யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





மூன்றாவது திருவழிபாடு ஆண்டு

மூவொரு கடவுள் பெருவிழாத் திருப்பலி

(இன்றைய வாசகங்கள்: நீதிமொழிகள் 8: 22-31, உரோமையருக்கு 5: 1-5, யோவான்: 16: 12-15



தூய ஆவியைப் பெற்றுக் கொள்ளுங்கள். தூய ஆவியைப் பெற்றுக் கொள்ளுங்கள். தூய ஆவியைப் பெற்றுக் கொள்ளுங்கள். என் ஆடுகள் எனது குரலுக்குச் செவிசாய்க்கின்றன என் ஆடுகள் எனது குரலுக்குச் செவிசாய்க்கின்றன


திருப்பலி முன்னுரை

அன்புக்குரியவர்களே,

மூவொரு இறைவன் பெருவிழா திருப்பலிக்கு உங்கள் அனைவரையும் வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். தந்தை, மகன், தூய ஆவி ஆகிய மூன்று இறையாட்களும் இணைந்து ஒரே கடவுளாக செயல்படும் மறைபொருளுக்கு திருச்சபை இன்று விழா கொண்டாடுகிறது. இறைத்தந்தையின் மீட்புத்திட்டம் மண்ணுலகில் நிறைவேறுமாறு தூய ஆவியின் வல்லமையால் இறைமகன் மனிதரானார் என்ற உண்மையே கடவுளை முழுமையாக வெளிப்படுத்துகிறது. தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்கு பெற்ற நாம் அனைவரும் மூவொரு இறைவனின் சாட்சிகளாக வாழும் வரம் வேண்டி, இத்திருப்பலியில் பக்தியோடு பங்கேற்போம்.



முதல் வாசகம்

மனித இனத்தோடு இருப்பதில் மகிழ்ச்சி கண்டேன்.
நீதிமொழிகள் நூலிலிருந்து வாசகம் 8: 22-31

இறைவனின் ஞானம் கூறுவது: ஆண்டவர் தம் படைப்பின் தொடக்கத்திலேயே, தொல்பழங்காலத்தில் எதையும் படைக்கும் முன்னரே, என்னைப் படைத்தார். தொடக்கத்தில், பூவுலகு உண்டாகுமுன்னே, நானே முதன்முதல் நிலைநிறுத்தப்பெற்றேன். கடல்களே இல்லாத காலத்தில் நான் பிறந்தேன்; பொங்கி வழியும் ஊற்றுகளும் அப்போது இல்லை. மலைகள் நிலைநாட்டப்படுமுன்னே, குன்றுகள் உண்டாகுமுன்னே நான் பிறந்தேன். அவர் பூவுலகையும் பரந்த வெளியையும் உண்டாக்குமுன்னே, உலகின் முதல் மண்துகளை உண்டாக்குமுன்னே நான் பிறந்தேன். வானத்தை அவர் நிலைநிறுத்தினபோது, கடல்மீது அடிவானத்தின் எல்லையைக் குறித்தபோது, நான் அங்கே இருந்தேன். உலகத்தில் மேகங்களை அவர் அமைத்தபோது, ஆழ்கடலில் ஊற்றுகளை அவர் தோற்றுவித்தபோது, நான் அங்கே இருந்தேன். அவர் கடலுக்கு எல்லையை ஏற்படுத்தி, அந்த எல்லையைக் கடல் நீர் கடவாதிருக்கும்படி செய்தபோது, பூவுலகிற்கு அவர் அடித்தளமிட்டபோது, நான் அவர்அருகில் அவருடைய சிற்பியாய் இருந்தேன்; நாள்தோறும் அவருக்கு மகிழ்ச்சியூட்டினேன்; எப்போதும் அவர் முன்னிலையில் மகிழ்ந்து செயலாற்றினேன். அவரது பூவுலகில் எங்கும் மகிழ்ந்து செயலாற்றினேன்; மனித இனத்தோடு இருப்பதில் மகிழ்ச்சி கண்டேன்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

பல்லவி: ஆண்டவரே! உமது பெயர் உலகெங்கும் மேன்மையாய் உள்ளது!
திருப்பாடல்: 8: 3-4. 5-6. 7-8

உமது கைவேலைப்பாடாகிய வானத்தையும் அதில் நீர் பொருத்தியுள்ள நிலாவையும் விண்மீன்களையும் நான் நோக்கும்போது, மனிதரை நீர் நினைவில் கொள்வதற்கு அவர்கள் யார்? மனிதப் பிறவிகளை நீர் ஒருபொருட்டாக எண்ணுவதற்கு அவர்கள் எம்மாத்திரம்? -பல்லவி

ஆயினும், அவர்களைக் கடவுளாகிய உமக்குச் சற்றே சிறியவர் ஆக்கியுள்ளீர்; மாட்சியையும் மேன்மையையும் அவர்களுக்கு முடியாகச் சூட்டியுள்ளீர். உமது கை படைத்தவற்றை அவர்கள் ஆளும்படி செய்துள்ளீர்; எல்லாவற்றையும் அவர்கள் பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தியுள்ளீர். -பல்லவி

ஆடுமாடுகள், எல்லா வகையான காட்டு விலங்குகள், வானத்துப் பறவைகள், கடல் மீன்கள், ஆழ்கடலில் நீந்திச் செல்லும் உயிரினங்கள் அனைத்தையும் அவர்களுக்குக் கீழ்ப்படுத்தியுள்ளீர். -பல்லவி

இரண்டாம் வாசகம்

நாம் பெற்றுள்ள தூய ஆவியின் வழியாய்க் கடவுளின் அன்பு நம் உள்ளங்களில் பொழியப் பட்டுள்ளது.
திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 5: 1-5

சகோதரர் சகோதரிகளே, நாம் கொண்டுள்ள நம்பிக்கையின் மூலம் கடவுளுக்கு ஏற்புடையவர்களாகியுள்ள நாம், நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் வழியாய்க் கடவுளோடு நல்லுறவு கொண்டுள்ளோம். நாம் இப்போது அருள் நிலையைப் பெற்றிருக்கிறோம். இந்நிலையை அடையும் உரிமை இயேசு கிறிஸ்து மீது கொண்ட நம்பிக்கையால்தான் அவர் வழியாகவே நமக்குக் கிடைத்தது. கடவுளின் மாட்சியில் பங்கு பெறுவோம் என்னும் எதிர்நோக்கில் நாம் பெருமகிழ்வும் கொள்ள முடிகிறது. அதுமட்டும் அல்ல, துன்பங்களைத் தாங்கிக் கொள்வதிலும் பெருமகிழ்ச்சி கொள்கிறோம். ஏனெனில், துன்பத்தால் மன உறுதியும், மன உறுதியால் தகைமையும், தகைமையால் எதிர்நோக்கும் விளையும் என அறிந்திருக்கிறோம். அந்த எதிர்நோக்கு ஒருபோதும் ஏமாற்றம் தராது; ஏனெனில் நாம் பெற்றுள்ள தூய ஆவியின் வழியாய்க் கடவுளின் அன்பு நம் உள்ளங்களில் பொழியப் பட்டுள்ளது.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

- இறைவா உமக்கு நன்றி




நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா ! இருந்தவரும் இருக்கின்றவரும் வரவிருக்கின்றவரும் எல்லாம் வல்லவருமான கடவுள், தந்தை, மகன், தூய ஆவியாருக்கு மகிமை உண்டாகுக. அல்லேலூயா !

நற்செய்தி வாசகம்

+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 16: 12-15

அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: நான் உங்களிடம் சொல்ல வேண்டியவை இன்னும் பல உள்ளன. ஆனால் அவற்றை இப்போது உங்களால் தாங்க இயலாது. உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார் வரும்போது அவர் முழு உண்மையை நோக்கி உங்களை வழிநடத்துவார். அவர் தாமாக எதையும் பேசமாட்டார்; தாம் கேட்பதையே பேசுவார்; வரப் போகிறவற்றை உங்களுக்கு அறிவிப்பார். அவர் என்னிடமிருந்து கேட்டு உங்களுக்கு அறிவிப்பார். இவ்வாறு அவர் என்னை மாட்சிப்படுத்துவார். தந்தையுடையவை யாவும் என்னுடையவையே. எனவேதான் `அவர் என்னிடமிருந்து பெற்று உங்களுக்கு அறிவிப்பார்' என்றேன்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




விசுவாசிகள் மன்றாட்டுகள்:


பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

1. அன்புத் தந்தையே இறைவா!

எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவிகள், அனைவருக்காகவும் மன்றாடுகின்றோம் இவர்கள் உம்மோடு ஒரு ஆழமான உறவை ஏற்படுத்தி, இறைமக்களை உறவிலும், ஒற்றுமையிலும் வளர்த்தெடுக்கும் ஆற்றலை அவர்களுக்கு அளித்துக் காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2. விண்ணக தந்தையே இறைவா,

இம்மண்ணகத்தில் வாழும் மாந்தர் அனைவரும், மூவொரு இறைவனாகிய நீரே உண்மை கடவுள் என்பதை அறிந்துகொள்ளவும், உமது பிள்ளைகளாக அன்பிலும் நீதியிலும் ஒற்றுமையிலும் வாழவும் உதவ வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

3. வானக அரசரே இறைவா,

உமது உண்மையின் அரசைப் புறக்கணித்து, உலகைச் சார்ந்த எண்ணங்களிலும், தங்கள் சொந்த விருப்பங்களிலும் நாட்களை செலவிடும் எம் நாட்டு மக்கள் அனைவரும், மறுவுலக வாழ்வைப் பற்றிய உண்மைகளை விரும்பித் தேடிட துணைபுரிய வேண்டு மென்று உம்மை மன்றாடுகிறோம்.

4. அன்புத் தந்தையே இறைவா!

எம்முள் ஒற்றுமையை வளர்த்து, ஒன்றிணைந்து வாழும் மனநிலையை உருவாக்கி உம்மை மகிமைப்படுத்தும் சக்தியை எமக்குத் தந்து எம்மை ஆசீர்வதித்து வழிப்படுத்தியருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

5. எங்களை முடிவில்லாத வகையில் அன்பு செய்யும் இயேசுவே,

உம்மைப்போற்றுகிறோம். நீர் தருகின்ற தூய ஆவி என்னும் கொடைக்காக நன்றி கூறுகிறோம். அந்த ஆவியால் நாங்கள் நிரப்பப்பட்டு, உம்மை மாட்சிப்படுத்தும் அருளை எங்களுக்குத் தந்தருளும், உலகெங்கும் மதம், இனம், குலம், மொழி, பண்பாடு, பொருளாதாரம் என பல்வேறு காரணங்களால் பிரிந்து வாழும் மக்கள் அனைவரும், ஒரே கடவுளாகிய உமது பிள்ளைகள் என்ற உணர்வோடு ஒற்றுமையில் வளரத் தூண்டுதல் அளிக்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.


இன்றைய சிந்தனை

''இயேசு சீடர்களை நோக்கி, ''உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார் வரும்போது அவர் முழு உண்மையை நோக்கி உங்களை வழிநடத்துவார்' என்றார்'' (யோவான் 16:12)

யோவான் நற்செய்தியில் இயேசு தம்மை ''உண்மை'' என அறிமுகப்படுத்துகிறார். இயேசுவைப் பற்றிய உண்மையை நமக்குத் தூய ஆவி வெளிப்படுத்துவதோடு, அந்த உண்மையை நம் வாழ்வில் இணைத்துப் பொருள் புரிந்திட அதே தூய ஆவி நமக்கு வழிகாட்டவும் செய்வார். இங்கே இயேசு தம்மை ''வழி'' என்று கூறியதையும் நாம் நினைவுகூரலாம். ஆக, ஒருவிதத்தில் தூய ஆவி இயேசுவைப் போல நம்மிடையே இருந்து செயலாற்றுகிறார் எனலாம். எனினும் தூய ஆவி இயேசுவின் இடத்தில், இயேசுவுக்குப் பதிலாக நம்மிடையே உள்ளார் என நாம் முடிவுகட்டுதல் சரியல்ல. தூய ஆவியின் செயல் இயேசுவைப் பற்றிய உண்மையை நாம் அறிந்துகொள்ள துணையாக வரும். இயேசுவின் உடனிருப்பு நம் வாழ்வில் துலங்கிட தூய ஆவி துணையாவார். கடவுளைச் சென்றடைகின்ற வழியை இயேசு நமக்குக் காட்டியதுபோல, தூய ஆவி இயேசு பற்றிய ''உண்மையை நோக்கி நம்மை வழிநடத்துவார்''.

கடவுளின் அன்பை நமக்கு இயேசு வெறும் சொல்லால் வெளிப்படுத்தவில்லை. இயேசுவின் வாழ்வும், சாவும், உயிர்த்தெழுதலும் கடவுளின் அன்பை நமக்கு வெளிப்படுத்துகின்றன. அந்த வெளிப்பாடு தொடர்ந்து நம் வாழ்விலும் உலக வரலாற்றிலும் நிகழ்ந்திட தூய ஆவி துணையாக நிற்கிறார். எனவே, கடவுளைப் பற்றியும் இயேசுவைப் பற்றியும் நாமும் ஆழமாக அறிந்திட, அந்த அறிவின் அடிப்படையில் நடந்திட நமக்கு வழிகாட்டியாக தூய ஆவி இருக்கிறார். எனவே, தூய ஆவியின் செயல்பாட்டை நாம் வரலாற்றில் காணலாம்; திருச்சபையின் வாழ்வில் காணலாம்; நம்பிக்கை கொண்டோர், நல் மனது கொண்டோர் அனைவரின் அனுபவத்திலும் காணலாம். தூய ஆவியின் செயல்பாட்டைக் கண்டுகொள்வதும், அவர் காட்டுகின்ற வழியில் நடப்பதும் நம் பொறுப்பு.

மன்றாட்டு:

இறைவா, உண்மையின் ஊற்று நீர் ஒருவரே என நாங்கள் உணர்ந்து வாழ்ந்திட அருள்தாரும்.