யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





மூன்றாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 13வது வாரம் செவ்வாய்க்கிழமை
2016-06-28




முதல் வாசகம்

தலைவராகிய ஆண்டவர் பேசியிருக்க, இறைவாக்கு உரைக்காதவர் எவர்?
இறைவாக்கினர் ஆமோஸ் நூலிலிருந்து வாசகம் 3: 1-8; 4: 11-12

இஸ்ரயேல் மக்களே! கேளுங்கள்; உங்களுக்கு எதிராக - ஆம், எகிப்து நாட்டினின்று நான் அழைத்து வந்த முழுக் குடும்பமாகிய உங்களுக்கு எதிராக - ஆண்டவர் உரைக்கும் இந்த வாக்கைக் கேளுங்கள்: ``உலகத்திலுள்ள எல்லா மக்களினங்களுக்குள்ளும் உங்களைத்தான் நான் சிறப்பாக அறிந்து கொண்டேன்; ஆதலால், உங்கள் தீச்செயல் அனைத்திற்காகவும் நான் உங்களைத் தண்டிப்பேன். தங்களுக்குள் உடன்பாடு இல்லாமல் இருவர் சேர்ந்து நடப்பார்களோ? இரை அகப்படாமல் இருக்கும்போது காட்டில் சிங்கம் கர்ச்சிக்குமோ? ஒன்றையும் பிடிக்காமல் இருக்கையிலேயே குகையிலிருந்து இளஞ்சிங்கம் முழக்கம் செய்யுமோ? வேடன் தரையில் வலைவிரிக்காதிருக்கும்போதே பறவை கண்ணியில் சிக்கிக் கொள்வதுண்டோ? ஒன்றுமே சிக்காதிருக்கும் போது பொறி தரையைவிட்டுத் துள்ளுவதுண்டோ? நகரில் எக்காளம் ஊதப்படுமானால், மக்கள் அஞ்சி நடுங்காமல் இருப்பார்களோ?ஆண்டவர் அனுப்பவில்லையெனில், நகருக்குத் தீமை தானாக வந்திடுமோ? தம் ஊழியர்களாகிய இறைவாக்கினர்களுக்குத் தம் மறைபொருளை வெளிப்படுத்தாமல், தலைவராகிய ஆண்டவர் ஏதும் செய்வதில்லை. சிங்கம் கர்ச்சனை செய்கின்றது; அஞ்சி நடுங்காதவர் எவர்? தலைவராகிய ஆண்டவர் பேசியிருக்க, இறைவாக்கு உரைக்காதவர் எவர்? சோதோம், கொமோராவின் மக்களைக் கடவுள் அழித்தது போல உங்களுள் சிலரை அழித்தேன். நீங்களோ, நெருப்பிலிருந்து இழுக்கப்பட்ட கொள்ளிக் கட்டைபோல் ஆனீர்கள்; ஆயினும் நீங்கள் என் பக்கம் திரும்பவில்லை'' என்கிறார் ஆண்டவர். ``ஆகையால், இஸ்ரயேலே! உனக்கும் இவ்வாறே செய்வேன். இஸ்ரயேலே! இப்படி நான் செய்யப் போவதால் உன் கடவுளைச் சந்திக்கத் தயாராயிரு!''

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

ஆண்டவரே, உமது நீதியின் பாதையில் என்னை நடத்தும்.
திருப்பாடல் 5: 4-5. 6. 7

4 நீர் பொல்லாங்கைப் பார்த்து மகிழும் இறைவன் இல்லை; உமது முன்னிலையில் தீமைக்கு இடமில்லை. 5 ஆணவமிக்கோர் உமது கண்முன் நிற்க மாட்டார்; தீங்கிழைக்கும் அனைவரையும் நீர் வெறுக்கின்றீர். பல்லவி

6 பொய் பேசுவோரை நீர் அழித்திடுவீர்; கொலை வெறியரையும் வஞ்சகரையும் அருவருக்கின்றீர். பல்லவி

7 நானோ உம் பேரருளால் உமது இல்லம் சென்றிடுவேன்; உமது திருத்தூயகத்தை நோக்கி இறையச்சத்துடன் உம்மைப் பணிந்திடுவேன். பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவருக்காக ஆவலுடன் நான் காத்திருக்கின்றேன்; என் நெஞ்சம் காத்திருக்கின்றது; அவரது சொற்களுக்காக ஆவலுடன் காத்திருக்கின்றேன் அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 8: 23-27

அக்காலத்தில் இயேசு படகில் ஏறவே, அவருடைய சீடர்களும் அவரோடு ஏறினார்கள். திடீரெனக் கடலில் பெருங் கொந்தளிப்பு ஏற்பட்டது. படகுக்குமேல் அலைகள் எழுந்தன. ஆனால் இயேசு தூங்கிக் கொண்டிருந்தார். சீடர்கள் அவரிடம் வந்து, ``ஆண்டவரே, காப்பாற்றும், சாகப் போகிறோம்'' என்று சொல்லி அவரை எழுப்பினார்கள். இயேசு அவர்களை நோக்கி, ``நம்பிக்கை குன்றியவர்களே, ஏன் அஞ்சுகிறீர்கள்?'' என்று கேட்டு, எழுந்து காற்றையும் கடலையும் கடிந்து கொண்டார். உடனே மிகுந்த அமைதி உண்டாயிற்று. மக்கள் எல்லாரும், ``காற்றும் கடலும் இவருக்குக் கீழ்ப்படிகின்றனவே! இவர் எத்தகையவரோ?'' என்று வியந்தனர்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''இயேசு காற்றையும் கடலையும் கடிந்துகொண்டார். உடனே மிகுந்த அமைதி உண்டாயிற்று'' (மத்தேயு 8:26)

இயேசு கலிலேயாக் கடலின் மறுகரைக்குச் செல்கிறார். ஆனால் கடலில் பெருங்கொந்தளிப்பு ஏற்படுகிறது. இயேசுவும் சீடர்களும் இருந்த படகு தண்ணீரில் கவிழ்ந்து மூழ்கிவிடுகின்ற ஆபத்து எழுகின்றது. நிலநடுக்கம்தான் ஏற்பட்டதோ என நினைத்த சீடர்களை அச்சம் மேற்கொள்கிறது. ஆனால் இயேசுவோ ''தூங்கிக்கொண்டிருந்தார்'' (மத் 8:24). கடலில் ஏற்பட்ட கொந்தளிப்பு சீடர்களின் வாழ்வில் ஏற்படவிருக்கின்ற கொந்தளிப்புக்கு ஒரு முன் அடையாளம்போல உள்ளது. அவர்களது கனவுக் கோட்டைகள் இடிந்து தகரப்போகின்றன. தலைவரும் போதகருமான இயேசுவே துன்புற்று இறக்கப் போகிறார் என்றால் தங்களுடைய உயிருக்கும் ஆபத்து ஏற்பட்டுவிடுமோ என அவர்கள் அஞ்சி நடுங்குவார்கள்; அவர்களுடைய வாழ்வு பெரும் கொந்தளிப்புக்கு உள்ளாகும். ஆனால் இயேசு அவர்களுடைய அச்சத்தைப் போக்குகின்றார்: ''ஏன் அஞ்சுகிறீர்கள்?'' என்று கேட்ட இயேசு அவர்களுடைய நம்பிக்கையின்மையைக் கடிந்துகொள்கிறார் (மத் 8:26).

சீடர்கள் இயேசுவை முழுமையாக நம்பினால் அவர்களுடைய வாழ்க்கையில் ஏற்படுகின்ற கொந்தளிப்புகள் அவர்களுக்குத் தீங்கு இழைக்க முடியாது. ஏனென்றால் இயேசு மனிதருக்கு வாழ்வளிக்க வந்தார். நோயுற்றவர்க்கு அவர் குணமளித்தார்; இறந்தோரை உயிர்பெற்றெழச் செய்தார். கடவுளின் வல்லமை அவருடைய வாழ்வில் துலங்கிற்று. அதே வல்லமையோடு இயேசு ''காற்றையும் கடலையும் கடிந்துகொண்டார். உடனே மிகுந்த அமைதி உண்டாயிற்று'' (மத் 8:26). நம் வாழ்வில் அமைதி வேண்டும் என்றால் நாம் இயேசுவை அணுகிச் செல்ல வேண்டும். அவர் தூங்குகிறாரே என நாம் எண்ண வேண்டியதில்லை. மாறாக, நமக்காக எந்நாளும் விழித்திருக்கின்றவர் அவர். இயேசுவின் வல்லமையால் தாங்கள் ஆபத்திலிருந்து காப்பாற்றப்பட்டதை உணர்ந்த சீடர்களின் அச்சம் கதிரவன்முன் பனிபோல் மறைகிறது; அவர்கள் வியப்பில் ஆழ்ந்துபோகிறார்கள். தங்கள் வாழ்க்கையில் ஏற்படுகின்ற தடைகளைக் கண்டு இனிமேல் அவர்கள் அஞ்ச வேண்டியதில்லை. தங்கள் கண்முன் நிற்கின்ற இந்த மனிதர் கடவுளின் வல்லமையோடு செயல்படுவதைக் கண்டு அவர்கள் மக்களோடு சேர்ந்து ஆச்சரியமடைகிறார்கள். ''காற்றும் கடலும் இவருக்குக் கீழ்ப்படிகின்றனவே! இவர் எத்தகையவரோ?'' என்னும் கேள்விதான் அவர்களது உள்ளத்தில் மேலோங்கி எழுகின்றது (மத் 8:27). நாமும் கடவுளின் வல்லமையைக் கண்டு வியப்படைகின்றோம். நம் வாழ்வில் கடவுள் தம் மகன் இயேசுவின் வழியாகத் தூய ஆவியின் ஆற்றலால் புரிகின்ற அரும் செயல்களைக் கண்டு நாம் அவரிடத்தில் அசையாத நம்பிக்கை கொள்ள அழைக்கப்படுகிறோம்.

மன்றாட்டு:

இறைவா, எங்கள் உள்ளத்தில் எழுகின்ற கொந்தளிப்பைப் போக்கி உமது அமைதியை அளித்தருளும்.