திருவழிபாடு ஆண்டு - C
(இன்றைய வாசகங்கள்:
திரு. பணி. 5:27-32,40-41,
திருவெளி 5:11-14,
யோவான் 21:1-19
திருப்பலி முன்னுரை உண்மைக்குரியவர்களே,
உயிர்த்தெழுந்த நம் ஆண்டவர் இயேசுவின் பெயரால்,
பாஸ்கா காலத்தின் மூன்றாம் ஞாயிறு திருப்பலிக்கு உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கிறோம்.
இயேசுவின் உயிர்ப்பை முழுமையாக ஏற்று,
உண்மையான இறைமகனாகிய அவரைப் பின்தொடர இன்றைய திருவழிபாடு நமக்கு அழைப்பு விடுக்கிறது.
கிறிஸ்து இயேசு தம் சீடர்களுக்கு திபேரியக் கடல் அருகே தோன்றியபோது,
சீடர்கள் அவரில் சந்தேகம் கொள்ளவில்லை. ஏனெனில்,
அவர் ஆண்டவர்தாம் என்று அவர்கள் அறிந்து கொண்டார்கள்.
அவர்களைப் போன்று, ஆண்டவரின் உயிர்ப்புக்கு உண்மையான சாட்சிகளாக வாழ நாம் அழைக்கப்படுகிறோம்.
பேதுருவைப் போன்று இயேசுவின் மீதான அன்பை வெளிப்படுத்த மீண்டும் நமக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.
இயேசுவின் உயிர்ப்பு அனுபவத்தைப் பெற்று,
நாமும் உயிர்ப்பின் மக்களாக வாழ வரம் வேண்டி, இந்த திருப்பலியில் பங்கேற்போம்.
முதல் வாசகம்
இவற்றுக்கு நாங்களும்; தூய ஆவியும் சாட்சிகள் ;
திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம். 5:27-32, 40-41
அந்நாட்களில் தலைமைக் குரு அவர்களை நோக்கி, 'நீங்கள் இந்த இயேசு பற்றிக் கற்பிக்கக் கூடாது என்று நாங்கள் கண்டிப்பாய்க் கட்டளையிடவில்லையா? என்றாலும் எருசலேம் முழுவதும் நீங்கள் கற்பித்து வருகிறீர்கள். மேலும் இந்த மனிதருடைய இரத்தப் பழியையும் எங்கள்மீது சுமத்தப் பார்க்கிறீர்களே! ' என்றார். அதற்குப் பேதுருவும் திருத்தூதரும் மறுமொழியாக, 'மனிதர்களுக்குக் கீழ்ப்படிவதைவிட கடவுளுக்கு அல்லவா கீழ்ப்படிய வேண்டும்? நீங்கள் சிலுவையில் தொங்கவைத்துக் கொன்ற இயேசுவை நம் மூதாதையரின் கடவுள் உயிர்த்தெழச் செய்தார். இஸ்ரயேல் மக்களுக்கு மனம் மாற்றத்தையும் பாவமன்னிப்பையும் அளிப்பதற்காகக் கடவுள் அவரைத் தலைவராகவும் மீட்பராகவும் தமது வலப்பக்கத்துக்கு உயர்த்தினார். இவற்றுக்கு நாங்களும் கடவுள் தமக்குக் கீழ்ப்படிவோருக்கு அருளும் தூய ஆவியும் சாட்சிகள் ' என்றனர். பின்பு அவர்கள் திருத்தூதர்களை அழைத்து அவர்களை நையப்புடைத்து, இயேசுவைப்பற்றிப் பேசக் கூடாதென்று கட்டளையிட்டு விடுதலை செய்தனர். இயேசுவின் பெயரை முன்னிட்டு அவமதிப்புக்கு உரியவர்களாகக் கருதப்பட்டதால் திருத்தூதர்கள் மகிழ்ச்சியோடு தலைமைச் சங்கத்தை விட்டு வெளியே சென்றார்கள்..
- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
- இறைவா உமக்கு நன்றி
பதிலுரைப் பாடல்
பல்லவி:ஆண்டவரே, உம்மைப் புகழ்வேன்: ஏனெனில், நீர் என்னைக் கைதூக்கி விட்டீர்:
திருப்பாடல்: 30: 1,3-5. 10-12
ஆண்டவரே, உம்மை ஏத்திப் புகழ்வேன்: ஏனெனில், நீர் என்னைக் கைதூக்கி விட்டீர்: என்னைக் கண்டு என் பகைவர் மகிழ நீர் விடவில்லை. ஆண்டவரே, நீர் என்னைப் பாதாளத்திலிருந்து ஏறிவரச் செய்தீர்: சாவுக் குழியில் இறங்கிய எனது உயிரைக் காத்தீர்.பல்லவி:
இறையன்பரே, ஆண்டவரைப் புகழ்ந்து பாடுங்கள்: தூயவராம் அவரை நினைந்து நன்றி கூறுங்கள். அவரது சினம் ஒரு நொடிப் பொழுதுதான் இருக்கும்: அவரது கருணையோ வாழ்நாள் முழுதும் நீடிக்கும்: மாலையில் அழுகை: காலையிலோ ஆர்ப்பரிப்பு.பல்லவி:
ஆண்டவரே. எனக்குச் செவிசாயும்: என்மீது இரங்கும்;: ஆண்டவரே, எனக்குத் துணையாய் இரும். நீர் என் புலம்பலைக் களிநடனமாக மாற்றிவிட்டீர்: என் கடவுளாகிய ஆண்டவரே, உமக்கு என்றென்றும் நன்றி செலுத்துவேன்.பல்லவி:
இரண்டாம் வாசகம்
கொல்லப்பட்ட ஆட்டுக்குட்டி வல்லமையும் செல்வமும் பெறத் தகுதி பெற்றது. திருத்தூதர் யோவான் எழுதிய திருவெளிப்பாட்டிலிருந்து வாசகம் 5: 11-14யோவான் நான் பார்த்துக் கொண்டிருக்கும்போது, அரியணையையும் உயிர்களையும் மூப்பர்களையும் சுற்றி நின்ற கோடிக்கணக்கான வானதூதர்களின் குரலைக் கேட்டேன்: 'கொல்லப்பட்ட ஆட்டுக்குட்டி வல்லமையும் செல்வமும் ஞானமும் ஆற்றலும் மாண்பும் பெருமையும் புகழ்ச்சியும் பெறத் தகுதி பெற்றது ' என்று அவர்கள் உரத்த குரலில் பாடிக் கொண்டிருந்தார்கள். பின்பு, விண்ணுலகு, மண்ணுலகு, கீழுலகு, கடல் எங்கும் இருந்த படைப்புகள் அனைத்தும், அவற்றில் இருந்த ஒவ்வொன்றும், 'அரியணையில் வீற்றிருப்பவருக்கும் ஆட்டுக்குட்டிக்கும் புகழ்ச்சியும் மாண்பும் பெருமையும் ஆற்றலும் என்றென்றும் உரியன ' என்று பாடக் கேட்டேன். அதற்கு அந்த நான்கு உயிர்களும், 'ஆமென் ' என்றன. மூப்பர்கள் விழுந்து வணங்கினார்கள். - இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு- இறைவா உமக்கு நன்றி
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
அல்லேலூயா, அல்லேலூயா ! இயேசு அருகில் வந்து, அப்பத்தை எடுத்து அவர்களிடம் கொடுத்தார்: மீனையும் அவ்வாறே கொடுத்தார். அல்லேலூயா !
நற்செய்தி வாசகம்
யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 21:1-19
அக்காலத்தில் இயேசு தம் சீடருக்குத் திபேரியக் கடல் அருகே மீண்டும் தோன்றினார். அவர் தோன்றியது இவ்வாறு: சீமோன் பேதுரு, திதிம் எனப்படும் தோமா, கலிலேயாவிலுள்ள கானாவைச் சேர்ந்த நத்தனியேல், செபதேயுவின் மக்கள் ஆகியோரோடு இயேசுவின் சீடர்களுள் வேறு இருவரும் கூடியிருந்தனர், அப்போது சீமோன் பேதுரு அவர்களிடம், 'நான் மீன்பிடிக்கப் போகிறேன் ' என்றார். அவர்கள், 'நாங்களும் உம்மோடு வருகிறோம் ' என்று போய்ப் படகில் ஏறினார்கள். அன்று இரவு அவர்களுக்கு மீன் ஒன்றும் கிடைக்கவில்லை. ஏற்கெனவே விடியற்காலை ஆகியிருந்தது. இயேசு கரையில் நின்றார். ஆனால் அவர் இயேசு என்று சீடர்கள் அறிந்து கொள்ளவில்லை. இயேசு அவர்களிடம், 'பிள்ளைகளே! மீன் ஒன்றும் கிடைக்கவில்லையா? ' என்று கேட்டார். அதற்கு அவர்கள், 'இல்லை ' என்றார்கள். அவர், 'படகின் வலப்பக்கத்தில் வலை வீசுங்கள்: மீன் கிடைக்கும் ' என்று அவர்களிடம் கூறினார். அவர்களும் அவ்வாறே வீசினார்கள். மீன்கள் மிகுதியாய் அகப்பபட்டதால் அவர்களால் வலையை இழுக்க முடியவில்லை. இயேசுவின் அன்புச் சீடர் அதைக் கண்டு பேதுருவிடம், 'அங்கு நிற்பவர் ஆண்டவர்தாம் ' என்றார். அதைக் கேட்டவுடன் தம் ஆடையைக் களைந்திருந்த சீமோன் பேதுரு ஆடையை இடுப்பில் கட்டிக்கொண்டு கடலில் குதித்தார். மற்றச் சீடர்கள் மீன்களுடன் வலையை இழுத்துக்கொண்டு படகிலேயே வந்தார்கள். அவர்கள் கரையிலிருந்து வெகு தொலையில் இல்லை: ஏறக்குறைய நூறு மீட்டர் தொலையில்தான் இருந்தார்கள். படகைவிட்டு இறங்கியவுடன் கரியினால் தீ மூட்டியிருப்பதையும் அதன்மீது மீன் வைத்திருப்பதையும் அவர்கள் கண்டார்கள். அங்கு அப்பமும் இருந்தது. இயேசு அவர்களிடம், 'நீங்கள் இப்போது பிடித்தவற்றில் சில மீன்களைக் கொண்டு வாருங்கள் ' என்றார். சீமோன் பேதுரு படகில் ஏறி, வலையைக் கரைக்கு இழுத்தார். வலை நிறைய பெரிய மீன்கள் இருந்தன. அவற்றின் எண்ணிக்கை நூற்று ஐம்பத்து மூன்று. இத்தனை மீன்கள் இருந்தும் வலை கிழியவில்லை. இயேசு அவர்களிடம், 'உணவருந்த வாருங்கள் ' என்றார். சீடர்களுள் எவரும், 'நீர் யார்? ' என்று இயேசுவிடம் கேட்கத் துணியவில்லை. ஏனெனில், அவர் ஆண்டவர் தாம் என்று அவர்கள் அறிந்து கொண்டார்கள். இயேசு அவர்கள் அருகில் வந்து, அப்பத்தை எடுத்து அவர்களிடம் கொடுத்தார்: மீனையும் அவ்வாறே கொடுத்தார். இவ்வாறு, இயேசு இறந்து உயிருடன் எழுப்பப்பட்ட பின்பு தம் சீடருக்கு இப்போது மூன்றாம் முறையாகத் தோன்றினார். அவர்கள் உணவருந்தியபின் இயேசு சீமோன் பேதுருவிடம், 'யோவானின் மகன் சீமோனே, நீ இவர்களைவிட மிகுதியாக என்மீது அன்பு செலுத்துகிறாயா? ' என்று கேட்டார். அவர் இயேசுவிடம், 'ஆம் ஆண்டவரே, எனக்கு உம்மிடம் அன்பு உண்டு என உமக்குத் தெரியுமே! ' என்றார். இயேசு அவரிடம், 'என் ஆட்டுக்குட்டிகளைப் பேணி வளர் ' என்றார். இரண்டாம் முறையாக இயேசு அவரிடம், 'யோவானின் மகன் சீமோனே, நீ என்மீது அன்பு செலுத்துகிறாயா? ' என்று கேட்டார். அவர் இயேசுவிடம், 'ஆம் ஆண்டவரே, எனக்கு உம்மிடம் அன்பு உண்டு என உமக்குத் தெரியுமே! ' என்றார். இயேசு அவரிடம், 'என் ஆடுகளை மேய் ' என்றார். "மூன்றாம் முறையாக இயேசு அவரிடம், 'யோவானின் மகன் சீமோனே, உனக்கு என்னிடம் அன்பு உண்டா? ' என்று கேட்டார். 'உனக்கு என்னிடம் அன்பு உண்டா? ' என்று இயேசு மூன்றாம் முறை கேட்டதால் பேதுரு துயருற்று, அவரிடம், 'ஆண்டவரே உமக்கு எல்லாம் தெரியுமே! எனக்கு உம்மீது அன்பு உண்டு என்பது நீர் அறியாத ஒன்றா?" என்றார். இயேசு அவரிடம், "என் ஆடுகளைப் பேணிவளர்." 'நீ இளைஞனாக இருந்தபோது நீயே இடையைக் கட்டிக்கொண்டு உனக்கு விருப்பமான இடத்தில் நடமாடிவந்தாய். உனக்கு முதிர்ந்த வயது ஆகும்போது நீ கைகளை விரித்துக் கொடுப்பாய். வேறொருவர் உன்னைக் கட்டி, உனக்கு விருப்பம் இல்லாத இடத்திற்குக் கூட்டிச்செல்வார் என உறுதியாக உனக்குச் சொல்கிறேன் ' பேதுரு எவ்வாறு இறந்து கடவுளை மாட்சிப்படுத்தப் போகிறார் என்பதைக் குறிப்பிட்டே அவர் இவ்வாறு சொன்னார். இதைச் சொன்ன பின் பேதுருவிடம், 'என்னைப் பின் தொடர் ' என்றார்.
- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
விசுவாசிகள் மன்றாட்டுகள்:
பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
1. ஒன்று கூடி வாழ எம்மை அழைக்கும் அன்பு இறைவா! திருத்தூதர்கள் வழியாக செயலாற்றுபவர் இயேசு. திருத்தூதர்கள் வெறும் கருவிகள் தாம். வாழையடி வாழையாக இன்று வரை தொடரும் இந்த திருத்தூதர் மரபில், திருத்தந்தை, ஆயர்கள் மற்றும் அவர்களின் உடன் பணியாளர்கள் அருள்பணியாளர்கள் நினைவில் கொள்ள வேண்டியது இதுதான். இவர்கள் தாங்களாக எதையும் செய்வதில்லை. இவர்கள் வழியாக செயலாற்றுபவர் இறைவனே. இவர்கள் இறைவனின் கையில் உள்ள கருவிகள் மட்டுமே. இதனை உணர்ந்து உம் திருஅவையை சிநப்புடன் வழிநடத்த வேண்டிய வரங்களைப் பொழியுமாறு இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
2. அருட்செல்வங்களால் எங்களை ஆசீர்வதிக்கும் அன்புத்தந்தையே! எம் இறைவா! எங்களை பராமரித்து பாதுகாத்த எம் பெரியவர்கள் இன்று ஆதரவின்றி, அனாதைகளாக்கப்பட்டு, தெரு ஒரங்களிலும், பேருந்து நிலையங்களிலும் முதியோர் இல்லங்களிலும் தனித்து விடப்பட்டு , அவர்கள் படும் வேதனைகள் தொடர் நிகழ்வாகவே நிகழ்ந்து கொண்டிருக்கின்றது. எனவே அவர்கள் உம் இறை இரக்கத்தினால்,பாதுகாப்புடன் வாழ, இத்தலைமுறையினர் பெரியவர்கள் மேன்மையை உணர்ந்து அவர்களை பாதுகாக்க தேவையான அருளை பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
3. தக்க வேளையில் நான் உனக்குத் துணை நிற்பேன் என்ற ஆசீரை எமக்களித்த தந்தையே! பலவிதமான சோதனைகளோடும், வேதனைகளோடும், சவால்களோடும், நோய்களோடும் வாழ்ந்து கொண்டிருக்கும் அனைவரையும் ஆசீர்வதித்து: அவர்கள் மகிழ்ச்சியோடும், மன நிறைவோடும் வாழ்வதற்கு வேண்டிய அருளை அளித்துக் காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
4. மேன்மைமிகு அரசராம் இறைவா, பிற சமயத்தினரின் அவமதிப்புகளை பொருட்படுத்தாமல், உலகெங்கும் வாழும் மக்களுக்கு உம் திருமகனது உயிர்ப்பின் நற்செய்தியைக் கொண்டு சேர்க்கும் கருவிகளாக கிறிஸ்தவர்கள் அனைவரையும் உருமாற்ற வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
5. எம் அன்புத் தந்தையே இறைவா! உமது பிரதி நிதியாக நீர் எமக்குத் தந்திருக்கும் எம் திருத்தந்தை பிரான்சிஸ் காக உம்மை மன்றாடுகின்றோம். உமது திட்டத்தை இவ்வுலகில் அவர் சரியான முறையில் நிறைவேற்றவும், அவரை எதிர்கொள்ளும் சவால்களைச் சாகடித்து முழு நிறைவை நோக்கி மக்களை வழிநடாத்தவும் வேண்டிய ஞானத்தையும், வல்லமையையும் அளித்துக் காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
|