யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





மூன்றாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 10வது வாரம் திங்கட்கிழமை
2016-06-06

புனித நோபேட்




முதல் வாசகம்

இஸ்ரயேலின் கடவுளை எலியா வழிபடுகிறார்
அரசர்கள் முதல் நூலிலிருந்து வாசகம் 17: 1-6

அந்நாள்களில் கிலயாதில் குடியிருந்த திஸ்பே ஊரைச் சார்ந்த எலியா ஆகாபு அரசனிடம், �நான் பணியும் இஸ்ரயேலின் கடவுளான வாழும் ஆண்டவர் மேல் ஆணை! என் வாக்கினாலன்றி, வரும் ஆண்டுகளில் பனியோ மழையோ பெய்யாது� என்றார். பின்னர் ஆண்டவரின் வாக்கு எலியாவுக்கு வந்தது: �இங்கிருந்து ஓடிவிடு; கிழக்கு முகமாகப் போய் யோர்தானுக்கு அப்பாலுள்ள கெரீத்து ஓடையருகில் ஒளிந்து கொள். அந்த ஓடையில் தண்ணீர் குடித்துக்கொள். அங்கே உனக்கு உணவளிக்குமாறு காகங்களுக்குக் கட்டளையிட்டிருக்கிறேன்�. அவ்வாறே அவர் போய் ஆண்டவரது வாக்கின்படி செய்தார். அவர் சென்று யோர்தானுக்கு அப்பாலிருந்த கெரீத்து ஓடையருகில் தங்கியிருந்தார். காகங்கள் காலையிலும் மாலையிலும் அப்பமும் இறைச்சியும் அவருக்குக் கொண்டு வந்தன. ஓடையில் தண்ணீர் குடித்துக் கொண்டார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

விண்ணையும் மண்ணையும் உண்டாக்கிய ஆண்டவர் எனக்கு உதவிடுவார்
திருப்பாடல் 121: 1-2. 3-4. 5-6. 7-8

1 மலைகளை நோக்கி என் கண்களை உயர்த்துகின்றேன்! எங்கிருந்து எனக்கு உதவி வரும்? 2 விண்ணையும் மண்ணையும் உண்டாக்கிய ஆண்டவரிடமிருந்தே எனக்கு உதவி வரும். பல்லவி

3 அவர் உம் கால் இடறாதபடி பார்த்துக் கொள்வார்; உம்மைக் காக்கும் அவர் உறங்கிவிடமாட்டார். 4 இதோ! இஸ்ரயேலைக் காக்கின்றவர் கண்ணயர்வதும் இல்லை; உறங்குவதும் இல்லை. பல்லவி

5 ஆண்டவரே உம்மைக் காக்கின்றார்; அவர் உம் வலப் பக்கத்தில் உள்ளார்; அவரே உமக்கு நிழல் ஆவார்! 6 பகலில் கதிரவன் உம்மைத் தாக்காது; இரவில் நிலாவும் உம்மைத் தீண்டாது. பல்லவி

7 ஆண்டவர் உம்மை எல்லாத் தீமையினின்றும் பாதுகாப்பார்; அவர் உம் உயிரைக் காத்திடுவார். 8 நீர் போகும்போதும் உள்ளே வரும்போதும் இப்போதும் எப்போதும் ஆண்டவர் உம்மைக் காத்தருள்வார். பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! மகிழ்ந்து பேருவகை கொள்ளுங்கள்! ஏனெனில் விண்ணுலகில் உங்களுக்குக் கிடைக்கும் கைம்மாறு மிகுதியாகும் அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 1-12

அக்காலத்தில் இயேசு மக்கள் கூட்டத்தைக் கண்டு மலைமீது ஏறி அமர, அவருடைய சீடர் அவரருகே வந்தனர். அவர் திருவாய் மலர்ந்து கற்பித்தவை: ``ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்கு உரியது. துயருறுவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் ஆறுதல் பெறுவர். கனிவுடையோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் நாட்டை உரிமைச் சொத்தாக்கிக் கொள்வர். நீதி நிலைநாட்டும் வேட்கை கொண்டோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் நிறைவு பெறுவர். இரக்கமுடையோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் இரக்கம் பெறுவர். தூய்மையான உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் கடவுளைக் காண்பர். அமைதி ஏற்படுத்துவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் கடவுளின் மக்கள் என அழைக்கப்படுவர். நீதியின் பொருட்டுத் துன்புறுத்தப்படுவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்கு உரியது. என் பொருட்டு மக்கள் உங்களை இகழ்ந்து, துன்புறுத்தி, உங்களைப் பற்றி இல்லாதவை பொல்லாதவையெல்லாம் சொல்லும்போது நீங்கள் பேறு பெற்றவர்களே! மகிழ்ந்து பேருவகை கொள்ளுங்கள்! ஏனெனில் விண்ணுலகில் உங்களுக்குக் கிடைக்கும் கைம்மாறு மிகுதியாகும். இவ்வாறே உங்களுக்கு முன்னிருந்த இறைவாக்கினர்களையும் அவர்கள் துன்புறுத்தினார்கள்.''

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''இயேசு மக்கள் கூட்டத்தைக் கண்டு மலைமீது ஏறி அமர, அவருடைய சீடர் அவரருகே வந்தனர். அவர் திருவாய் மலர்ந்து கற்பித்தவை: 'ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்கு உரியது'...'' (மத்தேயு 5:1-3)

''மலைப் பொழிவு'' என்னும் பெயரில் வருகின்ற மத்தேயு நற்செய்திப் பகுதி (மத்தேயு அதி. 5-7) தனிச் சிறப்பு வாய்ந்தது. அதன் தொடக்கத்தில் நாம் காண்பது ''பேறுபெற்றோர்'' என இயேசு கூறுகின்ற சொற்றொடர்கள். ஒன்பது முறை இச்சொல் வருகிறது (மத் 5:3-12). இயேசு ''பேறுபெற்றோர்'' என வாழ்த்துகின்ற மனிதர் யார் என்னும் கேள்விக்குப் பதில் கூறுவதுபோல அமைந்திருப்பது முதல் கூற்று ஆகும்: ''ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்கு உரியது'' (மத் 5:3). கடவுளாட்சியே மத்தேயு நற்செய்தியில் ''விண்ணரசு'' என அழைக்கப்படுகிறது. ''விண்'' என்னும் சொல் நாம் அண்ணாந்து பார்த்தால் தெரிகின்ற வானத்தைக் குறிப்பதில்லை; மாறாக, நம்மைக் கடந்து வாழ்கின்ற கடவுளைக் குறிக்கிறது. எனவே ''விண்ணரசு'' என்பது கடவுளின் ஆட்சி எனப் பொருள்படும். கடவுளின் ஆட்சியில் நாம் பங்கேற்க வேண்டும் என்றால் நாம் ''ஏழையரின் உள்ளத்தைக் கொண்டிருக்க வேண்டும்''. இங்கே ஏழையர் எனக் குறிக்கப்படுவோர் உலகச் செல்வங்கள் இல்லாமல் வறுமையில் வாடுவோர் மட்டுமல்ல. ஏழையர் என்போர் ஒடுக்கப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், பிழைக்க வழியறியாமல் வாடுவோர், தங்கள் அன்றாட வாழ்க்கைக்குப் பிறரிடம் கையேந்தி நிற்கும் நிலைக்குத் தள்ளப்பட்டோர், சமுதாயச் சம்பிரதாயங்களின் ஆதிக்கத்தின் காரணமாகக் கூனிக் குறுகி நிற்போர் போன்ற எண்ணிறந்த மக்களை உள்ளடக்குவர்.

இவ்வாறு பல வகையான ஒடுக்குமுறைகளுக்கு ஆளாகின்ற மக்கள் யாரிடம் அடைக்கலம் புகுவார்கள்? அவர்களுக்கு ஆறுதல் அளிப்பவர் கடவுள் ஒருவரே. எனவே, ''ஏழையரின் மனநிலை'' நமதாக இருக்க வேண்டும். நாம் எப்போதும் கடவுளை நம்பி வாழ வேண்டும். நம் சொந்த சக்தியால் பெரிதாக ஒன்றையும் நம்மால் சாதிக்க இயலாது என்பதை உணர்ந்து ஏற்று, நாம் கடவுளிடம் கையேந்தி நிற்க வேண்டும். அப்போது கடவுள் நம் கைகளை மட்டுமல்ல, நம் உள்ளத்தையும் வாழ்வையும் தம் கொடைகளால் நிரப்புவார். அவர் தருகின்ற உயர்ந்த கொடை அவருடைய வாழ்வில் நமக்குப் பங்களிப்பதே. இதையே நாம் ''விண்ணரசு'' என்கிறோம். கடவுளின் வாழ்வில் நாம் பங்கேற்கின்ற பேற்றினை இவ்வுலகிலேயே பெற்றுள்ளோம். இப்பேறு இறுதிக்காலத்தில் நிறைவாக மலரும். இயேசு நம்மைப் பேறுபேற்றோர் என வாழ்த்த வேண்டும் என்றால் நாம் அவர் எதிர்பார்க்கின்ற பண்புகளை நம் வாழ்வில் கொண்டிருக்க வேண்டும். கடவுளின் கொடையாக வருகின்ற ஆட்சியில் நாம் பங்கேற்க அழைக்கப்படுகிறோம். அந்த ஆட்சியை நமக்கு வழங்குகின்ற கடவுள் முன்னிலையில் நாம் ஏழையரின் உள்ளத்தோராக, கனிவுடையோராக, நீதி வேட்கை கொண்டோராக, இரக்கமுடையோராக, தூய்மையுடையோராக, அமைதியை நாடுவோராக, துன்பத்தின் நடுவிலும் கடவுளை நம்புவோராக வாழ்ந்திட வேண்டும் (மத் 5:3-12).

மன்றாட்டு:

இறைவா, உம் ஆட்சியில் நாங்கள் பங்கேற்று, பிறரையும் உம்மிடம் அழைத்துவர எங்களுக்கு அருள்தாரும்.