யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





மூன்றாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 10வது வாரம் வியாழக்கிழமை
2016-06-09

புனித எபிரேம்




முதல் வாசகம்

எலியா செபித்தார். வானம் பொழிந்தது.
அரசர்கள் முதல் நூலிலிருந்து வாசகம் 18: 41-46

அந்நாள்களில் எலியா ஆகாபை நோக்கி, “நீர் போய் உணவும் பானமும் அருந்துவீர். ஏனெனில் பெருமழையின் ஓசை கேட்கிறது” என்றார். ஆகாபு உணவும் பானமும் அருந்தச் சென்றவுடன், எலியா கர்மேல் மலையின் உச்சிக்கு ஏறிச் சென்று, அங்கே தரையில் மண்டியிட்டுத் தம் முழங்கால்களுக்கு இடையே முகத்தைப் புதைத்துக்கொண்டார். பின்பு அவர் தம் பணியாளனை நோக்கி, “நீ போய்க் கடல் பக்கமாய்ப் பார்” என்றார். அவன் போய்ப் பார்த்து, “ஒன்றும் இல்லை” என்றான். எலியா அவனை நோக்கி, “ஏழுமுறை மீண்டும் சென்று பார்” என்றார். ஏழாம் முறை அவன் சென்று பார்த்து, “இதோ, மனித உள்ளங்கையளவு சிறிய மேகம் ஒன்று கடலிலிருந்து எழும்பி மேலே வருகிறது” என்றான். அப்போது எலியா அவனை நோக்கி, “நீ போய் ஆகாபிடம், மழை தடுத்து நிறுத்தாதபடி தேரைப் பூட்டிப் போய்விடும்படி சொல்” என்றார். இதற்கிடையில் வானம் இருண்டது; கார்மேகம் சூழ்ந்தது. காற்று அடித்தது. பெரும் மழை பெய்தது. ஆகாபு தேரில் ஏறி இஸ்ரியேலுக்குச் சென்றான். அந்நேரத்தில் ஆண்டவரின் ஆற்றல் எலியாவின்மேல் வந்திறங்க, அவர் தம் இடையை வரிந்து கட்டிக்கொண்டு, இஸ்ரியேல் வரை ஆகாபுக்கு முன்னே ஓடினார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

உம்மைப் புகழ்ந்து பாடுவது கடவுளே, ஏற்புடையது!
திருப்பாடல் 65: 9-10. 11-12

1 கடவுள் எழுந்தருள்வார்; அவருடைய எதிரிகள் சிதறடிக்கப் படுவார்கள்; அவரை வெறுப்போர் அவர் முன்னிலையினின்று ஓடிப்போவர்; 2 புகை அடித்துச் செல்லப்படுவதுபோல அடித்துச் செல்லப்படுவர்; நெருப்புமுன் மெழுகு உருகுவது போல கடவுள்முன் பொல்லார் அழிந்தொழிவர். பல்லவி

3 நேர்மையாளரோ மகிழ்ச்சியடைவர்; கடவுள் முன்னிலையில் ஆர்ப்பரிப்பர்; மகிழ்ந்து கொண்டாடுவர். 4யஉ கடவுளைப் புகழ்ந்து பாடி அவரது பெயரைப் போற்றுங்கள்; `ஆண்டவர்' என்பது அவர்தம் பெயராம். பல்லவி

5 திக்கற்ற பிள்ளைகளுக்குத் தந்தையாகவும் கணவனை இழந்தாளின் காப்பாளராகவும் இருப்பவர், தூயகத்தில் உறையும் கடவுள்! 6யb தனித்திருப்போர்க்குக் கடவுள் உறைவிடம் அமைத்துத் தருகின்றார்; சிறைப்பட்டோரை விடுதலை வாழ்வுக்கு அழைத்துச் செல்கின்றார். பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! புதிய கட்டளையை நான் உங்களுக்குக் கொடுக்கிறேன். நான் உங்களிடம் அன்பு செலுத்தியது போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 20-26

அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: ``மறைநூல் அறிஞர், பரிசேயர் ஆகியோரின் நெறியைவிட உங்கள் நெறி சிறந்திருக்கட்டும். இல்லையெனில், நீங்கள் விண்ணரசுக்குள் புக முடியாது என உங்களுக்குச் சொல்கிறேன். `கொலை செய்யாதே; கொலை செய்கிறவர் எவரும் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாவர்' என்று முற்காலத்தவர்க்குக் கூறப்பட்டிருப்பதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்: தம் சகோதரர் சகோதரிகளிடம் சினங்கொள்கிறவர் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாவார்; தம் சகோதரரையோ சகோதரியையோ `முட்டாளே' என்பவர் தலைமைச் சங்கத் தீர்ப்புக்கு ஆளாவார்; `அறிவிலியே' என்பவர் எரிநரகத்துக்கு ஆளாவார். ஆகையால் நீங்கள் உங்கள் காணிக்கையைப் பலிபீடத்தில் செலுத்த வரும்பொழுது உங்கள் சகோதரர் சகோதரிகள் எவருக்கும் உங்கள் மேல் ஏதோ மனத்தாங்கல் உண்டென அங்கே நினைவுற்றால், அங்கேயே பலி பீடத்தின்முன் உங்கள் காணிக்கையை வைத்துவிட்டுப் போய் முதலில் அவரிடம் நல்லுறவு ஏற்படுத்திக் கொள்ளுங்கள். பின்பு வந்து உங்கள் காணிக்கையைச் செலுத்துங்கள். உங்கள் எதிரி உங்களை நீதி மன்றத்துக்குக் கூட்டிச் செல்லும்போது வழியிலேயே அவருடன் விரைவாக உடன்பாடு செய்துகொள்ளுங்கள். இல்லையேல் உங்கள் எதிரி நடுவரிடம் உங்களை ஒப்படைப்பார். நடுவர் காவலரிடம் ஒப்படைக்க, நீங்கள் சிறையில் அடைக்கப்படுவீர்கள். கடைசிக் காசு வரை திருப்பிச் செலுத்தாமல் அங்கிருந்து வெளியேற மாட்டீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.''

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

நான் தனியாய் இருப்பதில்லை.

இதய நோய்க்கு சிகிட்சை பெற்று மருத்துவமனையிலிருந்து திருப்பலிக்காக பங்கு ஆலயத்திற்கு வந்ததும் மக்கள் பலர் கேட்டனர், "ஃபாதர் தனியாகவா வந்தீர்கள்" என்று. 'இல்லை, இயேசு என்னும் இன்னொருவரும் என்னோடு வந்தார்' என்றேன். பங்கில் ஒரு பெண். "ஃபாதர், நோயுற்று நடக்க முடியாத என் கணவர், திருநெல்வேலி ரயில் நிலையத்தில் இரவு வந்திறங்குகிறார். எனக்கு திருநெல்வேலியே தெரியாது. இரவில் ரயில் நிலையம் எப்படி போவேன். உற்றார் உறவினர் உதவியைக் கேட்டேன். கிடைக்கவில்லை. தனியே போக பயமாக இருக்கறது" என்றாள். "போ, துணிந்து போ. நீ தனியாக போகவில்லை;. இயேசு உனக்கு முன் உன்னோடு வருவார்" என்றேன். புறப்பட்டுச் சென்றாள். திரும்பி வந்து சொன்னாள், "ஃபாதர், நீங்க சொன்னதுபோல, திருநெல்வேலி ரயில் நிலையம் சென்றேன், ரயில் வரும் இடத்தில் ஒரு இடத்தில் நின்றேன். நான் நின்ற இடத்தில், என் முன்னால் என் கணவர் நடக்க முடியாமல் இறங்கினார். என்ன ஆச்சரியம்! என் அருகில் இரயில் நிலையப் பணியாளருள் ஒருவர் மூன்று சக்கர சைக்கிள் ஒன்றை வைத்துக்கொண்டு என் அருகில் நின்றார். அதில் என்; கணவரை அமர்த்தி மிக எளிதில் வெளியே வந்து வீடு வந்து சேர்ந்தேன். உண்மையிலே நான் தனியாக இல்லை. என்னோடு என் இயேசு இருக்கிறார்" என்றாள்.

எத்தனை சந்தர்ப்பங்களில் 'ஐயோ, நான் தனியே இருக்கிறேனே; எனக்கு யாருமே இல்லையே' என்று மனமுடைந்து, நம்பிக்கை இழந்து கடவுளை நோக்கி முறையிட்டிருக்கிறோம். நாம் தனியேஇல்லை. உலகை, துன்பத்தை, மரணத்தை வென்ற இறைவன் இயேசு நம்மோடு இருக்கிறார். மகனே! மகளே! நீ தனியாக இல்லை. நான் உன்னோடு இருக்கும் உன் தெய்வம். என் பெயர் இம்மானுவேல்.இம்மானுவேல் என்றால் கடவுள்நம்மோடு. நான் உன்னை விட்டு விலகுவதில்லை. உன்னைக் கை விடுவதுமில்லை. உன் இயேசு உன்னை தனியே விட மாட்டார்.

மன்றாட்டு:

இறைவா, உம் திருமகனின் உடனிருப்பால் நாங்கள் உறுதிபெற்று வாழ்ந்திட அருள்தாரும்.