யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





மூன்றாவது திருவழிபாடு ஆண்டு
தவக்காலம் 3வது வாரம் வியாழக்கிழமை
2016-03-03




முதல் வாசகம்

தங்களின் கடவுளாகிய ஆண்டவரின் குரலைக் கேளாத மக்களினம் இதுவே.
இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து வாசகம் 7: 23-28

ஆண்டவர் கூறியது: நான் இஸ்ரயேலுக்குக் கொடுத்த கட்டளை இதுவே: என் குரலுக்குச் செவிகொடுங்கள். அப்போது நான் உங்களுக்குக் கடவுளாய் இருப்பேன். நீங்கள் எனக்கு மக்களாய் இருப்பீர்கள். நான் கட்டளையிட்ட நெறிகள் அனைத்தையும் கடைப்பிடியுங்கள். அது உங்களுக்கு நலம் பயக்கும். அவர்களோ செவிசாய்க்கவும் இல்லை; கவனிக்கவும் இல்லை. பிடிவாத குணமுடைய அவர்களின் தீய உள்ளத்தின் திட்டப்படி நடந்தார்கள்; முன்னோக்கிச் செல்வதற்குப் பதில் பின்னோக்கிச் சென்றார்கள். உங்கள் மூதாதையர் எகிப்து நாட்டிலிருந்து வெளியேறிய நாளிலிருந்து இன்றுவரை ஒவ்வொரு நாளும் தொடர்ந்து என் ஊழியர்களாகிய இறைவாக்கினர்களை உங்களிடம் அனுப்பியுள்ளேன். அவர்களோ எனக்குச் செவிசாய்க்கவில்லை; கவனிக்கவில்லை; முரட்டுப் பிடிவாதம் கொண்டு தங்கள் மூதாதையரைவிட அதிகத் தீச்செயல் செய்தனர். நீ அவர்களிடம் இச்சொற்களை எல்லாம் கூறுவாய்; அவர்களோ உனக்குச் செவிசாய்க்க மாட்டார்கள். நீ அவர்களை அழைப்பாய்; அவர்களோ உனக்குப் பதில் தரமாட்டார்கள். தங்களின் கடவுளாகிய ஆண்டவரின் குரலைக் கேளாத, அவர் தண்டித்தும் திருந்தாத இனம் இதுவே, என அவர்களிடம் சொல். உண்மை அழிந்து போயிற்று. அது அவர்கள் வாயிலிருந்து அகன்று போயிற்று.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

உங்கள் இதயத்தைக் கடினப்படுத்தாதீர்; ஆண்டவர் குரலைக் கேட்டிடுவீர்.
திருப்பாடல் 95: 1-2. 6-7. 7-9

1 வாருங்கள்; ஆண்டவரைப் புகழ்ந்து பாடுங்கள்; நமது மீட்பின் பாறையைப் போற்றி ஆர்ப்பரியுங்கள். 2 நன்றியுடன் அவர் திருமுன் செல்வோம்; புகழ்ப்பாக்களால் அவரைப் போற்றி ஆர்ப்பரிப்போம். பல்லவி

6 வாருங்கள்; தாள்பணிந்து அவரைத் தொழுவோம்; நம்மை உருவாக்கிய ஆண்டவர்முன் முழந்தாளிடுவோம். 7ய அவரே நம் கடவுள்; நாமோ அவரது மேய்ச்சலின் மக்கள்; நாம் அவர் பேணிக்காக்கும் ஆடுகள். பல்லவி

7b இன்று நீங்கள் அவரது குரலுக்குச் செவிகொடுத்தால் எத்துணை நலம்! 8 அன்று மெரிபாவிலும், பாலை நிலத்தில் மாசாவிலும் செய்ததுபோல், உங்கள் இதயத்தைக் கடினப்படுத்திக் கொள்ளாதீர்கள். 9 அங்கே உங்கள் மூதாதையர் என்னைச் சோதித்தனர்; என் செயல்களைக் கண்டிருந்தும் என்னைச் சோதித்துப் பார்த்தனர். பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! `இப்பொழுதாவது உங்கள் முழு இதயத்தோடு என்னிடம் திரும்பி வாருங்கள். ஏனெனில் நான் அருள் நிறைந்தவர், இரக்கம் மிக்கவர்,' என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

+லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 14-23

ஒரு நாள் இயேசு பேச்சிழந்த ஒருவரிடமிருந்து பேயை ஓட்டினார். பேய் வெளியேறவே, பேச்சற்ற அவர் பேசினார். கூட்டத்தினர் வியந்து நின்றனர். அவர்களுள் சிலர், ``பேய்களின் தலைவனாகிய பெயல்செபூலைக் கொண்டே இவன் பேய்களை ஓட்டுகிறான்'' என்றனர். வேறு சிலர் அவரைச் சோதிக்கும் நோக்குடன், வானத்திலிருந்து ஏதேனும் ஓர் அடையாளம் காட்டுமாறு அவரிடம் கேட்டனர். இயேசு அவர்களுடைய சிந்தனைகளை அறிந்து, அவர்களிடம் கூறியது: தனக்கு எதிராகத் தானே பிளவுபடும் எந்த அரசும் பாழாய்ப்போகும். அவ்வாறே பிளவுபடும் வீடும் விழுந்துவிடும். சாத்தானும் தனக்கு எதிராகத் தானே பிளவுபட்டுப் போனால் அவனது அரசு எப்படி நிலைத்து நிற்கும்? பெயல்செபூலைக் கொண்டு நான் பேய்களை ஓட்டுகிறேன் என்கிறீர்களே. நான் பெயல்செபூலைக் கொண்டு பேய்களை ஓட்டுகிறேன் என்றால் உங்களைச் சேர்ந்தவர்கள் யாரைக் கொண்டு பேய் ஓட்டுகிறார்கள்? ஆகவே அவர்களே உங்கள் கூற்று தவறு என்பதற்குச் சாட்சிகள். நான் கடவுளின் ஆற்றலால் பேய்களை ஓட்டுகிறேன் என்றால் இறையாட்சி உங்களிடம் வந்துள்ளது அல்லவா! வலியவர் ஆயுதம் தாங்கித் தம் அரண்மனையைக் காக்கிறபோது அவருடைய உடைமைகள் பாதுகாப்பாக இருக்கும். அவரைவிட மிகுந்த வலிமையுடையவர் ஒருவர் வந்து அவரை வென்றால் அவர் நம்பியிருந்த எல்லாப் படைக்கலங்களையும் பறித்துக்கொண்டு, கொள்ளைப் பொருளையும் பங்கிடுவார். என்னோடு இராதவர் எனக்கு எதிராக இருக்கிறார்; என்னோடு இணைந்து மக்களைக் கூட்டிச் சேர்க்காதவர் அவர்களைச் சிதறடிக்கிறார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''அவர்களுள் சிலர், 'பேய்களின் தலைவனாகிய பெயல்செபூலைக் கொண்டே இவன் பேய்களை ஓட்டுகிறான்' என்றனர். வேறு சிலர் அவரைச் சோதிக்கும் நோக்குடன், வானத்திலிருந்து ஏதேனும் அடையாளம் காட்டுமாறு அவரிடம் கேட்டனர்'' (லூக்கா 11:15-16)

இயேசு புரிந்த புதுமைகள் அதிசயமான செயல்களாக மக்களுக்குத் தெரிந்தன. அவ்வாறு மக்களின் எதிர்பார்ப்புகளை விஞ்சிய விதத்தில் இயேசு செயல்பட்டதால் ஒருசிலர் அவரைத் தவறாகப் புரிந்துகொண்டனர். அவர்கள் எனவே ''பேய்களின் தலைவனாகிய பெயல்செபூலைக் கொண்டே இயேசு பேய்களை ஓட்டுகிறார்'' என முடிவுசெய்தனர் (காண்க: லூக் 11:15). கடவுளின் வல்லமை இயேசு வழியாக வெளிப்பட்டது என ஏற்றுக்கொண்டால் இயேசு அறிவித்த செய்தியையும் ஏற்கவேண்டியிருக்கும். ஆனால் கடவுளின் வல்லமைக்கு எதிராகச் செயல்படுகின்ற தீய ஆவிகளின் உதவியோடு இயேசு செயல்பட்டார் என முடிவுசெய்துவிட்டால் கடவுளாட்சி பற்றி இயேசு அறிவித்த செய்தியையும் ஏற்கவேண்டியதில்லை.

இவ்வாறு நினைத்தவர்கள் இயேசுவிடமிருந்து ''வேறு அடையாளம்'' எதிர்பார்த்ததாகக் கூறினார்கள். அந்த அடையாளம் ''வானத்திலிருந்து'' வரவேண்டும் எனவும் கேட்டார்கள் (காண்க: லூக் 11:6). இயேசுவின் போதனையை ஏற்கமுடியாது என்று முடிவுசெய்துவிட்ட பிறகு அவர் எவ்வளவு பெரிய அடையாளத்தைக் காட்டினாலும் அவருடைய எதிரிகள் நிறைவடைய மாட்டார்கள். இயேசுவை ஏற்க வேண்டும் என்றால் நம் உள்ளம் அடைபட்டிராமல் திறந்த நிலையில் இருக்கவேண்டும். நம் பார்வையில் நேர்மை வேண்டும். நம் இதயக் கதவுகளை மூடிவிட்ட பிறகு அங்கே கடவுளின் செயல் தோன்றட்டும் என நாம் எதிர்பார்த்தால் அந்த எதிர்பார்ப்பு கானல்நீர் போல மறைந்துபோகும். மாறாக, நம் உள்ளத்தில் கடவுளின் அருள் துலங்கிச் செயல்படும் வண்ணம் நம்மையே அவரிடத்தில் கையளித்துவிட்டால் நம் வாழ்விலும் அதிசயங்கள் நிகழும். கடவுளின் வல்லமை நம் வழியாகவும் வெளிப்படும். ஏனென்றால் கடவுள் மனிதரின் துணையோடுதான் தம் திட்டத்தைச் செயல்படுத்துகின்றார். கடவுளின் செயலை நம் வாழ்விலும் பிறர் வாழ்விலும் கண்டுகொள்ளவும், அதன் ஒளியில் புது மனிதர்களாக உருமாற்றம் அடையவும் வேண்டுமென்றால் கடவுளின் கைகளில் நம்மை முழுமையாகக் கையளித்திட வேண்டும்.

மன்றாட்டு:

இறைவா, உம் வல்லமை எங்கள் வாழ்வில் துலங்குவதைக் கண்டுகொள்ள எங்களுக்கு அருள்தாரும்.