யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





மூன்றாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 12வது வாரம் வியாழக்கிழமை
2016-06-30




முதல் வாசகம்

என் மக்களாகிய இஸ்ரயேலிடம் சென்று, இறைவாக்கு உரைத்திடு.
இறைவாக்கினர் ஆமோஸ் நூலிலிருந்து வாசகம் 7: 10-17

அந்நாள்களில் பெத்தேலின் குருவாகிய அமட்சியா என்பவன் இஸ்ரயேலின் அரசன் எரொபவாமுக்கு இவ்வாறு சொல்லி அனுப்பினான்: ``இஸ்ரயேல் வீட்டாரிடையே ஆமோஸ் உமக்கு எதிராகச் சதி செய்கிறான். அவன் சொல்வதை எல்லாம் இந்த நாட்டால் தாங்கமுடியவில்லை. ஏனெனில், `எரொபவாம் வாளால் மடிவான்; அவனது நாட்டைவிட்டு இஸ்ரயேல் அடிமையாய்க் கொண்டு போகப்படும்' என்று ஆமோஸ் சொல்லுகிறான்.'' பின்பு அமட்சியா ஆமோசைப் பார்த்து, ``காட்சி காண்பவனே, இங்கிருந்து போய்விடு; யூதாவின் நாட்டுக்கு ஓடிவிடு; அங்கே போய் இறைவாக்கு உரைத்து, உன் பிழைப்பைத் தேடிக்கொள். பெத்தேலில் இனி ஒருபோதும் இறைவாக்கு உரைக்காதே; ஏனெனில், இது அரசின் புனித இடம். அரசுக்குரிய இல்லம்'' என்று சொன்னான்.ஆமோஸ் அதற்கு மறுமொழியாக அமட்சியாவைப் பார்த்துக் கூறினார்: ``நான் இறைவாக்கினன் இல்லை; இறைவாக்கினர் குழுவில் உறுப்பினனும் இல்லை; நான் ஆடு மாடு மேய்ப்பவன், காட்டு அத்திமரத் தோட்டக்காரன். ஆடுகள் ஓட்டிக்கொண்டுபோன என்னை ஆண்டவர் தேர்ந்தெடுத்து, `என் மக்களாகிய இஸ்ரயேலிடம் சென்று, இறைவாக்கு உரைத்திடு' என்று அனுப்பினார். எனவே, இப்பொழுது ஆண்டவரின் வாக்கைக் கேள்: `இஸ்ரயேலுக்கு எதிராக இறைவாக்கு உரைக்காதே; ஈசாக்கின் வீட்டார்க்கு எதிராகப் பேசாதே' என்று நீ சொல்கிறாய்! ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: ``உன் மனைவி நகரில் விலைமகளாய் இருப்பாள்; உன் புதல்வர் புதல்வியர் வாளால் மடிவர்; உன் நிலபுலம் பங்குபோட்டுக் கொள்ளப்படும், நீயோ புனிதமற்ற நாட்டிலே மாண்டு போவாய்; இஸ்ரயேல் தன் நாட்டுக்கு வெளியே அடிமையாகக் கொண்டு போகப்படும்.''

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

ஆண்டவரின் நீதிநெறிகள் உண்மையும் நீதியுமானவை
திருப்பாடல்19: 7. 8. 9. 10

ஆண்டவரின் திருச்சட்டம் நிறைவானது; அது புத்துயிர் அளிக்கின்றது. ஆண்டவரின் ஒழுங்குமுறை நம்பத்தக்கது; எளியவருக்கு அது ஞானம் அளிக்கின்றது. பல்லவி

8 ஆண்டவரின் நியமங்கள் சரியானவை; அவை இதயத்தை மகிழ்விக்கின்றன. ஆண்டவரின் கட்டளைகள் ஒளிமயமானவை; அவை கண்களை ஒளிர்விக்கின்றன. பல்லவி

9 ஆண்டவரைப் பற்றிய அச்சம் தூயது; அது எந்நாளும் நிலைத்திருக்கும். ஆண்டவரின் நீதிநெறிகள் உண்மையானவை; அவை முற்றிலும் நீதியானவை. பல்லவி

10 அவை பொன்னினும், பசும் பொன்னினும் மேலாக விலைமிக்கவை; தேனினும், தேனைடையினின்று சிந்தும் தெளிதேனினும் இனிமையானவை. பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! கடவுள் கிறிஸ்துவின் வாயிலாக உலகினரைத் தம்மோடு ஒப்புரவாக்கினார். அவரே அந்த ஒப்புரவுச் செய்தியை எங்களிடம் ஒப்படைத்தார். அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 1-8

அக்காலத்தில் இயேசு படகேறி மறு கரைக்குச் சென்று தம் சொந்த நகரை அடைந்தார். அப்பொழுது சிலர் முடக்குவாதமுற்ற ஒருவரைக் கட்டிலில் கிடத்தி அவரிடம் கொண்டு வந்தனர். இயேசு அவர்களுடைய நம்பிக்கையைக் கண்டு முடக்குவாதமுற்றவரிடம், ``மகனே, துணிவோடிரு, உம் பாவங்கள் மன்னிக்கப்பட்டன'' என்றார். அப்பொழுது மறைநூல் அறிஞர்கள் சிலர், ``இவன் கடவுளைப் பழிக்கிறான்'' என்று தமக்குள் சொல்லிக் கொண்டனர். அவர்களுடைய சிந்தனைகளை இயேசு அறிந்து அவர்களை நோக்கி, ``உங்கள் உள்ளங்களில் நீங்கள் தீயன சிந்திப்பதேன்? `உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன' என்பதா, `எழுந்து நட' என்பதா, எது எளிது? மண்ணுலகில் பாவங்களை மன்னிக்க மானிட மகனுக்கு அதிகாரம் உண்டு என்பதை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும்'' என்றார். எனவே அவர் முடக்குவாதமுற்றவரை நோக்கி, ``நீ எழுந்து உன்னுடைய கட்டிலைத் தூக்கிக்கொண்டு வீட்டுக்குப் போ'' என்றார். அவரும் எழுந்து தமது வீட்டுக்குப் போனார். இதைக் கண்ட மக்கள் கூட்டத்தினர் அச்சமுற்றனர். இத்தகைய அதிகாரத்தை மனிதருக்கு அளித்த கடவுளைப் போற்றிப் புகழ்ந்தனர்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''சிலர் முடக்குவாதமுற்ற ஒருவரைக் கட்டிலில் கிடத்தி இயேசுவிடம் கொண்டு வந்தனர். இயேசு அவர்களுடைய நம்பிக்கையைக் கண்டு முடக்குவாதமுற்றவரிடம், 'மகனே, துணிவோடிரு, உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன' என்றார்'' (மத்தேயு 9:2)

முடக்குவாதமுற்ற ஒரு மனிதரைச் சிலர் இயேசுவிடம் கொண்டுவருகிறார்கள். இயேசு அந்த மனிதருக்கு அவர்தம் நோயிலிருந்து விடுதலை அளித்ததோடு அவருடைய பாவங்களையும் மன்னிக்கிறார். இந்தப் புதுமையை மாற்கு விரிவாகத் தருகிறார் (காண்க: மாற் 2:1-13). மத்தேயு இந்நிகழ்ச்சியைச் சுருக்கமாகவே குறித்துள்ளார் (மத் 9:1-8). மக்களுக்கு நோய் ஏற்படுவது அவர்கள் செய்த பாவத்தின் காரணமாகவே என்னும் எண்ணம் அக்கால இஸ்ரயேலரிடம் இருந்தது. ஆனால் இயேசு இக்கருத்தை ஏற்கவில்லை (காண்க: யோவா 9:3). பாவம் என்பது மனித வாழ்க்கையில் நிலவுகின்ற ஒரு தீமை. அதை முறியடித்து அழிக்கும் வல்லமை கடவுளுக்கே உண்டு. ஆனால் இயேசு முடக்குவாதமுற்ற மனிதரை நோக்கி, ''மகனே, துணிவோடிரு, உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன'' (மத் 9:2) என்று கூறியதன் வழியாகத் தமக்குப் பாவங்களை மன்னிக்கும் அதிகாரம் உண்டெனக் காட்டுகிறார். கடவுள் ஒருவருக்கு மட்டுமே உரிய அதிகாரத்தை இயேசு தாமும் கொண்டிருப்பதாகக் கூறியதால் அங்கிருந்த மறைநூல் அறிஞர்கள் சிலர் ''இவன் கடவுளைப் பழிக்கிறான்'' என்று தமக்குள் கூறிக்கொண்டனர்.

இயேசு முடக்குவாதமுற்ற மனிருக்கு உடல்நலம் மட்டும் அளிக்கவில்லை; அந்த மனிதருக்கு உளநலமும் ஆன்ம நலமும் இயேசு வழங்கினார். பாவம் என்னும் கொடிய பிணியிலிருந்து அந்த மனிதருக்கு இயேசு விடுதலை அளித்தார். அவ்வாறு வழங்கப்பட்ட விடுதலையின் வெளி அடையாளம்தான் அந்த மனிதரின் முடக்குவாதம் நீங்கி, எழுந்து நடக்கும் சக்தியைப் பெற்றது. இயேசுவின் வல்லமையால் நலம் பெற்ற அந்த மனிதர் ''எழுந்து வீட்டுக்குப் போனார்'' (மத் 9:7). இயேசு பாவத்தை மன்னித்து மக்களுக்கு நலம் அளிக்கவே இந்த உலகிற்கு வந்தார். அவர் ஆற்றிய பணியைத் தொடர்ந்து நடத்த திருச்சபை அழைக்கப்படுகிறது. திருச்சபையும் கடவுளின் வல்லமையோடு செயல்பட்டு, கடவுள் வழங்குகின்ற பாவ மன்னிப்பை மக்களுக்கு அளிக்கின்ற கருவியாகச் செயல்படுகிறது. திருச்சபை ஆற்றுகின்ற பாவ மன்னிப்புப் பணி மனிதருடைய ஆன்ம நலனை மட்டுமே கொணர்வதில்லை. மாறாக, முழு மனிதரின் நலனுக்காகவும் உழைக்க திருச்சபை அழைக்கப்படுகிறது. மக்களுடைய வாழ்வைச் சிறுமைப்படுத்துகின்ற அனைத்துத் தீமைகளிலிருந்தும் அவர்களுக்கு விடுதலை வழங்க இயேசு நம்மிடையே வந்தார். அதுபோலவே, திருச்சபையும் இயேசு கொணர்ந்த நலமளிக்கும் பணியைத் தொடர்ந்து ஆற்றிட வேண்டும். இயேசுவின் வல்லமையால் புதுத் தெம்பு பெற்ற நாம் ''எழுந்து நடக்க'' வேண்டும். பிறர் ''எழுந்து நடக்க'' நம்மையே அர்ப்பணிக்க வேண்டும்.

மன்றாட்டு:

இறைவா, உம் அன்பினால் முழுநலம் பெற்ற நாங்கள் நன்றியுடைய மக்களாக வாழ்ந்திட அருள்தாரும்.