யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





திருவழிபாடு ஆண்டு - C

(இன்றைய வாசகங்கள்: தி ப 14:21-27, தி வெ 21: 1-5, யோவான் 13: 31-35



என் ஆடுகள் எனது குரலுக்குச் செவிசாய்க்கின்றன என் ஆடுகள் எனது குரலுக்குச் செவிசாய்க்கின்றன என் ஆடுகள் எனது குரலுக்குச் செவிசாய்க்கின்றன


திருப்பலி முன்னுரை

அன்புமிக்க சகோதர சகோதரிகளே! இயேசுவே ஆண்டவர் என்னும் இனிய நாமத்தில் நல் வாழ்த்துக்கள்,

இன்று பாஸ்காக் காலம் ஐந்தாம் ஞாயிறு. இத் தினத்தில் ஆண்டவரின் திருச்சந்நிதி முன் ஒன்று கூடியுள்ளோம். நம் கடவுள் நம்மை விட்டுப்பிரியாத கடவுள். அவர் நம்மோடு உடனிருந்து ஆறுதலும், ஆனந்தமும் தருபவர். நம் அழுகையைத் துடைத்து நம்மைத் தேற்றுகிறவர். தாம் வாக்களித்த அனைத்தையும் அவர் நமக்காகச் செய்து முடிப்பவர். தன்னுடைய அன்பை நம்மோடு பகிர்ந்து அந்தத் தூய்மையான அன்பை நாமும் மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ள அழைக்கின்றவர். ஆகவே நாம் அனைவரும் என்றென்றும் இறைவனோடு இணைந்து வாழுவோம், செபத்தாலும், நோன்பாலும் நாம் நம்மை வளப்படுத்திக் கொள்ளுவோம். அனைவரையும் மன்னிப்போம், இறைவனின் சாட்சிகளாய் வாழ நம்மை அர்ப்பணிப்போம். இறையருள் வேண்டித் தொடரும் பலியில் பங்கேற்போம்.



முதல் வாசகம்

திருச்சபையைக் கூட்டி, கடவுள் தங்கள் வழியாகச் செய்த அனைத்தையும் அறிவித்தார்கள்.
திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம். 14:21-27

அந்நாள்களில் பவுலும், பர்னபாவும் லிஸ்திரா, இக்கோனியா, அந்தியோக்கியா ஆகிய நகரங்களுக்குத் திரும்பி வந்தார்கள். அங்குள்ள சீடர்களின் உள்ளத்தை அவர்கள் உறுதிப்படுத்தி, 'நாம் பல வேதனைகள் வழியாகவே இறையாட்சிக்கு உட்பட வேண்டும்" என்று கூறி நம் பிக்கையில் நிலைத்திருக்கும்படி அவர்களை ஊக்குவித்தார்கள். அவர்கள் ஒவ்வொரு திருச்சபையிலும் மூப்பர்களைத் தேர்ந்தெடுத்து நோன்பிருந்து இறைவனிடம் வேண்டித் தாங்கள் நம்பிக்கை கொண்டிருந்த ஆண்டவரிடம் அவர்களை ஒப்படைத்தார்கள். பின்பு பிசிதியா வழியாகப் பம்பிலியா வந்தார்கள். பெருகை நகரில் இறைவார்த்தையை அறிவித்தபின் அத்தாலியா வந்தார்கள். அங்கிருந்து கப்பலேறி அந்தியோக்கியா வந்தார்கள். அங்குதான் அவர்கள் அருள் வழங்கும் கடவுளின் பணிக்கென்று அர்ப்பணிக்கப்பட்டார்கள். இப்போது அப்பணியைச் செய்து முடித்துவிட்டார்கள். அவர்கள் அங்கு வந்ததும் திருச்சபையைக் கூட்டி, கடவுள் தங்கள் வழியாகச் செய்த அனைத்தையும், அவர் பிற இனத்தவர்க்கு நம்பிக்கை கொள்ளும் வாய்ப்பைக் கொடுத்ததையும் அறிவித்தார்கள்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

பல்லவி: என் கடவுளே, உம்மைப் புகழ்ந்து ஏத்துவேன்!
திருப்பாடல்: 145: 8-13.

ஆண்டவர் இரக்கமும் கனிவும் உடையவர். எளிதில் சினம் கொள்ளாதவர். பேரன்பு கொண்டவர். ஆண்டவர் எல்லாருக்கும் நன்மை செய்பவர். தாம் உண்டாக்கிய அனைத்தின்மீதும் இரக்கம் காட்டுபவர். பல்லவி:

ஆண்டவரே, நீர் உருவாக்கிய யாவும் உமக்கு நன்றி செலுத்தும். உம்முடைய அன்பர்கள் உம்மைப் போற்றுவார்கள். அவர்கள் உமது அரசின் மாட்சியை அறிவிப்பார்கள். உமது வல்லமையைப் பற்றிப் பேசுவார்கள். பல்லவி:

மானிடர்க்கு உம் வல்லமைச் செயல்களையும் உமது அரசுக்குரிய மாட்சியின் பேரொளியையும் புலப்படுத்துவார்கள். உமது அரசு எல்லாக் காலங்களிலுமுள்ள அரசு. உமது ஆளுகை தலைமுறை தலைமுறையாக உள்ளது. பல்லவி:

இரண்டாம் வாசகம்

கடவுள் அவர்களுடைய கண்ணீர் அனைத்தையும் அவர் துடைத்து விடுவார்.
திருத்தூதர் யோவான் எமுதிய திருவெளிப்பாட்டிலிருந்து வாசகம். 21: 1-5

யோவான் நான் புதியதொரு விண்ணகத்தையும் புதியதொரு மண்ணகத்தையும் கண்டேன். முன்பு இருந்த விண்ணகமும் மண்ணகமும் மறைந்துவிட்டன. கடலும் இல்லாமற் போயிற்று. அப்பொழுது புதிய எருசலேம் என்னும் திருநகர் கடவுளிடமிருந்து விண்ணகத்தை விட்டு இறங்கிவரக் கண்டேன். தன் மணமகனுக்காகத் தன்னையே அணி செய்து கொண்ட மணமகளைப்போல் அது ஆயத்தமாய் இருந்தது. பின்பு விண்ணகத்திலிருந்து எழுந்த பெரும் குரல் ஒன்றைக் கேட்டேன். அது, 'இதோ! கடவுளின் உறை விடம் மனிதர் நடுவே உள்ளது. அவர் அவர்கள் நடுவே குடியிருப்பார். அவர்கள் அவருக்கு மக்களாய் இருப்பார்கள். கடவுள் தாமே அவர்களோடு இருப்பார். அவரே அவர்களு டைய கடவுளாய் இருப்பார். அவர்களுடைய கண்ணீர் அனைத்தையும் அவர் துடை த்து விடுவார். இனிமேல் சாவு இராது. துயரம் இராது, அழுகை இராது, துன்பம் இராது. முன்பு இருந்தவையெல்லாம் மறைந்துவிட்டன" என்றது. அப்பொழுது அரியணையில் வீற்றிருந்தவர், 'இதோ! நான் அனைத்தையும் புதியது ஆக்குகிறேன்" என்று கூறினார். மேலும், 'இவ்வாக்குகள் நம்பத்தக்கவை, உண்மையுள்ளவை| என எழுது" என்றார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

- இறைவா உமக்கு நன்றி




நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா ! ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்| என்னும் புதிய கட்டளையை நான் உங்களுக்குக் கொடுக்கிறேன். அல்லேலூயா !

நற்செய்தி வாசகம்

யோவான் எமுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம்: 13: 31-35

யூதாசு இறுதி இராவுணவின் அறையை விட்டு வெளியே போனபின் இயேசு, 'இப்போது மானிடமகன் மாட்சி பெற்றுள்ளார். அவர் வழியாகக் கடவுளும் மாட்சிபெற்றுள்ளார். கடவுள் அவர் வழியாக மாட்சி பெற்றாரானால் கடவுளும் தம் வழியாய் அவரை மாட்சிப்படுத்துவார். அதையும் உடனே செய்வார். பிள்ளைகளே, இன்னும் சிறிது காலமே உங்களோடு இருப்பேன். ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்| என்னும் புதிய கட்டளையை நான் உங்களுக்குக் கொடுக்கிறேன். நான் உங்களிடம் அன்பு செலுத்தியது போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள். நீங்கள் ஒருவர் மற்றவருக்குச் செலுத்தும் அன்பிலிருந்து நீங்கள் என் சீடர்கள் என்பதை எல்லாரும் அறிந்துகொள்வர்" என்றார்

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




விசுவாசிகள் மன்றாட்டுகள்:


பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

1. எங்கள் நல்லாயராம் இறைவா,

எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவிகள், அனைவருக்காகவும் மன்றாடுகின்றோம் : தூய ஆவியின் நிறை வல்லமையால் அவர்களை நிரப்பி, பவுலும், பர்னபாவும் கொண்டிருந்த நற்செய்தி ஆர்வத்தை அவர்களும் கொண்டிருக்கவும், மக்களை உறுதிப்படுத்தி, தீமைகளை முறியடிக்க வேண்டிய சக்தியையும், ஆற்றலையும் அவர்களுக்கு அளித்துக் காத்திட வேண்டு மென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2. மனிதர் நடுவே உமது உறைவிடத்தை அமைத்துள்ள தந்தையே!

நீர் எம்மத்தியில் எப்பொழுதும் பிரசன்னமாகியிருக்கின்றீர் என்னும் மாபெரும் உண்மையை உணர்ந்து நாம் தூய்மையான அன்பைப் பகிர்ந்து உமக்கேற்ற சீடர்களாக வாழ்வ தற்கு வேண்டிய அருளை அளித்துக் காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. நானே ஆண்டவர்! கொல்லும் கொள்ளை நோய் எதுவும் உங்கள்மேல் வராது என்ற உன்னத வாக்குறுதியை எமக்களித்த தந்தையே!

இன்று அரசியல், பொருளாதார, சமூக விடுதலைக்காகவும்: கவலை, நோய், துன்பம் போன்றவற்றிலிருந்தும் விடுதலை பெறத் தவித்துக் கொண்டிருக்கும் அனைத்து மக்களும் நீர் கொடுக்கின்ற ஆறுதலைப் பெற்றுக் கொள்ளவும், இயற்கை, செயற்கை அழிவுகளிலிருந்து அவர்களைப் பாதுகாத்திடவும் வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. அணைகடந்த உமது அன்பினால் எம்மை அரவணைக்கும் இறைவா!

பல்வேறு விதமான பணிகளில் ஈடுபட்டிருப்போரை ஆசீர்வதியும். அவர்கள் தங்கள் பணிகளைச் சிறப்பாகவும், முழுமையாகவும் செய்வதற்கு வேண்டிய உடல், உள வலிமையை அளித்து வழிநடாத்தியருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2. அனைத்தின்மீதும் இரக்கம் காட்டுகின்ற தந்தையே இறைவா!

உமது பிள்ளைகளாகிய நாங்கள்: வேதனைகளை ஏங்றுக்கொண்டு, நம்பிக்கையில் நிலைத்திருந்து, ஒருவரையொருவர் அன்பு செய்து வாழும் மனப் பக்குவத்தை எமக்குத் தந்திடவேண்டு மென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.


இன்றைய சிந்தனை

கடவுள் மாட்சி பெறட்டும் !

பாஸ்கா காலத்தின் ஐந்தாம் ஞாயிறாகிய இன்று நாம் செலுத்தும் அன்பு வழியாக இறைவன் மாட்சிமை அடையவேண்டும் என்றும், அன்பிலிருந்தே பிறர் நம்மை இயேசுவின் சீடர்களாக அடையாளம் காண்பர் என்றும் இறைமொழி வழியாக அறிகின்றோம்.

இயேசு தமது இறுதி செபத்தில் இவ்வாறு செபித்தார்: மானிட மகன் வழியாகக் கடவுளும் மாட்சி பெற்றுள்ளார்”. நாம் நேர்மையோடும், அன்போடும் ஆற்றுகின்ற ஒவ்வொரு செயலிலும் இறைவன் மாட்சி அடைகின்றார். மனம் மகிழ்கின்றார்; என்பதே ஒரு நற்செய்தி அல்லவா! எனவே, நாம் எதைச் செய்தாலும், அச்செயல் வழியாக இறைவன் மாட்சி அடையவேண்டும் என்னும் மனநிலையில் பணியாற்ற வேண்டும். நமது ஒவ்வொரு அன்புச் செயலும் இறைவனை மனமகிழச் செய்கிறது என்பதை உணர்ந்தால், நமது செயல்களுக்குப் புதிய பரிமாணம் கிடைக்காதா? எனவே, நாம எதைச் செய்தாலும், கூலிக்காக செய்யாமல், ஆண்டவருக்காக செய்ய முன்வருவோமாக!

மன்றாட்டு:

உழைப்பை மேன்மைப்படுத்தி, தந்தையை மாட்சிப்படுத்திய இயேசுவே, இறைவா, உம்மைப் போற்றுகிறோம். தந்தை எனக்குக் கொடுத்த வேலையை செய்துமுடிப்பதே என் உணவு” என்று மொழிந்து, உரைத்தவாறே தந்தையின் பணிகளை நன்றாகச் செய்து, தந்தையை மாட்சிப்படுத்தினீரே. உமக்கு நன்றி. உம்மைப் போல நாங்களும் உழைக்க, இறைவனை மாட்சிப்படுத்த அருள்தாரும்.