யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





மூன்றாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 16வது வாரம் செவ்வாய்க்கிழமை
2016-07-19




முதல் வாசகம்

நம் பாவங்கள் அனைத்தையும் ஆழ்கடலில் எறிந்து விடுவார்
இறைவாக்கினர் மீக்கா நூலிலிருந்து வாசகம் 7: 14-15, 18-20

ஆண்டவரே, உமது உரிமைச் சொத்தாய் இருக்கும் மந்தையாகிய உம்முடைய மக்களை உமது கோலினால் மேய்த்தருளும்! அவர்கள் கர்மேலின் நடுவே காட்டில் தனித்து வாழ்கின்றார்களே! முற்காலத்தில் நடந்தது போல அவர்கள் பாசானிலும் கிலயாதிலும் மேயட்டும்! எகிப்து நாட்டிலிருந்து நீங்கள் புறப்பட்டு வந்த நாளில் நடந்தது போல நான் அவர்களுக்கு வியத்தகு செயல்களைக் காண்பிப்பேன். உமக்கு நிகரான இறைவன் யார்? எஞ்சியிருப்போரின் குற்றத்தைப் பொறுத்து நீர் உமது உரிமைச் சொத்தில் எஞ்சியிருப்போரின் தீச்செயலை மன்னிக்கின்றீர்; உமக்கு நிகரானவர் யார்? அவர் தம் சினத்தில் என்றென்றும் நிலைத்திரார்; ஏனெனில், அவர் பேரன்பு கூர்வதில் விருப்பமுடையவர்; அவர் நம்மீது இரக்கம் காட்டுவார்; நம் தீச்செயல்களை மிதித்துப் போடுவார்; நம் பாவங்கள் அனைத்தையும் ஆழ்கடலில் எறிந்து விடுவார். பண்டைய நாளில் எங்கள் மூதாதையருக்கு நீர் ஆணையிட்டுக் கூறியது போல யாக்கோபுக்கு வாக்குப் பிறழாமையையும் ஆபிரகாமுக்குப் பேரன்பையும் காட்டியருள்வீர்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

ஆண்டவரே, உமது பேரன்பை எங்களுக்குக் காட்டியருளும்.
திருப்பாடல் 85: 1-3. 4-5. 6-7

ஆண்டவரே! உமது நாட்டின்மீது அருள் கூர்ந்தீர்; யாக்கோபினரை முன்னைய நன்னிலைக்குக் கொணர்ந்தீர். 2 உமது மக்களின் குற்றத்தை மன்னித்தீர்; அவர்களின் பாவங்கள் அனைத்தையும் மறைத்துவிட்டீர். 3 உம் சினம் முழுவதையும் அடக்கிக் கொண்டீர். கடும் சீற்றம் கொள்வதை விலக்கிக் கொண்டீர். பல்லவி

4 எம் மீட்பராம் கடவுளே! எங்களை முன்னைய நன்னிலைக்குக் கொணர்ந்தருளும்; எங்கள்மீது உமக்குள்ள சினத்தை அகற்றிக் கொள்ளும். 5 என்றென்றுமா எங்கள்மேல் நீர் சினம் கொள்வீர்? தலைமுறை தோறுமா உமது கோபம் நீடிக்கும்? பல்லவி

6 உம் மக்கள் உம்மில் மகிழ்வுறுமாறு, எங்களுக்குப் புத்துயிர் அளிக்கமாட்டீரோ? 7 ஆண்டவரே, உமது பேரன்பை எங்களுக்குக் காட்டியருளும்; உமது மீட்பையும் எங்களுக்குத் தந்தருளும். பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! `என்மீது அன்பு கொண்டுள்ளவர் நான் சொல்வதைக் கடைப்பிடிப்பார். என் தந்தையும் அவர்மீது அன்பு கொள்வார். நாங்கள் அவரிடம் வந்து அவருடன் குடிகொள்வோம்.'' அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 46-50

அக்காலத்தில் மக்கள் கூட்டத்தோடு இயேசு பேசிக்கொண்டிருந்தபோது, அவருடைய தாயும் சகோதரர்களும் வந்து அவருடன் பேச வேண்டும் என்று வெளியே நின்றுகொண்டிருந்தார்கள். ஒருவர் இயேசுவை நோக்கி, ``அதோ, உம் தாயும் சகோதரர்களும் உம்மோடு பேச வேண்டும் என்று வெளியே நின்றுகொண்டிருக்கின்றார்கள்'' என்றார். அவர், இதைத் தம்மிடம் கூறியவரைப் பார்த்து, ``என் தாய் யார்? என் சகோதரர்கள் யார்?'' என்று கேட்டார். பின் தம் சீடர் பக்கம் கையை நீட்டி, ``என் தாயும் சகோதரர்களும் இவர்களே. விண்ணகத்திலுள்ள என் தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றுபவரே என் சகோதரரும் சகோதரியும் தாயும் ஆவார்'' என்றார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

நாமே இயேசுவின் தாயும், சகோதரரும்!

இயேசுவின் தாய், மற்றும் சகோதரர், சகோதரிகள் என்னும் உயர்ந்த இடத்தை இயேசு நமக்குத் தர முன்வருவது ஒரு வியப்பான வாய்ப்பு. யாரெல்லாம் இறைத் தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றுகிறார்களோ, அவர்கள் அனைவருமே இயேசுவின் தாயும், உடன் பிறந்தோரும்தான். இந்த மகிழ்ச்சியான நற்செய்திக்காக நன்றி கூறுவோம். சரி, இறைத் தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றுவது எப்படி? பல வழிகள் இருக்கின்றன. இதோ, அவற்றுள் ஒன்று; நமக்கு விருப்பமில்லாத, எதிர்பாராத நிகழ்வுகள் அவ்வப்போது நம் வாழ்வில் நடக்கின்றன. நமக்கு எரிச்சலையும், கசப்புணர்வையும் தருகின்றன. அந்த நேரங்களில் எல்லாம். இதுவும் இறைவனின் திருவுளமாக இருக்கலாம். இதன் வழியாகவும் இறைவன் எனக்க நன்மையைச் செய்யலாம். எனவே, இதை நான் ஏற்றுக்கொள்கிறேன். இதற்காக நன்றி கூறுகிறேன்” என்று சொல்வது இறைத் திருவுளத்துக்குப் பணியும் ஒரு செயலாக மாறுகிறது. இந்த நாள் முழுதும் இதை முயற்சி செய்வோமா?

மன்றாட்டு:

தந்தையின் விருப்பப்படி வாழ்ந்த இயேசுவே, உம்மைப் போற்றுகிறேன். உம்மைப் போலNவு நானும் இறைத் தந்தையின் விருப்பத்தை எப்போதும் நிறைவேற்றி, அவருக்கு மாட்சியளிக்க எனக்கு அருள்தாரும். இந்த நாளில் நான் சந்திக்கும் ஒவ்வொரு நிகழ்விலும், இறைவனின் விருப்பத்தை நிறைவேற்ற எனக்கு ஆற்றல் தாரும். ஆமென்.