யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





திருவழிபாடு ஆண்டு - C
தவக்காலம் 1வது வாரம் திங்கட்கிழமை
2016-02-15




முதல் வாசகம்

நான் ஆண்டவர்! உன் சகோதரரை உன் உள்ளத்தில் பகைக்காதே!
லேவியர் நூலிலிருந்து வாசகம் 19: 1-2, 11-18

ஆண்டவர் மோசேயிடம் கூறியது: நீ இஸ்ரயேல் மக்களிடம் கூறவேண்டியது: தூயோராய் இருங்கள். ஏனெனில் உங்கள் கடவுளும் ஆண்டவருமாகிய நான் தூயவர்! களவு செய்யாமலும், பொய் சொல்லாமலும் ஒருவரை ஒருவர் வஞ்சியாமலும், என் பெயரால் பொய்யாணையிட்டு, உங்கள் கடவுளின் பெயருக்கு இழுக்கு ஏற்படுத்தாமலும் இருங்கள். நான் ஆண்டவர்! அடுத்திருப்பவரை ஒடுக்கவோ அவருக்குரியதைக் கொள்ளையிடவோ வேண்டாம்; வேலையாளின் கூலி விடியும்வரை உன்னிடம் இருத்தல் ஆகாது. காது கேளாதோரைச் சபிக்காதே! பார்வையற்றோரை இடறச் செய்யாதே! உன் கடவுளுக்கு அஞ்சி நட. நான் ஆண்டவர்! தீர்ப்பிடுகையில், அநீதி இழைக்காதே. சிறியோர் பெரியோர் என முகம் பாராது, உனக்கு அடுத்து வாழ்வோர்க்கு நேர்மையுடன் நீதி வழங்கு. உன் இனத்தாருக்குள் புறங்கூறித் திரியாதே. உனக்கு அடுத்து வாழ்பவரின் குருதிப் பழிக்குக் காரணம் ஆகாதே! நான் ஆண்டவர்! உன் சகோதரரை உன் உள்ளத்தில் பகைக்காதே! உனக்கு அடுத்தவர் பாவம் செய்யாதபடி அவரைக் கடிந்துகொள். பழிக்குப் பழியென உன் இனத்தார்மேல் காழ்ப்புக் கொள்ளாதே. உன்மீது நீ அன்புகூர்வதுபோல் உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்பு கூர்வாயாக! நான் ஆண்டவர்!

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

ஆண்டவருடைய வார்த்தைகள் வாழ்வு தரும் ஆவியைக் கொடுக்கின்றன.
திருப்பாடல் 19: 7. 8. 9. 14

7 ஆண்டவரின் திருச்சட்டம் நிறைவானது; அது புத்துயிர் அளிக்கின்றது. ஆண்டவரின் ஒழுங்குமுறை நம்பத்தக்கது; எளியவருக்கு அது ஞானம் அளிக்கின்றது. -பல்லவி

8 ஆண்டவரின் நியமங்கள் சரியானவை; அவை இதயத்தை மகிழ்விக்கின்றன. ஆண்டவரின் கட்டளைகள் ஒளிமயமானவை; அவை கண்களை ஒளிர்விக்கின்றன. -பல்லவி

9 ஆண்டவரைப் பற்றிய அச்சம் தூயது; அது எந்நாளும் நிலைத்திருக்கும். ஆண்டவரின் நீதிநெறிகள் உண்மையானவை; அவை முற்றிலும் நீதியானவை. -பல்லவி

14 என் கற்பாறையும் மீட்பருமான ஆண்டவரே! என் வாயின் சொற்கள் உமக்கு ஏற்றவையாய் இருக்கட்டும்; என் உள்ளத்தின் எண்ணங்கள் உமக்கு உகந்தவையாய் இருக்கட்டும். -பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! இதுவே தகுந்த காலம்! இன்றே மீட்பு நாள்! அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

+மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 25: 31-46

அக்காலத்தில் இயேசு தம் சீடர்களை நோக்கிக் கூறியது: ``வானதூதர் அனைவரும் புடைசூழ மானிடமகன் மாட்சியுடன் வரும்போது தம் மாட்சிமிகு அரியணையில் வீற்றிருப்பார். எல்லா மக்களினத்தாரும் அவர் முன்னிலையில் ஒன்று கூட்டப்படுவர். ஓர் ஆயர் செம்மறியாடுகளையும் வெள்ளாடுகளையும் வெவ்வேறாகப் பிரித்துச் செம்மறியாடுகளை வலப்பக்கத்திலும் வெள்ளாடுகளை இடப்பக்கத்திலும் நிறுத்துவதுபோல் அம்மக்களை அவர் வெவ்வேறாகப் பிரித்து நிறுத்துவார். பின்பு அரியணையில் வீற்றிருக்கும் அரசர் தம் வலப்பக்கத்தில் உள்ளோரைப் பார்த்து, `என் தந்தையிடமிருந்து ஆசி பெற்றவர்களே, வாருங்கள்; உலகம் தோன்றியது முதல் உங்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் ஆட்சியை உரிமைப்பேறாகப் பெற்றுக் கொள்ளுங்கள். ஏனெனில் நான் பசியாய் இருந்தேன், நீங்கள் உணவு கொடுத்தீர்கள்; தாகமாய் இருந்தேன், என் தாகத்தைத் தணித்தீர்கள்; அன்னியனாக இருந்தேன், என்னை ஏற்றுக்கொண்டீர்கள்; நான் ஆடையின்றி இருந்தேன், நீங்கள் எனக்கு ஆடை அணிவித்தீர்கள்; நோயுற்றிருந்தேன், என்னைக் கவனித்துக்கொண்டீர்கள்; சிறையில் இருந்தேன், என்னைத் தேடி வந்தீர்கள்' என்பார். அதற்கு நேர்மையாளர்கள் `ஆண்டவரே, எப்பொழுது உம்மைப் பசியுள்ளவராகக் கண்டு உணவளித்தோம், அல்லது தாகமுள்ளவராகக் கண்டு உமது தாகத்தைத் தணித்தோம்? எப்பொழுது உம்மை அன்னியராகக் கண்டு ஏற்றுக்கொண்டோம்? அல்லது ஆடை இல்லாதவராகக் கண்டு ஆடை அணிவித்தோம்? எப்பொழுது நோயுற்றவராக அல்லது சிறையில் இருக்கக் கண்டு உம்மைத் தேடி வந்தோம்?' என்று கேட்பார்கள். அதற்கு அரசர், `மிகச் சிறியோராகிய என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவருக்கு நீங்கள் செய்ததையெல்லாம் எனக்கே செய்தீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்' எனப் பதிலளிப்பார். பின்பு இடப்பக்கத்தில் உள்ளோரைப் பார்த்து, `சபிக்கப்பட்டவர்களே, என்னிடமிருந்து அகன்று போங்கள். அலகைக்கும் அதன் தூதருக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிற என்றும் அணையாத நெருப்புக்குள் செல்லுங்கள். ஏனெனில் நான் பசியாய் இருந்தேன், நீங்கள் எனக்கு உணவு கொடுக்கவில்லை; தாகமாயிருந்தேன், என் தாகத்தைத் தணிக்கவில்லை. நான் அன்னியனாய் இருந்தேன், நீங்கள் என்னை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆடையின்றி இருந்தேன், நீங்கள் எனக்கு ஆடை அளிக்கவில்லை. நோயுற்றிருந்தேன், சிறையிலிருந்தேன், என்னைக் கவனித்துக்கொள்ளவில்லை' என்பார். அதற்கு அவர்கள், `ஆண்டவரே, எப்பொழுது நீர் பசியாகவோ, தாகமாகவோ, அன்னியராகவோ, ஆடையின்றியோ, நோயுற்றோ, சிறையிலோ இருக்கக் கண்டு உமக்குத் தொண்டு செய்யாதிருந்தோம்?' எனக் கேட்பார்கள். அப்பொழுது அவர், `மிகச் சிறியோராகிய இவர்களுள் ஒருவருக்கு நீங்கள் எதையெல்லாம் செய்யவில்லையோ அதை எனக்கும் செய்யவில்லை என உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்' எனப் பதிலளிப்பார். இவர்கள் முடிவில்லாத் தண்டனை அடையவும் நேர்மையாளர்கள் நிலைவாழ்வு பெறவும் செல்வார்கள்.''

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''நான் பசியாய் இருந்தேன், நீங்கள் உணவு கொடுத்தீர்கள்'' (மத்தேயு 25:35)

மத்தேயு நற்செய்தியின் இறுதியில் ''மக்களினத்தார் அனைவருக்கும் தீர்ப்பு'' என்னும் பகுதி உள்ளது (காண்க: மத் 25:31-46). மானிட மகன் ''எல்லா மக்களினத்தாருக்கும்'' இறுதித் தீர்ப்பு வழங்க வருவார். அப்போது தம் வலப்பக்கத்தில் நிறுத்தப்பட்ட நல்லவர்களைப் பார்த்து அவர், ''நான் பசியாய் இருந்தேன், நீங்கள் உணவு கொடுத்தீர்கள்'' என்று கூறுவார். ஆனால், இடப்பக்கத்தில் உள்ள கெட்டோரைப் பார்த்து, ''நான் பசியாய் இருந்தேன், ஆனால் நீங்கள் எனக்கு உணவு கொடுக்கவில்லை'' என்பார். நேரடியாக இயேசுவுக்கு உணவு கொடுத்தோம் அல்லது உணவு கொடுக்கவில்லை என்பதல்ல இங்கே குறிக்கப்படும் பொருள். மாறாக, ''மிகச் சிறிய சகோதரர் சகோதரிகளுக்கு எதைச் செய்தோமோ அதை இயேசுவுக்கே செய்தோம்'' (காண்க: மத் 25:40,45).

இங்கே ''சகோதரர் சகோதரிகள்'' எனக் குறிக்கப்படுவோர் ''கிறிஸ்தவர்'' என்றொரு விளக்கம் உண்டு (காண்க: மத் 10:40-42). இருப்பினும், பசி, தாகம், அன்னியராயிருத்தல், ஆடையின்மை, நோய், சிறைப்படல் போன்ற இன்னல்களில் உழல்வோர் யாராயிருந்தாலும் அவர்கள் இயேசுவின் ''சகோதரர் சகோதரிகள்'' ஆவர் என்பதும் உண்மையே. ஆக, கடவுளன்பும் பிறரன்பும் இங்கே இணைவதைப் பார்க்கிறோம். இயேசு அளித்த அன்புக் கட்டளையும் இந்த இரு பரிமாணங்களையும் உள்ளடக்கியதே (காண்க: மத் 22:34-40). எந்த வித இன்னல்களுக்கும் உட்பட்ட மனிதருக்கு நாம் உதவும்போது இயேசுவுக்கே உதவுகிறோம்; மாறாக, பிறருக்கு உதவ நாம் மறுக்கும்போது இயேசுவுக்கே உதவ மறுக்கிறோம். மக்களினத்தாருக்குத் தீர்ப்பு வழங்கப்படுவது பற்றி இயேசு போதித்த காலத்தில் மக்களுக்கு இருந்த தேவைகள் இன்றும் தொடர்ந்து நிலவுகின்றன. உண்ண உணவும், உடுக்க உடையும், இருக்க வீடும் இல்லாதோர் இன்றும் ஆயிரக் கணக்கில் உண்டு. இயற்கைச் சீற்றம், போர் போன்ற பேரிடர்கள் காரணமாக அகதிகள் ஆவோர் உண்டு; அநீதியாக ஒடுக்கப்படுவோர் உண்டு; சமூக அமைப்புகளால் அடிமைகள் போல நடத்தப்படுவோர் உண்டு. இவர்களுக்கெல்லாம் நாம் அளிக்கின்ற உதவி என்ன? பிறரன்பு என்பது குறிப்பாக ஏழை எளியோர் மட்டில் காண்பிக்கப்பட வேண்டும் என்னும் இயேசுவின் போதனையை நாம் கடைப்பிடித்தால் இறுதி நாளில் நமக்கு வழங்கப்படும் தீர்ப்பு நல்லதாக அமையும்: ''நேர்மையாளர்கள் நிலை வாழ்வு பெறச் செல்வார்கள்'' (காண்க: மத் 25:46).

மன்றாட்டு:

இறைவா, பிறரன்புக் கட்டளையைக் கடைப்பிடித்து உம் அன்பில் நாங்கள் நிலைத்திட அருள்தாரும்.