யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





மூன்றாவது திருவழிபாடு ஆண்டு
தவக்காலம் 3வது வாரம் புதன்கிழமை
2016-03-02




முதல் வாசகம்

நீங்கள் என் கட்டளைகளை ஏற்று, பின்பற்றி நடங்கள்.
இணைச்சட்ட நூலிலிருந்து வாசகம் 4: 1,5-9

மோசே மக்களைப் பார்த்துக் கூறியது: இப்பொழுது இஸ்ரயேலரே! கேளுங்கள்; நான் உங்களுக்குக் கற்றுத்தரும் நியமங்கள், முறைமைகளின்படி ஒழுகுங்கள். அதனால் நீங்கள் வாழ்ந்து, உங்கள் மூதாதையரின் கடவுளாகிய ஆண்டவர் உங்களுக்குக் கொடுக்கும் நாட்டுக்குச் சென்று அதை உரிமையாக்குவீர்கள். நம் கடவுளாகிய ஆண்டவரின் கட்டளைப்படியே நியமங்களையும் முறைமைகளையும் உங்களுக்குக் கற்றுத் தருகிறேன். எனவே, நீங்கள் போய் உரிமையாக்கிக்கொள்ளும் நாட்டில் அவற்றைப் பின்பற்ற வேண்டும். நீங்கள் அவற்றைப் பின்பற்றி நடங்கள். அதுவே மக்களினங்கள் முன்னிலையில் உங்கள் ஞானமும் அறிவாற்றலுமாய் விளங்கும். இந்த நியமங்களைக் கேள்வியுறும் அனைவரும், உண்மையில் இப்பேரினம் ஞானமும் அறிவாற்றலும் கொண்ட மக்களால் ஆனது என்பர். நாம் குரல் எழுப்பும்போதெல்லாம் நம் கடவுளாகிய ஆண்டவர் நம்மோடு உள்ளார். அவரைப்போல், மக்களுக்கு மிகவும் நெருங்கிய கடவுளைக் கொண்ட வேறு பேரினம் ஏதாகிலும் உண்டா? நான் இன்று நேர்மைமிகு சட்டங்களை உங்களுக்குத் தந்துள்ளேன். இவற்றைப் போன்ற நியமங்களையும் முறைமைகளையும் கொண்ட வேறு பேரினம் ஏதாகிலும் உண்டா? கவனமாய் இருங்கள்; உங்கள் கண்களால் நீங்கள் கண்ட அனைத்தையும் மறந்துபோகாதபடி உங்கள் இதயங்களில் காத்துக்கொள்ளுங்கள். உங்கள் வாழ்நாள் முழுமையும் நீங்கள் அவற்றை மறக்க வேண்டாம். உங்கள் பிள்ளைகளுக்கும், பேரப் பிள்ளைகளுக்கும் அவற்றை எடுத்துக் கூறுங்கள்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

எருசலேமே! ஆண்டவரைப் போற்றுவாயாக.
திருப்பாடல் 147: 12-13. 15-16. 19

12 எருசலேமே! ஆண்டவரைப் போற்றுவாயாக! சீயோனே! உன் கடவுளைப் புகழ்வாயாக! 13 அவர் உன் வாயில்களின் தாழ்களை வலுப்படுத்துகின்றார்; உன்னிடமுள்ள உன் பிள்ளைக்கு ஆசி வழங்குகின்றார். பல்லவி

15 அவர் தமது கட்டளையை உலகினுள் அனுப்புகின்றார்; அவரது வாக்கு மிகவும் விரைவாய்ச் செல்கின்றது. 16 அவர் வெண்கம்பளிபோல் பனியைப் பொழியச் செய்கின்றார்; சாம்பலைப்போல் உறைபனியைத் தூவுகின்றார். பல்லவி

19 யாக்கோபுக்குத் தமது வாக்கையும் இஸ்ரயேலுக்குத் தம் நியமங்களையும் நீதி நெறிகளையும் அறிவிக்கின்றார். பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவரே! நீர் கூறிய வார்த்தைகள் வாழ்வுதரும் ஆவியைக் கொடுக்கின்றன; நிலைவாழ்வும் அளிக்கின்றன. அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

+மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 17-19

அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: ``திருச்சட்டத்தையோ இறைவாக்குகளையோ நான் அழிக்க வந்தேன் என நீங்கள் எண்ண வேண்டாம்; அவற்றை அழிப்பதற்கல்ல, நிறைவேற்றுவதற்கே வந்தேன். விண்ணும் மண்ணும் ஒழிந்து போகுமுன் திருச்சட்டம் யாவும் நிறைவேறும். அதன் ஒரு சிற்றெழுத்தோ ஒரு புள்ளியோ ஒழியாது என உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன். எனவே, இக்கட்டளைகளில் மிகச் சிறியது ஒன்றையேனும் மீறி அவ்வாறே மக்களுக்கும் கற்பிக்கிறவர் விண்ணரசில் மிகச் சிறியவர் எனக் கருதப்படுவார். இவை அனைத்தையும் கடைப்பிடித்துக் கற்பிக்கிறவரோ விண்ணரசில் பெரியவர் எனக் கருதப்படுவார்.''

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''இயேசு, 'திருச்சட்டத்தையோ இறைவாக்குகளையோ நான் அழிக்க வந்தேன் என நீங்கள் எண்ண வேண்டாம்; அவற்றை அழிப்பதற்கல்ல, நிறைவேற்றுவதற்கே வந்தேன்' என்றார்'' (மத்தேயு 5:17)

திருச்சட்டத்தையோ இறைவாக்குகளையோ அழிக்க வரவில்லை என இயேசு கூறியபோது யூத மரபில் தாம் வேரூயஅp;ன்றியிருப்பதை அவர் காட்டினார். திருச்சட்டம் என்பது யூத மக்களுக்கு மோசே வழியாக வழங்கப்பட்டது. இறைவாக்கு என்பது கடவுளின் திட்டத்தை மக்களுக்குக் கடவுளின் பெயரால் எடுத்துரைத்த இறைவாக்கினரின் போதனையைக் குறிக்கும். யூத மக்களின் சமய நூலில் காணப்படுகின்ற போதனைகள் முழுவதையும் ''திருச்சட்டமும் இறைவாக்குகளும்'' என்னும் சொல்வழக்கு உள்ளடக்கும். எனவே, இயேசு யூத சமயப் போதனைகளைத் தாம் அழிக்க வரவில்லை என்றும், அவற்றை ''நிறைவேற்ற'' வந்ததாகவும் கூறுகிறார். இங்கே ஒரு முரண்பாடு உள்ளதுபோலத் தோன்றலாம். அதாவது, இயேசு பல தருணங்களில் யூத சமயப் பழக்கங்களைக் கடுமையாக விமரிசத்தது உண்டு. சமயச் சடங்குகளுக்கு முன்னிடம் கொடுத்து, உள்ளத்தின் ஆழத்தில் நேர்மையின்றி நடந்தோரை இயேசு கடிந்தது உண்டு. அதே நேரத்தில் அவர் திருச்சட்டத்தையும் இறைவாக்குகளையும் நிறைவேற்ற வந்ததாகவும் கூறுகிறார். இங்கே இரு முக்கியமான உண்மைகளைக் காண்கின்றோம். இயேசு பழைய ஏற்பாட்டு மரபைப் புறக்கணிக்கவில்லை என்பது முதல் உண்மை. கடவுள் யூத மக்களுக்குத் தம்மை வெளிப்படுத்தி, அவர்களுக்கு ஒரு வாழ்க்கை முறையை அளித்து வழிநடத்தியதை இயேசு ஏற்கிறார். யூத சமயத்தில் வழக்கிலிருந்த ஆன்மீக நெறியே இயேசுவின் வாழ்க்கைக்கு ஒளியாக இருந்தது. இரண்டாவது உண்மை இயேசு ஆற்றிய பணி பற்றியது. இயேசு பழைய ஏற்பாட்டு நெறியை ''நிறைவு'' செய்தது அந்த நெறியை அழிக்காமல் அதன் அடித்தளத்தில் ஒரு புதிய நெறியை அறிவித்தது ஆகும்.

இயேசு வழங்கிய புதிய நெறி அன்புக் கட்டளை ஆகும். பழைய ஏற்பாட்டில் காணப்படுகின்ற இக்கட்டளைக்கு இயேசு புதிய அர்த்தம் அளித்தார். கடவுளின் அன்பை மக்களுக்கு எடுத்துக்காட்டி அதை அவர்களோடு பகிர்வதே தம் பணி என இயேசு போதித்தார். கடவுளின் உள் இயல்பு அன்புதான். அக்கடவுள் நமக்குத் தந்தையாக இருந்து நம்மைப் பேணுகின்றவர். அவர் அனுப்பிய மீட்பராக வந்த இயேசு கடவுளின் அன்பு வெளிப்பாடாகத் தம்மை அடையாளம் காட்டியதோடு கடவுளின் ஆவியால் நம்மைத் தொடர்ந்து வழிநடத்துகிறார். இவ்வாறு இயேசு திருச்சட்டத்தையும் இறைவாக்குகளையும் நிறைவேற்றினார். இயேசுவைப் பின்செல்வோர் அவருடைய பணியைத் தொடர்ந்து ஆற்ற அழைக்கப்படுகிறார்கள்.

மன்றாட்டு:

இறைவா, உம் திருமகனின் பணியை நாங்கள் மனமுவந்து ஆற்றிட அருள்தாரும்.