யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





மூன்றாவது திருவழிபாடு ஆண்டு
பாஸ்க்கா காலம் 6வது வாரம் வெள்ளிக்கிழமை
2016-05-06

புனித தோமினிக் சாவியோ




முதல் வாசகம்

இரவில் ஆண்டவர் பவுலுக்குக் காட்சியில் தோன்றி, ``அஞ்சாதே; பேசிக்கொண்டேயிரு; நிறுத்தாதே.
திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 18: 9-18

பவுல் கொரிந்து நகரில் இருந்தபோது, இரவில் ஆண்டவர் பவுலுக்குக் காட்சியில் தோன்றி, ``அஞ்சாதே; பேசிக்கொண்டேயிரு; நிறுத்தாதே. ஏனெனில், நான் உன்னோடு இருக்கிறேன். எவரும் உனக்குத் தீங்கிழைக்கப் போவதில்லை. இந்நகரத்தில் எனக்குரிய மக்கள் பலர் இருக்கின்றனர்'' என்று சொன்னார். அவர் அவர்களுக்கு ஓர் ஆண்டு ஆறு மாதம் இறைவார்த்தையைக் கற்பித்து அங்கேயே தங்கியிருந்தார். கல்லியோ என்பவர் அக்காயா நாட்டின் ஆட்சியாளராக இருந்தபோது யூதர்கள் ஒருமித்து, பவுலைத் தாக்கி, அவரை நடுவர் மன்றத்துக்குக் கூட்டிக்கொண்டு வந்து, ``இவன் திருச்சட்டத்துக்கு எதிரான முறையில் கடவுளை வழிபடுமாறு மக்களைத் தூண்டிவிடுகிறான்'' என்றார்கள். பவுல் பேச வாயெடுத்தபோது கல்லியோ அவர்களை நோக்கி, ``யூதர்களே, ஏதாவது குற்றமோ பழிபாவமோ இருக்குமாயின் நான் பொறுமையுடன் உங்கள் வழக்கைக் கேட்டிருப்பேன். ஆனால் இது சொற்களையும் பெயர்களையும் உங்கள் திருச்சட்டத்தையும் பற்றிய சிக்கலாய் இருப்பதால் நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள்; இதில் நடுவராயிருக்க நான் விரும்பவில்லை'' என்று கூறி, அவர்களை நடுவர் மன்றத்திலிருந்து துரத்திவிட்டார். உடனே அவர்கள் அனைவரும் தொழுகைக்கூடத் தலைவரான சொஸ் தேனைப் பிடித்து நடுவர் மன்றத்துக்கு முன்பாக அடித்தனர். ஆனால் கல்லியோ எதையும் பொருட்படுத்தவில்லை. பவுல் பல நாள்கள் கொரிந்துவிலுள்ள சகோதரர் சகோதரிகளிடம் தங்கியிருந்தார். அவர்களிடமிருந்து விடைபெற்றுக்கொண்டு தம் நேர்த்திக்கடனை நிறைவேற்றக் கெங்கிரேயா நகரில் முடிவெட்டிக் கொண்டு, அக்கில்லா, பிரிஸ்கில்லா ஆகியோருடன் சிரியாவுக்குக் கப்பலேறினார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

கடவுளே, அனைத்து உலகின் வேந்தர் நீரே.
திருப்பாடல்47: 1-2. 3-4. 5-6

மக்களினங்களே, களிப்புடன் கைகொட்டுங்கள்; ஆர்ப்பரித்துக் கடவுளைப் புகழ்ந்து பாடுங்கள். 2 ஏனெனில், உன்னதராகிய ஆண்டவர் அஞ்சுதற்கு உரியவர்; உலகனைத்தையும் ஆளும் மாவேந்தர் அவரே. -பல்லவி

3 வேற்று மக்களை நமக்கு அடிபணியச் செய்தவர்; அன்னிய நாடுகளை நம் தாள் பணிய வைத்தார். 4 நம் உரிமைச் சொத்தை அவர் நமக்குத் தேர்ந்து அளித்தார்; அது அவர் அன்புகூரும் யாக்கோபின் பெருமை ஆகும். -பல்லவி

5 ஆரவார ஒலியிடையே பவனி செல்கின்றார் கடவுள்; எக்காளம் முழங்கிடவே உயரே ஏறுகின்றார் ஆண்டவர். 6 பாடுங்கள்; கடவுளுக்குப் புகழ் பாடுங்கள்; பாடுங்கள், நம் அரசருக்குப் புகழ் பாடுங்கள். -பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! மெசியா பாடுபட்டு, இறந்தோரிடமிருந்து உயிர்த்தெழுந்து மாட்சிமை அடைய வேண்டும். அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 16: 20-23

அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: ``உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்: நீங்கள் அழுவீர்கள், புலம்புவீர்கள்; அப்போது உலகம் மகிழும். நீங்கள் துயருறுவீர்கள்; ஆனால் உங்கள் துயரம் மகிழ்ச்சியாக மாறும். பிள்ளையைப் பெற்றெடுக்கும்போது தாய் தனக்குப் பேறுகாலம் வந்துவிட்டதால் வேதனை அடைகிறார். ஆனால் பிள்ளையைப் பெற்றெடுத்த பின்பு உலகில் ஒரு மனித உயிர் தோன்றியுள்ளது என்னும் மகிழ்ச்சியால் தம் வேதனையை அவர் மறந்துவிடுகிறார். இப்போது நீங்களும் துயருறுகிறீர்கள். ஆனால் நான் உங்களை மீண்டும் காணும்போது உங்கள் உள்ளம் மகிழ்ச்சி அடையும். உங்கள் மகிழ்ச்சியை யாரும் உங்களிடமிருந்து நீக்கிவிட முடியாது. அந்நாளில் நீங்கள் என்னிடம் எதையும் கேட்கமாட்டீர்கள்.''

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

சிறிது காலம்.

இயேசுவின் உயிர்ப்புக்கும் அவரது இரண்டாம் வருகைக்கும் இடைப்பட்ட காலம் மிகக் குருகிய காலம். இயேசு குறிப்பிடும் 'சிறிது காலம்' இதுவே. இயேசுவின் வி;ண்ணேற்புக்கும் தூய ஆவியின் வருகைக்கும் இடைப்பட்ட குருகிய காலத்தையும் இயேசு இந்த 'சிறிது காலமாக' குறிப்பிடுவதாகவும் கருதலாம். மொத்தத்தில் இறைவனோடு, இயேசுவோடு, தூய ஆவியோடு இல்லாத காலத்தை இச் 'சிறிது காலத்திற்குச்' சமமாக்கலாம்.

இச் சிறிது காலம் துன்பம் நிறைந்த காலம் என இயேசு குறிப்பிடுகிறார். அழுகையும் புலம்பலும் உள்ள காலம். பேறுகால வேதனையோடு அதனை ஒப்பிடுகிறார். ஆயினும் இறைவனோடு உள்ள உறவில் வாழ்வோருக்கு, இச் சிறிது காலம் பேறுகாலம் போல கொடிய வேதனை நிறைந்த ஒன்றாக இருந்தபோதிலும் இறுதியில் அது பெரு மகிழ்ச்சி தருகின்ற ஒன்றாகவும் இருக்கும். பிள்ளையைப் பெற்றெடுத்த பின், வேதனையுற்ற தாய் மகிழும் மகிழ்ச்சிக்கு ஈடாகும்.

எனவே அன்புச் சகோதர சகோதரிகளே! நம் வாழ்க்கையில் நாம் துன்புறும் காலம் சிறிது காலம் என்று எண்ணுவோம். இச் சிறிது காலம் சீக்கிரமே மாறிவிடும் என்று எதிர்பார்ப்போம். இச் சிறிது காலத்தின் துன்ப துயர வேளைகளில் ஒருபோதும் இயேசுவை விட்டுப் பிறியாது, அவரோடு எப்போதும் தங்கி இருக்குமாறு பார்த்துக்கொள்வோம். அப்போது நம் துன்பம் இன்பமாக மாறும். நம் வேதனை பிள்ளையைப் பெற்ற தாயின் மகிழ்ச்சிக்கு ஒப்பாகும். இக்கட்டு காலத்தில் இயேசுவோடு இருந்தால் 'நீங்கள் இயேசுவின் பெயரால் தந்தையிடம் கேட்டதையெல்லாம் அவர் உங்களுக்குத் தருவார்' என உறுதியாக நம்பி வாழலாம்.

மன்றாட்டு:

இறைவா, உண்மையின் ஊற்று நீர் ஒருவரே என நாங்கள் உணர்ந்து வாழ்ந்திட அருள்தாரும்.