுகிறாய்? யாரைத் தேடுகிறாய்?' என்று கேட்டார்'' (யோவான் 20:15)

மரியா மகதலா யார்? இக்கேள்விக்கு வரலாற்றில் பல பதில்கள் தரப்பட்டதுண்டு. கி.பி. நான்காம் நூற்றாண்டில் மகதலா மரியா மனம் திரும்பிய ஒரு பாவியாகச் சித்தரிக்கப்பட்டார். முதலில் அவர் விபச்சாரத்தில் ஈடுபட்டிருந்ததாகவும், இயேசுவைச் சந்தித்ததிலிருந்து அவர் மனம் மாறி, கடின தபசு மேற்கொண்டு வாழ்நாள் முழுவதும் தம் பாவத்திற்காகத் தவம் செய்ததாகவும் வரலாறுகள் எழுந்தன. ''ஏழு பேய்கள் நீங்கப் பெற்ற மகதலா மரியா'' இயேசுவின் சீடராக மாறினார் என லூக்கா நற்செய்தியில் வருகின்ற குறிப்பின் அடிப்படையில் (காண்க: லூக் 8:1-3), மரியா பெரிய பாவியாக இருந்தவர் என முடிவுசெய்தனர் சிலர். ஆனால் நோய்களுக்குக் காரணம் தீய ஆவிகளே என்னும் நம்பிக்கை நிலவிய அக்காலத்தில் மரியாவை இயேசு ஒரு நோயிலிருந்து குணப்படுத்தியிருப்பார் என முடிவுசெய்தலே சரி. பெத்தானியாவில் இயேசுவின் காலடிகளில் நறுமணத் தைலம் பூசிய மரியா கதையும் (யோவா 12:1-8), சீமோன் என்பவரில் இல்லத்தில் இயேசுவின் தலைமேல் எண்ணைய் பூசிய பெண் கதையும் (மாற் 14:3-9), அப்பெண் ''பாவியாக'' இருந்தார் என்ற குறிப்பும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டு ஒரே கதையாக மாற்றம் பெற்றன. இவ்வாறு மகதலா மரியா பற்றிய கதை எழுந்தது.

ஆனால் மகதலா மரியாவின் உண்மை வரலாறு இயேசுவின் உயிர்த்தெழுதலோடு இணைந்து பிணைந்ததாகும். கிறிஸ்தவ சமய நம்பிக்கைக்கு மையமாக இருப்பது இயேசு சாவிலிருந்து உயிர்பெற்றெழுந்தார் என்னும் உண்மையாகும். மகதலா மரியாதான் உயிர்த்தெழுந்த இயேசுவை முதல்முறையாகக் கண்டவர். அவரிடம் இயேசு ஒரு பொறுப்பை ஒப்படைக்கிறார். அதாவது மரியா சென்று, இயேசுவின் சீடர்களைச் சந்தித்து, அவர் உயிர்பெற்றெழுந்த செய்தியை அறிவிக்க வேண்டும் (காண்க: யோவா 20:17-18). உண்மையிலேயே ''திருத்தூதர்களுக்குத் தூது அறிவிக்க அனுப்பப்பட்டவர்'' மரியா ஆனார். நான்கு நற்செய்தி நூல்களிலும் இச்செய்தி குறிக்கப்பட்டிருப்பதை நாம் கருதலாம் (காண்க: யோவா 20:1-18; மாற் 16:9-11; மத் 28:1-7; லூக் 24:1-12). இயேசு உயிர்பெற்றெழுந்த ஆண்டவராக நம்மிடையே தங்கியிருக்கிறார் என்னும் உண்மையை உலகெங்கும் பறைசாற்ற நாம் அழைக்கப்படுகிறோம். இவ்வாறு நாம் நற்செய்திக்குச் சான்று பகர வேண்டும். இயேசுவின் வழியாகக் கடவுள் நம்மிடையே உறைகிறார் எனவும், உயிர்பெற்றெழுந்த இயேசுவின் ஆவி நம்மை வழிநடத்துகிறார் எனவும் நாம் உறுதியாக நம்ப வேண்டும்; அந்த நம்பிக்கையைப் பிறரோடு பகிர்ந்திட வேண்டும். இப்பொறுப்பை ஆற்றுவதில் மகதலா மரியா நமக்குச் சிறந்த முன் உதாரணம் ஆகிறார்.

மன்றாட்டு:

இறைவா, எங்கள் உள்ளத்தில் உறைந்து எங்களை வழிநடத்துகின்ற இயேசுவின் ஆவியை நாங்கள் அனுபவித்து வாழ அருள்தாரும்.