யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





மூன்றாவது திருவழிபாடு ஆண்டு
பாஸ்காகாலம் 6வது வாரம் சனிக்கிழமை
2016-05-07




முதல் வாசகம்

இயேசுவே மெசியா' என அப்பொல்லோ மறைநூல்களின்மூலம் எடுத்துக்காட்டினார்.
திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 18: 23-28

பவுல் சிறிது காலம் அந்தியோக்கியாவில் செலவிட்டபின் அங்கிருந்து புறப்பட்டு ஒன்றன்பின் ஒன்றாகக் கலாத்தியா, பிரிகியாப் பகுதிகள் வழியாகச் சென்று சீடர்கள் அனைவரையும் உறுதிப்படுத்தினார். அலக்சாந்திரியாவில் பிறந்த அப்பொல்லோ எனும் பெயருடைய யூதர் ஒருவர் எபேசு வந்தடைந்தார். அவர் சொல்வன்மை மிக்கவர்; மறைநூல்களில் புலமை வாய்ந்தவர். ஆண்டவரின் நெறிகளைக் கற்றறிந்தவர்; ஆர்வம்மிக்க உள்ளத்தோடு இயேசுவைப் பற்றிய செய்தியைப் பிழையற அறிவித்தும் கற்பித்தும் வந்தார். ஆனால் அவர் யோவான் கொடுத்த திருமுழுக்கை மட்டுமே அறிந்திருந்தார். அவர் தொழுகைக்கூடத்தில் துணிவுடன் பேசத் தொடங்கினார். அவர் பேசியதைக் கேட்ட பிரிஸ்கில்லாவும் அக்கில்லாவும் அவரை அழைத்துக் கொண்டுபோய், கடவுளின் நெறியைத் திட்டவட்டமாக விளக்கினர். அவர் அக்காயாவுக்குப் போக விரும்பியபோது சகோதரர் சகோதரிகள் அவரை ஊக்கப்படுத்தி, அவரை ஏற்றுக்கொள்ளுமாறு சீடருக்குக் கடிதம் எழுதினார்கள். அவர் அங்கே சென்றபோது இறையருளால் ஆண்டவரிடம் நம்பிக்கை கொண்டிருந்தவர்களுக்குப் பெரிதும் துணையாய் இருந்தார். ஏனெனில் அவர் வெளிப்படையாகவும் சிறப்பாகவும் யூதர்களிடம் வாதாடி, `இயேசுவே மெசியா' என மறைநூல்களின்மூலம் எடுத்துக் காட்டினார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

கடவுளே, அனைத்து உலகின் வேந்தர் நீரே.
திருப்பாடல் 47: 1-2. 7-8. 9

மக்களினங்களே, களிப்புடன் கைகொட்டுங்கள்; ஆர்ப்பரித்துக் கடவுளைப் புகழ்ந்து பாடுங்கள். 2 ஏனெனில், உன்னதராகிய ஆண்டவர் அஞ்சுதற்கு உரியவர்; உலகனைத்தையும் ஆளும் மாவேந்தர் அவரே. பல்லவி

7 ஏனெனில், கடவுளே அனைத்து உலகின் வேந்தர்; அருட்பா தொடுத்துப் புகழ் பாடுங்கள். 8 கடவுள் பிற இனத்தார்மீது ஆட்சி செய்கின்றார்; அவர்தம் திரு அரியணையில் வீற்றிருக்கின்றார். பல்லவி

9 மக்களினங்களின் தலைவர்கள் ஆபிரகாமின் கடவுளுடைய மக்களோடு ஒன்றுகூடுவர்; ஏனெனில், மண்ணுலகின் மன்னர் அனைவரும் கடவுளின் கொற்றத்திற்கு உட்பட்டவர்; கடவுளே அனைத்திற்கும் மேலானவர். பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! நான் தந்தையிடமிருந்து உலகிற்கு வந்தேன். இப்போது உலகை விட்டுத் தந்தையிடம் செல்கிறேன். அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 16: 23-28

அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: ``நீங்கள் என் பெயரால் தந்தையிடம் கேட்பதை எல்லாம் அவர் உங்களுக்குத் தருவார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். இதுவரை நீங்கள் என் பெயரால் எதையும் கேட்டதில்லை. கேளுங்கள்; பெற்றுக்கொள்வீர்கள். அப்போது உங்கள் மகிழ்ச்சியும் நிறைவடையும். நான் உங்களிடம் உருவகமாகவே பேசிவந்துள்ளேன். ஆனால் காலம் வருகிறது. அப்போது உருவகங்கள் வாயிலாய்ப் பேசாமல், தந்தையைப் பற்றி வெளிப்படையாய் எடுத்துரைப்பேன். அந்நாளில் நீங்கள் என் பெயரால் வேண்டுவீர்கள். அப்போது `உங்களுக்காகத் தந்தையிடம் கேட்கிறேன்' என நான் சொல்லமாட்டேன். ஏனெனில் தந்தையே உங்கள்மீது அன்பு கொண்டுள்ளார். நீங்கள் என்மீது அன்பு கொண்டு, நான் கடவுளிடமிருந்து வந்தேன் என்று நம்புவதால்தான் தந்தையும் உங்கள்மீது அன்பு கொண்டுள்ளார். நான் தந்தையிடமிருந்து உலகிற்கு வந்தேன். இப்போது உலகைவிட்டுத் தந்தையிடம் செல்கிறேன்.''

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''இயேசு சீடர்களை நோக்கி, 'நான் தந்தையிடமிருந்து உலகிற்கு வந்தேன். இப்போது உலகைவிட்டுத் தந்தையிடம் செல்கிறேன்' என்றார்'' (யோவான் 16:28)

இயேசுவுக்கும் தந்தைக்கும் இடையே நிலவுகின்ற உறவு தனித்தன்மை வாய்ந்தது. இயேசு தம்மைப் பற்றி நமக்கு அறிவித்ததிலிருந்து நாம் அவருக்கும் தந்தைக்கும் இடையே நிலவுகின்ற உறவை ஓரளவு புரிந்துகொள்கிறோம். ஆனால் அந்த உறவின் முழுப் பொருளும் நமக்குத் தெரிவதில்லை. எனவேதான் கடவுள் என்றால் ''மறைபொருள்'' என நாம் ஏற்கிறோம். அவர் நம் கண்களுக்குத் தெரிவதில்லை; நம் அகக் கண்களும் கடவுளை மங்கலாகத்தான் அறிய முடிகிறது. ஆக, இயேசு தம்மைக் கடவுளின் மகன் என அறிமுகம் செய்யும்போது அந்த தந்தை-மகன் உறவை அவர் நமக்கு எவ்வாறு விளக்கிக் கூறுகிறாரோ அவ்வாறே நாமும் புரிந்திட வேண்டும். இவ்வுலக அனுபவத்தின்படி, மகன் பிறப்பதற்குத் தந்தையின் ஒத்துழைப்பு வேண்டும். உயிரியல் தத்துவங்களின் அடிப்படையில் அந்த ஒத்துழைப்பை நாம் விளக்க முடியும். ஆனால் இயேசு தந்தையிடமிருந்து புறப்பட்டு வருவதை நாம் அறிவியல் பாணியில் புரிந்திட இயலாது. மாறாக, இயேசு தமக்கும் தந்தைக்கும் இடையே நிலவுகின்ற உறவை விளக்கும்போது அதை நாம் இறையியல் பார்வையில் காண வேண்டும். அதாவது, விவிலியம் நமக்கு உணர்த்துவதையும், அந்த விவிலிய உண்மையைக் கிறிஸ்தவ சமூகம் வரலாற்றில் புரிந்துவந்துள்ளதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.

இவ்வாறு பார்க்கும்போது, இயேசு தாம் கடவுளிடமிருந்து புறப்பட்டு வருவதாகக் கூறியதோடு தாம் கடவுளோடு இணைபிரியாவிதத்தில் ஒன்றித்திருப்பதையும் குறிப்பிடுகிறார். எனவே, இயேசுவைக் காண்போர் கடவுளையே காண்கின்றனர். உலகில் தாம் ஆற்ற வேண்டிய பணியைச் செய்து முடிக்கிறார் இயேசு. தந்தையின் விருப்பப்படி இயேசு தம் உயிரையே மக்களின் மீட்புக்காகப் பலியாக்குகிறார். தம் பணி நிறைவுற்றதும் அவர் தந்தையிடம் மீண்டும் செல்கிறார். இதிலிருந்து இயேசு நம்மைவிட்டுப் பிரிந்து சென்றுவிட்டதாக நாம் கருதலாகாது. நம்மோடு தங்கியிருந்து நம்மை வழிநடத்த தூய ஆவியை இயேசு அனுப்புவதாக வாக்களித்தார். மேலும் உயிர்பெற்றெழுந்த ஆண்டவராக இயேசு எக்காலத்திற்கும் நம்மோடு இருப்பதாக உறுதி தந்துள்ளார். எனவே, இயேசு தந்தையோடு இணைந்திருப்பதுபோல நம்மோடும் கூட இருந்து நமக்கு வழிகாட்டும் ஒளியாகத் திகழ்கிறார் என உணர்ந்து நாம் மகிழ்ச்சியடைய வேண்டும்.

மன்றாட்டு:

இறைவா, உம் மகன் காட்டுகின்ற வழியில் நாங்கள் நடந்து சென்றிட எங்களுக்கு அருள்தாரும்