யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





மூன்றாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 15வது வாரம் செவ்வாய்க்கிழமை
2016-07-12




முதல் வாசகம்

உங்களிடம் விசுவாசம் இல்லாவிடில், நீங்கள் நிலைபெற்றிருக்க மாட்டீர்கள்.
இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 7: 1-9

உசியாவின் பேரனும் யோதாமின் மகனுமான ஆகாசு யூதா நாட்டை ஆட்சி செய்த நாள்களில், இரட்சின் என்னும் சிரியா நாட்டு அரசனும் இரமலியாவின் மகன் பெக்கா என்னும் இஸ்ரயேல் நாட்டு அரசனும் எருசலேமுக்கு எதிராகப் போர் தொடுத்து அதை வீழ்த்த முயன்றனர். அவர்களால் அது இயலாமற் போயிற்று. �சிரியா எப்ராயிமோடு கூட்டணி அமைத்துக் கொண்டது� என்னும் செய்தி தாவீதின் குடும்பத்தாருக்கு அறிவிக்கப்பட்டது; உடனே பெருங் காற்றினால் காட்டு மரங்கள் அலையதிர்வு கொள்வதுபோல், ஆகாசின் உள்ளமும் அவர் நாட்டு மக்களின் உள்ளங்களும் அலைக்கழிக்கப்பட்டன. அப்பொழுது ஆண்டவர் எசாயாவை நோக்கி: �நீ உன் மகன் செயார்யாசிபை உன்னுடன் அழைத்துச் சென்று ஆகாசைச் சந்திப்பாயாக. வண்ணான் வயலுக்குச் செல்லும் வழியில், மேற்குளத்துக்குப் போகும் கால்வாயின் மறுமுனையில் நீ ஆகாசைக் காண்பாய். அவனுக்கு இதைச் சொல்: நீ அமைதியாய் இரு; அஞ்சாதிருந்து நடப்பனவற்றை உற்றுப் பார்; இரட்சின், சிரியா நாட்டினர், இரமலியாவின் மகன் ஆகியோரின் கடும் சினத்தைக் கண்டு மனங்கலங்காதே. அவர்கள் புகைந்து கொண்டிருக்கும் இரு கொள்ளிக் கட்டைகளிலிருந்து வரும் புகை போன்றவர்கள். சிரியா எப்ராயிமோடும் இரமலியாவின் மகனோடும் உனக்கெதிராய்ச் சதித்திட்டம் தீட்டி, �யூதாவுக்கு எதிராய் நாம் படை எடுத்துச் சென்று அதை நடுநடுங்கச் செய்வோம்; அதற்கு எதிராய்ப் போரிட்டு, அதைப் பிடித்து தயேல் என்பவனின் மகனை அதற்கு அரசனாக்குவோம்� என்று தங்களுக்குள் பேசிக் கொள்கிறார்கள்.� ஆதலால் ஆண்டவர் இவ்வாறு உரைக்கிறார்: �அவர்களது திட்டம் நிலைத்து நிற்காது, அது ஒருபோதும் நிறைவேறாது. ஏனெனில் சிரியாவின் தலைநகர் தமஸ்கு; தமஸ்கு நகரின் தலைவன் இரட்சின். (இன்னும் அறுபத்தைந்து ஆண்டுகளில் எப்ராயிம் ஒரு மக்களினம் என்னும் தகுதியை இழக்கும் வண்ணம் தவிடு பொடியாக்கப்படும்). எப்ராயிமின் தலைநகர் சமாரியா; சமாரியா நகரின் தலைவன் இரமலியாவின் மகன். உங்கள் நம்பிக்கையில் நிலைத்திராவிடில் நீங்களும் நிலைத்து நிற்க மாட்டீர்கள்.�

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

கடவுள் தம் நகரை எந்நாளும் நிலைத்திருக்கச் செய்வார்.
திருப்பாடல் 48: 1-2-3. 4-5. 6-7

1 ஆண்டவர் மாண்பு மிக்கவர்; நம் கடவுளின் நகரில், அவரது திருமலையில் மிகுந்த புகழுக்கு உரியவர். 2ய தொலை வடக்கில் திகழும் சீயோன் மலை; அனைத்து உலகிற்கும் மகிழ்ச்சியாய் இலங்குகின்றது. பல்லவி

2b மாவேந்தரின் நகரும் அதுவே. 3 அதன் அரண்மனைகளில் கடவுள் வீற்றிருந்து, தம்மையே அதன் கோட்டை எனக் காட்டியுள்ளார். பல்லவி

4 இதோ! அரசர் அனைவரும் ஒன்று கூடினர்; அணிவகுத்து ஒன்றாக வந்தனர்; 5 அந்தோ! பார்த்ததும் திகைத்தனர்; திகிலடைந்து ஓட்டம் பிடித்தனர். பல்லவி

6 அங்கே அச்சம் அவர்களை ஆட்கொண்டது; பேறுகாலப் பெண்போல் அவர்கள் துடிதுடித்தனர். 7 தர்சீசுக் கப்பல்களைக் கீழைக் காற்றினால் நீர் தகர்த்தெறிகின்றீர். பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! ! இன்று உங்கள் இதயத்தைக் கடினப்படுத்திக் கொள்ளாதீர்கள். மாறாக நீங்கள் அவரது குரலுக்குச் செவிகொடுத்தால் எத்துணை நலம் அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 20-24

அக்காலத்தில் இயேசு வல்ல செயல்கள் பல நிகழ்த்திய நகரங்கள் மனம் மாறவில்லை. எனவே அவர் அவற்றைக் கண்டிக்கத் தொடங்கினார். ``கொராசின் நகரே, ஐயோ! உனக்குக் கேடு! பெத்சாய்தா நகரே, ஐயோ! உனக்குக் கேடு! ஏனெனில் உங்களிடையே செய்யப்பட்ட வல்ல செயல்கள் தீர், சீதோன் நகரங்களில் செய்யப்பட்டிருந்தால் அங்குள்ள மக்கள் முன்பே சாக்கு உடை உடுத்திச் சாம்பல் பூசி மனம் மாறியிருப்பர். தீர்ப்பு நாளில் தீருக்கும் சீதோனுக்கும் கிடைக்கும் தண்டனையைவிட உங்களுக்குக் கிடைக்கும் தண்டனை கடினமாகவே இருக்கும் என நான் உங்களுக்குச் சொல்கிறேன். கப்பர்நாகுமே, நீ வானளாவ உயர்த்தப்படுவாயோ? இல்லை, பாதாளம் வரை தாழ்த்தப்படுவாய். ஏனெனில் உன்னிடம் செய்யப்பட்ட வல்ல செயல்கள் சோதோமில் செய்யப்பட்டிருந்தால் அது இன்றுவரை நிலைத்திருக்குமே! தீர்ப்பு நாளில் சோதோமுக்குக் கிடைக்கும் தண்டனையைவிட உனக்குக் கிடைக்கும் தண்டனை கடினமாகவே இருக்கும் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்'' என்றார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''இயேசு, 'கப்பர்நாகுமே, நீ வானளாவ உயர்த்தப்படுவாயோ? இல்லை, பாதாளம் வரை தாழ்த்தப்படுவாய். ஏனெனில் உன்னிடம் செய்யப்பட்ட வல்ல செயல்கள் சோதோமில் செய்யப்பட்டிருந்தால் அது இன்றுவரை நிலைத்திருக்குமே!' என்றார்'' (மத்தேயு 11:23)

கப்பர்நாகும் என்னும் ஊருக்கு இயேசு அடிக்கடி செல்வதும் அங்குத் தங்கியிருப்பதும் வழக்கம். இயேசுவின் போதனையும் அவர் புரிந்த வல்ல செயல்களும் அந்த ஊர் மக்களுக்கு நன்றாகவே தெரியும். இயேசு கப்பர்நாகுமில் பணியாற்றியது பற்றி மத்தேயு பல இடங்களில் குறிப்பிட்டுள்ளார் (காண்க மத் 4:12; 8:5; 9:1; 17:24). கப்பர்நாகும் மக்கள் இயேசுவின் போதனையைக் கண்டு வியப்புற்று, கடவுளைப் போற்றிய நேரங்களும் இருந்தன (காண்க: மத் 9:8). இருந்தாலும் கப்பர்நாகும் ஊரில் இயேசுவுக்கு முதல்முறையாக எதிர்ப்பும் எழுந்தது (காண்க: மத் 9:3,11). எசாயா இறைவாக்கினர் நூலிலி பாபிலோனியாவுக்கு எதிராகக் கூறப்பட்ட வாக்கு இங்கே கப்பர்நாகுமுக்கு எதிராக உரைக்கப்டுகிறது. வானளாவ உயர்த்தப்பட்ட கப்பர்நாகும் கடவுளின் வல்லமை இயேசுவில் துலங்கியதைக் காணும் பேறுபெற்றிருந்தது. ஆனால் இயேசுதான் ''கடவுளால் அனுப்பப்பட்டவர்'' (மத் 11:3) என்னும் உண்மையை ஏற்க கப்பர்நாகும் ஊர் மக்கள் தவறிவிட்டார்கள். இயேசுவிடத்தில் கடவுளின் ஞானம் துலங்கியதை அவர்கள் ஏற்க முன்வரவில்லை (மத் 11:9).எனவே, கப்பர்நாகும் ''பாதாளம் வரை தாழ்த்தப்படும்''. இங்கே நாம் காணும் உண்மை என்னவென்றால், இயேசு நமக்கு அறிவிக்கின்ற செய்தியை நாம் திறந்த மனத்தோடு ஏற்றிட வேண்டும். அந்த உண்மையை நம் உளக் கண்கள் நமக்கு உணர்த்திய பிறகும் நாம் அதை ஏற்றுக்கொள்ள மறுத்தால் அதன் விளைவு நமக்கு அழிவையே கொணரும்.

உண்மையைக் கண்டும் அதை ஏற்க மறுப்பது கடவுளையே புறக்கணிப்பதற்கு சமம். ஏனென்றால் கடவுள் நம் உள்ளத்தின் ஆழத்தில், நமது மனச் சாட்சியின் வழியாக நமக்குத் தம்மை வெளிப்படுத்துகிறார். நாம் இவ்வாறு கண்டுகொள்கின்ற கடவுளின் உண்மையை ஏற்காமல் உதறித்தள்ளும்போது கடவுளின் செயலுக்கே முட்டுக்கட்டை இடுகிறோம். எனவே, கடவுளிடமிருந்து நம்மையே பிரித்துவிடுகிறோம். நாம் உயர்வதும் தாழ்வதும் நம்மைப் பொறுத்ததே எனலாம். கடவுள் நம் சுதந்திரத்தை மதிக்கிறார். அவருடைய உண்மையை அவர் நம்மீது திணிப்பதில்லை. எனவே நாம் சுதந்திர உணர்வோடு அவருடைய செய்தியை ஏற்றிட முன்வரவேண்டும். அன்றைய கப்பர்நாகும் மக்கள் இயேசு கொணர்ந்த உண்மையைக் காணத் தவறியதால் அவர் அவர்களைக் குறித்து மன வருத்தம் அடைந்தார். கடவுளிடமிருந்து வருகின்ற செய்தியை ஏற்று, நாம் மனம் மாற வேண்டும்; நம் வாழ்க்கையைத் திருத்தி ஒரு புதிய முறையில் அதை வாழ்ந்திட வேண்டும். அப்போது கடவுளின் அருள் நம்மோடு என்றும் தங்கியிருந்து நம்மை வழிநடத்திச் செல்லும்.

மன்றாட்டு:

இறைவா, உம் குரலுக்கு நாங்கள் கவனத்தோடு செவிமடுக்க அருள்தாரும்.