யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





திருவழிபாடு ஆண்டு - C

(இன்றைய வாசகங்கள்: திரு.பணிகள் 13:14,43-52, திருவெளிப்பாடு 7:9,14-17, யோவான் 10: 27-30



என் ஆடுகள் எனது குரலுக்குச் செவிசாய்க்கின்றன


திருப்பலி முன்னுரை

கடவுளுக்குரியவர்களே,

நல்லாயராம் இயேசுவின் பெயரால், பாஸ்கா காலத்தின் நான்காம் ஞாயிறு திருப்பலிக்கு உங்கள் அனைவரையும் வரவேற்கிறோம். நல்லாயன் ஞாயிறில் சிறப்பிக்கப்படும் இன்றைய திருவழிபாடு, இயேசுவைப் பின்தொடர்ந்து, நிலைவாழ்வைப் பெற்றுக் கொள்ளும் ஆடுகளாக வாழ நமக்கு அழைப்பு விடுக்கிறது. இயேசுவின் குரலுக்கு செவி கொடுக்கும் ஆடுகளாக வாழும்போது நாம் அழிவுக்குள்ளாக மாட்டோம். நமக்காக உயிரைக் கொடுத்த ஆண்டவர் இயேசுவிடம் இருந்து நம்மை எதுவும் பிரித்து விடாத வகையில், அவரது பாதுகாப்பில் வாழ நாம் அழைக்கப்படுகிறோம். ஆண்டவருக்கு உண்மையுள்ள ஆடுகளாக வாழ்ந்து, நாம் கடவுளைச் சார்ந்தவர்கள் என்பதை மற்றவர்களுக்கு பறைசாற்ற வரம் வேண்டி, இந்த திருப்பலியில் பங்கேற்போம்.



முதல் வாசகம்


திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 13: 13, 43-52

அந்நாட்களில் பவுலம், பர்னபாவும் பெருகையிலிருந்து புறப்பட்டுச் சென்று பிசிதியாவிலுள்ள அந்தியோக்கியாவை அடைந்தார்கள். ஓய்வு நாளன்று அவர்கள் தொழுகைக்கூடத்திற்குச் சென்று அங்கு அமர்ந்திருந்தார்கள். தொழுகைக் கூடத்தில் இருந்தோர் கலைந்து சென்றபோது பல யூதர்களும் யூதம் தழுவிக் கடவுளை வழிபட்டவர்களும் பவுலையும், பர்னபாவையும் பின் தொடர்ந்தார்கள். இவ்விருவரும் அவர்களோடு பேசிக் கடவுளின் அருளில் நிலைத்திருக்கும்படி அவர்களைத் தூண்டினர். அடுத்து வந்த ஓய்வு நாளில் ஆண்டவரின் வார்த்தையைக் கேட்க ஏறக்குறைய நகரத்தார் அனைவரும் கூடி வந்தனர். மக்கள் திரளைக் கண்ட யூதர்கள் பொறாமையால் நிறைந்து, பவுல் கூறியதை எதிர்த்துப் பேசி அவரைப் பழித்துரைத்தார்கள்.பவுலும் பர்னபாவும் துணிவுடன், 'கடவுளின் வார்த்தையை உங்களுக்குத் தான் முதலில் அறிவிக்க வேண்டியிருந்தது. ஆனால் நீங்கள் அதனை உதறித் தள்ளி நிலை வாழ்வுக்குத் தகுதியற்றவர்கள் என்று உங்களுக்கு நீங்களே தீர்ப்பளித்துக் கொண்டீர்கள். எனவே நாங்கள் பிற இனத்தாரிடம் செல்லுகிறோம். ஏனென்றால், 'உலகம் முழுவதும் என் மீட்பை அடைவதற்கு நான் உன்னை வேற்றினத்தார்க்கு ஒளியாக ஏற்படுத்துவேன் ' என்று ஆண்'டவர் எங்களுக்குக் கட்டளையிட்டுள்ளார் ' என்று எடுத்துக் கூறினார்கள். இதைக் கேட்ட பிற இனத்தார் மகிழ்ச்சியடைந்தனர்: ஆண்டவரின் வார்த்தையைப் போற்றிப் புகழ்ந்தனர். நிலைவாழ்வுக்காகக் குறிக்கப்பட்டோர் அனைவரும் நம்பிக்கை கொண்டனர். அப்பகுதியெங்கும் ஆண்டவரின் வார்த்தை பரவியது ஆனால் யூதர்கள் கடவுளை வழிபட்டு வந்த மதிப்புக்குரிய பெண்களையும் நகரின் முதன்மைக் குடிமக்களையும் தூண்டிவிட்டு, பவுலையும் பர்னபாவையும் இன்னலுக்குள்ளாக்கி, அவர்களைத் தங்களது நாட்டிலிருந்து துரத்திவிட்டார்கள். அவர்கள் தங்கள் கால்களில் படிந்திருந்த தூசியை அவர்களுக்கு எதிராக உதறிவிட்டு இக்கோனியாவுக்குச் சென்றார்கள். சீடர்களோ தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டு மகிழ்ச்சியில் திளைத்திருந்தார்கள்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

பல்லவி: நாம் அவர் மக்கள், அவர் மேய்க்கும் ஆடுகள்!
திருப்பாடல் 100: 1-2. 3. 5

அனைத்துலகோரே! ஆண்டவரை ஆர்ப்பரித்து வாழ்த்துங்கள்! ஆண்டவரை மகிழ்ச்சியுடன் வழிபடுங்கள்! மகிழ்ச்சி நிறை பாடலுடன் அவர் திருமுன் வாருங்கள்! -பல்லவி

ஆண்டவரே கடவுள் என்று உணருங்கள்! அவரே நம்மைப் படைத்தவர்! நாம் அவர் மக்கள், அவர் மேய்க்கும் ஆடுகள்! -பல்லவி

ஏனெனில், ஆண்டவர் நல்லவர்; என்றும் உள்ளது அவர்தம் பேரன்பு; தலைமுறைதோறும் அவர் நம்பத்தக்கவர். -பல்லவி

இரண்டாம் வாசகம்


திருத்தூதர் யோவான் எழுதிய திருவெளிப்பாட்டிலிருந்து வாசகம் 7: 9, 14b-17

யோவான் நான் யாராலும் எண்ணிக்கையிட முடியாத பெரும் திரளான மக்களைக் கண்டேன். அவர்கள் எல்லா நாட்டையும், குலத்தையும் மக்களினத்தையும் மொழியையும் சார்ந்தவர்கள்: அரியணைக்கும் ஆட்டுக்குட்டிக்கும் முன்பாக நின்றுகொண்டிருந்தார்கள்: வெண்மையான தொங்கலாடை அணிந்தவர்களாய்க் கையில் குருத்தோலைகளைக் பிடித்திருந்தார்களநான் அவரிடம், 'என் தலைவரே, அது உமக்குத்தான் தெரியும் ' என்றேன். அதற்கு அவர் என்னிடம் கூறியது: 'இவர்கள் கொடிய வேதனையிலிருந்து மீண்டவர்கள்: தங்களின் தொங்கலாடைகளை ஆட்டுக்குட்டியின் இரத்தத்தில் துவைத்து வெண்மையாக்கிக் கொண்டவர்கள். இதனால்தான் கடவுளது அரியணைமுன் நின்றுகொண்டு அவரது கோவிலில் அல்லும் பகலும் அவரை வழிபட்டுவருகிறார்கள்: அரியணையில் வீற்றிருப்பவர் அவர்களிடையே குடிகொண்டு அவர்களைப் பாதுகாப்பார். இனி அவர்களுக்குப் பசியோ தாகமோ இரா: கதிரவனோ எவ்வகை வெப்பமோ அவர்களைத் தாக்கா. ஏனெனில் அரியணை நடுவில் இருக்கும் ஆட்டுக்குட்டி அவர்களை மேய்க்கும்: வாழ்வு அளிக்கும் நீரூற்றுகளுக்கு வழிநடத்திச் செல்லும். கடவுள் அவர்களின் கண்ணீர் அனைத்தையும் துடைத்துவிடுவார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

- இறைவா உமக்கு நன்றி




நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா ! நல்ல ஆயன் நானே. நானும் என் ஆடுகளை அறிந்திருக்கிறேன்; என் ஆடுகளும் என்னை அறிந்திருக்கின்றன, என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா !

நற்செய்தி வாசகம்

யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 27-30

அக்காலத்தில் இயேசு கூறியது: 'என் ஆடுகள் எனது குரலுக்குச் செவிசாய்க்கின்றன. எனக்கும் அவற்றைத் தெரியும். அவையும் என்னைப்பின் தொடர்கின்றன. நான் அவற்றிற்கு நிலைவாழ்வை அளிக்கிறேன். அவை என்றுமே அழியா. அவற்றை எனது கையிலிருந்து யாரும் பறித்துக் கொள்ளமாட்டார். அவற்றை எனக்கு அளித்த என் தந்தை அனைவரையும் விடப் பெரியவர். அவற்றை என் தந்தையின் கையிலிருந்து யாரும் பறித்துக்கொள்ள இயலாது.நானும் தந்தையும் ஒன்றாய் இருக்கிறோம் ' என்றார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




விசுவாசிகள் மன்றாட்டுகள்:


பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

1. எங்கள் நல்லாயராம் இறைவா,

உமது திருச்சபையை வழிநடத்தும் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவரும் உமக்கு உகந்த மந்தையாக இறைமக்களை உருவாக்க துணைபுரிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

2. எங்கள் ஒளியாம் இறைவா,

உம்மைப் பற்றிய உண்மையைப் புறக்கணித்து, தவறான கொள்கைகளையும் சமயங்களையும் பின்பற்றி வாழும் மக்கள், உண்மை கடவுளாகிய உம்மை ஏற்றுக்கொள்ளவும் உமது அரசில் ஒன்றிணையவும் அருள்புரிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

3. எங்கள் வழியாம் இறைவா,

தங்கள் சுயநலத்துக்காக பணம், பதவி, போதை, வன்முறை ஆகியவற்றின் மீது ஆர்வம் கொண்டு, பிறருடைய நிம்மதியை சீர்குலைக்கும் தீயவர்கள் அனைவரும் மனம் திருந்தி உமது தூய வழியைப் பின்பற்ற வரமருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

4. அணைகடந்த உமது அன்பினால் எம்மை அரவணைக்கும் இறைவா!

இன்று உலகில் நடைபெறும் கிறிஸ்துவர்களுக்கு எதிரான தீவிரவாத தாக்குதல்கள், துறவற வாழ்வை மேற்கொண்டவர்களுக்கும் எதிராக நடைபெறும் வன்முறைகள், மதத்தின் பெயரால் ஆங்காங்கே நடைபெறும் இச் செயல்களை இனம் கண்டு, மனித வாழ்வின் மேன்மையை இவர்கள் உணரவும் இவர்களின் வழியாக பாவிகள் மனம் திரும்ப உம் ஆவியின் ஆற்றலை இவர்களும் உணர்ந்து சாட்சிய வாழ்வு வாழ வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5. மனமாற்றத்தின் நாயகனே எம் இறைவா!

அன்று பேதுருவை உம் பணிக்கென சிறப்பாக நீர் தேர்ந்தெடுத்து, உம் சீடத்துவ வாழ்வு வாழ தொடர்ந்து அவரை பலப்படுத்தியது போல இறை அழைத்தலின் மேன்மையை, அனைத்து மாந்தரும், சுயநலம் கருதாமல் குருத்துவத்தின் மேன்மையை தங்கள் பிள்ளைகளுக்கு அறிவுறுத்தி திருச்சபைக்கு பணி செய்திட தங்கள் பிள்ளைகளை ஊக்குவிக்க வேண்டிய அருள் வரங்களை பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.


இன்றைய சிந்தனை

தந்தையும், மகனும்

நானும் தந்தையும் ஒன்றாய் இருக்கிறோம், என்கிற இயேசுவின் வார்த்தைகள் நம்மை சிந்திப்பதற்கு அழைப்பு விடுக்கிறது. “ஒன்றாய்“ என்பதன் பொருள் என்ன? நமது அடிப்படை மறைக்கல்வி, கடவுள் மூன்று ஆட்களாய் இருக்கிறார் எனவும், ஆனால் ஒரே கடவுள் எனவும் கற்றுத்தந்திருக்கிறது. அதற்கான காரணத்தைப் பார்க்கிறபோது, மூன்று பேருக்கும் ஒரே ஆற்றல், ஒரே வல்லமை, ஒரே கடவுள் தன்மை இருப்பது என்று சொல்லப்படுகிறது. இதனை அடியொற்றி நாம் சிந்திக்கிறபோது, இயேசு தந்தையாகிய கடவுளின் இதயத்தோடு இணைந்தவராய் இருக்கிறார் என்று நாம் புரிந்து கொள்ளலாம்.

என்னைப் பார்க்கிறவர், தந்தையையே பார்க்கிறார் என்று இயேசு சொல்வதன் பிண்ணனியும் இதுதான். தந்தையாகிய கடவுளைப் பார்க்க விரும்புகிறவர் எவரும் இயேசுவைப் பார்த்தாலே போதும். ஏனெனில், இயேசு கடவுளின் பண்பை வெளிப்படுத்துகிறவராய் இருக்கிறார். இயேசு பாவிகளை பெருந்தன்மையோடு மன்னிக்கிறபோது, கடவுளின் மன்னிப்பை நாம் பார்க்கலாம். இயேசு நற்செய்தி அறிவிக்கிறபோது, கடவுளின் வார்த்தையை நாம் கேட்கலாம். இயேசு புதுமைகள் செய்கிறபோது, கடவுளின் வல்ல செயல்களையும், அவரது வலிமையையும் நாம் கண்டுணரலாம். ஆக, ஒட்டுமொத்த கடவுளின் உருவம், நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து.

இயேசு எவ்வாறு கடவுளின் இதயத்தை பெற்றவராய், அவரோடு இணைந்து இருக்கிறாரோ, அதேபோல நாமும் அவரது இதயத்தைப் பெற்றவர்களாய், எதையும் இயேசுவின் மனநிலையோடு பார்ப்பதற்கு அழைக்கப்படுகிறோம். நாம் செய்யும் அனைத்து செயல்பாடுகளையும் இயேசுவின் பார்வையில் செய்வதற்கு முயற்சி எடுப்போம்.

மன்றாட்டு:

நல்ல ஆயனான ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறோம். நன்றி செலுத்துகிறோம். உமது அடைக்கலத்தில் நாங்கள் என்றும் வாழும் வரம் தருவீராக.