யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





மூன்றாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 12வது வாரம் சனிக்கிழமை
2016-06-25

புனித வில்லியம்




முதல் வாசகம்

சீயோன் மகளே! ஆண்டவரை நோக்கிக் கூக்குரலிடுக!
புலம்பல் நூலிலிருந்து வாசகம் 2: 2,10-14,18-19

ஆண்டவர் யாக்கோபின் அனைத்துக் குடியிருப்புகளையும் இரக்கமின்றி அழித்தார்; அவர் சீற்றமடைந்து மகள் யூதாவின் அரண்களைத் தகர்த்தார்; அவற்றைத் தரைமட்டமாக்கினார். அவரது நாட்டையும் அதன் தலைவர்களையும் மேன்மை குலையச் செய்தார். மகள் சீயோனின் பெரியோர் தரையில் மௌனமாய் அமர்ந்துள்ளனர்; அவர்கள் தங்கள் தலைமேல் புழுதியைத் தூவிக் கொண்டுள்ளனர்; சாக்கு உடை உடுத்தியுள்ளனர்; எருசலேமின் கன்னிப் பெண்கள் தங்கள் தலைகளைத் தரை மட்டும் தாழ்த்தியுள்ளனர். என் கண்கள் கண்ணீர் சொரிந்து சோர்ந்துள்ளன! என் குலை நடுங்குகின்றது! என் துயரத்தால் என் ஈரல் வெடித்துத் தரையில் சிதறுகின்றது! என் மக்களாகிய மகள் நசுக்கப்பட்டுள்ளாள்! நகர் வீதிகளில் குழந்தைகளும் மழலைகளும் மயங்கிக் கிடக்கின்றனர்! அவர்கள் தங்கள் அன்னையரிடம், `அப்பம், திராட்சை இரசம் எங்கே?' என்று கேட்கின்றனர்! படுகாயமுற்றோரைப் போல, நகர் வீதிகளில் அவர்கள் மயங்கி வீழ்கின்றனர்! தாய் மடியில் உயிர் விட்டவர் போல் ஆகின்றனர்! மகளே! எருசலேம்! உன் சார்பாக நான் என்ன சொல்வேன்? உன்னை எதற்கு ஒப்பிடுவேன்? மகள் சீயோனே! கன்னிப் பெண்ணே! யாருக்கு உன்னை இணையாக்கித் தேற்றுவேன் உன்னை? உன் காயம் கடலைப் போல் விரிந்துள்ளதே! உன்னைக் குணமாக்க யாரால் முடியும்? உன் இறைவாக்கினர் உனக்காகப் பொய்யும் புரட்டுமான காட்சிகளைக் கண்டனர்; நீ நாடுகடத்தப்பட இருப்பதைத் தவிர்க்குமாறு, உன் நெறிகேடுகளை அவர்கள் உனக்கு எடுத்துச் சொல்லவில்லை; அவர்கள் பொய்யையும் அபத்தங்களையும் காட்சியாகக் கண்டு, உனக்குப் பொய்வாக்கு உரைத்தனர்! அவர்களின் இதயம் என் தலைவனை நோக்கிக் கூக்குரலிடுகின்றது; மகள் சீயோனின் மதிலே! இரவும் பகலும் வெள்ளமெனக் கண்ணீர் பொழி! உனக்கு ஓய்வு வேண்டாம்! கண்ணீர் விடாமல் நீ இருக்க வேண்டாம்! எழு! இரவில் முதற் சாமத்தில் குரலெழுப்பு! உள்ளத்தில் உள்ளதை என் தலைவர் திருமுன் தண்ணீரைப் போல் ஊற்றிவிடு! தெரு முனையில் பசியால் மயங்கி விழும் குழந்தைகளின் உயிருக்காக, அவரை நோக்கி உன் கைகளை உயர்த்து!

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

சிறுமைப்படும் உம் மக்களின் உயிரை மறந்துவிடாதீர் ஆண்டவரே!
திருப்பாடல்74: 1-2. 3-4. 5-7. 20-21

கடவுளே! நீர் ஏன் எங்களை முற்றிலுமாக ஒதுக்கிவிட்டீர்? உமது மேய்ச்சல் நில ஆடுகள்மேல் உமது சினம் ஏன் புகைந்தெழுகின்றது? 2 பண்டைக் காலத்திலேயே நீர் உமக்குச் சொந்தமாக்கிக் கொண்ட சபைக்கூட்டத்தை நினைத்தருளும்; நீர் மீட்டு உமக்கு உரிமையாக்கிக் கொண்ட இனத்தாரை மறந்துவிடாதேயும்; நீர் கோவில் கொண்டிருந்த சீயோன் மலையையும் நினைவுகூர்ந்தருளும். பல்லவி

3 நெடுநாள்களாகப் பாழடைந்து கிடக்கும் பகுதிகளுக்குச் சென்று பார்வையிடுவீராக! எதிரிகள் உமது தூயகத்தில் அனைத்தையும் பாழ்படுத்தி விட்டார்கள். 4 உம்முடைய எதிரிகள் உம் திருத்தலத்தில் வெற்றி முழக்கம் செய்கின்றார்கள்; தங்கள் கொடிகளை வெற்றிக்கு அடையாளமாக நாட்டுகின்றார்கள். பல்லவி

5 அவர்கள் மேற்கு வாயிலில் அமைக்கப்பட்ட மரப் பின்னல் வேலைப்பாடுகளைக் கோடரிகளால் சிதைத்தார்கள். 6 மேலும் அங்கிருந்த மர வேலைப்பாடுகள் அனைத்தையும் சிற்றுளியும் சுத்தியலும் கொண்டு தகர்த்தெறிந்தார்கள்; 7 அவர்கள் உமது தூயகத்திற்கு தீ வைத்தார்கள்; அவர்கள் உமது பெயருக்குரிய உறைவிடத்தைத் தீட்டுப்படுத்தினார்கள். பல்லவி

20 உமது உடன்படிக்கையை நினைத்தருளும்! நாட்டின் இருளான இடங்களில் கொடுமை நடக்கும் குடியிருப்புகள் நிறைந்திருக்கின்றன. 21 சிறுமையுற்றோர் மீண்டும் வெட்கமுறாதபடி செய்யும்; எளியோரும் வறியோரும் உமது பெயரைப் புகழ்வராக! பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! அவர் நம் பிணிகளைத் தாங்கிக் கொண்டார்; நம் துன்பங்களைச் சுமந்துகொண்டார். அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 8: 5-17

அக்காலத்தில் இயேசு கப்பர்நாகுமுக்குச் சென்றபோது நூற்றுவர் தலைவர் ஒருவர் அவரிடம் உதவி வேண்டி வந்தார். ``ஐயா, என் பையன் முடக்குவாதத்தால் மிகுந்த வேதனையுடன் படுத்துக் கிடக்கிறான்'' என்றார். இயேசு அவரிடம், ``நான் வந்து அவனைக் குணமாக்குவேன்'' என்றார். நூற்றுவர் தலைவர் மறுமொழியாக, ``ஐயா, நீர் என் வீட்டிற்குள் அடியெடுத்து வைக்க நான் தகுதியற்றவன். ஆனால் ஒரு வார்த்தை மட்டும் சொல்லும்; என் பையன் நலமடைவான். நான் அதிகாரத்துக்கு உட்பட்டவன். என் அதிகாரத்துக்கு உட்பட்ட படைவீரரும் உள்ளனர். நான் அவர்களுள் ஒருவரிடம் `செல்க' என்றால் அவர் செல்கிறார். வேறு ஒருவரிடம் `வருக' என்றால் அவர் வருகிறார். என் பணியாளரைப் பார்த்து `இதைச் செய்க' என்றால் அவர் செய்கிறார்'' என்றார். இதைக் கேட்டு இயேசு வியந்து, தம்மைப் பின்தொடர்ந்து வந்தவர்களை நோக்கி, ``உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்: இஸ்ரயேலர் யாரிடமும் இத்தகைய நம்பிக்கையை நான் கண்டதில்லை. கிழக்கிலும் மேற்கிலுமிருந்து பலர் வந்து ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியோருடன் விண்ணரசின் பந்தியில் அமர்வர். அரசுக்கு உரியவர்களோ புறம்பாக உள்ள இருளில் தள்ளப்படுவார்கள். அங்கே அழுகையும் அங்கலாய்ப்பும் இருக்கும்'' என்றார். பின்னர் இயேசு நூற்றுவர் தலைவரை நோக்கி, ``நீர் போகலாம், நீர் நம்பியவண்ணமே உமக்கு நிகழும்'' என்றார். அந்நேரமே பையன் குணமடைந்தான். இயேசு பேதுருவின் வீட்டிற்குள் சென்றபோது, பேதுருவின் மாமியார் காய்ச்சலாய்ப் படுத்திருப்பதைக் கண்டார். இயேசு அவரது கையைத் தொட்டதும் காய்ச்சல் அவரை விட்டு நீங்கிற்று. அவரும் எழுந்து இயேசுவுக்குப் பணிவிடை செய்தார். பேய் பிடித்த பலரை மாலை வேளையில் இயேசுவிடம் கொண்டு வந்தனர். அவர் ஒரு வார்த்தை சொல்ல அசுத்த ஆவிகள் ஓடிப்போயின. மேலும் எல்லா நோயாளர்களையும் அவர் குணமாக்கினார். இவ்வாறு, `அவர் நம் பிணிகளைத் தாங்கிக்கொண்டார்; நம் துன்பங்களைச் சுமந்துகொண்டார்' என்று இறைவாக்கினர் எசாயா உரைத்தது நிறைவேறியது.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''நூற்றுவர் தலைவர் மறுமொழியாக, 'ஐயா, நீர் என் வீட்டிற்குள் அடியெடுத்துவைக்க நான் தகுதியற்றவன். ஆனால் ஒரு வார்த்தை மட்டும் சொல்லும். என் பையன் நலமடைவான்' என்றார்'' (மத்தேயு 8:8)

திருப்பலிக் கொண்டாட்டத்தின்போது நற்கருணை உட்கொள்வதற்கு முன், ''ஆண்டவரே, தேவரீர் என் இல்லத்தில் எழுந்தருளி வர நான் தகுதியற்றவன்; ஆனால் ஒரு வார்த்தை மட்டும் சொல்லியருளும் என் ஆன்மா குணமடையும்'' என நாம் கூறுகின்ற சொற்கள் நற்செய்தியில் வருகின்ற இயேசுவின் ஒரு புதுமையை அடிப்படையாகக் கொண்டவை. இயேசு கப்பர்நாகுமுக்குச் செல்கிறார். அப்போது பிற இனத்தவராகிய உரோமையரைச் சார்ந்த ஓர் அதிகாரி அவரை அணுகுகிறார். பாலஸ்தீனப் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த உரோமைக் காவல் படையினர் நூறு பேருக்கு அவர் தலைவர். எனவே அவருடைய பதவிப் பெயர் ''நூற்றுவர் தலைவர்'' என்பதாகும். இந்த அதிகாரி தம் பணியாள் (அல்லது அவருடைய ''குழந்தை'') நோய்வாய்ப்பட்டிருப்பதாக இயேசுவிடம் கூறுகிறார். இயேசு நினைத்தால் பணியாளுக்கு நலம் கிடைக்கும் என்னும் நம்பிக்கை அந்த அதிகாரியிடம் இருந்தது. பிற இனத்தாரோடு யூதர் பழகுவதில்லை. ஆனால் இயேசுவோ அந்த அன்னியராகிய அந்த உரோமை அதிகாரியைப் புறக்கணிக்கவில்லை. மாறாக, அவருடைய வீட்டுக்குச் சென்று பணியாளரைக் குணப்படுத்தப் போவதாக இயேசு கூறுகிறார். அப்போது நூற்றுவர் தலைவர் இயேசுவைப் பார்த்து, ''ஐயா, நான் தகுதியற்ற மனிதன்'' என்று கூறி, இயேசு ஒரு வார்த்தை சொன்னால் போதும், தன் பணியாள் குணமாவார் என்கிறார்.

இச்சொற்களைக் கேட்ட இயேசு அந்த அதிகாரியின் ஆழ்ந்த நம்பிக்கையைப் போற்றுகிறார். இஸ்ரயேலரிடம்கூட அத்தகைய ஆழ்ந்த நம்பிக்கை இல்லையே என இயேசு வருத்தத்தோடு கூறுவது நம் காதுகளில் விழுகிறது (காண்க: மத் 8:10). பிற இனத்தாருக்கும் நற்செய்தி அறிவிக்கப்பட்டு, அவர்களும் இறையாட்சியில் பங்குபெற வருவர் என்பதை இயேசு இச்செயல்வழியாகக் காட்டுகிறார் (காண்க: எசா 2:2-4; மீக் 4:1-4; செக் 8:20-23). எனவே உலகின் எத்திசையிலுமிருந்து மக்கள் வந்து இறையாட்சியில் பங்கேற்பர். இதை இயேசு ''விருந்து'' என்னும் உருவகம் வழியாக எடுத்துக் கூறுகிறார் (மத் 8:11). வழக்கமாக இயேசு நோயாளரை நேரடியாகச் சந்தித்து அவர்களைக் குணமாக்குவார். இங்கோ அவர் நோயாளரின் அருகே செல்லாமலே, தொலையிலிருந்துகொண்டே குணமளிக்கிறார். இதில் இயேசுவின் ''அதிகாரம்'' (மத் 8:9) வெளிப்படுகிறது. ஒருவேளை பிற இனத்தாராகிய நூற்றுவர் தலைவரின் வீட்டுக்குள் நுழைந்தால் தீட்டு ஏற்பட்டுவிடலாம் என்பதற்காக இயேசு அங்குச் செல்லவில்லையோ என சில அறிஞர் கருதுகின்றனர். கடவுளின் முன்னிலையில் நாம் தகுதியற்றவர்களாகவே உள்ளோம். ஆனால் அவரே முன்வந்து, இயேசு வழியாக நம்மைத் தம்மோடு ஒன்றுபடுத்துகிறார். இந்த உறவு என்னும் அருள்கொடையை நாம் நன்றியோடு ஏற்று எந்நாளும் இறைபுகழ் பாடிட வேண்டும்.

மன்றாட்டு:

இறைவா, தகுதியற்ற எங்களை உம் பிள்ளைகளாக நீர் ஏற்றதற்கு நன்றி.