யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





மூன்றாவது திருவழிபாடு ஆண்டு
திருநீற்றுப் புதனுக்குப் பின் வரும் வியாழன் 1வது வாரம் வியாழக்கிழமை
2016-02-11

தூய லூர்துஅன்னை பெருவிழா




முதல் வாசகம்

இதோ இன்று நான் ஆசியையும் சாபத்தையும் உங்களுக்கு முன் வைக்கிறேன்.
இணைச்சட்ட நூலிலிருந்து வாசகம் 30: 15-20

மோசே மக்களைப் பார்த்துக் கூறியது: இதோ பார், வாழ்வையும் நன்மையையும், சாவையும் தீமையையும் இன்று நான் உனக்கு முன்பாக வைத்துள்ளேன். அது இதுதான்; இன்று நான் உனக்குக் கட்டளையிடுகிறேன். உன் கடவுளாகிய ஆண்டவர்மீது அன்பு பாராட்டு. அவரைப் பின்பற்றி அவரது வழியில் நட. அவரது கட்டளைகளையும், நியமங்களையும், முறைமைகளையும் கடைப்பிடி. அப்போது நீ வாழ்வாய், நீ பலுகுவாய். நீ உடைமையாகக் கொள்ளப்போகும் நாட்டில் உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்கு ஆசி வழங்குவார். ஆனால் உனது உள்ளம் விலகிச் சென்று, நீ செவிகொடாமல் கெட்டலைந்து, வேறு தெய்வங்களை வணங்கி, அவற்றுக்குப் பணிவிடை புரிந்தால், இன்று நான் உனக்கு அறிக்கையிட்டுக் கூறுகிறேன். நீ நிச்சயம் அழிந்து போவாய். நீ உரிமையாக்கிக்கொள்ளுமாறு, யோர்தானைக் கடந்து சென்றடையும் பூமியில் உன் வாழ்நாள் நீடித்திருக்காது. உன்மேல் இன்று நான் விண்ணையும் மண்ணையும் சான்றாக அழைத்து, வாழ்வையும் சாவையும், ஆசியையும் சாபத்தையும் உனக்கு முன் வைக்கிறேன். நீயும் உனது வழித்தோன்றல்களும் வாழும்பொருட்டு வாழ்வைத் தேர்ந்துகொள். உன் கடவுளாகிய ஆண்டவர்மீது அன்பு பாராட்டு; அவரது குரலுக்குச் செவிகொடு; அவரையே பற்றிக்கொள். ஏனெனில், அவரே உனது வாழ்வு; அவரே உன் நீடிய வாழ்வு. அதனால், ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு என்னும் உன் மூதாதையருக்குக் கொடுப்பதாக ஆண்டவர் ஆணையிட்டுக் கூறிய நாட்டில் நீ குடியேறுவாய்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

ஆண்டவர்மீது நம்பிக்கை கொண்டவரே பேறுபெற்றவர்.
திருப்பாடல் 1: 1-2. 3. 4,6

நற்பேறு பெற்றவர் யார்? - அவர் பொல்லாரின் சொல்லின்படி நடவாதவர்; பாவிகளின் தீயவழி நில்லாதவர்; இகழ்வாரின் குழுவினில் அமராதவர்; 2 ஆனால், அவர் ஆண்டவரின் திருச்சட்டத்தில் மகிழ்ச்சியுறுபவர்; அவரது சட்டத்தைப்பற்றி இரவும் பகலும் சிந்திப்பவர். பல்லவி

3 அவர் நீரோடையோரம் நடப்பட்ட மரம்போல் இருப்பார்; பருவகாலத்தில் கனிதந்து என்றும் பசுமையாய் இருக்கும் அம்மரத்திற்கு ஒப்பாவார்; தாம் செய்வதனைத்திலும் வெற்றி பெறுவார். பல்லவி

4 ஆனால், பொல்லார் அப்படி இல்லை; அவர்கள் காற்று அடித்துச் செல்லும் பதரைப்போல் ஆவர். 6 நேர்மையாளரின் நெறியை ஆண்டவர் கருத்தில் கொள்வார்; பொல்லாரின் வழியோ அழிவைத் தரும். பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! மனம் மாறுங்கள், ஏனெனில் விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது, என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 22-25

அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கி, ``மானிடமகன் பலவாறு துன்பப்படவும் மூப்பர்கள், தலைமைக் குருக்கள், மறைநூல் அறிஞர் ஆகியோரால் உதறித் தள்ளப்பட்டுக் கொலை செய்யப்படவும் மூன்றாம் நாளில் உயிருடன் எழுப்பப்படவும் வேண்டும்'' என்று சொன்னார். பின்பு அவர் அனைவரையும் நோக்கிக் கூறியது: ``என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து தம் சிலுவையை நாள்தோறும் தூக்கிக் கொண்டு என்னைப் பின்பற்றட்டும். ஏனெனில், தம் உயிரைக் காத்துக்கொள்ள விரும்பும் எவரும் அதை இழந்துவிடுவார். என்பொருட்டுத் தம் உயிரை இழக்கும் எவரும் அதைக் காத்துக்கொள்வார். ஒருவர் உலகம் முழுவதையும் தமதாக்கிக்கொண்டாலும் வாழ்வையே இழப்பாரெனில் அவருக்குக் கிடைக்கும் பயன் என்ன?"

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''மேலும் இயேசு, 'மானிட மகன் பலவாறு துன்பப்படவும் மூப்பர்கள், தலைமைக் குருக்கள், மறைநூல் அறிஞர் ஆகியோரால் உதறித் தள்ளப்பட்டுக் கொலைசெய்யப்படவும் மூன்றாம் நாளில் உயிருடன் எழுப்பப்படவும் வேண்டும்' என்று சொன்னார்'' (லூக்கா 9:22)

மனிதரோடு தம்மை ஒன்றித்துக்கொண்ட இயேசுவின் வாழ்க்கை துன்பம் நிறைந்த ஒன்றாகவே இருந்தது. அவர் கடவுளாட்சி பற்றி அறிவித்த நல்ல செய்தியை எல்லா மனிதரும் விருப்போடு ஏற்கவில்லை. அவர் புரிந்த அரும்செயல்களைக் கூட பலர் தவறாகப் புரிந்துகொண்டார்கள். அவர் பேயின் துணைகொண்டே புதுமைகள் செய்தார் எனக் குற்றம் சாட்டினார்கள். அவரைக் கொன்றுபோட முயற்சி செய்தார்கள். இயேசுவோடு வழிநடந்த சீடர்களும் இயேசுவை முழுமையாகப் புரிந்துகொள்ளவில்லை. குறிப்பாக, இயேசு தாம் துன்பங்கள் பல அனுபவிக்கப் போவதாகவும், யூத சமயத் தலைவர்களால் உதறித் தள்ளப்பட்டு, கொலைசெய்யப்படப் போவதாகவும் மும்முறை அறிவித்த பிறகும் அவருடைய சீடர்கள் அக்கருத்தை ஏற்க விரும்பவில்லை.

ஆனால் இயேசு தம்மைப் பற்றிய உண்மையை மீண்டும் மீண்டும் தம் சீடருக்கு எடுத்துரைக்கத் தவறவில்லை. அவர் மாட்சிமையோடும் வல்லமையோடும் வருகின்ற மெசியா அல்ல; மாறாக, துன்பங்கள் அனுபவித்து, மக்களால் புறக்கணிக்கப்பட்டு, கொல்லப்படவிருக்கின்ற ''மெசியா''. அவர் நமக்குக் காட்டுகின்ற முன்மாதிரி என்ன? நம் வாழ்விலும் துன்பங்களுக்கு இடம் உண்டு. ஏதாவது ஒருவிதத்தில் துன்பங்கள் அனுபவிக்காத மனிதரே இவ்வுலகில் இல்லை. ஆனால் அத்துன்பங்களும் ஏன் சாவும்கூட நம்மைக் கடவுளிடமிருந்து பிரித்துவிட முடியாது. இயேசுவைப் போல நாமும் துன்பங்களைக் கடவுளின் திருவுளத்திற்கு ஏற்ப ஏற்றுக்கொண்டால் ஒரு நாள் உயிருடன் எழுப்பப்படுவோம். இயேசுவைப் போல நாமும் இறைவனோடு இடையறாது இணைந்து வாழ்கின்ற பேற்றினை அடைவோம். சிலுவையே நம்மை ஒளிமிக்க வாழ்வுக்கு இட்டுச் செல்லும்.

மன்றாட்டு:

இறைவா, உம் திருமகன் அனுபவித்த துன்பங்களில் நாங்களும் மகிழ்ச்சியுடன் பங்கேற்க அருள்தாரும்.