யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





மூன்றாவது திருவழிபாடு ஆண்டு
தவக்காலம் 5வது வாரம் வெள்ளிக்கிழமை
2016-03-18

புனித சிசில்




முதல் வாசகம்

ஆண்டவர் வலிமை வாய்ந்த வீரரைப் போல என்னோடு இருக்கின்றார்.
இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து வாசகம் 20: 10-13

அந்நாள்களில் எரேமியா கூறியது: `சுற்றிலும் ஒரே திகில்!' என்று பலரும் பேசிக்கொள்கின்றார்கள்; `பழி சுமத்துங்கள்; வாருங்கள், அவன்மேல் பழி சுமத்துவோம்' என்கிறார்கள். என் நண்பர்கள்கூட என் வீழ்ச்சிக்காகக் காத்திருக்கிறார்கள்; `ஒருவேளை அவன் மயங்கிவிடுவான்; நாம் அவன்மேல் வெற்றிகொண்டு அவனைப் பழி தீர்த்துக்கொள்ளலாம்!' என்கிறார்கள். ஆனால், ஆண்டவர் வலிமை வாய்ந்த வீரரைப் போல என்னோடு இருக்கின்றார். எனவே என்னைத் துன்புறுத்துவோர் இடறி விழுவர். அவர்கள் வெற்றிகொள்ள மாட்டார்கள். அவர்கள் விவேகத்தோடு செயல்படவில்லை; அவர்களின் அவமானம் என்றும் நிலைத்திருக்கும்; அது மறக்கப்படாது.
படைகளின் ஆண்டவரே! நேர்மையாளரை சோதித்தறிபவரும் உள்ளுணர்வுகளையும் இதயச் சிந்தனைகளையும் அறிபவரும் நீரே; நீர் என் எதிரிகளைப் பழிவாங்குவதை நான் காணவேண்டும்; ஏனெனில், என் வழக்கை உம்மிடம் எடுத்துரைத்துள்ளேன். ஆண்டவருக்குப் புகழ் பாடுங்கள்; அவரைப் புகழ்ந்தேத்துங்கள்; ஏனெனில், அவர் வறியோரின் உயிரைத் தீயோரின் பிடியினின்று விடுவித்தார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

திபா 18: 1-2,3. 4-5. 6 (பல்லவி: 6ய)
பல்லவி: என் நெருக்கடி வேளையில் நான் ஆண்டவரிடம் மன்றாடினேன்.

1 அவர் உரைத்தது: என் ஆற்றலாகிய ஆண்டவரே! உம்மிடம் நான் அன்புகூர்கின்றேன். 2ய ஆண்டவர் என் கற்பாறை; என் கோட்டை; என் மீட்பர்; 3 போற்றற்குரிய ஆண்டவரை நோக்கி நான் மன்றாடினேன்; என் எதிரிகளிடமிருந்து நான் மீட்கப்பட்டேன். பல்லவி

4 சாவின் கயிறுகள் என்னை இறுக்கின; அழிவின் சுழல்கள் என்னை மூழ்கடித்தன. 5 பாதாளக் கயிறுகள் என்னைச் சுற்றி இறுக்கின; சாவின் கண்ணிகள் என்னைச் சிக்க வைத்தன. பல்லவி

6 என் நெருக்கடிவேளையில் நான் ஆண்டவரிடம் மன்றாடினேன்; என் கடவுளை நோக்கிக் கதறினேன்; தமது கோவிலினின்று அவர் என் குரலைக் கேட்டார்; என் கதறல் அவர் செவிகளுக்கு எட்டியது. பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவரே, நீர் கூறிய வார்த்தைகள் வாழ்வுதரும் ஆவியைக் கொடுக்கின்றன. நிலைவாழ்வும் அளிக்கின்றன. அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 31-42

அக்காலத்தில் இயேசுவின் மேல் எறிய யூதர்கள் மீண்டும் கற்களை எடுத்தனர். இயேசு அவர்களைப் பார்த்து, ``தந்தையின் சொற்படி பல நற்செயல்களை உங்கள்முன் செய்து காட்டியிருக்கிறேன். அவற்றுள் எச்செயலுக்காக என்மேல் கல்லெறியப் பார்க்கிறீர்கள்?'' என்று கேட்டார்.
யூதர்கள் மறுமொழியாக, ``நற்செயல்களுக்காக அல்ல, இறைவனைப் பழித்துரைத்ததற்காகவே உன்மேல் கல்லெறிகிறோம். ஏனெனில் மனிதனாகிய நீ உன்னையே கடவுளாக்கிக் கொள்கிறாய்'' என்றார்கள்.
இயேசு அவர்களைப் பார்த்து, `` `நீங்கள் தெய்வங்கள் என நான் கூறினேன்' என்று உங்கள் மறைநூலில் எழுதியுள்ளது அல்லவா? கடவுளுடைய வார்த்தையைப் பெற்றுக்கொண்டவர்களே தெய்வங்கள் என்று சொல்லப்படுகிறார்கள். மறைநூல் வாக்கு என்றும் அழியாது. அப்படியானால் தந்தையால் அர்ப்பணிக்கப்பட்டு அவரால் உலகுக்கு அனுப்பப்பட்ட நான் என்னை `இறைமகன்' என்று சொல்லிக் கொண்டதற்காக `இறைவனைப் பழித்துரைக்கிறாய்' என நீங்கள் எப்படிச் சொல்லலாம்? நான் என் தந்தைக்குரிய செயல்களைச் செய்யவில்லை என்றால் நீங்கள் என்னை நம்பவேண்டாம். ஆனால் நான் அவற்றைச் செய்தால், என்னை நம்பாவிடினும் என் செயல்களையாவது நம்புங்கள்; அதன்மூலம் தந்தை என்னுள்ளும் நான் அவருள்ளும் இருப்பதை அறிந்துணர்வீர்கள்'' என்றார். இதைக் கேட்டு அவர்கள் அவரை மீண்டும் பிடிக்க முயன்றார்கள். ஆனால் அவர்கள் கையில் அகப்படாமல் அவர் அங்கிருந்து சென்றார். யோர்தானுக்கு அப்பால் யோவான் முதலில் திருமுழுக்குக் கொடுத்துவந்த இடத்திற்கு இயேசு மீண்டும் சென்று அங்குத் தங்கினார். பலர் அவரிடம் வந்தனர்.
அவர்கள், ``யோவான் அரும் அடையாளம் எதையும் செய்யவில்லை; ஆனால் அவர் இவரைப்பற்றிச் சொன்னதெல்லாம் உண்மையாயிற்று'' எனப் பேசிக்கொண்டனர். அங்கே பலர் அவரிடம் நம்பிக்கை கொண்டனர்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''இயேசு, 'நான் என் தந்தைக்குரிய செயல்களைச் செய்யவில்லை என்றால் நீங்கள் என்னை நம்ப வேண்டாம். ஆனால் நான் அவற்றைச் செய்தால், என்னை நம்பாவிடினும் என் செயல்களையாவது நம்புங்கள்' என்றார்'' (யோவான் 10:37-38

யோவான் நற்செய்தியில் இயேசு தமக்கும் தம் தந்தைக்கும் இடையே உள்ள உறவு பற்றிப் பல இடங்களில் விளக்கிக் கூறுகிறார். இயேசு கடவுளைத் தம் தந்தை என அழைத்தார். தந்தை-மகன் உறவை நாம் பெற்றோர்-பிள்ளை உறவாகப் புரிந்துகொள்கின்றோம். ஆனால் இயேசு கடவுளைத் தம் தந்தை என அழைப்பது மனித உறவுகளுக்கு அப்பாற்பட்ட முறையில் என்பதை நாம் கருத்தில் கொள்ளவேண்டும். இயேசு கடவுளின் மகன் என்னும் முறையில் காலத்திற்கு அப்பாற்பட்ட விதத்தில் ''தந்தையிடமிருந்து புறப்படுகின்றார்''. இப்புறப்பாடு மனிதப் பாணியில் தந்தை மகனுக்குப் பெற்றோர் ஆவதிலிருந்து வேறுபட்டது. அதே நேரத்தில் இயேசு கடவுளைச் சார்ந்து இருக்கின்றார் எனவும் கடவுளுக்கு நிகராக உள்ளார் எனவும் கிறிஸ்தவர் நம்புகின்றனர். ''தந்தைக்குரிய செயல்கள்'' என இயேசு எதைக் குறிப்பிடுகிறார்? தந்தை கடவுள் தம் மகன் வழியாகத் தம்மையே நமக்கு வெளிப்படுத்துகிறார்; இயேசுவின் சொல், செயல், பணி எல்லாமே தந்தையை நமக்கு அறிவிக்கின்ற விதத்தில் அமைகின்றன. ஆக, இயேசுவைக் காண்போர் தந்தையைக் காண்கின்றனர் (காண்க: ''என்னைக் காண்பவரும் என்னை அனுப்பியவரையே காண்கிறார்'' - யோவா: 12:45). இயேசுவிடம் கடவுளின் செயல் துலங்குகிறது என்பதைப் பலர் ஏற்க மறுத்தனர்.

அந்நிலையில் இயேசு தம் எதிரிகளைப் பார்த்து, தம் செயல்கள் எதைக் குறிக்கின்றன என்று அறிவதற்கு அவர்கள் திறந்த மனம் உள்ளவர்களாக இருக்கவேண்டும் எனக் கேட்கிறார். இயேசுவின் செயல்கள் மக்களுக்கு நன்மை பயப்பதற்காகவே செய்யப்பட்டன. அவர் ஆற்றிய புதுமைகள் மக்களுக்கு நலம் அளிக்கவும், அவர்களது பசியைப் போக்கவும், துயரத்தை அகற்றி மகிழ்ச்சி கொணரவுமே செய்யப்பட்டன. அச்செயல்கள் வழியாகவும் இயேசுவின் போதனை வழியாகவும் மக்களுக்குக் கடவுளின் எல்லையற்ற அன்பும் இரக்கமும் வெளிப்படுத்தப்பட்டன. ஆனால் சிலர் இதை ஏற்க மறுத்தனர். இன்றும்கூட, நாம் இயேசுவைப் புரிந்துகொள்ள வேண்டும் என்றால் திறந்த மனத்தோடு அவரை அணுக வேண்டும். கடவுளின் அருள் நம் உள்ளத்தில் தூண்டுகின்ற நம்பிக்கை உணர்வை மழுங்கடித்துவிடாமல் நாம் திறந்த இதயத்தோடு இயேசுவிடம் சென்றால் அவரில் கடவுளின் செயல் துலங்குவதைக் கண்டுகொள்வோம்.

மன்றாட்டு:

இறைவா, எங்கள் உள்ளத்தில் நம்பிக்கை உணர்வைத் தூண்டி எழுப்ப உம்மை வேண்டுகிறோம்.