யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





மூன்றாவது திருவழிபாடு ஆண்டு
பாஸ்க்கா காலம் 6வது வாரம் செவ்வாய்க்கிழமை
2016-05-03

புனிதர்கள் பிலிப்பு, யாக்கோபு விழா




முதல் வாசகம்

யாக்கோபுக்கும் அதன்பின் திருத்தூதர் அனைவருக்கும் தோன்றினார்
திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 15: 1-8

சகோதரர் சகோதரிகளே, உங்களுக்கு நான் அறிவித்த நற்செய்தியை நினைவுறுத்த விழைகிறேன். அதை நீங்களும் ஏற்றுக்கொண்டீர்கள்; அதிலே நிலைத்தும் நிற்கிறீர்கள். நான் உங்களுக்கு அறிவித்த நற்செய்தியை நீங்கள் உறுதியாகப் பற்றிக்கொண்டிருந்தால் அதன் வழியாக மீட்பு அடைவீர்கள்; இல்லையேல் நீங்கள் கொண்டிருக்கும் நம்பிக்கை பொருளற்றதே. நான் பெற்றுக்கொண்டதும் முதன்மையானது எனக் கருதி உங்களிடம் ஒப்படைத்ததும் இதுவே: மறைநூலில் எழுதியுள்ளவாறு கிறிஸ்து நம் பாவங்களுக்காக இறந்து, அடக்கம் செய்யப்பட்டார். மறைநூலில் எழுதியுள்ளவாறே மூன்றாம் நாள் உயிருடன் எழுப்பப்பட்டார். பின்னர் அவர் கேபாவுக்கும் அதன்பின் பன்னிருவருக்கும் தோன்றினார். பின்பு ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட சகோதரர் சகோதரிகளுக்கு ஒரே நேரத்தில் தோன்றினார். அவர்களுள் பலர் இன்னமும் உயிரோடு இருக்கின்றனர்; சிலர் இறந்துவிட்டனர். பிறகு யாக்கோபுக்கும் அதன்பின் திருத்தூதர் அனைவருக்கும் தோன்றினார். எல்லாருக்கும் கடைசியில் காலம் தப்பிப் பிறந்த குழந்தை போன்ற எனக்கும் தோன்றினார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

படைப்புகளின் அறிக்கை உலகெங்கும் சென்றடைகின்றது.
திருப்பாடல் 19: 1-2. 3-4

1 வானங்கள் இறைவனின் மாட்சிமையை வெளிப்படுத்துகின்றன; வான்வெளி அவர்தம் கைகளின் வேலைப்பாட்டை விவரிக்கின்றது. 2 ஒவ்வொரு பகலும் அடுத்த பகலுக்கு அச்செய்தியை அறிவிக்கின்றது; ஒவ்வோர் இரவும் அடுத்த இரவுக்கு அதைப் பற்றிய அறிவை வழங்குகின்றது. பல்லவி

3 அவற்றுக்குச் சொல்லுமில்லை, பேச்சுமில்லை; அவற்றின் குரல் செவியில்படுவதுமில்லை. 4 ஆயினும், அவற்றின் அறிக்கை உலகெங்கும் சென்றடைகின்றது; அவை கூறும் செய்தி உலகின் கடையெல்லைவரை எட்டுகின்றது, இறைவன் அங்கே கதிரவனுக்கு ஒரு கூடாரம் அமைத்துள்ளார். பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! வழியும் உண்மையும் வாழ்வும் நானே. பிலிப்பே, என்னைக் காண்பது தந்தையைக் காண்பது ஆகும், என்கிறார் ஆண்டவர் அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 14: 6-14

அக்காலத்தில் இயேசு, தோமாவை நோக்கி: ``வழியும் உண்மையும் வாழ்வும் நானே. என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை. நீங்கள் என்னை அறிந்திருந்தால் என் தந்தையையும் அறிந்திருப்பீர்கள். இது முதல் நீங்கள் தந்தையை அறிந்திருக்கிறீர்கள். அவரைக் கண்டும் இருக்கிறீர்கள்'' என்றார். அப்போது பிலிப்பு அவரிடம், ``ஆண்டவரே, தந்தையை எங்களுக்குக் காட்டும்; அதுவே போதும்'' என்றார். இயேசு அவரிடம் கூறியது: ``பிலிப்பே, இவ்வளவு காலம் நான் உங்களோடு இருந்தும் நீ என்னை அறிந்துகொள்ளவில்லையா? என்னைக் காண்பது தந்தையைக் காண்பது ஆகும். அப்படியிருக்க, `தந்தையை எங்களுக்குக் காட்டும்' என்று நீ எப்படிக் கேட்கலாம்? நான் தந்தையினுள்ளும் தந்தை என்னுள்ளும் இருப்பதை நீ நம்புவதில்லையா? நான் உங்களுக்குக் கூறியவற்றை நானாகக் கூறவில்லை. என்னுள் இருந்துகொண்டு செயலாற்றுபவர் தந்தையே. நான் தந்தையுள் இருக்கிறேன்; தந்தை என்னுள் இருக்கிறார். நான் சொல்வதை நம்புங்கள்; என் வார்த்தையின் பொருட்டு நம்பாவிட்டால் என் செயல்களின் பொருட்டாவது நம்புங்கள். நான் செய்யும் செயல்களை என்னிடம் நம்பிக்கை கொள்பவரும் செய்வார்; ஏன், அவற்றை விடப் பெரியவற்றையும் செய்வார். ஏனெனில் நான் தந்தையிடம் போகிறேன் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். நீங்கள் என் பெயரால் கேட்பதையெல்லாம் நான் செய்வேன். இவ்வாறு தந்தை மகன் வழியாய் மாட்சி பெறுவார். நீங்கள் என் பெயரால் எதைக் கேட்டாலும் செய்வேன்.''

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''பிலிப்பு இயேசுவிடம், 'ஆண்டவரே, தந்தையை எங்களுக்குக் காட்டும்; அதுவே போதும்' என்றார். இயேசு அவரிடம் கூறியது: ''பிலிப்பே,... நான் தந்தையினுள்ளும் தந்தை என்னுள்ளும் இருப்பதை நீ நம்புவதில்லையா?...'' (யோவான் 14:8,10)

இயேசு மக்களுக்குப் போதனை வழங்கினார்; அரும் செயல்கள் பல புரிந்தார். அவருடைய சொற்களும் செயல்களும் கடவுளின் வல்லமையை மக்களுக்கு எடுத்துக்காட்டின. குறிப்பாக, இயேசுவோடு கூட இருந்து அவரைப் பின்தொடர்ந்து சென்ற சீடர்கள் இயேசுவின் சொற்களை நேரடியாகக் கேட்டார்கள், அவர் புரிந்த அரும் செயல்களை அருகிருந்து கண்டார்கள். எனவே அவர்கள் இயேசு யார் என்பதை அறிந்திருப்பார்கள் என நாம் எதிர்பார்க்கலாம். இருந்தாலும், சீடர்கள் இயேசுவை முழுமையாகப் புரிந்துகொள்ளவில்லை என்பதையே பிலிப்புவின் கூற்று வெளிப்படுத்துகிறது. பிலிப்பு இயேசுவுக்கும் தந்தைக்கும் இடையே நிலவுகின்ற உறவைப் புரிந்துகொள்ளவில்லை. தந்தை வேறு இயேசு வேறு என்றுதான் அவர் நினைக்கின்றார். ஆனால் இயேசு பிலிப்புவின் தவறான பார்வையைத் திருத்துகின்றார். இயேசுவுக்கும் தந்தைக்கும் இடையே நெருங்கிய உறவு உண்டு. இயேசு தந்தையால் அனுப்பப்பட்டு இவ்வுலகிற்கு வந்தவர்; தந்தையே இயேசுவுக்குத் ''தோற்றுவாய்'' எனலாம். எனவே தந்தை இயேசுவிடம் உறைகின்றார்; இயேசு தந்தையிடம் உறைகின்றார். இந்த உண்மை மனித அறிவுக்கு எட்டாததாகத் தெரியலாம். ஆனால் இயேசுவின் சொற்களைக் கேட்டு, அவரிடத்தில் நம்பிக்கை கொள்வோர் இயேசு அறிவிக்கின்ற இந்த உண்மையை ஏற்றுக்கொள்வார்கள்.

இயேசுவுக்கும் தந்தைக்கும் இடையே நிலவுகின்ற உறவு எந்த அளவு நெருக்கமானது என்றால் இயேசு, ''என்னைக் காண்பது தந்தையைக் காண்பது ஆகும்'' எனக் கூறுகிறார் (யோவா 14:9). இந்த உண்மையை நாம் ஏற்றுக்கொண்டால் இயேசு நமக்குக் காட்டுகின்ற வழியே கடவுள் நமக்கு அளிக்கின்ற வாழ்வுமுறை எனவும் ஏற்போம். அப்போது இயேசுவின் தந்தையும் நம் தந்தையுமாகிய கடவுள் தம் மகன் இயேசு வழியாக நம்மைத் தம்மோடு எந்நாளும் நிலைவாழ்வில் பங்குபெறச் செய்வார் என்னும் நம்பிக்கையோடு வாழ்வோம். இந்த நம்பிக்கை நமக்கு இருப்பதால் நாம் இயேசுவின் பெயரால் கேட்பதை அவர் செய்வார் என்னும் உறுதி நமக்கு உண்டு. இத்தகைய உறுதியை நமக்கு அளிப்பவர் இயேசு நமக்குக் கொடையாகத் தருகின்ற தூய ஆவி (காண்க: யோவா 14:16,17).

மன்றாட்டு:

இறைவா, உம் திருமகனில் உம்மைக் கண்டு நாங்கள் நல்லுறவில் வளர்ந்திட எங்களுக்கு அருள்தாரும்.